Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைச்சேனை காகித ஆலையின் கண்ணீர்க் கதை!

Featured Replies

காகித ஆலையின் கண்ணீர்க் கதை!

 
Fea0.jpg?itok=YsrA6Tr-

கிழக்கு மக்களின் தீராத ஏக்கம்!

மூவாயிரம் குடும்பங்களை வாழ வைத்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீள இயங்க வைக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி!

ஆலையின் இயந்திரங்கள் ஜேர்மனியின் உறுதியான தயாரிப்புகள். அவை மிக நீண்ட கால உத்தரவாதம் கொண்டவை. அவற்றை புனரமைத்து மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி

மூவின மக்களையும் வாழ வைத்த பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது சீரழிந்து போன நிலையில் உள்ளதால் ஆலையின் எதிர்கால நிலைமை கேள்விக்குறியாகக் காணப்படுகின்றது.

 

Fea00_0.jpg

வாழைச்சேனை கடதாசிக் கூட்டுதாபனம் 1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட கடதாசி ஆலை வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை ஆகும். இந்த ஆலை ஆரம்பிப்பதற்கு முதன்மையாக செயற்பட்டவர் மறைந்த அமைச்சர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள்.

1956ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இன்மையால் பெரும் சிரமத்தை இந்த ஆலை எதிர்நோக்கியது. இதன் பின்னர் 1960ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக இயங்கிய இந்த ஆலை அரசாங்கத்துக்கு பெரும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது. இதன் மூலப் பொருளாக அக்காலம் வைக்கோல் பயன்படுத்தப்பட்டது. சுமார் 3000 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர்.

இந்த கடதாசி ஆலை அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுத்ததால் உற்பத்தி விருது என்ற பாராட்டு விருதை இரு தடவை பெற்றுள்ளது. இவ்வேளை ஆலை மூலம் திறைசேரிக்கு வருடாந்தம் 100 மில்லியன் ரூபா வரியாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் வருமானம் மூலம் 1972இல் வாழைச்சேனை 'போட் மெஷின்' ஸ்தாபிக்கப்பட்டதுடன் 1974இல் கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் 126 பேச் பரப்பில் பெரிய தலைமைக் கட்டடம் தாபிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 1976ம் ஆண்டு ஜேர்மன் அரசாங்கத்தின் கே.எஸ்.டபிள்யூ லோன் திட்டம் மூலம் எம்பிலிப்பிட்டியவில் இன்னுமொரு தேசிய கடதாசி ஆலை தாபிக்கப்பட்டது.இக்கடனை எப்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி ஆலை வருமானமும், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை வருமானமும் மூலமுமே நீக்கினர்.

இக்கால வேளையில் தேசிய கடதாசி ஆலை மிகவும் இலாபத்தில் ஓடியதால் இங்கு கடமை புரிந்த தொழிலாளர்கள் நன்கு கவனிக்கப்பட்டதுடன், மேலதிக தொழிலை மேற்கொண்டு ஆலையை இலாபத்தில் கொண்டு செல்வதில் மிகவும் ஊக்கமாக செயற்பட்டனர். இவ்வேளை 1997இல் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் பொது வளங்கள் சீரமைப்பு ஆணைக்குழுவின் சிபார்சில் கம்பனியாக கொண்டு வரப்பட்டது. அதாவது தேசிய கடதாசி லிமிட்டெட் கம்பனியாக்கப்பட்டது.

இக் கடதாசி ஆலையானது 1993க்கு முன்பு வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கி பின்னர் சூழல் மாசுபடுதல் என்ற பிரச்சினை காரணமாக வைக்கோல் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டு கழிவுக் கடதாசியிலேயே இயங்கியது. ஆனால் இதற்கான இயந்திரங்கள் இன்று மிகவும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. யுத்தத்தைக் காரணம் காட்டி யுத்த காலவேளையில் இதன் தலைமையகம் இயந்திரங்களைப் பராமரிப்பதில் அக்கறை செலுத்தவில்லை.

இதனால் இயந்திர செயற்பாடுகள் குறைவடைந்ததால் உற்பத்தி குறைவடைந்தது. உற்பத்தி குறைவடைந்ததால் கடதாசி ஆலை நஷ்டத்தில் ஓட ஆரம்பித்தது. இதனால் இங்கு தொழில் புரிந்த தொழிலாளர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக வேலை, மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதால் வருமான ரீதியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தாமாகவே சுய விருப்பத்தில் ஆலையில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இது ஐந்து தடவை இடம்பெற்றது.

ஆனால் இதன் பின்பு ஆரம்பிக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலை நஷ்டத்தில் இயங்கியதால் அரசாங்கம் 'அவுஸ் லங்கா' என்னும் அவுஸ்ரேலியா நிறுவனத்துக்கு 30 வருட குத்தகையில் 600 மில்லியனுக்கு கொடுத்து 400 மில்லியனைப் பெற்றது. ஆனால் வாழைச்சேனை கடதாசி ஆலை சார்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

முன்பு வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஒரு சொத்தாக இருந்த கொழும்பு யூனியன் பிளேஸ் தலைமைக் காரியாலய கட்டடம் 250 மில்லியனுக்கு விற்கப்பட்ட வேளை, இதில் 50 வீதம் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பயன்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டும் அது முற்றாக நிறைவேற்றப்படவில்லை.

எனவே வாழைச்சேனை கடதாசி ஆலையைப் புனரமைப்பதற்கு தேவையான நிதியை வழங்கி இயந்திரங்கள், கட்டடங்கள் போன்றவை உட்பட அனைத்தையும் புனரமைப்பு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்ைகயாகும்.

மிகமுக்கியமாக நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்தி முடிப்பதுடன் சுற்றிவர வேலியும், பாதுகாப்பு ஏற்பாடும் மிகவும் அவசியமாகும். இன்று ஆலை போதிய பாதுகாப்பு வசதி அற்ற நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் தங்கி நின்று வேலை புரியவும், தூர இடத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கும் முன்பு தாபிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் பெரும்பாலான விடுதிகள் மாடு, பாம்புகள் உறையும் இடமாக தற்போது உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அரசுக்கு வருமானம் வழங்கிய ஒரு கடதாசி ஆலை என்பதற்கு அப்பால் சிறுபான்மை மக்களை பெரும்பான்மையின தொழிலாளர்களாகக் கொண்டு இயங்கிய ஒரு வியாபார நிறுவனமாக இப்பகுதியில் இந்த ஆலை திகழ்ந்தது. ஆலை இன்னும் புனரமைக்கப்படவில்லை என்ற ஏக்கம் இப்பகுதி மக்கள் மனதில் உள்ளது.

தேவையான கழிவுக் கடதாசி மூலப்பொருள் உண்டு. கடதாசியின் தேவையும் அதிகம் உள்ளது. மிகவும் பயிற்சி பெற்ற தேவையான தொழிலாளர்கள் வளம் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி தொழிற்சாலையை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் அவசியமாகும்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை செயலிழந்த நிலையில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் இதனை கடந்த காலத்தில் பார்வையிட்டனர்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பொறியிலாளர்கள் இயந்திரங்களைப் பார்வையிட்டனர். ஆனால் இதுவரைக்கும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் பிரதிநிதிகள் ஆலைக்கு வருகை தந்து பார்வையிடுவதால் ஆலை மீள இயங்குமோ என்ற சந்தோசத்தில் ஊழியர்கள் வருகை தந்து செல்கின்றனர். ஆனால் எந்த பயனையும் இன்றுவரை காணவில்லை.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை இயங்காமல் போனால் மிருகங்களின் சரணாலயமாக மாறக் கூடிய நிலைமையில் தற்போது காணப்படுகின்றது. இங்கு புறாக்கள், மாடுகள், பாம்புகள் உட்பட விலங்குகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. வெளிநபர்கள் சிலரது மாடுகள் தினமும் மேயும் காட்சியை அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள புனரமைப்பு செய்யவும், அதன் இயந்திரங்களை திருத்தம் செய்வதற்காகவும் இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் வாழைச்சேனை கடதாசி ஆலையை முதற்கட்டமாக கடந்த 2017ம் ஆண்டு பார்வையிட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் மற்றும் முன்னாள் ஆலையின் தவிசாளராகவிருந்த தேசமான்ய மங்கள செனரத் ஆகியோர் ஆலையின் நிலைமைகள், இங்கு காணப்படும் இயந்திரங்களில் நிலைமைகள் தொடர்பாக ஆலையை பார்வையிட்டனர்.

சுமார் எட்டு மாதங்களுக்குள் இங்குள்ள இயந்திரங்களைத் திருத்தி அமைத்து சுமார் இருபது வருடங்களுக்கு பயன்படுத்துவதற்கேற்ற முறையில் மாற்றுவோம் என அப்போது கூறப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் மிகவும் உறுதி வாய்ந்த மீள பயன்படுத்தக் கூடிய ஆயுட்கால உத்தரவாதம் கொண்ட ஜேர்மன் தயாரிப்புகளாகும்.

இவ்வியந்திரங்களைத் திருத்துவதன் மூலம் சுமார் 100 மெட்றிக் தொன் காகிதங்களை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு நாளைக்கு முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான காகிதங்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் 2000 குடும்பங்கள் பயன் பெறும் என்றும் இந்திய தமிழ் நாட்டிலிருந்து ஆலைக்கு வருகை தந்த எஸ்.வீ கைத்தொழிற்சாலையின் பிரதம பொறியிலாளர் எஸ்.பழனியப்பன் தெரிவித்திருந்தார்.

கொரிய நாட்டின் ஆயிரத்து அறுநூறு மில்லியன் ரூபா நிதியளிப்பில் புனரமைப்பு செய்யப்படும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை புனரமைக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இன இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை எந்த அரசாங்க காலத்தில் இயங்க வைக்கப்படும் என்பது தெரியாதுள்ளது.இந்த ஏக்கம் இளைஞர்கள் முதல் முன்னாள் ஊழியர்களின் மனதில் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆலையை பார்வையிட வருகை தரும் அரசியல் பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைகளை மக்களுக்கு வழங்கி விட்டுச் செல்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. பிரதமர் அனுமதி வழங்கினால் ஆலையை இயக்குவதாகவும், கொரிய நாட்டின் முதலீட்டாளர்களின் முதலீடு மூலம் இயங்கச் செய்ய உள்ளதாகவும் அரசியல் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால் பல வருடங்கள் கடந்து கொண்டே செல்கின்றது.

ஆலைக்குச் சொந்தமான பிள்ளையார் ஆலயம் தற்போது முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் இயங்கி வருகின்றது. இவ்வாலைக்கு வரும் பிரதிநிதிகள் ஆலயத்திற்கு வருகை தந்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலைக்கு செல்கின்றனர். ஆனால் கடதாசி ஆலையை கவனிக்க எவருமில்லை.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை புனரமைக்கப்படுமோ அல்லது அரசியல் நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்னாள் ஊழியர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை புனரமைக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். அத்துடன் இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என்பது பலரதும் கோரிக்கையாக உள்ளது.

https://www.thinakaran.lk/2019/07/04/கட்டுரைகள்/36708/காகித-ஆலையின்-கண்ணீர்க்-கதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.