Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைப் பெரியாறு அணை: புதிய அணை குறித்த அனுமதியும், சர்ச்சைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையும் புதிதாக கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடமும் Image caption தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையும் புதிதாக கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடமும்

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநில எல்லைக்குள் அமைந்திருக்கிறது.

இந்த அணை 1895ல் பயன்பாட்டுக்கு வந்தது. கட்டப்பட்டு நூறாண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், இந்த அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு கூறிவருகிறது. இதையடுத்து 152 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அணையை பலப்படுத்தி பிறகு அணையின் நீர்மட்டத்தை 142க்கு உயர்த்திக்கொள்ளலாம் என்றும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு, 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கையைத் தயார் செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி, ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு கேரள அரசின் தலைமைப் பொறியாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முல்லை பெரியாறுபடத்தின் காப்புரிமை FACEBOOK

இந்தக் கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 123 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதால் தற்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டர் தூரத்தில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதுள்ள அணைப் பகுதி போக கூடுதலாக 50 ஹெக்டேர் நிலப்பரப்பு மட்டுமே இதற்கு தேவைப்படுமென்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அணை பலவீனமாக இருப்பதால், பாதுகாப்புக் கருத்தில் புதிய அணை கட்டப்படுவதாகவும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுவரும் தண்ணீர் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருமென்றும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அணைக்கு தமிழக அரசு ஒப்புதல் அவசியமென்றாலும், கேரள அரசின் அச்சத்தைப் புரிந்துகொண்டு தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளுமென நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதிய முல்லைப் பெரியாறு அணைக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறுபடத்தின் காப்புரிமை Getty Images

எந்த ஒரு திட்டத்திற்கும் தரவுகளைச் சேகரிப்பதும் ஆய்வு செய்வதும் முக்கியமானது என்பதால், அதற்கான அனுமதியை மறுக்க முடியாது எனக் கூறியுள்ள அமைச்சகம், இதற்கென ஏழு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அந்த நிபந்தனைகள்:

1. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 2014 மே 7ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் ஒருமித்த கருத்தை எட்ட முடியாவிட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, இரு தரப்பின் ஒப்புதலும் தேவை. அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

2. அனுமதி கோரும்போது இந்த விவகாரம் தொடர்பாக 2001ல் தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.

3. சூழல் மதிப்பீட்டுத் தாக்க அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி கொடுப்பதாலேயே, இந்தத் திட்டத்திற்கு சூழல் அனுமதி கொடுத்ததாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

4. சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, இது தொடர்பான எல்லா அனுமதிக் கடிதங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

5. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புகள், இந்த அனுமதியைக் கட்டுப்படுத்தும்.

6. அணை பாதுகாப்பு தொடர்பான டாக்டர் தத்தே கமிட்டி அறிக்கையை இணைக்க வேண்டும்.

7. அணையும் நீர்ப்பிடிப்புப் பகுதியும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மதிப்பீட்டுத் தாக்க அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

கேரள அரசின் திட்டமிட்டுள்ள புதிய அணை, 53.22 அடி உயரத்தைக் கொண்டிருக்கும். பெரியாறு அணையில் தற்போது பயன்படுத்தப்படும் நிலப்பகுதிபோக, கூடுதலாக 50 ஹெக்டேர் நிலப்பரப்பு தேவைப்படும்.

இதில் சுமார் 22 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். நீர்ப் பிடிப்புப் பகுதி 624.50 சதுர கி.மீயாக இருக்கும். இந்த புதிய அணையின் காரணமாக 143 மில்லியன் கன அடி நீரைக் கூடுதலாகத் தேக்க முடியும்.

இந்த அணையின் உயரம் 175.02 அடியாக இருக்கும். 4 ஆண்டு காலகட்டத்தில் 663 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய அணை கட்டப்படும்.

இந்த அனுமதி செப்டம்பர் 27ஆம் தேதியே வழங்கப்பட்டுவிட்டாலும் இது தொடர்பான ஆவணங்கள் நேற்றுத்தான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. புதன் கிழமையன்று காலையில் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

முல்லை பெரியாறுபடத்தின் காப்புரிமை Getty Images

உடனடியாக தி.மு.க. இந்த அனுமதிக்குக் கண்டனம் தெரிவித்து. "இதனால், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதன் மூலம் கூடுதலாக சேமிக்கப்படும் நீரின் அளவு 0.017டி.எம்.சி மட்டுமே."

"ஆனால், அதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளும் அதற்குத் தேவைப்படும் நிலமும் யானைகள் சரணாலயம் உள்ள வனப்பகுதியையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடியதாக உள்ளன."

"இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதை சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது."

"இந்நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியது," என முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சரும் தி.மு.க. பொருளாளருமான துரை முருகன் கூறினார்.

இதற்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோதிக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், இதற்கு முன்பாகவும் கேரளா யாருக்கும் தெரியாமல் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் புதிய அணைக்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டுத் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கான அனுமதியைப் பெற்றதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்தத் திட்டம் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேபோல இப்போதும் நிராகரிக்க வேண்டுமெனக் கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, இனி ஒருபோதும் உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக இம்மாதிரியான புதிய முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுகளுக்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.

"கேரள அரசு நீண்ட காலமாகவே இதுபோலச் செய்துவருகிறது. ஏற்கனவே 500 மீட்டர் தூரத்தில் அணை கட்ட அனுமதி கோரினார்கள். இப்போது 300 மீட்டர் தூரத்தில் கட்டுவதற்குக் கோருகிறார்கள். மத்திய அரசும் அதற்கு ஆரம்ப கட்ட அனுமதியை அளிக்கிறது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி புதிதாக அணை கட்ட முடியாது எனத் தெரிந்து இப்படிச் செய்கிறார்கள் என்றால், மாநில அரசை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதுதான் நோக்கம்" என்கிறார் தமிழக அரசு பொதுப் பணித் துறையின் சிறப்பு தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவருமான அ. வீரப்பன்.

முல்லை பெரியாறுபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆனந்த் தலைமையில் அமைத்த குழுவினர் அணையை ஆய்வுசெய்து, அணை பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திருக்கும் நிலையில், கேரள அரசு தானாக அணை பாதுகாப்பாக இல்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு, அரசியல் சாஸன அமர்வால் அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை மீறி கேரள அரசு முயற்சிப்பது ஆச்சரியமளிக்கிறது என்கிறார் வீரப்பன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை கேரளாவில் பெய்த கடுமையான மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், அடுத்த நான்கே நாட்களில் இம்மாதிரி ஒரு திட்டத்தை மத்திய அரசின் அனுமதிக்கு அம்மாநில அரசு அனுப்பியிருப்பதும் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீரின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களில் உள்ள சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

தேனி மாவட்டத்தின் சில நகராட்சிகளும் மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குடிநீரைப் பெறுகின்றன.

பென்னி குயிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளரால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1887ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 1899ல் அணை பயன்பாட்டுக்கு வந்தது.

வைகை அணை கட்டப்பட்ட பிறகு, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கால்வாய் மூலம் வைகை அணைக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு 140 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள நீர் மின் நிலையம் ஒன்றும் இயங்கிவருகிறது.

https://www.bbc.com/tamil/india-45972069

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.