Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமுருகன் காந்தி: "பெரியாரை மறுப்பவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன" -திருமுருகன் காந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்

 

பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலும் சிறையில் அளிக்கப்பட்ட உணவு ஏற்படுத்திய ஒவ்வாமையால் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

திருமுருகன் காந்தி

அவர் கைதுசெய்யப்பட்ட பின்னணி, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஆகியவை குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து:

கேள்வி. பெங்களூர் விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்ட தினத்தன்று என்ன நடந்தது?

தில். அந்த வாரக் கடைசியில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதனால், வெளிநாட்டில் இருந்து நேரடியாக பெங்களூரில் வந்து இறங்கினேன். அங்கே குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, உங்களை கைதுசெய்கிறோம் என்றார்கள்.

அதன் பிறகு, உங்களிடம் பிணை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை, எனக்கு வழக்கு விவரமே தெரியாதே என்றேன்.

இதையடுத்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். அதன் பிறகு தமிழகத்திலிருந்து காவல்துறையினர் வந்தார்கள். அதற்குப் பிறகுதான் என்ன வழக்கு என்பது எனக்குத் தெரிந்தது.

பிறகு, அங்குள்ள நீதிபதியிடம் ஒப்புதல் வாங்கி, என்னைத் தமிழகம் அழைத்துவந்தார்கள்.

கே. தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நடந்தது என்ன?

ப. என் மீது வழக்குத் தொடரப்பட்டு, அது தொடர்பான சுற்றறிக்கை எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அது என்ன வழக்கு என்றால், ஐ.நாவில் தூத்துக்குடி குறித்துப் பேசியது தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் சூழலை உருவாக்கியுள்ளது என்பதுதான் வழக்கு.

இதற்காக 124-ஏ பிரிவின் கீழ் (தேசத்துரோகம்) வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். என்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது அவர், ஐ.நா. மன்றத்தில் பேசுவது எப்படி தேசத்துரோகமாகும் என்று கேள்வியெழுப்பினார்.

திருமுருகன் காந்தியும், முரளிதரன்

நாடாளுமன்றம், இதுபோன்ற அரங்குகள் எல்லாம் இம்மாதிரி வழக்குகளிலிருந்து விலக்குப் பெற்றவையாகத்தான் இருக்க முடியும். அதை எப்படி குற்றம் என்கிறீர்கள் எனக் கேட்டார்.

உடனே, காவல்துறையினர் முடிந்து போன சம்பவத்தைப் பற்றி திரும்பவும் பேசுகிறார் என்றார்கள். உடனே, என் தரப்பிலிருந்து, இந்த விவகாரம் முடிந்துபோகவில்லையென்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தொடரக்கூடாது என்றும் மதுரை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, எந்தச் சம்பவமுமே வரலாற்றில் முடிந்துபோன சம்பவமாக பார்க்க முடியாது. ஜாலியன் வாலாபாக் பற்றி இப்போதும்கூட பேசுகிறோம் என்றேன். தவிர, நான் தூத்துக்குடி குறித்துப் பேசிய பிறகு எத்தனை கலவரம் இதனால் நடந்தது என்பதை காவல்துறை சொல்ல வேண்டும் என்று சொன்னோம்.

உடனே காவல்துறையினர், என்னுடைய பேச்சு சமூக வலைதளங்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது என்றார்கள். இதை ஐ. நாதான் ஒளிபரப்புச் செய்தார்கள். அதைத்தான் நாங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம் என்று கூறினோம்.

திருமுருகன் காந்தி

வழக்குத் தொடர்வதாக இருந்தால் அவர்கள் மீதுதான் தொடர வேண்டும் என்றோம். இதைக் கேட்ட நீதிபதி சிரித்தபடி, வழக்குப் பதிவுசெய்ய மறுத்தார்.

கே. அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் கைதுசெய்யப்பட்டீர்கள்..

ப. நீதிமன்றம் விடுவித்த பிறகு, சென்னை பழைய ஆணையர் அலுவலகத்தில் வைத்து என்னிடம் எழுதி வாங்கிவிட்டு விடுவித்தார்கள்.

அந்த அறையைவிட்டு வெளியில் வந்த உடனேயே, சில காவலர்கள் வேறு ஒரு இடத்திற்கு அழைத்தார்கள். எனக்கு வெளியில் செல்ல வழி தெரியும் நான் செல்கிறேன் என்று சொன்னேன். இல்லையென மறுத்து அவர்கள் கையைப் பிடித்து இழுத்தார்கள். அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன்.

திருமுருகன் காந்தி

பிறகு அவர்கள் என் பின்னாலேயே துரத்திக்கொண்டு வந்தார்கள். வாசலில் நின்றிருந்த நண்பர்களைச் சந்திக்கச் சென்றபோது, ராயப்பேட்டையில் நான் பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்காக, தேசத் துரோக வழக்கு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகக் கூறி, எவ்வித கைது ஆணையும் இல்லாமல் காவலர்கள் கைதுசெய்தார்கள்.

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததில் புதிய பிரிவுகளைச் சேர்த்து கைதுசெய்தார்கள்.

கே. சிறையில் எப்படி நடத்தப்பட்டீர்கள்..

ப. சிறையில் நான் விசாரணைக் கைதியாகத்தான் அடைக்கப்பட்டேன். ஆனால், சிறைவாசிகளுக்கு உள்ள அடிப்படை உரிமைகள்கூட வழங்கப்படவில்லை.

நீதிமன்றங்கள் குறிப்பிட்டுச் சொன்னால் ஒழிய யாரையும் தனிமைச் சிறையில் வைக்கக்கூடாது. ஆனால், என்னைத் தனிமைச் சிறையில் வைத்தார்கள். என் சுதந்திரம் இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

என்னுடைய உணவைக்கூட நான் நேராகப் பெற முடியாது. அவர்கள்தான் கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த உணவை என் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைச் சொல்லியும்கூட அவர்கள் மருத்துவசிகிச்சை தர தயாராக இல்லை.

மயிலாடுதுறை நீதிமன்றம் என்னை வெளியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எழுதிக்கொடுத்ததையும் செயல்படுத்தவில்லை.

திருமுருகன் காந்திபடத்தின் காப்புரிமை FACEBOOK

சைதாப்பேட்டை நீதிமன்றமும் இதைப் போன்ற குறிப்புகளைக் கொடுத்தார்கள். அதையும் செய்யவில்லை. சிறையில் ஆட்களைச் சந்திக்கும் தினங்கள் வரும்போது, நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கிறோம் என்ற பெயரில், சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

இப்படியாக உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தார்கள்.

கே. நீங்கள் ஒரு சிறிய அமைப்பு.. உங்களை இவ்வளவு ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

ப. பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை.. நான் மாநிலத்தில் இருக்கும் அரசையும் பா.ஜ.க. அரசாகத்தான் பார்க்கிறேன். அவர்களின் பல்வேறு திட்டங்களை நான் அம்பலப்படுத்தியிருக்கிறேன்..

கே. பா.ஜ.கதான் இதைச் செய்கிறது என நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டால், மத்தியில் ஆளும் ஒரு அரசுக்கு உங்களைப் போன்ற ஒரு அமைப்பை பொருட்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

ப. இந்தியா முழுவதும் இப்படித்தான் ஒடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அவர்கள் கால் ஊன்ற முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் செய்யக்கூடிய மோசமான, மக்கள் விரோத நடவடிக்கைகளை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.

திருமுருகன் காந்தி

அது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது. கறுப்புப் பண ஒழிப்புக்காக ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியதை அன்று இரவே அம்பலப்படுத்தினோம்.

அதேபோல, ஜி.எஸ்.டி. விவகாரம், காவிரியில் இரட்டை வேடம் போன்றவற்றை நாங்கள் அம்பலப்படுத்தும்போது அவர்களால் தாங்க முடியவில்லை. அதனால் ஒடுக்குகிறார்கள். இப்போதைய அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. அரசின் பினாமியாகத்தான் இருக்கிறது.

இவர்களுக்கென தனித்த கொள்கை ஏதும் கிடையாது. இதுவே ஒரு சட்டவிரோதமான அரசுதான். எச். ராஜாவைக் கைதுசெய்யவில்லை, எஸ்.வி. சேகரைக் கைதுசெய்யவில்லை.

ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யுமெனச் சொல்கிறார்கள். ஆனால், வளர்மதி, நக்கீரன் கோபால் போன்றவர்களைக் கைதுசெய்கிறார்கள்.

கே. நீங்கள் ஜெனீவாவிலிருந்து திரும்பிய ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் கூட்டம் ஏதும் நடக்கவில்லை. ஆனால், நீங்கள் அங்கிருந்து திரும்பியதாகச் சொல்கிறீர்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கேள்விகள் இருக்கின்றன..

ப. விடுதலைப் புலிகள் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு ஒன்று சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான பிரச்சாரத்தை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கையில் எடுத்திருந்தார்கள்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு மே மாதத்தில் சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. இதற்காகத்தான் நான் ஸூரிக் நகருக்கு போயிருந்தேன்.

அந்த காலகட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. நான் சொன்ன பத்திரிகையாளர் சந்திப்பு சுவிட்ஸர்லாந்திலும் ஜெர்மனியிலும் நடந்து முடிந்த பிறகு ஐ.நா.வின் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

அந்தக் கூட்டம் ஜூன் மாதத்தில் துவங்கியது. அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, ஐநாவின் காணொளியாகவும் பதிவாகியுள்ளது. நான் பேசியதை ஈழத் தமிழர்களும் நேரலை செய்தார்கள்.

தூத்துக்குடி, எட்டு வழிச் சாலை, குண்டர் சட்டம், ஈழத்தில் நடக்கும் தொடர்ச்சியான இன அழிப்பு ஆகியவை குறித்துப் பேசினேன். இதெல்லாம் ஐ.நா.வின் காணொளிக் காட்சியாக இருக்கிறது.

கே. ஐ.நா. கூட்டத்தொடர் ஜூன் மாதம் நடந்தது. ஆனால், நீங்கள் நாடு திரும்பியது எப்போது..

ப. ஆகஸ்ட் மாதத்தில் திரும்பினேன். ஜூலை மாத முதல் வாரத்தில் ஐ.நா. அமர்வு முடிந்த பிறகு, ஜெர்மனியில் இருக்கக்கூடிய மனித உரிமை செயல்பாட்டாளர்களைச் சந்தித்தேன். அதில்தான் ஜூலை மாதம் கழிந்தது. அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைச் சந்தித்தேன். இதனால்தான் ஆகஸ்ட் மாதத்தில் நாடு திரும்பினேன்.

திருமுருகன் காந்திபடத்தின் காப்புரிமை TIRUMURUGAN

கே. உங்களுடைய இயக்கம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த காலத்தில் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. இனி உங்கள் இயக்கம் செல்லவிருக்கும் திசை என்ன, தொடர்ந்தும் ஈழப் பிரச்சனை குறித்துத்தான் பேசப் போகிறீர்களா?

ப. தமிழர்களின் அரசியலைத்தான் இந்த இயக்கம் மையப்படுத்துகிறது. அது ஈழத் தமிழர்களாக இருக்கலாம். அல்லது தமிழகத் தமிழர்களாக இருக்கலாம். அல்லது உலகில் வேறு எந்த நாட்டில் வாழும் தமிழர்களாகவும் இருக்கலாம். தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில் குரல் எழுப்பக்கூடிய அமைப்புதான் மே 17 இயக்கம்.

கே. திருமுருகன் காந்தி, தமிழரல்ல; தெலுங்கர். அவருடைய உண்மையான பெயர் திருமுருகுலு காந்தி என்று சமூகவலை தளங்களில் சொல்லிவருகிறார்கள்...

ப. பொதுவாக இம்மாதிரி பொய்ப் பிரச்சாரங்களுக்குப் பதில் சொல்வதில்லை. இந்தப் பொய்க்குப் பதில் சொன்னால் இன்னொரு பொய்யைச் சொல்வார்கள். இதைச் சொன்ன நபரின் முகம் யாருக்கும் தெரியாது.

அவர் மக்களுக்காக போராடக்கூடிய நபருமில்லை. தமிழர்களின் பிரச்சனைக்கு பேசியவருமில்லை. 2010-11ல் ஒரு நபர் என்னைத் தமிழரா என்று கேட்டார்.

நான், என்னுடைய தாய் மொழி தமிழ், என் பெற்றோரின் தாய் மொழி தமிழ், மூதாதையரின் தாய் மொழி என்று சொன்னேன். அதில் அவர் நிறைவடையவில்லை. என்னுடைய சாதி என்னவென்று கேட்டார்.

அப்போது நான், நாங்கள் ஜாதியை மறுத்த இடத்தில் நிற்கிறோம். ஜாதியை எங்களுடைய அடையாளமாகக் கொள்ள முடியாது என்று சொன்னோம்.

திருமுருகன் காந்தி

ஜாதியை நீங்கள் சொல்லாவிட்டால் உங்களை எப்படி தமிழரெனக் கொள்ள முடியும் என்று கேட்டார். அது உங்கள் விருப்பம்.

நான் என் ஜாதியைச் சொல்லி தமிழன் என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொன்னேன். பிறகு, அது ஒரு பெரிய பிரச்சாரமாக பரப்பப்பட்டது.

திருமுருகுலு என்று ஒரு பெயர் இருக்க முடியுமா? முருகன் என்பது தமிழ்க் கடவுளின் பெயர். என் குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு முருகனின் பல்வேறு பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்கும்போது என்னைப் பற்றி ஒரு நபர் சொன்னதை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை சிலருக்கு இருக்கிறது.

கருத்தியல் ரீதியாக என்னை எதிர்க்க முடியாதவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஒருவரை தெலுங்கர், கிறிஸ்தவர் என்று எடுத்தவுடனேயே முத்திரை குத்திவிட்டால், அவர் சொல்லும் எதற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை.

அவரை வென்றுவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் அப்படி செய்கிறார்கள். இது அவர்களது தொழில். அதில் இடையூறு செய்ய வேண்டியதில்லை.

என் தாய் மொழி தமிழ். என் குடும்பத்தில் பலர் தமிழாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அதைப் பட்டியலிட்டு என்னை நிரூபிக்க வேண்டியதில்லை.

கே. தமிழ் தேசியம் பேசுவதற்கு மதம், மொழி போன்றவை முக்கியமானதா? ஒருவர் இந்துவாகவும் தமிழராகவும் இருந்தால்தான் தமிழ்த் தேசியம் பேச முடியுமா?

ப. சாதி வழியாக தமிழர்களை முடிவுசெய்யும் கும்பல், நீங்கள் என்ன சாதி எனக் கேட்கும். கூகுளில் நீங்கள் திருமுருகன் என்று அடித்தால், தானாக, திருமுருகன் காந்தியின் ஜாதி என்று காண்பிக்கும். அந்த அளவுக்கு ஜாதியைத் தேடுகிறார்கள்.

இன்னொரு புறம், இந்துத்துவ சக்திகள், என்னை கிறிஸ்தவர் என்று சொல்லிவிட்டால், நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என முடிவுசெய்து என் பெயர் டேனியல் காந்தி என்று பரப்பினார்கள்.

என் பெயரில் உள்ள விக்கிபீடியா பக்கத்திலும் அப்படி மாற்றிவிட்டார்கள். பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவும் இதுபோல ஒரு முறை குறிப்பிட்டார். பா.ஜ.க. தான் தற்போது அதிகாரத்தில் உள்ளது.

என்னுடைய பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், என் தந்தையின் சான்றிதழை வைத்து கிறிஸ்தவர் என்று நிரூபிக்கட்டும்.

திருமுருகன் காந்தி

நடிகர் விஜய்க்கு அடையாள அட்டையை காண்பித்தார்கள் அல்லவா, அதுபோல என்னுடைய ஆவணத்தை எடுத்துக் காட்டட்டுமே. என் குடும்பத்தினரின் ஆவணத்தை வைத்து நிரூபிக்கட்டும். அப்படி நிரூபித்தால், நான் மே 17 இயக்க அரசியலிலிருந்தே விலகிக்கொள்கிறேன்.

கே. திருமுருகன் என்ற தனி நபரைப் பொறுத்தது அல்ல. ஏன் ஒருவர் இந்து அல்லாமல், தமிழர் அல்லாமல் மக்கள் நலனைப் பேச முடியாதா?

ப. நானும் தவறு என்று சொல்லவில்லை. ஏன் ஒரு கிறிஸ்தவர் அதை பேசக்கூடாதா? கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களா?

இந்து மதத்திலிருந்து, அதன் கொடுமைகள் தாங்காமல் வெளியேறியவர்கள்தானே. இன்னமும் நாம் வழிபடும் கோவிலுக்குள் பலரை அனுமதிக்க மறுக்கிறோம்.

இந்த அடக்கு முறைக்கு எதிராகத்தானே கிறிஸ்தவத்திற்கு மாறியிருக்கிறார்கள்.

கே. உங்களை வேறு மொழிக்காரராக, தெலுங்கர் என்று சொல்வதெல்லாம் நீங்கள் பெரியாரை ஏற்பதிலிருந்து வருகிறது.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை ஏற்றுக்கொள்ளக்கூடாது; அப்படி ஏற்றுக்கொண்டால் அவர்களிடம் ஏதோ பிழை இருக்கிறதென சுட்டிக்காட்டப்படுகிறது.

நீங்கள் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு, பெரியாரை ஏற்பது என்பது பலருக்கு முரணாக இருக்கிறது..

ப. தமிழ் தேசியத்தை முறையாக ஏற்பவர்கள், அதற்காக சிறை சென்றவர்கள் யாரும் பெரியாரை மறுக்கவில்லை.

போலியாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை எதிர்ப்பார்கள். ஐயா பெருஞ்சித்தரனாரோ, தமிழ்நாடு விடுதலைப் படை தமிழரசனோ, புலவர் கலியபெருமாளோ பெரியாரை மறுக்கவில்லை.

இப்போது பெரியாரை மறுக்கக்கூடிய அமைப்புகள் என்பவை சமீபத்தில் வந்தவைதான். அவர்கள் பெரியாரை மறுக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சில நோக்கங்கள் இருக்கின்றன. அதனால் மறுக்கிறார்கள்.

ஆனால், தமிழ் தேசியத்திற்காக சிறை சென்றவர்கள் பெரியாரை மறுக்கவில்லை. அவர்களைவிட பெரிய தியாகிகளா இவர்கள்? பெரியாரிய இயக்கங்களின் வழியாக வந்தவர்கள், மார்க்சிய - லெனினிய இயக்கங்களின் வழியாக வந்தவர்கள், தனித் தமிழ் இயக்கங்களின் வழியாக வந்தவர்கள்தானே தமிழ் தேசியம் பேசினார்கள்?

திருமுருகன் காந்தி

தமிழ் தேசியத்திற்கு எதிராக பெரியாரைக் கட்டமைப்பது இவர்கள் நோக்கத்திற்காக செய்வது. தமிழ் தேசியத்தில் அப்படி இல்லை. அரங்க குணசேகரனோ, பொழிலனோ பெரியாரை மறுக்கவில்லை.

கே. பெரியார் முன்வைத்த திராவிடம் என்ற கருத்தியலை நீங்கள் ஏற்கிறீர்களா?

ப. அந்தக் கருத்தியல் பெரியாருக்கு முன்பே இருந்ததுதானே? அதை நான் ஏற்கிறேன். அது ஆரியத்தை மறுத்த கருத்தியல்.

அந்தக் கருத்தியல் தமிழைத்தானே மீட்டெடுத்தது. தமிழுக்காகத்தானே போராடியது? ஆரியத்திற்கு எதிரான சமரசமற்ற யுத்தத்தை கடந்த காலத்தில் அந்தக் கருத்தியல்தானே மேற்கொண்டது?

இன்றைக்கும் செய்துகொண்டுதானே இருக்கிறது? அதை எப்படி புறக்கணிக்க முடியும்?

கே. அப்படியானால் திராவிடக் கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை ஏற்பதில் என்ன பிரச்சனை?

ப. இந்தக் கட்சிகள் தேர்தல் அரசியலில் ஈடுபடக்கூடிய கட்சிகள். ஆனால், நாங்கள் தேர்தலுக்கு வெளியில் மக்கள் பிரச்சனைக்காக பேசக்கூடிய அமைப்பு.

தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள் என்ன பேசினாலும் அதை எவ்வளவு தூரம் செய்ய முடியும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது.

அதிகாரத்தில் இருந்த கட்சிகள் இன்னும் செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால், பெரியார் தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்கவில்லை.

அந்த மரபில்தான் நாங்கள் வருகிறோம். அவர்கள் தேர்தலை மையப்படுத்தி இயங்கும் அமைப்புகள். நாங்கள் தேர்தலை மையப்படுத்தாமல் இயங்கும் அமைப்பு. இதுதான் வேறுபாடு.

கே. மே 17 இயக்கம் துவங்கப்பட்ட காலத்தில் பல இளைஞர்கள் உங்களோடு இருந்தார்கள். ஆனால், காலம் செல்லச்செல்ல நீங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறீர்கள்..

ப. இதை முற்றிலும் மறுக்கிறோம். இந்த அமைப்பு ஒரு குழுவால் நடத்தப்படுகிறது. என்னை வெளியில் நிறையத் தெரிகிறது என்றால், நான் கைதுசெய்யப்பட்டேன். அதுதான் காரணம். கைதுசெய்யப்படாமல் வெளியிலிருந்து இயங்கும் பல தோழர்கள் இருக்கிறார்கள். அருள் முருகன், லெனா குமார், பிரவீண் என பலர் இருக்கிறார்கள். எல்லா மேடைகளிலும் ஒன்றாக ஏறுகிறோம்.

கே. ஏன் உங்களை மட்டும் கைதுசெய்கிறார்கள்? அரசே திருமுருகன் காந்தி என்ற நபரை முன்னிறுத்தி ஊக்குவிக்கிறதா?

ப. இதை விளக்குகிறேன். மெரினாவில் நினைவேந்தல் நடத்தப்போனபோது, எல்லோரையும் கைதுசெய்தார்கள். நான் கடைசிப் பேருந்தில் ஏறினேன். ஒவ்வொரு பேருந்திலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் இருந்தார்கள்.

என்னை தனியாக பிரித்துக்கொண்டுபோய் ஒரு மண்டபத்தில் அடைத்தார்கள். என்னோடு டைசன், இளமாறன், தஞ்சை தமிழன், மகேஷ் ஆகியோர் இருந்தார்கள்.

எங்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் எங்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று பார்த்தால நான் மட்டும்தான். ஏன் எங்கள் குழு மீது மட்டும் வழக்குப் போடப்பட்டது என்றால், நாங்கள் சென்ற பேருந்தின் கண்ணாடி உடைந்தது.

அந்தக் கண்ணாடியை உடைத்தோம் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். கைதுசெய்தார்கள். அதற்காக சிறை சென்று வெளியில் வரும்போது, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தேன்.

அதற்காக தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. இப்படித்தான் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு முறை நான் கைதுசெய்யப்பட்டுவிட்டதால், தொடர்ச்சியாக நான் கைதுசெய்யப்படுகிறேன். அவ்வளவுதான்.

கே. மே 17 இயக்கத்தின் இறுதி இலக்கு என்ன?

ப. மக்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களது உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஒழுங்காக சரியாக செயல்படுகிறார்களா என்று கேட்கும் நிலையில் மக்கள் இல்லை.

அதற்கு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. அந்த இயக்கம்தான் மே 17 இயக்கம். இது அதிகாரவார்க்கத்தை நோக்கி கேள்விகளை எழுப்பக்கூடிய வலுவான ஒரு தளம். அவ்வளவுதான்.

https://www.bbc.com/tamil/india-45966028

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.