Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு கெடுபிடிகளின் மத்தியில் இடம்பெயர்ந்தவர்களின் அவலங்கள்

Featured Replies

பாதுகாப்பு கெடுபிடிகளின் மத்தியில் இடம்பெயர்ந்தவர்களின் அவலங்கள்

(அஜாதசத்ரு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தற்காலிக கூடாரங்களிலும் உறவினர், நண்பர் வீடுகளிலும் தங்கியுள்ள தமிழ் மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகள், அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு என்பன மேலும் மோசமானதொரு நிலைமைக்கு வழிவகுப்பதாகவே அமைந்துள்ளது.

படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி அரச படையினரால் மிக உக்கிரமாக மேற்கொள்ளப்பட்ட பல்குழல் ரொக்கெட் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல், விமானக்குண்டு வீச்சு என்பவற்றால் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி பெரும் அவல நிலைக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அரச நிவாரண உதவிகள் மிகக் குறைந்தளவிலேயே வழங்கப்படும் நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டர் நிறுவனங்களின் உதவிகளை மாத்திரமே நம்பி கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் தமது வாழ்க்கையை முடக்கிக் கொண்டுள்ள இந்த மக்கள் பல்வேறு வகையான பாதுகாப்புக் கெடுபிடிகளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து உயிருக்கு அஞ்சிய நிலையில், பாதுகாப்புத் தேடி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள பல இளைஞர், யுவதிகள் பல்வேறு வகையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கருதப்படும் பல இளைஞர், யுவதிகள் பல மணிநேர விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களை தொடர்ந்தும் கண்காணிக்கும் அச்சமான சூழ்நிலையொன்றே காணப்படுவதாக பாதிக்கப்பட்டோர் முறையிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்து அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ள சில தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேநேரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள அகதி முகாமொன்றில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் தான் ஜனாதிபதி செயலக உயரதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இடம்பெயர்ந்த மக்களின் விபரங்களைத் திரட்டி கணினிமயப்படுத்தும் திட்டமொன்றை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலிகக் கூடாரங்களிலும் நண்பர், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள பொதுமக்களை கட்டாயத்தின் பேரில் பாதுகாப்புத் தரப்பினரின் துணையுடன் வாகனங்களில் பொது இடமொன்றுக்கு அழைத்துவந்து விபரங்கள் திரட்டப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டு குடும்பத் தலைவரின் கைவிரல் அடையாளமும் பெறப்படுகின்றது.

இடம்பெயர்ந்து தங்கியுள்ள 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ்வாறு அழைத்துவரப்பட்டு அனைத்து விபரங்களும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் பெறப்படுவது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது கடும் விசனத்தை வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றும் முன்னோடி நடவடிக்கைக்காகவே விபரங்கள் திரட்டப்படுவதாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும், எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி அல்லற்படும் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தும் ஒரு நிகழ்வாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டிற்கு பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை எதிர்வரும் மூன்றரை மாத காலப்பகுதிக்குள் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர்அலி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதிலும் இந்தக் கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கப்படாமையானது அரசின் கடும் போக்கையே வெளிக்காட்டி நிற்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முதலாவது மாநாடு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களை மூன்றரை மாத காலப்பகுதியில் மீளக்குடியேற்றுவது தொடர்பாக இந்த உயர்மட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அதுவரை அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் அசமந்தப் போக்கொன்றே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

வெயில், மழை போன்ற இயற்கையின் சீற்றங்களுக்கு மத்தியில் தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கும் இந்த மக்கள் பசி பட்டினியுடன் மாற்றுவதற்கு உடைகள் கூட இல்லாத நிலையில், பெரும் துன்ப துயரங்களுடனேயே வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாழைச்சேனை முதல் கல்லாறு வரையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள 49 அகதி முகாம்களிலும் நண்பர், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பசிபட்டினிக்கு மத்தியில் தொற்றுநோய் அபாயத்தாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் தங்கியுள்ள நிலையில், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தொற்றுநோய் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அண்மைய காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக அகதி முகாம்களை சூழ்ந்து வெள்ளநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகின்றது.

பொக்களிப்பான், கண்நோய், வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களாலும் ஆயிரக்கணக்கான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்று நோய் அபாயத்திற்கு பெரும் எண்ணிக்கையானோர் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கான சுகாதார வசதிகளை வழங்க முடியாத நிலைக்கு அரச அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சுத்தமான குடிநீர் வசதியின்மை, போதியளவிலான மலசலகூட வசதியின்மை போன்ற காரணங்களும் தொற்றுநோய்கள் மிக வேகமாகப் பரவுவதற்கு வழிவகுக்கின்றன.

இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்றுநேர உணவைக் கூட உரிய முறையில் வழங்க இயலாத நிலையில், சுகாதாரச் சீர்கேடு அதனால் ஏற்படும் தொற்றுநோய் அபாயம் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதி வசதியோ ஆளணியோ அரசாங்கத்தால் வழங்கப்படவில்லையென்று மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் அரச உயரதிகாரிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் அறிக்கைகள் மட்டுமே பத்திரிகைகளில் அதிகளவில் வெளிவருவதாகவும் நிவாரண உதவிகள் மந்த கதியிலேயே வழங்கப்படுவதாகவும் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத பிரதேச செயலாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

இதனைவிட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பிரதேசங்களிலுள்ள கிராமசேவையாளர்கள் பலர் மனிதாபிமான நோக்குடன் செயற்படாமல் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

பாதுகாப்புக் கெடுபிடி, அரச நிவாரண உதவி மறுப்பு, தொற்றுநோய் அபாயம் என்ற துயரங்களுக்கு மத்தியில் தற்காலிகக் கூடாரங்களில் தமது வாழ்க்கையை முடக்கிக் கொண்டிருக்கும் படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு எப்போது விடிவு கிட்டும்?

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.