Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரொணாக் காலத்தில் விமர்சனக் குரல்களின் முக்கியத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

979-7.jpg

 

இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது.

எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனெனில் அது நுழைந்திருக்கும் உலகிலே சிலர் ஏனையவர்களை விட அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கூடிய நிர்ப்பீடனத்தினை உடையவர்களாக இருக்கின்றனர். இந்த நிர்ப்பீடனம் ஒருவர் உட்கொள்ளும் உணவு, அவருக்குக் கிடைக்கும் ஓய்வின் அளவு மற்றும் தரம், அவர் வாழும் இடங்களில் இருக்கும் சுகாதார நிலைமை, அவருக்கு இதுவரை இருந்த‌ மருத்துவப் பாதுகாப்பு எனப் பல வழிகளிலே அவரின் மருத்துவ ரீதியிலான நிர்ப்பீடனத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்துகிறது. தேச அரசுகளினாலும், நவதாராளவாத உலகமயமாக்கலினாலும், சமூக ரீதியிலான புறமொதுக்களினாலும் உருவாக்கப்படும் இந்த மருத்துவ‍ சமூக நிர்ப்பீடனம் உலகில் அதிகாரம் மிக்கவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும், அவரவர்க்குரிய ‘சரியான’ நிலங்களில் வாழ்பவர்களுக்கும், குறித்த இடங்களிலே ‘சரியான’ கடவுளரை வழிபடுபவர்களுக்கும், ‘சரியான’ மொழிகளைப் பேசுபவர்களுக்கும் வைரசில் இருந்து பாதுகாப்பு வழங்கும் கவசமாக அமைகிறது. எனவே இந்த நெருக்கடிக்கான மருத்துவ ரீதியிலான தீர்வுகளினை இந்த நெருக்கடி எம்மைத் தேடுமாறு பணித்திருக்கும் சமூகப் பொருளாதார மாற்றுக்களில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. இந்த நெருக்கடிக்கான தீர்வுகளை  மருத்துவ ரீதியிலான தீர்வுகள் உள்ளடங்கலாக நாம் சமூகப் பொருளாதார மட்டங்களில் வைத்தும் நோக்குவது அவசியம்.

இந்த நோய்த் தொற்றின் தாக்கத்தினை உலகெங்கும் வாழும் புறமொதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான முறையில் அனுபவிப்பதற்குக் காரணமாக அமையும் கட்டமைப்புசார் அசமத்துவங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவது, கொரொணாக் காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு செயன்முறை. ஜனநாயகம், சகவாழ்வு, சமூகநீதி போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை நாம் முன்வைப்பதிலிருந்து ஒரு வைரஸ் எம்மைத் தடுப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் இந்த விழுமியங்களினை நாம் கடந்த காலங்களிலே இதயசுத்தியுடனும் முன்னிறுத்தத் தவறியமையே, இன்றைய நெருக்கடியானது எல்லா நாடுகளிலும் விளிம்பு நிலையில் வாழும் மக்களினை மோசமாகப் பாதிப்பதற்கு வழிகோலியிருக்கிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் கட்டமைப்பு ரீதியிலான புறமொதுக்கல்கள் எவ்வாறான வகைகளிலே இந்த நோய்த் தொற்றின் பாதைகளினை ஒழுங்குபடுத்துகின்றன என்பதனையும், அங்கெல்லாம் நாம் எவ்வாறான மாற்றுக்களைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்பதனையும், நாம் விளங்குவதற்கான‌ ஒரு செயன்முறையாகவே ‘விமர்சனக் குரல்’ என்ற கருத்தினை நான் இப்பதிவிலே முன்னிறுத்துகிறேன். நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் வழங்கப்படும் நியாயமான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டிய அதேவேளையில், எதிர்ப்புக் குரல்களை எதற்காக மையத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு போதுமான காரணமாகவும் அமைகிறது.

களைப்பினை ஊட்டும் இன்றைய‌ தருணத்திலே, எவ்வாறான எதிர்ப்புக் குரல்கள் எம்மத்தியிலே உருவாக வேண்டும் என்பதனை, இந்த நோய்த் தொற்று இலங்கையில் ஆரம்பித்ததன் பின்னர் நான் அவதானித்து வருகின்ற சமூக, அரசியல் சம்பவங்களினை விளங்க முற்படுவதன் மூலமாக இங்கு பதிவு செய்ய எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நாட்டினையும், அல்லது ஒவ்வொரு பிரதேசத்தினையும் கொரொணா வைரஸ் எவ்வாறு பாதிக்கிறது என்பது அங்கு இருக்கக் கூடிய சமூக அரசியல்சார் விடயங்களிலே தங்கியிருந்தாலும், அதேபோல ஒவ்வொரு பிரதேசத்தில் உருவாகும் எதிர்ப்புக் குரல்களுக்கும் என ஒரு தனித்துவம் இருப்பினும், உலகின் பல பாகங்களிலும் இருக்கும் மக்களின் அனுபவங்களைப் பொதுவான தளங்களுக்குக் கொண்டுவரும் செயன்முறைகள் ஒவ்வொருவரும், மற்றையவரின் நிலைமையில் இருந்து சில விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதுடன், தற்போதைய நெருக்கடியினையும், அது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆழமான கட்டமைப்புசார் வெடிப்புக்களினைக் கொண்ட சமூகங்களையும், அரசுகளையும் சீர்செய்வதற்கு எமக்கு எவ்வாறான கூட்டுச் செயன்முறைகள் தேவை என்பதனைக் கண்டுபிடிக்கவும் உதவும்.

980-17-300x225.jpgமுதலாவதாக எமது எதிர்ப்புக் குரல் இந்த உலகளாவிய நோய்த்தொற்றினை முகாமை செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் — குறிப்பாக அரசினால் வெளியிடப்பட்டிருக்கும் — மருத்துவ மற்றும் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்கள் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி ஆராய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களும் நெறிப்படுத்தல்களும் ஒரு வெறுமையான தளத்திலே இயங்குவதில்லை. பதிலாக அவற்றின் தாக்கமானது நாட்டின் பிரசைகளின் சமூகப் பொருளாதார நிலையத்துக்கு ஏற்ப வேறுபடுகிறது. இலங்கையினைப் பொறுத்தவரை, பொதுச் சுகாதாரத் துறையிலே அரசு போதியளவு நிதியினை முதலிடாமை, உள்ளூர் மற்றும் சிறு அளவிலான வியாபாரங்களின் நலனினை அரசு கருத்திலே கொள்ளத் தவறியமை, கிராமியப் பொருளாதாரம் குறித்து அரசு போதியளவு அக்கறை காட்டாமை, தொழிலாளர்களின் வாழ்க்கையினைச் சூழ்ந்திருக்கும் அபாயகரமான நிலைமைகள் போன்ற வைரசுக்கு முற்பட்ட பல காரணிகள் இந்தத் தாக்கத்தினை வெவ்வேறு வழிகளிலே ஒழுங்குபடுத்துகின்றன. கொரொணாவினை அடுத்து, நாடு முழுவதற்கும் சமச்சீரான முறையிலே அமுல்படுத்தப்படும் வகையில் தான் முன்னெடுப்பதாக அரசு சொல்லிக் கொள்ளும் மருத்துவ மற்றும் சட்ட நெறிப்படுத்தல்கள், இந்த வைரசுக்கு முந்தைய‌ காரணங்களினால் பக்கச்சாய்வானவையாகவும், ஏற்றத்தாழ்வுகளை மேலும் கூர்மைப்படுதுவனவாகவும் மாறிவிடுகின்றன.

 

ஒரு மருத்துவ நோக்கில் இருந்து இந்தப் பிரச்சினைகளை விளங்க முற்படுகையிலே, இந்த நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் கூடியளவு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற விடயம் அண்மையில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இலங்கை தனது மருத்துவப் பரிசோதனை நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் இவ்வாறான பரிசோதனை நிலையங்கள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்படல் வேண்டும். இதன் மூலம் கிராமங்களிலே வாழும் மக்கள் நீண்ட தூரம் பயணித்து நகரங்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களை நாட வேண்டிய தேவை ஏற்படாது.

இந்த நோய்த் தொற்றினுடைய பொருளாதார விளைவுகள் இலங்கையிலே வறியவர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் மோசமாகப் பாதித்துள்ளன. கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால், திறந்த வர்த்தக வலயத்தில் பணி புரியும் பல தொழிலாளர்கள் நாட்டின் வேறு பகுதிகளில் இருக்கும் தமது வீடுகளுக்கு மிகக் குறைந்த அளவு பணத்துடன் அல்லது கையிலே எந்தக் காசும் இல்லாது சென்று சேர்ந்திருக்கிறார்கள். இவர்களிலே பலர் பெண்களாகவும் இருக்கின்றனர். பெருந்தோட்டங்களிலே பணிபுரிவோர் திடமான பொருளாதார உதவிகள் இன்றி கஷ்டங்களை எதிர்கொள்ளுகின்றனர். வீடுகளிலே பணி புரிந்த‌ தொழிலாளர்களும் கூடத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஊரடங்கு மற்றும் சமூகத் தூரப்படுத்தல் போன்ற செயன்முறைகள் காரணாமகக் கிராமியப் பொருளாதாரத்தின் இயக்கு விசைகளாக அமையும் விவசாயிகள், மீனவர்கள், சீவல் தொழில் செய்பவர்கள் போன்றோர் தமது வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில், அவர்களால் தமது நாளாந்தப் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாதிருக்கின்றது. இவ்வாறான சமூகங்களை அரசு கைவிடும் நிலைமையினை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த விடயங்கள் தொடர்பிலே, மாற்றங்களை உருவாக்கக் கூடிய வகையிலான, அரசின் உடனடித் தலையீடுகளைக் கோருவதாக எமது எதிர்ப்புக் குரல்கள் அமைவது அவசியம்.

கோத்தபாயா ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகிக் கிட்டத்தட்ட நான்கு மாத காலப் பகுதிக்குள் இந்த நோய்த் தொற்று இலங்கையினுள் நுழைந்துள்ளது. சிங்கள பௌத்தர்களின் நாயகன், நாட்டின் இராணுவத்தினரின் காவலன் என்ற விம்பங்களுடன், கடந்த அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலே அதிருப்தி நிலவிய ஒரு சூழலிலே, கோத்தபாய ராஜபக்ஷ கடந்த நவம்பரிலே இலங்கையின் ஜனாதிபதியாகினார். அவருடைய பதவியேற்புக்குப் பின்னர் புதிய அரசாங்கம் நாட்டினை மேலும் இராணுவ மயமாக்கும் முயற்சிகளிலே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. உலகளாவிய நோய்த்தொற்றினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பொதுவாக இராணுவத்தினரின் பார்வையின் கீழ் வராத பல துறைகளும், பொறுப்புக்களும் தற்போது இராணுவத்தின் நேரடித் தலையீட்டுக்குள் வரும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன‌. அண்மையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தோரின் நடமாட்டங்களைக் கண்காணித்தல், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் போன்ற பொறுப்புக்களை இப்போது இராணுவமும் மேற்கொண்டு வருகிறது.

எட்டுத் தமிழ்ப் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக நாட்டின் நீதிக்கட்டமைப்பினால் தண்டனை வழங்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் ஒருவருக்கு இந்த நெருக்கடிச் சூழலினைப் பயன்படுத்தி நாட்டின் ஜனாதிபதி விசேட மன்னிப்பினை வழங்கியிருக்கிறார். நோய்த்தொற்றின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது மேலும் விரிவாக்கப்பட்ட அரசினுடைய‌ கண்காணிப்புக் கட்டமைப்புக்கள் நோய்த்தொற்றின் முடிவின் பின்னரும் கூடத் தொடரலாம். அவை எதிர்காலத்தில் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குவதற்குக் கூடப் பயன்படுத்தப்படலாம். ஜனநாயகத்தினைத் தக்கவைப்பதற்கு அல்லது ஜனநாயகம் என்ற விடயத்தினைக் குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் மட்டத்திலாயினும் இந்த நெருக்கடிக் காலப்பகுதியிலே பாதுகாப்பதற்கு, இந்தப் போக்குகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் குரல்கள் மிகவும் அவசியம். இன்று இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மேற்சொன்னவாறான பொறிமுறைகளிலே பல அவசியமானவையாக இருப்பினும், அவற்றின் உடனடி மற்றும் எதிர்கால வகிபங்கு குறித்து நாம் அரசினைப் பொறுப்புக்கூறலுக்கு உடபடுத்துவது மிகவும் அவசியம்.

 

இலங்கையின் தென்பகுதியில் தொழிற்படும் சிங்கள தேசியவாத சக்திகளும், வட இலங்கையிலே இருக்கும் பிற்போக்குத் தன்மை மிக்க‌ இந்து/சைவக் கருத்தியலினை முன்வைக்கும் சில‌ சக்திகளும் முறையே முஸ்லிம்களும், கிறீஸ்தவர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டும் வகையில், இந்த இரு சிறுபான்மைச் சமூகங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறைகூறும் வெறுப்புப் பிரசாரங்களிலே ஈடுபட்டு வருகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு எதிரான வகையிலே, அரசு இந்த வைரஸ் தொற்றின் காரணமாக இறந்த முஸ்லிம் நபர் ஒருவரின் உடலினை அடக்கம் செய்வதற்கான உரிமையினை மறுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றினால் இறந்த யாவரினதும் உடலங்கள், அவர்களது மத நம்பிக்கைகளைப் பற்றிக் கருத்திலெடுக்காத வகையிலே, கட்டாயமாகத் தகனம் செய்யப்பட வேண்டும் என அரசு ஒரு சுற்றுநிருபத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளது.

சிறுபானமைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களிலே அரசினால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் போதிய அளவிலோ அல்லது முற்று முழுதுமாகவோ கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல்லினங்களும் வாழும் வட பகுதியிலே அரசின் இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் பதில் நடவடிக்கைகளில் ஒரு பகுதி தமிழ்த் தேசிய ரீதியிலானதாக அமைகின்றது. தமிழ் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தும் இந்த மாற்று நடவடிக்கைகள், வடக்கில் சிறுபான்மையாக வாழும் தமிழரல்லாத மக்களினையும் இந்த நோய்த்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி பாதித்திருக்கிறது என்பதனைக் கவனிக்கத் தவறுகின்றன. இவ்வாறான பெரும்பான்மைவாதப் போக்குகள் இந்த நோய்த்தொற்று இன, மத ரீதியிலே மக்களைப் பிளவுபடுத்துகின்ற ஒரு நெருக்கடியாக இலங்கையிலே உருவாகுவதற்கு வழிசெய்திருக்கின்றன‌. இவ்வாறான சூழலிலே எமது எதிர்ப்புக் குரல்கள் இந்த நெருக்கடியினைப் பயன்படுத்தித் தமது குறுகிய, பிளவூட்டும் இலக்குகளை எய்தும் வகையில் அரசினாலும், அரச சார்பற்ற தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கேள்விக்குட்படுத்தவனவாக அமைவது அவசியம்.

 

இந்த உலகளாவிய நோய்த் தொற்றுப் போன்ற நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் அவற்றினை மேலும் பலமான‌ முறையில் எதிர்கொள்ளுவதற்கு அவசியமான மாற்றுக் கட்டமைப்புக்களைப் பற்றி சிந்திப்பதற்கும் கூட‌ விமர்சனக் குரல்களும், மாற்றுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் இன்றைய தருணத்திலே அவசியமாகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளிலே பொருளாதார ரீதியிலே ஒடுக்கப்பட்ட மக்களையும், தொழிலாளர்களையும், ஆவணங்கள் அற்ற நிலையில் வாழும் புலம்பெயர்ந்தவர்களையும் இந்த வைரஸ் தாக்கம் மோசமாகப் பாதிப்பதற்கு, நவதாராளவாத உலகமயமாக்கலினை அடிப்படையாகக் கொண்ட‌ பொருளாதாரமும், பிறநாட்டவர்கள் மீதான வெறுப்பினை உருவாக்கும் குடியுரிமைச் சட்டங்களும் பிரதான காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசு காலங்காலமாக மறுத்து வந்திருக்கின்றது.

மறுபுறத்தில் பூகோளமயத்துடன் தொடர்புபட்ட‌ எந்த விடயத்தினையும் சந்தேகத்துடன் வெறுப்புடனும் பார்க்கின்ற ஒரு நிலைமை, இந்த நோய்த் தொற்றினை அடுத்து, இலங்கை உள்ளடங்கலான‌ பல நாடுகளிலே ஏற்பட்டிருக்கின்றது. உள்ளூர்வாசிகளாக மாற வேண்டும், உள்ளூர்ப் பொருளாதார முறைகளையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பு இன்று பலர் மத்தியிலே அவதானிக்கப்படுகின்றது. விளிம்புநிலை மக்களின் இருப்புப் பறிபோவதற்குக் காரணமாக இருக்கின்ற சுரண்டுகின்ற தன்மை மிக்க உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு மாற்றாக பொருளாதார ரீதியிலான தன்னிறைவு மற்றும் சுயதேவைப் பொருளாதாரம் போன்ற சிந்தனைகள் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குவது மூலமும், விவசாயப் பொருளாதாரத்தினைப் புத்துயிர்ப்புச் செய்வதுவும் மிகவும் நன்மை பயக்கக் கூடிய விடயங்களாக இருக்கின்றன.

ஆனால் தன்னிறைவுப் பொருளாதாரம், சுயதேவைப் பொருளாதாரம் போன்ற கருத்தியல்கள் இலகுவில் புறமொதுக்கும் சக்திகளாகவும், குறுகிய தேசியவாத, கலாசாரவாதச் சிந்தனைகளாகவும் மாறக் கூடிய அபாயங்களையும் இன்று நாம் எதிர்கொள்ளுகிறோம். சுயத்தினையும், தன்னிலையினையும் நாம் இறைமையற்றவையாகவும், பகிர்வு என்ற அடிப்படையில் நோக்கும் போதும், அவற்றினைக் கலாசார, மத, இன மொழி ரீதியிலான பன்மைத்துவங்களுக்கு இடம்கொடுக்கும் ஒரு நிலையங்களாக‌ நோக்கும் போதும், வரலாற்றினை விளங்கிக்கொள்ளாது பிற்போக்குவாதிகளினால் உருவாக்கப்படும் தூய்மைவாதங்களில் இருந்து விடுதலை செய்யும் போதும் மாத்திரமே தன்னிறைவு, சுயதேவைப் பொருளாதாரம் போன்ற விடயங்கள் விடுதலைக்குரிய மாற்றுக்காளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பலம் சேர்ப்பனவாகவும் அமையும். தன்னிறைவில் இருக்கும் தன்னிலை என்பது புலம்பெயர்ந்தோருக்கும், சிறுபான்மையினருக்கும், தேச மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து சென்று பல்வேறு இடங்களுக்கும் சென்று உழைக்கும் மக்களுக்கும் எதிரான உணர்வுகளையும், மனநிலையினையும் எம்மத்தியிலே உருவாக்கும் ஒரு கருத்தியலாக அமையுமாயின், தன்னிறைவு என்ற சிந்தனை இவ்வுலகில் வாழும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பயன்படாத ஒரு தோல்வியடைந்த சிந்தனையாகவே அமையும்.

இன்று இருக்கும் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்புக்கான மாற்றானது ஏற்கனவே பலமாக‌ இருக்கும் சுரண்டல் தன்மைமிக்க நாடுகடந்த முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும், தன்னிறைவு என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் குறுகிய சுதேசவாத மாற்றுக்களுக்கு எதிர்வினையாற்றக் கூடியதாகவும் அமைவது அவசியம். பல்வேறு அசமத்துவங்களுக்கு மத்தியிலும், எமது தப்பிப் பிழைத்தலுக்காக நாம் தனிநபர்களாகவும், சமூகங்களாகவும் மற்றவர்களிலே தங்கியிருக்கிறோம் என்பதனைக் கொரொணா வைரஸும் அதனால் ஏற்பட்ட நெருக்கடியும் எமக்குக் கற்பித்துள்ளன. எதிர்காலம் குறித்துச் சிந்திக்கையிலே, கியூபா நாட்டு மருத்துவர்கள் இத்தாலியின் மருத்துவத் துறைக்கு இந்த நெருக்கடியான காலத்திலே உதவிகளை வழங்கியமை போன்ற அரசுகளுக்கு இடையிலான முற்போக்கான‌ ஒத்துழைப்புக்களையும், கூட்டுச் செயற்பாடுகளையும் கூட நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நோய்த்தொற்றினை அடுத்து உலகின் பல பாகங்களில் இருந்தும் ஓங்கி ஒலிக்கும் ஒரு முற்போக்கான‌ குரலானது, இந்த உலகம் பூராவும் அனைவருக்கும் இலவசமான முறையில் மருத்துவ வசதிகள் கிடைக்கும்படியான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. இலங்கையினைப் பொறுத்தவரை இங்கு இருக்கும் இலவச அரச மருத்துவத் துறையானது இந்த நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலே அதனை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளும் ஒரு மனப்பக்குவத்தினை நாட்டு மக்களுக்கும், மருத்துவத் துறையிலே பணியாற்றுவோருக்கும் வழங்கியிருக்கிறது. எனினும், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்திலே எமது மருத்துவக் கட்டமைப்புப் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடும் என்ற எதிர்வுகூறல், இலங்கையின் அரசு நாட்டின் இலவச மருத்துவத் துறையினை மேலும் விருத்தி செய்யும் நடவடிக்கைகளிலே எதிர்காலத்திலே ஈடுபட வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த உலகத்தின் ஆரோக்கியத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், வளங்களையும், செல்வங்களையும், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நன்மைகளைக் கருத்திலே கொண்டு மீள்பகிருவது அவசியம் என்பதனை இந்த நோயினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி எமக்கு வலியுறுத்துகிறது. இன்னொரு வகையிலே சொல்லப் போனால், பகிருதல், ஒருவரை ஒருவர் கவனித்தல், பராமரித்தல், மற்றும் மீள்பங்கீடு செய்தல் போன்ற கூட்டுச் செயன்முறைகளின் மூலமாக ஒரு புதிய உலக ஒழுங்கினைக் கட்டியெழுப்புவது முதன்மைப்படுத்தப்படல் வேண்டும். இந்த மாற்று உலகத்தினைக் கட்டியெழுப்புவதற்கு மாற்றுக் கருத்துக்களும், ஆரோக்கியமான விமர்சனங்களும், எதிர்ப்புக் குரல்களும், ஜனநாய வெளிகளும் இந்தக் கொரொணாக் காலத்திலும் கூடத் தேவைபபடுகின்றன.

How to Dissent During a Pandemic: Reflections From Sri Lanka என்ற தலைப்பில் இந்தியாவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் த வயர் என்ற இணைய ஊடகத்திலே கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று வெளியாகி இருந்த கட்டுரையின் தமிழாக்கம்.

மகேந்திரன் திருவரங்கன் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத் துறை விரிவுரையாளராக இருக்கிறார்.

 

http://thinakkural.lk/article/38821

 
 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.