Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 இடங்கள் முடக்கம்: தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி, தனிமைப்படாமல் தலைமறைவாகியுள்ளோரை தேடி சிறப்பு நடவடிக்கை

Featured Replies

தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி தனிமைப்படாமல் தலைமறைவகையுள்ளோரை தேடி சிறப்பு நடவடிக்கை கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட நடவடிக்கைகளில் இதுவரை நான்கு மாவட்டங்களில் உள்ள 5 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்தின் அரியாலை, களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டி நகரின் ஒரு பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் குறித்த பகுதிகளில் அதிக சாத்தியம் காணப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்ப்ட்டு அப்பகுதியில் வசிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதிகளில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதும், சிலர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை உளவுத்துறை, இராணுவத்தின் உதவியோடு பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

குறிப்பாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 122 கொரோனா தொற்றாளர்களில், 102 பேர் தொடர்பில் தெளிவான தரவுகள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன, இந்த முதல் 102 தொற்றாளர்களும் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரின் எண்ணிக்கை 2024 ஆகும். அதன்படி முதல் 102 தொற்றாளர்களில், 26 ஆவது தொற்றாளரே அதிக மிக நெருங்கிய தொடர்புகளை பேணியவராவார். அவர் 262 பேருடன் தொடர்புகளை பேணியுள்ளார். இவர் இந்தியா சிங்கப்பூர் சென்று திரும்பியவராவார். எனினும் அவர் நெருங்கிப் பழகிய எவருக்கும் இதுவரை கொரோனா இருப்பது கண்டறியப்படவில்லை.

இதனை தொடர்ந்து 66 ஆவது தொற்றாளர் 184 பேருடனும்,  87 ஆவது தொற்றாளர் 169 பேருடனும் தொடர்புகளை பேணியுள்ளார். அதில் 66 ஆவது தொற்றாளர் 51 ஆவது தொற்றாளருடன் பழகியவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை முடக்கப்ப்ட்ட ஊர்கள், எதற்காக முடக்கப்பட்டன என்பது குறித்த தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். அரியாலை: 
இலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும். கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது. குறித்த அரியாலை பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான போதகர் ஒருவரால் நடாத்தப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்க கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்கவின் தகவல்கள் பிரகாரம், குறித்த போதகர் இலங்கை மற்றும் சுவிஸ் இரட்டை பிரஜா உரிமை கொண்டவர் என்பதுடன் அவரது மனைவி யாழ். பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்நிலையில் அவர் அடிக்கடி இலங்கை வந்து செல்லக் கூடியவர். இந்நிலையிலேயே மருந்துகள் இன்றி நோயை குணப்படுத்தும் ஆன்மீக நிகழ்வொன்று அவரால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

10 ஆம் திகதி நாட்டுக்குள் வந்த அவரை, அரியாலை பகுதி தேவாலயம் ஒன்றின் பிரதான மத போதகரே சென்று அழைத்து வந்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேரும் போது, மானிப்பாய் பகுதி இளைஞர் ஒருவரின் வேனில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சுவிஸ் சென்றுள்ளார்.

இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம், குறித்த போதகர், கட்டுநாயக்கவில் இருந்து குருணாகல், வாரியபொல, கல்கமுவ ஊடாக அனுராதபுரம், கிளிநொச்சியைக் கடந்து யாழ் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது அனுராதபுரத்திலும் கிளிநொச்சியிலும் இரு உணவகங்களில் தரித்து உணவு பெற்று அங்கு சிறிது நேரம்காலம் கழித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரியாலை தேவாலயம் அருகே உள்ள பிரத்தியேக வீட்டிலேயே போதகரும் அவர் மனைவியும் தங்கியிருந்துள்ளதுடன், மார்ச் 11 ஆம் திகதி அவர் சட்டத்தரணி ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் பங்கேற்றுள்ளார்.

பின்னர் மார்ச் 12 ஆம் திகதி வங்கிக்கு சென்றுள்ள அவர் அங்கு 5 நிமிடங்கள் வரை இருந்துள்ளதுடன் அரியாலை கடை தொகுதிகளுக்கும் சென்றுள்ளார். 13,14 ஆம் திகதிகளில் குறித்த போதகர் சுகயீனம் காரணமாக எங்கும் செல்லாமல் தேவாலயம் அருகே உள்ள பிரத்தியேக தங்குமிடத்திலேயே இருந்துள்ளார். பின்னர் 15 ஆம் திகதியே பிரதான மருந்துகல் இல்லாமல் நோய் குணப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் கடுமையாக சுகயீன நிலைமையில் இருந்துள்ள போதகர், ஆரம்ப நிகழ்வை நடாத்தும் பொறுப்பை அரியாலை தேவாலய பிரதான போதகரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்நிகழ்வுகளில் வந்துள்ளதுடன், 20 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் அந்த நிகழ்வை நடத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார். வரும்போது சுவிஸ் கடவுச் சீட்டை பயன்படுத்தியுள்ள அவர் போகும் போது இலங்கை கடவுச் சீட்டில் சென்றுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் அங்கு சென்ற பின்னர் மத போதகரின் மனைவி, அரியாலை தேவாலய போதகருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே அது குறித்த பரிசோதனை அறிக்கைகளையும் மனைவி அனுப்பியுள்ள நிலையில், அரியாலை தேவாலய பிரதான போதகர் அந்த தகவல்களை பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அந்த ஆன்மீக நிகழ்வில் கலந்துகொண்ட 208 பேர் அரியாலை பகுதியினை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் அந்த ஊர் முற்றாக முடக்கப்பட்டது. அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அந்நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஏனையோர் கிளிநொச்சியை சேர்ந்த 8 பேர், வவுனியாவை சேர்ந்த 7 பேர், மன்னாரைச் சேர்ந்த 5 பேரும் உள்ளடங்கியிருந்தனர். அவர்களும் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியிலேயே குறித்த ஆன்மீக நோய் குணப்படுத்தல் நிகழ்வில் கலந்துகொன்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிச்செய்யப்பட்டிருந்தது.

களுத்துறை- அட்டுலுகம:
டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகமல் ஊர் முழுதும் சுற்றித் திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து முஸ்லிம் கிராமம் கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம முஸ்லிம் ஊரே இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேரை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரங்கசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அட்டுலுகம ஊரின் 6 கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்ளடங்கும் நபர்களே இவ்வாறு அவ்வூரின் சர்வோதய அமைப்பின் கட்டிடம் ஒன்றில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கு தடுத்து வைத்து கண்காணிப்பதற்கான வசதிகளை இராணுவத்தினர் அந்த கட்டிடத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த 28 ஆம் திகதி முதல் இந்த 20 பேரும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்நடவடிக்கைகளை கண்காணிக்கும் இராணுவத்தின் கேர்ணல் கமல் ஜயசூரிய தெரிவித்தார்.<br />இந்நிலையில் மேலும் 6 பேர் தற்போதும் தலைமறைவாகவுள்ளதாக பொலிஸ் உளவுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அறிவித்துள்ள நிலையில், அவர்களால் ஏனையோருக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர், டுபாய்க்கு குறித்த அட்டுலுகம - மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் கடந்த 17 ஆம் திகதி டுபாய் சென்றுள்ளார். டுபாயில் 2 நாட்கள் தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அவர், சுகாதார தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கோ அது குறித்து அறிவிக்காமலும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடாமலும் இருந்துள்ளார். ஊரெல்லம் சுற்றித் திரிந்துள்ள குறித்த நபர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது அந்நபரிடம் பொலிஸார் விசாரித்த போது முதலில் தான் டுபாய் சென்றதை அந்நபர் ஏற்றுக்கொள்ளாமல் மறைத்துள்ளார். நீண்ட விசாரணைகளின் போதே அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து உடனடியாக அவரை பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். இந் நிலையில் மறுநாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தென்படவே அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த பின்னர் முழு ஊரிலும் சுற்றித் திரிந்துள்ளதாகவும், பலரது வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே முழு ஊரையும் முடக்கியதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். அந்த ஊருக்குள் உள் நுழையவோ வெளிச்செல்லவோ எவருக்கும் எக்காரணத்துக்காகவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி அந்த ஊருக்குள் நுழைய, வெளியேற முடியுமான அனைத்து வழிகளையும் முடக்கியுள்ளதுடன் ஊரை சுற்றி 8 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு ஊர் முழுதும் அவ்வப்போது ரோந்து பணிகளும் இடம்பெற்று வருகினறன. ஊரை சுற்றியும் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமம் முஸ்லிம் கிராமம் என்ற நிலையில், அங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஒன்றாக கூடி வாழ்ந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த தொற்று பரவலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு ஊரையே முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.இந்நிலையில் தொற்றாளருடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரை தனியாக பிரித்தெடுத்து தனிமைப்படுத்தியதாகவும், ஏனையோரை அவரவர் வீடுகளில் தனிமைபப்டுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனிடையே தொற்றாளருடன் டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்நபருடனும் தொடர்புகளை பேணியவர்களை தேடிவரும் பொலிசார் அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். இதனிடையே குறித்த கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கும் அந்த தொற்று உள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

கண்டி - அக்குரணை
கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள், சென்று வந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக கடந்த 28 ஆம் திகதி முதல் முடக்கின.அக்குரணை செலம்புகஹவத்தை பகுதியைச் சேர்ந்த புடவை விற்பனைச் செய்யும் வர்த்தகர் ஒருவர் மற்றொருவருடன் இந்தியா சென்று சுமார் 7 நாட்கள் வரை தங்கியிருந்த பின்னர் கடந்த 15 ஆம் திகதி சென்னையில் இருந்து வந்திருந்தார்.அவர்வருகை தந்து ஊர் முழுதும் சுற்றியுள்ள நிலையில், நான்கு நாட்களின் பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே உள்ள சிறிய மருந்தகம் ஒன்றுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதன்போது வைத்தியர் விசாரித்தும், தான் இந்தியா சென்றதை அவர் மறைத்துள்ளார். <br />இந்நிலையில் 27 ஆம் திகதி அவருக்கு கடுமையான சுகயீனம் ஏற்படவே, 28 ஆம் திகதி காலை அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்ததாக கண்டி பிரதிப் பொலிச் மா அதிபர் ரணவீர தெரிவித்தார்.  இந்நிலையில் அவரது தொடர்பாடல் வட்டம் ஊரில் உள்ள 347 குடும்பங்கள் என அனைவரதும் பாதுகாப்பை கருதி முழு ஊரையும் முடக்கி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

புத்தளம் மாவட்டம் - கடையன் குளம், நாத்தாண்டி:
புத்தளம் - கடையன்குளம் பகுதியில் இருந்து இந்தோனேஷியா, மலேஷிய தாய்லாந்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த 5 பேர் கொண்ட குழுவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அந்த முழு ஊரும் முடக்கப்பட்டது, குறித்த ஐவரும் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றுள்ள நிலையில் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியானதாகவும் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபட் நிமல் பெரேரா உறுதி செய்தார்.

குறித்த ஆன்மீக சுற்றுலா குழுவில் இருந்த தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது 28 ஆம் திகதி கண்டறியப்பட்டது. இந் நிலையில் அவருடன் நெருக்கமாக பழகிய 18 பேர், புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 100 குடும்பங்களைக் கொண்ட அப்பகுதி தற்போது முடக்கப்பட்டு ஏனையோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளர் ஆரம்ப நாட்களில் சென்று வந்த 3 பள்ளிவாசல்களும் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாத்தாண்டி நகரின் ஒரு பகுதி முடக்கப்பட, அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவரே மரணமானவராவார். கடந்த மார்ச் 11 ஆம் திகதி வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா சென்னைக்கு சென்றுள்ள அவர் மீள 12 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேராவின் தகவல்களின் பிரகாரம், குறித்த நபருக்கு கடந்த 27 ஆம் திகதி காய்ச்சல் ஏற்படவே, அவர் மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும், அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் 28 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த நபர் தான் இந்தியா சென்று வந்தமையை சுகாதார அதிகாரிகளுக்கோ,பொலிசாருக்கோ அறிவிக்காமல் ஊர் முழுதும் சுற்றியுள்ளதாகவும், கொழும்புக்கும் வந்து சென்றுள்ளதாகவும் பொலிச் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 14 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாத்தாண்டியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78985

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.