Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி?

ஆர். அபிலாஷ்

34.jpg

 

இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை:

டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு:

 

போனஸ் புள்ளிகள்

கொஞ்சம் விதிமுறைகளை மாற்ற வேண்டும். பொறுமை, காத்திருப்பு, அமைதி போன்ற விழுமியங்களைக் கைவிட்டு விட வேண்டும். பதிலாக இன்னும் திகிலாய் ஆட்டத்தை மாற்றும் வண்ணம் போனஸ் புள்ளி முறையைக் கொண்டு வரலாம். வெற்றி தோல்வியை இந்தப் புள்ளிகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். உதாரணமாய், ஒரு இன்னிங்ஸில் முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 10 விக்கெட்டுகளை எடுத்தால் பத்து புள்ளிகள். அதே போல, முதல் ஐம்பது ஓவர்களுக்குள் 300 ரன்கள் எடுத்தால் 10 புள்ளிகள். இந்த விதிமுறை பந்து வீச்சையும் மட்டையாட்டத்தையும் துணிச்சலாய் அதிரடியாய் ஆக்கும்.

பந்து வீச்சாளர்களின் ஓவர் எண்ணிக்கையிலோ, களத்தடுப்பு விவகாரத்திலோ கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் இது 50 ஓவர் ஆட்டம் போன்றும் மாறாது. பதிலுக்கு, இப்போதைக்கு டெஸ்ட் ஆட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினையை இது சரி செய்யும். இப்போதைய நிலையில் எதிரணி மட்டையாளர்கள் நன்றாய் ஆடினால் பந்து வீச்சாளர்கள் தடுப்பாட்டத்துக்குத் தாவிவிடுவார்கள். அடுத்து விக்கெட்டுகள் தடுமாறும் வரை எதையும் முயல மாட்டார்கள்.

மட்டையாளர்களும் அப்படியே – விக்கெட்டுகள் விழுந்தால் பதுங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதைக் காணும் பார்வையாளர்கள் தூங்கி வழிவார்கள். இந்த போனஸ் புள்ளி விஷயம் மட்டையாளர்களை அடித்தாடத் தூண்டும்.

இந்த போனஸ் புள்ளிகளை நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகமாய் பெற்ற அணியே வெற்றி பெறும் அணி. ஒரு அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் நன்றாய் ஆடி லீட் பெற்று 20 புள்ளிகள் பெற்றுவிட்டது எனக் கொள்வோம். இப்போது பின்னடைவுற்ற அணியோ மூன்றாவது இன்னிங்ஸில் தான் அளித்துள்ள லீடை பற்றி கவலைப்படாமல் 50 ஓவர்களில் 300 அடிப்பதையே இலக்காய் கொண்டு அடித்தாடலாம். அதை அவர்கள் வெற்றிகரமாய் செய்தால் புள்ளிகள் 10-20 என ஆகிவிடும். நான்காவது இன்னிங்ஸில் எதிரணியை 300க்குள் ஆல் அவுட்டாக்கினால் டிரா செய்துவிடலாம்.

 

புள்ளிகளை வைத்து வெற்றி, தோல்வி

34b.jpg

இதனோடு, ஒரு பவுலர் பெறும் 5 விக்கெட்டுகள், மட்டையாளரின் சதங்கள், அடிக்கும் பவுண்டரி, சிக்ஸர்கள், களத்தடுப்பாளர்கள் காப்பாற்றும் ரன்களின் எண்ணிக்கையை வைத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி புள்ளிகள் வழங்கலாம். இப்போது ஆட்டம் இன்னும் சிக்கலாய் பரபரப்பாய் ஆகும். இரு அணிகளும் 20-20 என புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், களத்தடுக்கும் அணியின் ஒரு வீரர் அபாரமாய் தாவி ஒரு கேட்ச் பிடித்தாலோ, ரன்களை தடுத்தாலோ ஒன்றிரண்டு புள்ளிகள் அந்த அணிக்குக் கிடைத்துவிடும். டிராவை நோக்கிச் செல்லும் அணி சட்டென வென்றுவிடும். அதாவது ஐந்தாவது நாளில் மட்டையாடும் அணி 400 ரன்களை விரட்டிச் செல்லலாம்.

90 ஓவர்களில் 400 என்பது அசாத்தியமான இலக்கே. சமீபத்திய இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் இந்தியா விரட்டிய இலக்கைப் போல. டிரா அல்லது தோல்வி என்பதே தேர்வுகள். இது போட்டியை மிகவும் எதிர்மறையாக்குகிறது. இங்கிலாந்து - இந்தியா ஐந்தாவது போட்டியில், நான்காவது இன்னிங்ஸில், ராகுலும் ரிஷப் பந்த்தும் சதம் அடித்தாலும் மிக அதிகமான இலக்கின் காரணமாய் இங்கிலாந்து அணி எந்த நெருக்கடியும் இன்றி இந்த இணைவாட்டத்தை வேடிக்கை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த இணைவாட்டத்தின்போது அடிக்கப்பட்ட பவுண்டரி / சிக்ஸர்களுக்குத் தனிப் புள்ளிகள் இருந்திருந்தால் இந்த ஆட்டமே தனிப் பரபரப்பைப் பெற்றிருக்கும்.

இன்னும் குறிப்பாய் சொல்வதானால், 100 ரன்கள் லீட் என்றால் 5 புள்ளிகள். 400க்கு மேல் லீட் பெற்றதால் இங்கிலாந்து 20 புள்ளிகள் கூடுதலாய் பெறும். ஒரு பவுண்டரிக்கு ஒரு புள்ளி; சிக்ஸருக்கு ரெண்டு புள்ளி. இப்போது ராகுல் / பந்த் தனியாக 10 சிக்ஸர்கள் விளாசினால் தனியாக இந்த லீட் புள்ளிகளை ஈடு செய்ய முடியும். இப்படி ஆட்டத்தை எதிர்பாராமைகள் நிறைந்ததாய், இறுதி வரை கணிக்க முடியாததாய் மாற்ற முடியும்.

 

யூகிக்கக்கூடிய நிலையை மாற்றுவது

34d.jpg

இப்போதைய டெஸ்ட் ஆட்ட வடிவம் பொறுமையான கவனத்தைப் பிரதானமாக்குவது (வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு). ஒரு மாயம் நிகழ நீங்கள் 50-150 ஓவர்கள் கவனமாய் பொறுமையாய் இருக்க வேண்டும். ஆனால், அந்த மனநிலை இப்போது கணிசமானோருக்கு இல்லை. ஆகையால், ஒவ்வொரு பந்தையும் ஆர்வமாய் பார்க்க வைக்கும்படியாய் மாற்ற வேண்டும்.

ஓர் அணி 100க்கு மேல் முதல் இன்னிங்ஸ் லீட் எடுத்துவிட்டால், அந்த அணியே 90% வெல்லும் என ரசிகர்களுக்குத் தெரிந்துபோகும். அதற்கு மேல், அந்த ஆட்டத்தைப் பார்ப்பதில் எந்த விறுவிறுப்பும் இராது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் நடந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஆடுதளங்கள் வேகவீச்சுக்கு சாதகமாய் இருந்ததால் இறுதி வரை ஊசலாட்டம் இருந்தது; ஆனாலும் உள்ளூர் அணியின் வேகவீச்சே வலுவானது என்பதாலும், அவர்களின் மட்டையாளர்களே நன்றாய் வேகவீச்சை ஆடுவார்கள் என்பதால் எதிர்பார்ப்பின்படியே இந்த ஆட்டங்களும் முடிந்தன. இந்தியா இரு தொடர்களையும் இழந்தது. எந்த ஆச்சரியங்களும் அற்றவையாய் டெஸ்ட் ஆட்டங்கள் ஆகிவிட்டன. இந்தக் குறைக்குத் தீர்வு என்ன?

 

தரமான பயிற்சி ஆட்டங்கள்

ஐசிசி சில விதிமுறை மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவற்றின்படி, டெஸ்ட் தொடர் துவங்கும் முன் கணிசமான பயிற்சி ஆட்டங்களை ஆட வேண்டும். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 4-1 என இழந்த பின்னர் கோலி பேசுகையில் “நாம் முதல் போட்டியில் சரியாய் ஆடுவதில்லை. நாம் வார்ம் அப் ஆகித் தயாராகவே ரெண்டாவது, மூன்றாவது போட்டி ஆகின்றது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்” என்றுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் எதிரணி மிக பலவீனமாய் உள்ளது; இருப்பதிலேயே வெற்று வீரர்களாய் தேர்ந்து எங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது கோலியின் ஒரு புகார். அதேபோலப் பயிற்சி ஆட்டத்தின்போது ஆடுதளங்கள் டெஸ்ட் ஆட்ட ஆடுதளங்களுக்கு நேர்மாறாய் உள்ளன, இது ஒரு திட்டமிட்ட சதி என சமீபத்தில் தென்னாப்பிரிக்கா இலங்கையில் டெஸ்ட் தொடர் ஆடச் சென்றபோது தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டூ பிளஸி புகார் சொன்னார். சமீபத்தில் ராகுல் திராவிட் இதைப் பற்றி பேசுகையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புரிந்துணர்வுடன் செயல்பட்டுப் பயிற்சி ஆட்டங்களைத் தரமாக மாற்ற வேண்டும் என்றிருக்கிறார்.

ஆக, இதற்காக மற்றொரு விதிமுறையை ஐசிசி கொண்டுவர வேண்டும். உள்ளூர் ஆட்டங்களில் முன்னிலையில் உள்ள சிறந்த அணிகளே பயிற்சி ஆட்டங்களிலும் பயணம் செய்யும் அணிக்கு எதிராய் ஆட வேண்டும். சிறந்த பயிற்சியும் உள்ளூர் ஆடுதளங்கள் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு உடல் பழக்கமும் அமையும்போது ஆட்டங்கள் ஓரளவு சரிசமமாய் மாறும்.

 

எப்போது நடத்தலாம்?

34a.jpg

டெஸ்ட் போட்டி மீதான மற்றொரு குற்றச்சாட்டு அது மக்களின் வேலை நேரத்தில் நடக்கிறது; அதைப் பார்ப்பதற்கே நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று பார்வையாளர்களால் பகலில் வேலைக்குப் போக முடியாது; வெளிநாட்டில் (இங்கிலாந்து) நடக்கிறது என்றால் இங்கே நீங்கள் மதியம் துவங்கி இரவு வரை பார்க்கலாம்; அல்லது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகளை விடியற்காலையிலிருந்து பின் காலை வரை பார்க்கலாம். நீங்கள் ரொம்ப வெட்டியாய் இருந்தா ஒழிய, டெஸ்ட் ஆட்டங்களைப் பின்தொடர முடியாது.

பிங்க் வண்ணப் பந்தால் ஆடப்படும் மாலை வேளை டெஸ்ட் ஆட்டங்கள் இதற்கு ஒரு தீர்வே. 2005இல் இருந்தே, அவ்வப்போது, டெஸ்ட் ஆட்டங்கள் மாலையில் நடந்துவருகின்றன என்றாலும், துரதிஷ்டவசமாய், இவ்வகை போட்டிகளில் ஐசிசி பெரிய அக்கறை காட்டவில்லை. மாலையில் நடந்தாலும் வடிவ அளவில் சீர்திருத்தம் நடக்கவில்லை என்பதால் மக்களையும் இது பெரிதாய் ஈர்க்கவில்லை.

டெஸ்ட் ஆட்டங்கள் இங்கிலாந்தில் ராணுவத்தினர் வேலையில்லாப் பொழுதுகளிலும் மேல்தட்டினர் தம்முடைய மிக நீண்ட வெட்டிப் பொழுதுகளையும் போக்குவதற்காய் கண்டுபிடித்த ஒரு ஆட்டம். ஆகையாலே 16ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை பகலில் 9-5 என வேலை நேரத்தில் ஆடிவந்தார்கள். இன்றும் நாம் அதே பாணியிலே ஆடி வருவது அபத்தம்.

டெஸ்ட் என்பது மேல்தட்டினருக்கான ஆட்டமாகவும், டி-20 மட்டுமே எளிய மக்கள் – பெரும்பான்மையான மத்திய வர்க்கத்தினர் – மாலையில் தமக்கு வசதியானபோது கத்திக் கூச்சலிட்டுப் பார்க்க முடிகிற ஓர் ஆட்ட வடிவமாகவும் உள்ளது. உடனுக்குடன் நாம் உணர்ச்சிகரமாய் எதிர்வினையாற்றுகிற ஒன்றாய், அவசரமாய் முடிவு தெரிகிற ஒன்றாய், பந்துக்கு பந்து அர்த்தம் பொருந்திய ஒன்றாய் டி-20 ஆட்டங்கள் உள்ளன.

டி-20 ஆதிக்கம் செலுத்துவது அது மலினமான, ஆர்ப்பாட்டமான ஒரு வடிவம் என்பதால் அல்ல, முக்கியமான காரணம் அது நம் காலத்தின் மனநிலையோடு பெரிதும் ஒத்துப்போவதே.

 

மாறாத வடிவம் நிலைக்காது

34c.jpg

50 ஓவர் ஆட்டம் கடந்த இரு பத்தாண்டுகளில் பல விதிமுறை மாற்றங்களை எதிர்கொண்டு தொடர்ந்து உருமாறிவந்துள்ளது. டெஸ்ட் ஆட்டத்தை மிகவும் பவித்திரமான ஒரு சங்கதியாய் நாம் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளோம். அதன் காரணமாகவே, டெஸ்ட் போட்டிகளை வணிக ரீதியாய் முன்னிலைப்படுத்தவே முடியாது என்கிற இடத்துக்கு இன்று வந்து சேர்ந்துள்ளோம்.

சமீபத்தைய டெஸ்ட் போட்டிகள் பலவும் மிக பரபரப்பாக நடந்திருக்கின்றன. ஆனால், அந்தப் பரபரப்பு இறுதி நாளின் ஒன்றிரண்டு செஷன்களிலோ, முதல் மற்றும் நான்காவது நாளின்போதோ மட்டுமே ஏற்பட்டது. பரபரப்பு என்பதே ஒரு நீண்ட அலுப்பான கொட்டாவியின் நடுவே நிகழ்ந்த அரிய ஒன்றாய் இருந்தது.

டெஸ்ட்டை இனிமேலும் மாற்றமின்றிப் பாதுகாக்க முயன்றால் அது அழிந்துவிடும். டெஸ்ட் போட்டிகளை வடிவ அளவில் மேம்படுத்த, என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு ஐசிசி நிபுணர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைக் கோர வேண்டும். அப்பரிந்துரைகளின் அடிப்படையின் புதுமைகளைப் புகுத்த வேண்டும்.

மாற்றத்துக்கு முகம் கொடுக்காத உயிரினங்கள், பரிணமிக்காத உயிரனங்கள் அழிந்துவிடும் என்றார் சார்லஸ் டார்வின். இது கிரிக்கெட்டுக்கும் பொருந்தும்.

டெஸ்ட் போட்டி பரிணாம வளர்ச்சி அடையட்டும், அது அழியாமல் நிலைக்கட்டும்!

(கட்டுரையாளர்: அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

 

http://www.minnambalam.com/k/2018/10/07/34

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.