Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை.

Featured Replies

முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை.

மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது.

கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்லது முடிவுக்கு கொண்டுவர கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பௌச்சர் வந்தாலும் சரி, அதற்கும் மேலான அப்பன்மார் வந்தாலும் சரி நாம் நடத்துவதை நடத்தியே தீருவோம் என்ற தொனியிலேயே மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன.

பௌச்சரின் வருகைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் முடிச்சுப் போட்டுச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் அதாவது அவர் இங்கு இருக்கும் போதே இருவர் கொழும்பில் கடத்தப்பட்டிருந்தனர். வடக்கு, கிழக்கில் அடையாளம் காட்டாத கொலைகள் நடந்தேறின.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றி அக்கறைப்படுவதற்கு அல்லது தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்கா மனித உரிமைகளினதும் ஜனநாயகத்தினதும் காவலன் அல்ல என்பது எல்லோரும் நன்கறிந்த விடயமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது உலக ஆதிக்கத்திற்கான பாதையில் ஏதாவது பெற்றுக் கொள்ள முடியுமா என்று பார்த்துக் கொள்வதே அமெரிக்காவின் நோக்கமாகும். அண்மையில் இதனை வெளிப்படுத்தும் வகையில் இதே ரிச்சர்ட் பௌச்சர் வெளியிட்ட கருத்து கவனத்திற்குரியதாகும்.

"எந்தவொரு நாட்டிலும் யார் பதவியில் வருகிறார்கள் என்பது எமக்கு முக்கியம் இல்லை. ஜனநாயகமும் சுதந்திரமும் எந்தளவிற்குப் பாதுகாக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது என்பதே எமக்குள்ள அக்கறையாகும்". மேற்படி கூற்று அமெரிக்க ஆளும் தரப்பினர் அனைவரினதும் அடிப்படைக் கூற்றாகும். அவர்கள் கூறும் ஜனநாயகம், சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவருக்கும் புரியக்கூடியதாகும்.

அமெரிக்கா மனித உரிமை மீறல்களுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுத்து அவற்றுக்கான அழுத்தம் தரும் என இன்னும் நம்பிக்கை எதிர்பார்ப்புடன் இருக்கும் சிலர் மற்றொரு முக்கிய செய்தியைப் படித்திருப்பார்கள். இலங்கைக்கான ஆயுத விற்பனையை இவ்வருடம் அமெரிக்கா நாற்பது மடங்காக அதிகரித்துள்ளது என்பதே அத்தகவலாகும். இதனை வேறு நாட்டவர் எவரும் கூறி இருந்தால் அதனை நம்புவதில் கஷ்டம் இருந்திருக்க முடியும். ஆனால், வாஷிங்டனில் இயங்கிவரும் நிபுணர்களைக் கொண்ட பாதுகாப்பு தகவல் நிலையமே இதனை வெளியிட்டுள்ளது. அத்தகவலில் கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு விற்ற ஆயுதங்களின் பெறுமதி பதின்நான்கு இலட்சம் டொலர்களாகும். இவ்வருடம் ஆறு கோடி எண்பது இலட்சம் டொலர் பெறுமதியான நவீன ஆயுதங்கள் உட்பட அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அத்தகவல் கூறுகின்றது. இதுதான் அமெரிக்காவின் இரட்டை முகம் என்பார்கள். ஒரு கையால் நவீன ஆயுதங்களை விற்றுப் பணமாக்கிக் கொள்வதுடன், மறுகையால் மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம் என உரிமைக் குரல் எழுப்பிக் கொள்வது. இதனையே "முயலையும் உசுப்பி நாயையும் ஏவிக் கொள்வது" எனக் கூறுவர். இந்நிலை எமது நாட்டிற்குரிய ஒன்றல்ல. இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளை மையமாக கொண்டு யுத்த கோலத்தில் தம்முள் அடிபட்டு அழிந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா இவ்வாறு தான் நடந்து வருகின்றது. "யார் விற்ற ஆயுதங்கள்/ யார் சுட்டுச் சாவோர், யார் கையில் துப்பாக்கி/ யார் நெஞ்சில் ரவைகள்" என்ற நம்நாட்டுக் கவிஞர் ஒருவரின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

அந்நியர் அன்று மட்டுமன்றி இன்றும் நமது நாட்டு மக்களை அடிபடவைத்து தமது நலன்களைப் பேணி வருகின்றனர் என்ற உண்மை உரிய தரப்பினர் எவரும் உணராத வரை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சூழல் நீடிக்கவே செய்யும் என்பதை உறுதிபடக் கூற முடியும். இதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கையின் ஆளும் தரப்பினராக மாறி மாறி ஆட்சிக் கடிவாளத்தைக் கைப்பிடித்து வந்த பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகள் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். இவர்கள் தங்களுடைய சொத்து சுகபோக மேட்டுக் குடி வாழ்வுக்கான ஆட்சி அதிகாரத்தையே நடத்தி வந்தனர். அதனைப் பாதுகாக்க அந்நிய சக்திகளை அரவணைத்து அவர்களது விருப்பங்களை, நலன்களைப் பேணிக்கொள்ளத் தவறவுமில்லை. இந்த நிலை அன்று மன்னர் காலத்திலும் இருந்து வந்தது.

இன்று மக்களாட்சிக் காலம் என்று கூறப்படும் சூழலிலும் நடைபெறுகின்றது. இந்த வரையறையைத் தாண்டாத ஆட்சி தான் மகிந்த சிந்தனையின் கீழும் நடைபெறுகிறது. வெளிநாட்டு உதவிகளில் தங்கி இருக்கப்போவதில்லை என ஜனாதிபதி கருத்துரைத்திருப்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அல்ல. அதேபோன்று உலகில் எந்த நாடு எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் எனப் பிரதமர் சூளுரைத்து இருப்பதும் தற்செயலான கூற்றேயாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் உரிமைகோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை யாரும் எடுக்கக்கூடாது என்பதையே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது கூற்றுக்கள் எடுத்துக் காட்டுகின்றனவே அன்றி அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அர்த்தத்தில் அல்ல. இத்தகையோரின் தலைமைத்துவம் முழு நாட்டையும் எங்கு இட்டுச் செல்லப் போகின்றது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறான கருத்துகளையும், நிலைப்பாட்டையும் ஆட்சித் தலைவர்கள் கொண்டிருப்பதற்குப் பின்புல ஆதரவு சக்திகளாக தீவிர பேரினவாதிகள் செயலாற்றி வருவதுவெளிப்படையானதாகும். இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் முழு ஆதரவைப் தெரிவித்து அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்ட கட்சி ஜாதிக ஹெல உறுமயவாகும். பௌத்த குருமாரின் இக் கட்சிக்கு கொள்கை வகுப்பாளராக இருப்பவர் சுற்றுச் சூழல் அமைச்சரான சம்பிக்க ரணவக்க. அண்மையில் அவர் ஆற்றிய உரையில் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதையும் இங்கு இனப்பிரச்சினை என்பது கிடையாது என்றும் கூறியிருந்தார். இதனையே ஜே.வி.பி. தனது மொழியில் வேறொரு விதமாகக் கூறுகின்றது. அதனாலேயே ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன் மொழிந்துள்ள தீர்வுத் திட்டத்தில் ஒற்றையாட்சியா? சமஷ்டியா? எனத் தெளிவுபடுத்திக் கூறவில்லை எனக் கேள்வி எழுப்பிக் கொண்டது. அதனை ஜனாதிபதி உடனடியாகக் கவனத்திற்கு எடுத்து கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஒற்றையாட்சி தான் என்பதை தடித்த எழுத்தில் மாற்றிக் கொண்டார். அத்துடன், ஹெல உறுமய வற்புறுத்திய பௌத்தத்திற்கான அதி முக்கிய இடத்தையும் குறிப்பிட்டுக் கொண்டார். அதேவேளை, அதிகாரப் பரவலாக்கம் மாவட்ட மட்டத்திலும் அதற்குக் கீழேயே இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிந்து நிற்கும் தீர்வு ஆலோசனைகள் தனியே சிங்கள மக்களுக்குரியதே அன்றி பல்லினங்களைக் கொண்ட இலங்கைக்கு உரியதொன்றல்ல என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. அறுபது வருடங்களுக்கு முன்பு இதே தீர்வு யோசனைகளை முன்வைத்திருந்தாலும் கூட முற்றிலும் காலத்திற்குப் பொருந்தாத ஒன்றாகவே இருந்திருக்கும். அந்தளவிற்கு தமிழ் மக்களை மட்டுமன்றி முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களையும் சிறிதளவும் கணக்கில் கொள்ளாத பேரினவாத அகங்காரம் கொண்ட யோசனைகளாகவே காணப்படுகின்றன.

இதனையே அன்றையை இடைக்கால ஜனாதிபதியாகப் பதவி வகித்த டி.பி. விஜயதுங்க பெத்த சிங்கள இனம் என்ற பெருமரத்தில் படரும் கொடி, செடிகளே சிறுபான்மை இனங்கள்" என்று வர்ணித்துக் கூறி இருந்தார். இத்தகைய சிந்தனை நடைமுறை தான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு பௌத்த சிங்களத் தலைமைகளிடமும் இருந்து வந்துள்ளது. அதன் மற்றொரு நீட்சியே மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான மகிந்த சிந்தனையாகும்.

இத்தகைய, சிந்தனையின் மூலம் தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற்று சமாதான சூழல் ஊடாக இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியுமா? என்பது வளரும் கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது. அதேவேளை, சிங்கள மக்களை திசை திருப்புவதில் அரசின் பிரசார சாதனங்கள் அனைத்தும் திசை திருப்பிவிடப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளையும் நீதிநியாயங்களையும், சமாதானத்தையும் முன்வைப்போரின் முதுகுகளில் குத்துவதற்கென ஒரு "விஷேட முத்திரை" ஏற்கனவே தயாராக்கப்பட்டுள்ளது. அதனைக் குத்தி பார்க்கும் பரீட்சார்த்தமும் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால், இவற்றையும் கடந்து உண்மைகளை சிங்கள மக்கள் காணக்கூடிய சூழல்கள் உருவாகவே செய்யும். சிங்கள மக்களை இறுக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளையும் அதன் மூலமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பையும் கட்டண உயர்வுகளையும் அதிக காலம் மக்கள் சகிக்கமாட்டார்கள்.

அவற்றுக்கான காரண காரியங்களை அனைத்து மக்களும் கண்டு கொள்ளக்கூடிய சூழல்கள் விரைவாகவே எழுந்து வருகின்றன. அப்பொழுது மறைந்திருக்கும் உண்மைகள் பல தெளிவாகப் புலப்படவே செய்யும் என்றே அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர். அதற்கான பொறுப்பையும் பதிலையும் எவ்வாறு மகிந்த சிந்தனை வழங்கும் என்பதை அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-Thinakkural-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.