Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி

Featured Replies

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி

பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர்

எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும் படகோட்டிகள் சில தீவுகளில் இறக்கிவிட்டு திரும்பி வருகின்றனர். தீவுகளில் பட்டினிக்கு உள்ளாகி, மரணத்தோடு போராடி ராமேசுவரம் கடற்கரையை இந்த அகதிகள் வந்து சேரும் துயரங்கள் ஏடுகளில் அன்றாட செய்தியாகி விட்டன. பலர் பிணங்களாகிவிடுகிறார்கள். இந்த அவதிகளுக்கு மனிதாபிமானத்தோடு உதவுவதற்கு, இந்தியாவின் கப்பல்படைகளும், உளவு நிறுவனங்களும் தயாராக இல்லை. சிங்களக் கப்பல் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பிணமாகிக் கொண்டிருக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் முனைப்பான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. மாறாக - சிங்கள ராணுவம் துவங்கியுள்ள போரில், அந்த ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் மறைமுக முயற்சிகளில் இந்த அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியிருப்பதாகவே தெரிகிறது. எப்படி?

அலுமினிய குண்டுகள், அலுமினிய பால்சுகள் தயாரிப்போர் தமிழகம் முழுதும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு, ஆயுதம் தயாரிக்கவே இவைகள் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்க வேண்டிய அவசியமின்றியே ஓராண்டு வரை உள்ளே வைக்க ஆட்சியாளர்களுக்கு உதவக்கூடிய ஆள் தூக்கிச் சட்டம் தான், தேசப் பாதுகாப்பு சட்டம்!

தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகி விட்டதைப்போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமிழர்களை அச்சுறுத்தி, அவர்களை ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க விடாமல், வாயடைக்கச் செய்யவே இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.

இந்த செயல்பாடுகளை முடுக்கி விடும் ‘மூளை’க்கு சொந்தக்காரராக ஒருவர் செயல்படுவதாக - தமிழக காவல்துறையின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்தான் எம்.கே. நாராயணன். பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அதுவரை இப்பதவியிலிருந்த ஜே.என் தீட்சத் மரணமடைந்தார். அடுத்த மூன்று வாரங்களில் ஜன.25, 2005 இல் மயன் கோத்தே கீயாத் நாராயணன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்க - கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் புதுடில்லி பார்ப்பன அதிகார மய்யத்தோடு நெருக்கமாக செயல்பட்டு வந்தவர்தான் இந்த அதிகாரி. அந்த ‘அனுபவங்கள்’ தான் இப்போது, பிரதமருக்கு ஆலோசகராக செயல்படும் பதவியை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கொழும்பு ஊடகங்கள் - எம்.கே. நாராயணனை எப்போதுமே தங்கள் நேச சக்திகளாகவே கருதி வருகின்றன. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் வந்தவுடன், சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கின.

இந்திய பார்ப்பன ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் இவர் மிகவும் கைதேர்ந்தவர், சாதுர்யமானவர் என்று இவரைப் புகழ்கின்றன. ஆனால் அப்படி என்ன சாதனையை இவர் செய்து காட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, பதில் வராது. தமிழர்களுக்கு - ஈழத் தமிழர்களின் உண்மையான போராளிகளுக்கு எதிராக இருந்தாலே போதும்; இத்தகைய புகழ் மகுடங்கள் சூட்டப்பட்டு - அவர்கள், உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டு விடுகிறார்கள். இதுதான் இந்திய தேசியப் பார்ப்பன அதிகார அமைப்பின் இயங்குமுறை.

கடந்த பிப்ரவரி மாதம் ஆங்கில, சிங்கள கொழும்பு நாளேடுகள் எம்.கே. நாராயணனை புகழ்ந்து தள்ளி, அவரது உரை ஒன்றை பெரிய அளவில் வெளியிட்டன. 2007 பிப்.11 ஆம் தேதியில் 43 ஆவது மூனிச் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்பு கொள்கை பற்றி உரையாற்றிய அவர், தீவிரவாத இயக்கங்கள் எப்படி நிதி திரட்டுகின்றன என்று விவரித்தார். அப்போது விடுதலைப்புலிகள் நிதி திரட்டுவது பற்றி குறிப்பிடும்போது, விடுதலைப்புலிகள் போதை மருந்து விற்பனை மூலம் நிதி திரட்டுவதாக, ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்; ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா என்று எவ்வித தரவுகளும் இன்றி, சர்வதேச மாநாடு ஒன்றில் - நாராயணன் பொறுப்பின்றி சுமத்திய அவதூறு இது. இதைத்தான் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சியோடு வெளியிட்டன.

தமிழ் ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் பல நாள் தங்கி பிரதமர் சந்திப்புக்காகக் காத்துக் கிடந்தனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாது, தவிர்த்தார் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன். இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் படுகொலைகளை நேரில் எடுத்துச் சொல்வதே, அந்த மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். இவர்கள் - விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள்கூட அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் கியுபாவில், ஹவான்னா நகரில் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, அங்கே, பிரதமருடன் இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ்தேவானந்தாவை - கியுபாவுக்கு வரச் சொல்லி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தவர், இந்த அதிகாரிதான்!

1985 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படுகொலையில் நேரடி தொடர்பு கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா! சிறீலங்கா அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, போராடும் தமிழர்களுக்கு துரோகம் செய்து, பலரை படுகொலை செய்து, சிங்கள அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டார். நாடாளுமன்ற பிரநிதிகளை பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்த எம்.கே.நாராயணன், தமிழ்நாட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய டக்ளசை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதோடு, ஹவன்னாவில் பிரதமர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்பதிலிருந்தே - எம்.கே.நாராயணன் சிங்கள ஊடகங்களால் ஏன் போற்றி புகழப்படுகிறார் என்பதன் காரணம் புரிந்திருக்கும். (பிறகு - தமிழக முதல்வரின் தலையீட்டால், ஈழத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தனர் என்பது வேறு செய்தி.)

1987 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று இந்தியா கட்டாயப்படுத்தியது.

இந்த சதி வலையைப் பின்னிய அதிகார வட்டத்தில் - எம்.கே. நாராயண னுக்கும் முக்கிய பங்கு உண்டு.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவசர அவசரமாக ஈழத்திலிருந்து டெல்லிக்கு 1987 ஜூலை 23 அம் தேதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்தியாவுக்கான தூதராக இருந்த ஜெ.என்.தீட்சத் என்ற பார்ப்பனர், ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஒப்பந்தத்தை முழுமையாகப் படித்து, சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், விடுதலைப்புலிகளை ஊதித் தள்ளிவிடுவோம் என்றும், வாயில் ‘சிகாரை’ப் பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார். அந்தச் சூழலில் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்தவர் அன்றைக்கு புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். மிரட்டல்களும், அழுத்தங்களும் பலிக்காமல் போனது வேறு சேதி! ஆனால் தமிழ் ஈழப் பிரச்சினை பற்றியோ, போராடும் இயக்கங்கள் பற்றியோ சரியான புரிதலோ, மதிப்பீடுகளோ இல்லாது, அவசர கோலத்தில் அதிகார வெறியில் அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாக்கக் காரணமாக இருந்தவர்களில் எம்.கே. நாராயணனும் ஒருவர். இத்தகைய அதிகாரிகள்தான், இலங்கைப் பிரச்சினையைக் கையாளுவதில் சமர்த்தர்களாக - பார்ப்பன-சிங்கள ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஜெ.என்.தீட்சித் - எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள்தான், ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்புவதில் ‘மூளையாக’ இருந்து செயல்பட்டவர்கள். என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ‘சவுத் ஆசியா’ எனும் இணையதளத்தில் இதுபற்றி பல விரிவான ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

“1987 இல் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியது. இரண்டு தனி மனிதர்கள்தான். அவர்கள் ஜெ.என். தீட்சித்தும், எம்.கே.நாராயணனும் ஆவர்” என்று ‘சவுத் ஆசியா’ செய்தியாளர் சுதா ராமச்சந்திரன் தனது ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார். (How India’s Srilankan Policy will evolve under the new Government can be gleaned from examning the options of two individuals J.N. Dixit and M.K. Narayana who are like; to play a Central role in crafting this policy i.e. the deployment of indian troops in Srilanka)

தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டங்களை மிஞ்சுமளவுக்கு ராணுவ வேட்டை நடத்தியது. ‘இந்திய அமைதிப்படை’ கடைசியில் அவமானப்பட்டு வெளியேறியதுதான் நடந்தது. உலக அரங்கில் இந்தியாவின் முகத்தில் கரிப்பூசச் செய்த இந்த முடிவை எடுத்த எம்.கே. நாராயணன் தான், இப்போதும் ஈழப் பிரச்சினைக்கு பிரதமரின் ஆலோசகர்.

‘டெகல்கா’ வார ஏட்டில் (ஜூன் 30, 2006) அதன் தமிழக செய்தியாளர் வினோஜ்குமார் - எம்.கே.நாராயணன் நடவடிக்கைகள் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். பிரதமரின் தூதர், ஆலோசகர் பதவி ஏற்ற சில நாட்களில் நாராயணன் முதலில், தமிழக முதல்வர் கலைஞரை சந்திக்க வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் என்ன காரணத்தாலோ அவரது முதல் வருகை தடைப்பட்டது. தமிழக முதல்வர் எம்.கே.நாராயணனை சந்திக்க விரும்பவில்லை என்றே செய்திகள் வலம் வந்தன. முதலில் தனது அதிருப்தியை தமிழக முதல்வர் பதிவு செய்தாலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் அதற்குப் பிறகான சந்திப்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. எம்.கே. நாராயணன் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரானவர் என்பதைவிட, தமிழக முதல்வருக்கு அவர் மீதான கோபத்துக்கு வேறு ஒரு முக்கிய காரணம் உண்டு. 1990களில் தி.முக. ஆட்சியைக் கலைப் பதில், இதே அதிகாரிதான் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, சந்திரசேகர் பிரதமராக இருந்த காலம் அது. தமிழ் நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி, விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவு வைத்திருப்பதாக புலனாய்வுத் துறை பொய்யாக ஒரு அறிக்கையைத் தயாரித்தது. அப்போது புலனாய்வுத் துறை இயக்குனராக இருந்தவர், இதே எம்.கே.நாராயணன் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டியவர். எம்.கே.நாராயணன் அப்போது தயாரித்த அறிக்கையில் என்ன கூறினார்?

தொடரும்

நன்றி:கீற்று

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)

இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழி நடத்தி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம் தான். பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நின்றால் மட்டுமே, தங்களின் சுரண்டலை நடத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட - பனியாக்கள் பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - இதற்கு ஒத்திசைவாக தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்கின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில் தான்.

இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் - பார்ப்பன பனியா - பன்னாட்டு - ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பிரதமர்கள் பலரும் பார்ப்பனியம் சுட்டும் பாதையிலேயே நடைபோடுகிறார்கள். இதற்கு மாறாக செயல்பட முடிந்தால் வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டும். அப்படி பார்ப்பனியத்துக்கு எதிர் திசையில் - சமூகநீதி பாதையில் நடைபோட முயன்று வீழ்த்தப்பட்ட வெகு அபூர்வமான பிரதமர் வி.பி.சிங்! காவிரிப் பிரச் சினைக்கு நடுவர் மன்றம் அமைந்ததிலிருந்து, மண்டல் அமுலாக்கம் வரை அவர் பார்ப்பனிய கட்டமைப்புக்கு வெளியிலிருந்து, இயங்கிய பிரதமராகவே இருந்தார்.

இத்தகைய வி.பி.சிங்கை வீழ்த்தும் பார்ப்பனிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்களில் ஒருவராகவே எம்.கே.நாராயணனும் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ராஜீவ் மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்வதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் பார்வை அன்று முதல், இன்று வரை எப்படி இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் - இந்தியாவின் தலையீட்டுக்கு அடிப்படையான உள் நோக்கம் உண்டு. தெற்கு ஆசியாவில் தன்னை வலிமையான சக்தியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தியாவின் அடிப்படை நோக்கம். மாலத் தீவு, நேபாளம், பூட்டான் போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் வெளியுறவு ராணுவ ரீதியான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இந்தியா, இந்தப் பட்டியலில் இடம் பெறாத, இலங்கையையும், அதில் இணைத்துக் கொள்ள விரும்பியது. அதுதான், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கான அடிப்படை நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (ஆசியா பதிப்பு 3.4.89) இது பற்றி விரிவாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வாறு குறிப்பிட்டது:

“இலங்கையில் மைனாரிட்டி மக்களான தமிழர்களுக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி, இலங்கைக்கு அனுப்பி, ஜெயவர்த்தனாவுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்துமாறு பணித்தது. இதுநாள் வரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்தியா மறுத்து வந்தாலும், இதில் பயிற்சி பெற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும், இலங்கை உளவு நிறுவனமும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலும் முடிவுமான ஒரே காரணம் - இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்திய அதிகார வட்டாரங்கள், உறுதியாகக் கூறின” என்று சுட்டிக்காட்டியது அந்த ஏடு!

மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. “1984-ல் இப்படிப் பயிற்சிப் பெற்ற ஈழப் போராளிகள் அமைப்புகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் தோல்வியே அடைந்தன. இதனால் சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல்களைத் தொடருமாறு - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் வற்புறுத்தினர். ‘புளாட்’ என்ற அமைப்பின் தலைவர் உமா மகேசுவரன் கூறுகையில், “ஒரு ‘ரா’ அதிகாரி சிங்களர்களின் திரையரங்கு ஒன்றில், வெடிகுண்டு வீசுமாறும் அல்லது சிங்களர் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வைக்குமாறும் எங்களிடம் கூறினார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். சிங்கள பொது மக்களைக் கொன்றால், எங்களுக்கு ஏராளமாக பணம் தருவதாகவும் ‘ரா’ அதிகாரிகள் கூறினர்” என்று கூறினார்” - என்று எழுதியது, ‘டைம்’ ஏடு. இந்திய உளவு நிறுவனங்கள் - எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதற்குப் பிறகு தான் அதுவரை ஆசியாவில் இந்தியாவுக்கு எதிர்ப்பான அரசியலை நடத்தி வந்த ஜெயவர்த்தனே, இந்தியாவிடம் இறங்கி வந்தார். (ஜெயவர்த்தனாவின் அரசியல் எதிரியும், அவருக்கு முன் அதிபராகவும் இருந்த திருமதி பண்டாரநாயகே. இந்தியாவின் பிரதமர் இந்திராவோடு நெருக்கமாக இருந்ததும், ஜெயவர்த்தனாவின் இந்திய எதிர்ப்புக்கு, முக்கிய காரணம்) ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க - ஈழத்தில் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் தந்து அப்பாவி சிங்களர்களைக் கூட கொன்று குவிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய உளவுத்துறை - அந்த முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு, தனது கவனத்தை போராளிகளைப் பணிய வைப்பதில் திருப்பியது.

போராட்டக் களத்தில் நின்ற விடுதலைப்புலிகளைக் கலந்து ஆலோசிக்காமல், ஜெயவர்த்தனாவோடு, ராஜிவ் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய ராணுவம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் இந்திய ராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு பலியானார்கள். தமிழர் வாழும் வடக்கு கிழக்குப் பகுதியில், இந்திய உளவு நிறுவனம் தனது ‘பொம்மை’ ஆட்சி ஒன்றை உருவாக்கியது. வரதராஜப் பெருமாள் என்பவருக்கு முதலமைச்சர் மகுடம் சூட்டி உட்கார வைத்தார்கள். ஆனால், உளவு நிறுவனத்தின் அத்தனை முயற்சிகளும், படுதோல்வியில் முடிந்தன. அவமானமாக - இந்திய ராணுவம், ஈழத்திலிருந்து வெளியேறியது. இதுதான் வரலாறு.

ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க, போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி தந்தது உளவுத் துறை. பிறகு போராளிகளைப் பணிய வைக்க இந்திய ராணுவத்தை அனுப்பி மூக்குடைபட்டது, உளவுத்துறை! 1991-ல் ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, இலங்கை அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து, இந்தியா ஒதுங்கிக் கொண்டாலும், இந்தியாவின் உளவுத்துறை, வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்து திரை மறைவு செயல்களில் ஈடுபட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

2003 ஆகஸ்டு மாதத்தில் - ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஜெ.என்.தீட்சத், ஒரு கட்டுரை எழுதினார். அதில், “இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இந்தியா ஆதரித்துக் கொண்டே, இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், தீவிரமான உதவிகளை செய்ய வேண்டும். அப்போதுதான், இலங்கை அரசு, பலமான நிலையிலிருந்து விடுதலை புலிகளோடு பேச முடியும்” (While supporting the peace process, india should strengthen the Srilankan Government in Political and logistical terms so that it can negotiate with the tigers from a position of strength) என்று எழுதினார். 2004 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் - ஜெ.என்.தீட்சித் இதையே வலியுறுத்தினார். ஜெ.என்.தீட்சித், வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரி. இலங்கையில் இந்தியாவின் தூதுவராகவும் இருந்தவர். ராஜீவ் காந்தியோடு நெருக்கமாக இருந்த பார்ப்பனர். ஆக - ஈழப் பிரச்சினையில் உளவுத்துறையின் தலையீடு, இந்த நோக்கத்தில்தான் இருந்தது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர்கள், அமைச்சர்கள் எவரும் இப்பிரச்சினை பற்றி வாய்மூடி மவுனம் சாதித்தபோது, வெளியுறவுத் துறை அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் - இப்படி வெளிப்படையாகப் பேசி செயல்படுமளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இப்படி தன்னிச்சையாக, அதிகாரத்தைக் கையில் எடுத்து செயல்பட்ட மற்றொரு உளவுத்துறை அதிகாரிதான் எம்.கே.நாராயணன்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது, இந்தியாவின் பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் - விடுதலைப்புலிகளை பரம எதிரியாகக் கருதும் பார்ப்பனர் சுப்பிரமணியசாமி. தமிழ்நாட்டில் நடந்து வந்த தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டவர் ஜெயலலிதா. 1988-89 ஆம் ஆண்டுகள் மட்டும் ஆட்சியிலிருந்த தி.மு.க. - சந்திரசேகர் ஆட்சியில் - கலைக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சி விடுதலைப்புலிகளோடு ரகசிய உறவு வைத்திருந்தது என்பது தான்!

இப்படி - தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்த ‘மகா’ மனிதர், இதே எம்.கே. நாராயணன் தான். இப்போது தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் ஆயுதக்களமாகப் பயன்படுகிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கிட திட்டமிட்டு காய்களை நகர்த்தி வரும் அதே எம்.கே. நாராயணன் தான், அப்போதும் தி.மு.க.வுக்கு எதிரான உளவு அறிக்கையைத் தயாரித்தார். இந்த உளவு அறிக்கை பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பு, பிரதமராக இருந்த வி.பி.சிங், ஈழப் பிரச்சினையில் எத்தகைய பார்வையைக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காரணம், எம்.கே. நாராயணன் தயாரித்திருந்த உளவுத்துறை அறிக்கைக்கும், வி.பி.சிங் ஈழப் பிரச்சினையில் கொண்டிருந்த பார்வைக்கும் தொடர்பு உண்டு.

ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க மத்திய அரசு நியமித்திருந்த நீதிபதி ஜெயின் ஆணையம் முன் வி.பி.சிங், சாட்சியமளித்தார். (ஈழத்திலிருந்து இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தவர் அன்றைய பிரதமர் பொறுப்பில் இருந்த வி.பி.சிங் என்பது குறிப்பிடத்தக்கது)

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி - விடுதலைப்புலிகளோடு ரகசிய தொடர்பு கொண்டிருந்தது என்று உளவுத் துறை அறிக்கை தயாரித்திருந்தது. அந்த அறிக்கையைப் பற்றி, வி.பி.சிங் தனது கருத்துகளை ஆணையம் முன் பதிவு செய்தார். வி.பி.சிங் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்த முக்கிய கருத்துகள்:

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் உருவான பிறகும், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த 1,40,000 அகதிகளில் ஒரு லட்சம் பேர், ஈழத்துக்குத் திரும்ப முடியாத நிலைதான் நீடித்தது.

தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கான தார்மீக, ராணுவ ஆதரவு, 1985 களிலிருந்தே தொடங்கிவிட்டது. பிரதமர் இந்திரா ஆட்சியின் போதும், ராஜீவ் ஆட்சியின் போதும் இவை தொடர்ந்தன. தமிழகத்தின் மூலை முடுக்குகள்கூட போராளிகளுக்குத் தெரியும். அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் உணர்வு பூர்வமாக வழங்கும் உடைகளையும், மருந்துகளையும், எப்படித் தடுக்க முடியும்? கடல் வழியாக கடத்தல் நடப்பது, கடந்த மூன்று அரசுகளிலும் நடந்திருக்கிறது.

விடுதலைப்புலிகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இது தான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அங்கே 100 சதவீத திருப்தியான நிலை வந்துவிடவில்லை. தமிழ் நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினைதான் தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் - தமிழ்நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிர வாதத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து” என்றார் வி.பி.சிங்.

விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உளவுத் துறையின் பார்ப்பனப் பார்வையிலிருந்து வி.பி.சிங், மாறுபட்ட - மனித உரிமைப் பார்வை கொண்ட மனிதராகவே இருந்தார் என்பதை வி.பி.சிங் தந்த வாக்கு மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. பஞ்சாப், காஷ்மீர், அசாம் மாநிலங்களில் நடக்கும் தீவிரவாதத்தைப் போலவே, தமிழ்நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதே வி.பி.சிங்கின் கருத்து. ஆனால், விடுதலைப்புலிகள் பிரச்சினையை வைத்து, தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட பார்ப்பன உளவு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஈழத் தமிழர் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் வலிமை பெற்றால் தமிழின எழுச்சி உருவாகி, அது பார்ப்பன எதிர்ப்பைத் தீவிரப்படுத்திவிடும் என்றே பார்ப்பன சக்திகள் நடுங்கின. இதுதான், விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பார்ப்பன சக்திகள் தீவிரம் காட்டுவதற்கான நோக்கமாகும்.

மற்றொரு முக்கிய கேள்வியும், வி.பி.சிங் இடம் கேட்கப்பட்டது. “தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ரகசிய தொடர்பு உண்டு என்று உளவுத்துறை, மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையைத் தாங்கள் பார்க்கவில்லையா?” என்பது கேள்வி.

“என்னுடைய பார்வைக்கு அந்த அறிக்கை கொண்டு வரப்படவில்லை. பிரதமர் அலுவலகத்துக்கும், அமைச்சரவை செயலாளருக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக இப்போது தான் தெரிகிறது. என்னுடைய பார்வைக்கு அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரப்படவில்லை” என்கிறார் வி.பி.சிங்.

அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே. நாராயணன். அவர் தி.மு.க.வுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

1. DIB U.O.NO.1(14)89(11) - 2699 dated 26.6.1989 by Shri M.K.Narayanan, Director I.B.

2. I.B. U.O.NO.1(14)90(11) dated 8.5.90.

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்துள்ளார்கள் என்று அந்த அறிக்கை கூறியது. அதுமட்டுமல்ல, உணவுப் பொருள்களும், மருந்துகளும்கூட, ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை வற்புறுத்தியது. எம்.கே.நாராயணனின் மனிதாபிமானத்துக்கு இது ஒரு உதாரணம்.

பிரதமராக வி.பி.சிங் பார்வைக்குப் போகாமலேயே ஒரு முக்கிய அறிக்கையை உளவுத்துறையும், பார்ப்பன அதிகார வர்க்கமும் மறைத்துவிட்டதோடு, அந்த அறிக்கையை செயல்பட வைக்கும் சூழ்நிலைக்குக் காத்திருந்தன என்பது தான் இதிலிருந்து தெளிவாகும் உண்மை. மக்கள் பிரதிநிதிகளை மிஞ்சிய அதிகாரம் படைத்த சக்திகளாக இந்த உளவுத் துறை வெளியுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் செயல்படுகிறது என்பதற்கு இது மற்றொரு முக்கிய சான்று!

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.