Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள்

Featured Replies

இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள்

* பாப்பரசரிடம் கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள்

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக அரசாங்கமும் அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களும் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுமாறு புனித பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புனித பாப்பரசருக்கு கஜேந்திரன் எம்.பி. அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையில் இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்காக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன.

எனினும், தமிழ் மக்கள் சித்திரவதைகள் இன்றி உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை கூட உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நவம்பர் 2005 இல் பதவியேற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமாதானப் பேச்சுகளை புறந்தள்ளி இராணுவத் தீர்வின் மீது நம்பிக்கை கொண்டு அவரது அரசு செயற்படுகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையினை முற்றாக மீறும் வகையில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட சில பிரதேசங்களை அரச படைகள் கைப்பற்றியுள்ள அதேவேளை, கிழக்கு மாகாணத்தினை சிங்களப் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 177000 த்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருக்கும் வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள், சந்தைகள் போன்ற பொதுமக்களின் இலக்குகள் மீது விமானத் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள் போன்றோரின் வாகனங்களும் நோயாளர் அம்பியூலன்ஸ் வண்டிகளும் இலக்கு வைக்கப்பட்டு இராணுவத்தினரால் கிளேமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இன்று வரையான 16 மாத காலத்தில் 1700 இற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 754 பேர் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள் உட்பட அனைவரும் அப்பாவிப் பொதுமக்களாவர்.

அதேபோன்று கடத்தப்பட்டுள்ளவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட அனைவரும் அப்பாவிப் பொதுமக்களாவர்.

குறிப்பாக மேற்படி இராணுவ வன்முறைகளால் தமிழ் மாணவர்களது கல்வி திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றோர் திட்டமிட்டு கொலை செய்யப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டுள்ளதுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சி. பகீரதன் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான காரணங்களால் இரு பல்கலைக்கழகங்களும் கடந்த பல மாதங்களாக சீராக இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இப்படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போதல்கள் அனைத்தும் இலங்கை இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுவினராலுமே மேற்கொள்ளப்படுகின்றது.

பொதுமக்கள் சட்டத்திற்கு முரணாக கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்ற போதிலும் இன்றுவரை ஒருவர் கூட சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. மேற்படி எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் இணங்கிக் கொள்ளப்பட்ட விடயங்கள் எதனையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தவில்லை.

இதில் இறுதி இரண்டு சுற்றுப் பேச்சுகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அச்சுறுத்தலான விதத்தில் இலங்கை அரசாங்கப் படைகளாலும் அவர்களது துணை இராணுவக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போகச் செய்யப்படுதல் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதாக அப்பேச்சுவார்த்தைகளில் சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்னிலையில் உறுதியளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தவறிவிட்டது. மாறாக, இராணுவத் தீர்வுத் திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு தமிழ் மக்கள் மீது இராணுவ நடவடிக்கைகளை அவரது அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தாங்கள் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

தங்களது சந்திப்பினூடாக இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், கிளேமோர் தாக்குதல்கள் என்பவற்றினை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கப் படைகளாலும், துணை இராணுவக் குழுவினராலும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொலை செய்தல், கடத்துதல், காணாமல்போகச் செய்தல் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கப் படைகளாலும் அரசாங்கத்தின் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 754 பேரையும் கண்டுபிடிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் இராணுவம் கைப்பற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் துணை இராணுவக் குழுவினரிடமிருந்து ஆயுதங்களை களைவதற்கும் ஆவன செய்து இலங்கையில் மீண்டும் முழு அளவிலான போர் மூளுவதனை தடுப்பதற்கும் பேச்சு மூலம் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களை யுத்த முனைப்பிலிருந்து சமாதான வழிக்கு கொண்டுவர ஆவன செய்து உதவும் வண்ணம் வேண்டுகின்றேன்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.