Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது வேட்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வேட்பாளர்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:47 Comments - 0

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் எப்போதுமே இருதரப்புப் போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன.   

பல கட்சி முறைமை நடைமுறையிலிருக்கும் நாடாக இருந்தாலும், பிரதான கட்சிகளாக இரண்டு கட்சிகளே எந்தக் காலகட்டத்திலும் இருந்து வந்த போக்கைக் காணலாம். ஏனைய கட்சிகள் ஒன்றில் ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் அல்லது, தனித்து எதிர்த்தரப்பிலிருக்கும் அரசியல் பாணியே இங்கு காணப்படுகிறது.   

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், பிரதான கட்சிகளின் ஆதரவுள்ள ‘பொது வேட்பாளர்களே’ முக்கியத்துவம் மிக்க போட்டியாளர்களாகிறார்கள். 1951இல் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியது முதல், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே அல்லது, அவற்றின் தலைமையில் அமைந்த கூட்டணிகளே இலங்கையின் இரு பிரதான கட்சிகளாக இருந்துள்ளன.   

இடைக்காலத்தில், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன பெற்ற அதீத 5/6 பெரும்பான்மை வெற்றியால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,தேசிய அரச சபையில் வெற்றிகொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவடைந்ததால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியானது.   

ஆயினும், நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு வீதாசாரத்தைப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே இரு பிரதான பலங்களாக இருந்துள்ளன.   
ஆனால் இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய பலத்தையும் ஆதரவையும் தன்னுடைய முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் புதிய கட்சியிடம் இழந்துவிட்டமை தெட்டத்தௌிவாகத் தெரிகிறது.  

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று அமைந்த இரட்டைக் குதிரைப் பந்தயத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டி இன்று மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண அந்த இடத்தைப் பிடித்துள்ளது.   

இந்தச் சூழலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும்.ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் வேட்பாளருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கும் இடையிலான போட்டியாகவே அமையும் என்பதை, இலங்கையின் கடந்தகால அரசியல் பாணியின் அடிப்படையில் உணரக்கூடியதாக இருக்கிறது.  

மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் தம்பி கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்குவது நிச்சயமாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தன்னுடைய வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், சஜித் பிரேமதாஸவே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பான வேட்பாளராக வேண்டும் என்று கட்சிக்குள்ளான ஆதரவும் அழுத்தமும் அதிகரித்தவண்ணம் வருவதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

ஆனால், கோட்டா, சஜித் ஆகிய இருவருமே போட்டியாளர்கள் என்றால், இருவரின் கொள்கைகள் எந்த அளவில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்கும் போது, இருவருமே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியலை, அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களாகவே தென்படுகிறார்கள். அவர்களுடைய பேச்சுகளும் பிரசாரங்களும் இதை உணர்த்தி நிற்கின்றன.   

இந்த நிலையில்தான், ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ‘தேசிய மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பதாகையின் கீழ், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சில நாள்களுக்கு முன்னர் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்திய, தன்னுடைய மாநாட்டில் அறிவித்திருக்கிறது.   

மிக நீண்ட காலத்தின் பின்னர், பிரதான கட்சியின் அல்லது கூட்டணியின் வேட்பாளரொருவரை ஆதரிக்காது, ஜே.வி.பி தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது.  
மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற ஜே.வி.பியின் ஆதரவு முக்கிய காரணம். ஜே.வி.பி தன்னை மார்க்ஸிய அரசொன்றை ஸ்தாபிக்க விளையும் இடதுசாரிக் கட்சியாக காட்டிக்கொண்டாலும், இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமெடுக்க முன்பே, இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் எடுத்த இயக்கம் ஜே.வி.பி.   

ஜே.வி.பியின் வன்முறை அட்டூழியங்களை எழுபது, எண்பதுகளில் வாழ்ந்த மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். படுகொலைகள் நிறைந்த இரத்தக்கறை நிறைந்த வரலாற்றைக் கொண்டது ஜே.வி.பி. அதன் தலைவர் ரோஹண விஜேவீரவின் மறைவைத் தொடர்ந்து, தன்னுடைய போராட்ட முகத்தைக் கைவிட்டு, ‘ஜனநாயக நீரோட்டத்தில்’ ஜே.வி.பி இணைந்துகொண்டது.  

ஆனால், இந்த நாட்டின் மக்களிடையே, குறிப்பாக சிங்கள மக்களிடையே தன்னுடைய வன்முறை வெறியாட்டத்தால் ஜே.வி.பி ஏற்படுத்தியிருந்த அச்சப்பார்வையை மாற்ற வேண்டிய தேவை ஜே.வி.பிக்கு இருந்தது. அதை மாற்றாது விட்டால், ‘ஜனநாயக’ அரசியலில் ஜே.வி.பியால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ஜே.வி.பி உணர்ந்திருந்தது.  

அண்மைக் காலத்தில் முன்னணி சோசலிஸக் கட்சியின் எழுச்சிவரை, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில், அங்கு இலங்கையின் பிரதான கட்சிகளுக்குப் பலமான இடமொன்று கிடையாது. மாறாக இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு மிக்க கட்சியாக ஜே.வி.பி இருந்தது. இதுவே ஜே.வி.பியின் பெரும் பலங்களுள் ஒன்று.   

image_4fb175c7e7.jpg

ஆனால், மாணவர் பலம் என்பது மட்டும் ஜனநாயக அரசியலில் தாக்குப்பிடிக்கப் போதாது. சிங்கள மக்களிடையே ஜே.வி.பி தொடர்பிலிருந்த அச்சவுணர்வையும் அவப்பெயரையும் மாற்றியமைக்க ஜே.வி.பி, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கையிலெடுத்தது.  

 சோசலிஸமும் இனத் தேசியவாதமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இயைபானதல்லவே என்று தத்துவரீதியாகக் கேள்வி எழுப்புவர்கள், ஹிட்லர் தலைமையிலான நாஸிக்களின் ‘தேசிய சோசலிஸத்தை’ கருத்தில் கொண்டால், ஜே.வி.பி எடுத்துக்கொண்ட புதிய அவதாரத்தின் தாற்பரியம் தௌிவாகும்.   

இந்தக் காலகட்டத்தில் தான், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்க்கும், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கடுமையாகப் பிரசாரம் செய்யும் அரசியலை, ஜே.வி.பி முன்னெடுத்தது. இதன் காரணமாகத் தெற்கில் ஜே.வி.பியின் ஆதரவுப் பலம் அதிகரித்தது.   

இந்தக் காலத்தில்த்தான், விமல் வீரவன்ஸ போன்ற ‘சிங்கள-பௌத்த தேசியவாத சோசலிஸவாதிகள்’ ஜே.வி.பியால் உருவாக்கப்பட்டார்கள். சிங்கள மக்களிடையே, தனக்கிருந்த அவப்பெயரைச் சரிசெய்ய, தமிழ் விரோத அரசியலை ஜே.வி.பி முன்னெடுத்தது என்று சொன்னால் அது மிகையல்ல. தன்னுடைய இரத்தக்கறை தோய்ந்த ‘பயங்கரவாத’ வரலாற்றை மறைக்க, விடுதலைப் புலிகளே மிகப்பெரிய ‘பயங்கரவாதிகள்’ என்று நிறுவுவதில் ஜே.வி.பி கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டது.   

ஏற்கெனவே வரையப்பட்ட ஒரு கோட்டைச் சிறியதாக்க வேண்டுமென்றால், அதைவிடப் பெரிய கோடொன்றை அருகில் வரையவேண்டும் என்ற உபாயத்துக்கு ஏற்றவாறாக, ஜே.வி.பியின் காய்நகர்த்தல் இது.   

இதன்படி, 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில், தீவிர ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத சக்திகளில் ஒன்றாக ஜே.வி.பி மாறியிருந்தது. ஜே.வி.பியின் ஆதரவு என்பது, தேசியக் கட்சிகளுக்கு, குறிப்பாக தெற்கின் தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியைக் கவர்வதற்கு, அவசியமானதொன்றாக மாறியிருந்தது.   

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ கண்ட யுத்த வெற்றி என்பது, ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி முன்னிலையில், அவரை அசைக்க முடியாததொரு வீரனாக ஆக்கியது. இது ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைக் கவர்வதற்கு ஜே.வி.பியின் தேவையைக் கிட்டத்தட்ட இல்லாமலாக்கியது எனலாம்.   

இந்த நிலையில்தான் 2005இல், தான் ஆதரித்துப் பதவிக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை, அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி எதிர்த்து, எதிர்த்தரப்பின் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்குத் தனது ஆதரவை வழங்கியது.   

ஆனால், யுத்த வெற்றி என்ற ஒன்று மஹிந்த ராஜபக்‌ஷவின் பெருவெற்றியை உறுதி செய்தது. மேலும் 2005க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில், ஜே.வி.பிக்குள் சில மாற்றங்களும் ஏற்பட்டன. 2008இல், உள்ளக முரண்பாட்டைத் தொடர்ந்து, விமல் வீரவன்ஸ கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.  

இதனைத் தொடர்ந்து அவரும் அவரது ஆதரவாளர்களும் பிரிந்து சென்று, வேறொரு கட்சியொன்றை ஆரம்பித்து, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் சங்கமமானார்கள். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் முகமாகவும், வெற்றி வீரனாகவும் மாறியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை, ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பேசித் தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்ததாலோ என்னவோ, ஜே.வி.பி. தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டது.   

ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு என்ற விடயங்களைக் கையிலெடுத்துக் கொண்ட ஜே.வி.பி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவரது ஆட்சிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராகக் கடும் விமர்சனத்தை நாடாளுமன்றத்திலும் வௌியிலும் தொடர்ந்து முன்வைத்து வந்தது.   

2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலம்தான், அநுர குமார திஸாநாயக்க பொதுஜனங்களிடையே பிரபலமடையத் தொடங்கிய காலம் எனலாம். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து, ‘புட்டுப் புட்டு வைத்த’ அவருடைய பேச்சுகள் ஊடக, சமூக ஊடக வௌியெங்கும் பிரபலமாகின. இது ஜே.வி.பியை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான பெரும் சக்தியாக முன்னிறுத்தியது.   

பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருந்தாலும், ஜே.வி.பியினரைப் போன்ற பொதுஜன வசியம்மிக்க பேச்சாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கவில்லை. அந்த இடைவௌி ஜே.வி.பியால் பூர்த்தி செய்யப்பட்டது.  

இந்த நிலையில்தான், 2014இல் அநுர குமார திஸாநாயக்க, ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஜே.வி.பியின் அரசியல் பயணத்தில் காலத்துக்குத் தேவையான இன்னொரு தந்திரோபாய நகர்வாகவே அமைகிறது.   

அநுர குமாரவின் தலைமைத்துவத்துடன், ஜே.வி.பியில் ஏற்பட்ட மாற்றம் என்ன? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமாரவின் வகிபாகத்தின் முக்கியத்துவம் என்ன? சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள் கோட்டாபய, சஜித் ஆகியோரை மீறி, அநுரவை ஆதரிப்பதற்கான நியாயங்கள் இருக்கின்றனவா?  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மூன்றாவது-வேட்பாளர்/91-237326

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த அநுரகுமார திஸாநாயக்க

என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, மு.ப. 11:33Comments - 0

மூன்றாவது வேட்பாளர் (பகுதி - 2)

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பினது ஆட்சேர்ப்பு, அதன் ஆரம்பகாலம் முதலே இளைஞர்களை, குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தியே அமைந்து வந்துள்ளது. ஜே.வி.பியின் பெரும் பலம் என்பது, இருபதுகளின் ஆரம்பத்திலுள்ள இளைஞர்களும் பல்கலைக்கழக மாணவர்களாகவுமே இருந்துவருகிறது. 

image_421e38022e.jpg1990களில், ஜே.வி.பி சார்ந்த சோசலிஸ அமைப்பில், ஓர் இளைஞராகத் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவர்தான் இந்த அநுரகுமார திஸாநாயக்க. 1992இல், களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவருக்கு, பல்கலைக்கழகத்திலேயே இடதுசாரி அரசியல் துளிர்விட்டெழுந்தது. பல்கலைக்கழக ஆண்டுகளின் பின்னர், அதாவது 1997இல், சோசலிஸ இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், அநுரகுமார நியமிக்கப்பட்டார். பின்னர், அடுத்த வருடமே ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், அடுத்த மத்திய மாகாணசபைத் தேர்தலில், ஜே.வி.பி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். 

2000ஆம் ஆண்டில் முதன்முறையாக நாாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார, 2004இல் ஜே.வி.பியானது அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து, அந்தக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2008இல், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, அநுர குமார தெரிவுசெய்யப்பட்டார். 

2014 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற ஜே.வி.பியின் 7ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக, அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். மேலும், 2015ஆம் ஆண்டு “ஆட்சி மாற்றத்தை” தொடர்ந்து, தேசிய அரசாங்கம் அமைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக அநுரகுமார திஸாநாயக்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறைவுக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், ராஜபக்‌ஷவையும் ராஜபக்‌ஷ ஆட்சியையும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வௌியிலும் கடுமையாக அநுரகுமார திஸாநாயக்க விமர்சித்திருந்தார். இதுவும் சிங்கள மொழிமூலம் அவர் கொண்டிருந்த அற்புதமான பேச்சாற்றலும், மக்கள் மத்தியில் அவருக்குக் கணிசமான வரவேற்பையும் பிரபல்யத்தையும் பெற்றுக்கொடுத்திருந்தது. குறிப்பாக, ராஜபக்‌ஷ ஆட்சியின் ஊழல்களை, நாடாளுமன்றத்தில் அவர் “புட்டுப் புட்டு” வைத்த காணொளிக் காட்சிகள், சமூக ஊடகங்களில் பெருமளவு பரவலாகி, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுக்கொடுத்தது. 

இடதுசாரிகள், பல்பலைக்கழக மாணவர்கள், “சிங்கள-பௌத்த” தேசியவாதம் என்பவற்றைத் தாண்டி, ஜே.வி.பியின் முகம் பரவலாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில், அநுரகுமாரவின் பேச்சுகள் அமைந்திருந்தன. இது, ஜே.வி.பிக்கு  ஒரு புதிய பரிமாணத்தை வழங்கத் தொடங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு யுகத்தின் உச்சியில்தான், ஜே.வி.பியின் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டார். அந்த 2014-2015 காலகட்டத்தில், ராஜபக்‌ஷ ஆட்சியைக் கண்டித்த அவரது பேச்சுகள், 2015 ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் பங்கு வகித்திருந்தன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், இதுவே ஜே.பி.யினதோ, அநுர குமாரவினதோ முகம் கிடையாது. கடந்தவாரப் பத்தியில் குறிப்பிட்டிருந்தது போலவே, ஜே.வி.பியானது தன்னுடைய அரசியல் தப்பிப்பிழைப்புக்காக வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டுள்ளது. 

றோஹண விஜேவீர தலைமையில் ஜே.வி.பி உருவாகி, “மார்க்ஸியப் புரட்சி” முகத்தைக் கொண்டபோது, மார்க்ஸியவாதிகள் அதன் முன்னரங்கில் நின்றார்கள். பின்னர், ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதற்காக, “சிங்கள-பௌத்த” தேசியவாத முகத்தை ஏற்றிருந்த போது, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் முன்னரங்கில் நின்று, தமது பேச்சாற்றல் மூலம் அதனைப் பலப்படுத்தினார்கள். 

பின்னர், ராஜபக்‌ஷர்களை மீறி, “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தைப் பேச முடியாது என்ற சூழல் ஏற்றபட்டபோது, அநுர குமாரவைப் போன்ற “மிதவாதிகளை” முன்னிறுத்தி, ஊழல் எதிர்ப்பு, இன சௌஜன்யம் போன்ற முகமூடிகளை ஜே.வி.பி இன்று அணிய முயல்வதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, ஜே.வி.பியின் சந்தர்ப்பவாத அரசியலின் சமகால முகமாகத்தான், நாம் அநுரகுமார திஸாநாயக்கவைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

அநுரகுமார திஸாநாயக்க, 2009க்குப்  பின்னரான ராஜபக்‌ஷ யுகத்தில், ஊழலையும் இனவாதத்தையும், அடக்குமுறையையும் கண்டித்து வந்திருந்தாலும், அடிப்படையில் “யுத்த வெற்றி” என்பதற்கு ஜே.வி.பியும் அநுரகுமார திஸாநாயக்கவும் ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்கள். யுத்தக் குற்றம் பற்றியெல்லாம் ஜே.வி.பியோ அநுரகுமாரவோ பேசியதில்லை. மேலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. ஜே.வி.பி பேசும் இன சௌஜன்யம் என்பது, வெறும் மேலோட்டமான சொற்பாவனையேயன்றி, அதற்குத் தத்துவார்த்த அடிப்படையொன்று கிடையாது. 

மறுபுறத்தில், தமிழ் மக்கள் முன்னிறுத்தும் “தமிழ்த் தேசியத்தையோ” அதன் அடிப்படையையோகூட, ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஜே.வி.பியும் அநுரகுமார திசாநாயக்கவும் இன்று பேசும் இன சௌஜன்யம் என்பது, இலங்கையின் தேசியக் கட்சிகளின் சில தலைமைகள் பேசும் இன சௌஜன்யத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதொன்றல்ல. “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற “சிங்கள-பௌத்த” தேசியவாதத்திலிருந்து உதித்த “ஒற்றையாட்சி” வரைவிலக்கணத்தைத் தகர்த்தெறியும் எந்தத் தத்துவமும், 
ஜே.வி.பியிடம் கிடையாது. ஒவ்வொரு முறையும் இனப்பிரச்சினை பற்றிய கேள்வி அவர்களிடம் எழுப்பப்படும் போதும், ஜே.வி.பியும் அநுர குமாரவும் வர்க்கப் பிரச்சினையைப் பேசி, அதற்கான பதிலை மழுப்பும் போக்கை நாம் அவதானிக்கலாம். 

ஆகவே, வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் அநுரகுமார திசாநாயக்கவும் ஜே.வி.பியும் “இடதுசாரித்துவத்தை” தாண்டி எத்தகையதொரு மாற்றுத்தெரிவாக அமையப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே. குறிப்பாகச் சிறுபான்மையினர், அதிலும் தமிழர்கள், பிரதான தேசியக் கட்சியின் வேட்பாளர்களைத் தாண்டி அநுர குமாரவைத் தேர்ந்தெடுப்பதற்கான நியாயங்கள் என்னவென்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தத்துவார்த்த ரீதியாகக்கூட தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்து  ஜே.வி.பியின் நிலைப்பாடு வேறுபட்டதல்ல. மாறாக, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பிலும்கூட, ஜே.வி.பி எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. வரலாற்று ரீதியாக அரசமைப்புக்கா 13ஆவது திருத்தத்தை, ஜே.வி.பி எதிர்த்தே வந்திருக்கிறதென்பது உண்மை. ஆனால், அது இந்தியாவால் திணிக்கப்பட்ட தீர்வு என்பதால் வந்த எதிர்ப்பு அல்ல. மாறாக, “சிங்கள-பௌத்த” தேசியவாத முகத்தை ஜே.வி.பி தீவிரமாக முன்னிறுத்திய காலகட்டத்தில், “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தின் “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற சித்தாந்தத்துக்கு, இந்த 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் ஊறு விளைவிக்கின்றன என்ற அடிப்படையில் எழுந்த எதிர்ப்புதான் அது. இன்று, இன சௌஜன்ய முகத்தை ஜே.வி.பி முன்னிறுத்தினாலும், இந்த அடிப்படையை ஜே.வி.பி கைவிடவில்லை. ஆகவே, தமிழ் மக்களின் மிக அடிப்படையான அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையையே ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய பிரதான தேசியக் கட்சிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்ற கேள்வி, தமிழ் மக்களிடையே எழுகிறது. 

இந்தக் கேள்விக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு மழுப்பலில்லாத, வர்க்கப்போராட்டம் என்ற மாயத்திரைக்குள் ஒழிந்துகொள்ளாத பதிலை அநுரகுமார தராத வரையில், அவருக்கு வாக்களிப்பதற்கான வலுவான காரணம் தமிழ் மக்களுக்கு இருக்காது. 
மறுபுறத்தில், அநுரகுமார என்ற வேட்பாளரைத் தீயது குறைந்த பிசாசாக தமிழ் மக்கள் கருத முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. மிக நீண்ட காலமாக ஜனாதிபதித் தேர்தல்களில் தீயது குறைந்த பிசாசு எது என்ற அடிப்படையில்தான் தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில், இம்முறை அநுரகுமார அந்த தெரிவாக அமைவாரா? தீயது குறைந்த பிசாசு என்பது “வெற்றிபெறத்தக்க” வேட்பாளராகவே இருக்க வேண்டும். “சிங்கள-பௌத்த” வாக்கு வங்கியின் குறைந்தபட்சம் பாதிக்கு மேலான வாக்கை பெறாத ஒரு நபர், ஒருபோதும் சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டும் ஜனாதிபதியாகிவிட முடியாது. இன்றைய சூழலில், அநுரகுமாரவுக்கும் ேஜ.வி.பிக்கும், 5-6% வாக்குகள் கிடைத்தாலே அது பெரிய விடயம். ஆகவே, வெற்றி வாய்ப்பில்லாத ஒருவரைத் தமிழ் மக்கள் “தீயது குறைந்த பிசாசு” என ஆதரிப்பது, எந்தப் பயனையும் தரப்போவதில்லை. 

ஆனால், தமிழ் மக்கள் கையாளத்தக்க இன்னோர் அரசியல் உபாயத்துக்குள், அநுரகுமாரவை தமிழ், முஸ்லிம் மக்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக்கொள்ள முடியும். இரு பிரதான தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களிடையே போட்டி மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், சிறுபான்மையின மக்களின் வாக்குகளின்றி இருவரில் ஒருவர்கூட 50% எனும் வெற்றி இலக்கை அடையமுடியாத சூழல் ஏற்படும் நிலை இருக்கும்போது, சிறுபான்மை மக்கள் தமது முதல் தெரிவாக அநுரகுமாரவைக் குறிப்பிட்டு, இரண்டாந்தெரிவாக பிரதான இரு வேட்பாளர்களின் “தீயது குறைந்த பிசாசை” தெரிந்தெடுக்க முடியும். இது நடக்கும் போது, இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டாம் விருப்பத்தெரிவு வாக்குகள் எண்ணப்பட்டு, அதனடிப்படையில் ஜனாதிபதி தெரிவாகக்கூடிய நிலை ஏற்படும். 

இது, சிறுபான்மை மக்கள் “தீயது குறைந்த பிசாசை” ஆதரிக்கும் அதேவேளை, தம்முடைய அதிருப்தியையும் வௌிப்படுத்தம் இரட்டைக் கைங்கரியத்தை ஆற்றும் உபாயமாக அமையும். ஆனால், பிரதான இரு வேட்பாளர்களிடையேயும் மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டாலும், சிறுபான்மையினர் ஒன்றுபட்டு இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆகவே, அநுரகுமாரவுக்கு  தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்களிப்பதற்கான எந்தவொரு பலமான நியாயத்தையும் அவரோ ஜே.வி.பியோ இன்னும் முன்வைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாரிந்த-அநுரகுமார-திஸாநாயக்க/91-237724

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை போருக்குள் தள்ளி தமிழ் மக்களை கொல்ல அநுர குமாரவும் ஒருவர் என்றும் அவர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனோ கணேசன் கூறுகிறார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.