Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்?

Featured Replies

புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்?

(கலைஞன்)

ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது.

புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த புதன்கிழமை டில்லியில் அவசர ஆலோசனைகள் இடம்பெற்றன. இதில் இந்திய அணு உலைகள் மீது புலிகள் விமானத் தாக்குதல் நடத்துவார்கள் என்ற இலங்கை அரசின் எச்சரிக்கை குறித்தே தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, தேசிய பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் சேகர்தத் மற்றும் கடற்படை, விமானப் படை தளபதிகள் ஆகியோர் பங்கு கொண்டு விடுதலைப் புலிகளின் விமானப் படை தொடர்பாக ஆராய்ந்ததுடன் அது தொடர்பாக எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் குறித்தும் கலந்துரையாடியதுடன், சில உத்தரவுகளும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டன.

இலங்கை வெளியுறவு செயலர் பாலித கோஹண இந்தியாவிலுள்ள அணு மின் நிலையங்கள் மீது புலிகள் விமானத் தாக்குதல்கள் நடத்தக் கூடுமென எச்சரித்ததுடன், புலிகள் இந்திய பெருங்கடல் பகுதியில் 200 முதல் 300 கடல்மைல்கள் சுற்றளவுக்கு விமானத் தாக்குதல் நடத்துமளவுக்கு வலுப்பெற்றுள்ளனர். இதனால் இலங்கையிலுள்ள நகரங்களுக்கு மட்டுமல்லாது இந்திய துறைமுகங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கும் ஆபத்து உண்டு எனத் தெரிவித்திருந்தார்.

புலிகள் தொடர்பாக புதிய பிரச்சினையாக எதை கிளறலாமென எதிர்பார்த்திருந்த மத்திய அரசுக்கு பாலித கோஹணவின் எச்சரிக்கை `அவல்' கிடைத்தது போலாகிவிட்டது. உடனடியாகவே இந்த எச்சரிக்கையை பூதாகரமாக்கி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன் புலிகள் விமான தாக்குதல் நடத்தினால் அதை எப்படி முறியடிப்பது என்றெல்லாம் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில் இலங்கை இராணுவ பேச்சாளரின் கருத்து எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிட்டது.

இலங்கை வெளியுறவு செயலர் பாலித கோஹண விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்திய அணு உலைகளுக்கு ஆபத்தென எச்சரிக்கை விடுக்க, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, இந்தியாவுக்கு புலிகளின் விமானப் படையால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இந்தியாவின் எந்த நிலைகள் மீதும் குண்டுகளை வீசுவதற்கு புலிகள் விமானத்தை பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்து தாம் எந்தவித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லையெனவும் கூறியுள்ளார்.

புலிகளின் விமானப்படை தொடர்பாக பீதியடைந்திருக்கும் இலங்கையரசு எந்த விதத்திலேனும் புலிகளின் விமானப் படையை முடங்கச் செய்துவிட வேண்டுமென்பதில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே புலிகளை பகைத்துக் கொள்ள விரும்பாத இந்தியா மூலம் புலிகளின் விமானப் படையை ஒடுக்கிவிட இலங்கையரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் இந்திய அணு உலைகள் மீது புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்துவார்களென்ற பாலித கோஹணவின் எச்சரிக்கை.

ஒரு முறை இந்தியாவுடன் கையை சுட்டுக்கொண்ட புலிகள் மறுமுறையும் கையை சுட்டுக்கொள்ள அடி முட்டாள்களல்ல. இது இலங்கையரை விட இந்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இலங்கையரசை எதிரான தமிழக மக்களின் உணர்வுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திரும்புவதை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாரில்லை. அதன் வெளிப்பாடுகளே தமிழகத்தில் கடலோர கண்காணிப்புகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ராடார் நிலையங்கள், அதிரடி சோதனைகள், இரும்புக் குண்டுகள், ஆயுத கண்டுபிடிப்புகள் போன்ற விடயங்களாகும்.

சிறு துரும்பைக் கூட புலிகளுக்கெதிராக பயன்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இலங்கை வெளியுறவு செயலரின் எச்சரிக்கையை தமக்கு சார்பாக பயன்படுத்த முனைந்த போது, இலங்கை இராணுவ பேச்சாளரின் மறுப்பு மத்திய அரசுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

புலிகள் தொடர்பாக மத்திய அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதற்கு எதிராகவே திரும்புவது அண்மைக் காலங்களில் வழக்கமான நிகழ்வுகளாகிவிட்டன.

புலிகளின் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையற்றவையென சாதாரணமானவர்களுக்குக் கூட தெரிந்திருந்தும் அதனைக் கூட சட்டை செய்யாது புலிகளால் இந்தியாவுக்கு பேராபத்து என்ற மாயையை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசும் பிரதமரை சுற்றியுள்ள தமிழ் விரோத மலையாளிகளும் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசு விரும்பியோ விரும்பாமலோ இணங்கப் போக வேண்டிய அரசியல் சூழ்நிலை உள்ளது.

இந்திய அணு உலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கூட அதன் விளைவுகள் இந்தியாவைப் பாதிப்பது போல் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை மிக மோசமாக பாதிக்கும். இவ்வாறான நிலையில் அணு உலைகள் மீது புலிகள் விமானத் தாக்குதல் செய்வார்களென்ற இலங்கை வெளியுறவு செயலரின் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டை பாரதூரமான விடயமாக்க மத்திய அரசு முயற்சிப்பது புலிகள் மீதான நெருக்கடியின் மற்றொரு வடிவமாகும்.

தமிழக மீனவர்களை படுகொலை செய்தது, கடத்தி வைத்திருப்பது விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டை தமிழக மக்கள் ஏற்கத் தயாராயில்லை. இக்குற்றச்சாட்டு புலிகள் தொடர்பாக தமிழகத்தில் பாரிய எதிர்ப்பலைகளை தோற்றுவிக்குமென மத்திய அரசு எதிர்பார்த்திருந்தது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தமக்கு புலிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் இதனை எவருமே கருத்தில் எடுக்கவில்லை.

இதனாலேயே தற்போது புலிகளின் விமானப் படையால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு பூச்சாண்டி காட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை வெளியுறவு செயலரின் கூற்றுக்கு முழு உருவம் கொடுக்க மத்திய அரசு முயற்சித்த போது இலங்கை இராணுவ பேச்சாளரின் மறுப்பு மத்திய அரசை தடுமாற வைத்துவிட்டது.

இந்நிலையில் தமிழக மீனவர்களை படுகொலை செய்வது இலங்கை கடற்படை தான் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து படுகொலை செய்கிறது என்றும் 1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை 77 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதனை மத்திய அரசு அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அந்தோனி பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அண்மைக் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "இந்திய மீனவர் மீதான தாக்குதல் குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றும் அந்தோனி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக தமிழக பொலிஸ் ஆணையர் விடுதலைப் புலிகளை ஆதாரங்களின்றி சிலரின் வாக்கு மூலங்களை அடிப்படையாக வைத்துக் குற்றம் சாட்ட, இந்திய பாதுகாப்பு அமைச்சரோ தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைதான் படுகொலை செய்வதாகத் தெரிவித்துள்ளமை விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுகளில் உள்ள உள்நோக்கங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசு இஞ்சி தின்ற குரங்கின் நிலையிலிருக்க தமிழக அரசோ ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது. ஆனால் தமிழக மக்களும் தமிழின உணர்வாளர்களும் விடுதலைப் புலிகள் தொடர்பில் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். இந்திய மத்திய அரசின் புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான தளத்தை அதிகப்படுத்துகின்றதே தவிர எதிர்ப்பு உணர்வுகளை உருவாக்க முடியவில்லை.

இந்நிலையில் புலிகளிடம் இருக்கும் சில இலகு ரக விமானங்களை கொண்ட விமானப் படை தொடர்பில் இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெளியிடும் கருத்துகள் இந்தியா உண்மையில் ஒரு வல்லரசுதானா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளன.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

'' புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? "

உங்களின் இந்த சந்தேகத்திற்கான பதில் நிறைய இருக்கலாம்.

இதில் பொறாமை என்றும் கூட சொல்லாம்.

அதாவது தங்களுடைய தயவு இல்லாமலே வேகமாக ஒரு விமானப்படையையே உருவாக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் வளர்ச்சி.

-------

அடுத்ததாக பாருங்க இந்தியா ஒருபெரிய வல்லரசு நாடு, அங்கே எந்தவொரு மாநிலத்திலும் இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்வுகளை கவனித்தீர்களென்றால் அங்கெல்லாம் விடுதலைப் புலிகளின் பெயர் இடம்பெறுகின்றன. இந்தச் செயல்களெல்லாம் மத்திய அரசால் சகிக்க முடியாமலுள்ளது.

-------

முக்கியமாக தமிழ் நாட்டைப் பாருங்க அங்குள்ள அரசை நிர்ணயிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் பெயர் பிரபல்யமாகிறது. தாயகத்தில் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு சாதனையும் தமிழ்நாட்டு மக்களை பூரிப்படைய வைக்கின்றது, விடுதலைப் புலிகள் மீது அவர்கள் வைத்திருக்கும் பாசமும் அதிகரிக்கின்றது.

இந்திய மத்திய அரசின் இந்த நிலைக்கு இப்படிப்பட்ட பல காரணங்கள் தான் அமைகின்றன.

இந்திய அணு உலைகளுக்கு பாக்கிஸ்தான் விமானிகளால் பயிற்று விக்கப்பட்ட இலங்கை வான்படையினரை விட ஆபத்து புலிகளால் வந்திடுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.