Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்‌ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள்

-புருஜோத்தமன் தங்கமயில்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், எதிர்பா -ர்க்கப்பட்ட அளவையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்‌ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம், நாட்டைப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது.  

மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடங்கி, அரசமைப்பு சிக்கல்கள் வரை, நாளுக்கு நாள் மேலெழுந்து வருகின்றன. இலகுவாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளைக்கூட, ராஜபக்‌ஷக்கள் தேர்தலை இலக்கு வைத்துக் கையாள முனைவது, பிரச்சினைகளின் அளவை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அது, கொள்ளை நோயைக் காட்டிலும் நீண்டகால நோக்கில், பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளைக் காண்பிக்கின்றது.  

எப்போதுமே “தனி ஆவர்த்தனம்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில், ராஜபக்‌ஷக்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆட்சியாக இருந்தாலும், அதன் பலனாக இருந்தாலும், பெயர், புகழாக இருந்தாலும் அது, தமக்கானதாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியான நிலையிலேயே, கொரோனா அச்சுறுத்தலையும் அவர்கள் கையாள நினைத்தார்கள்.  

போரை வெற்றி கொண்ட இராணுவத்தினரைக் கொண்டு, கொரோனாவையும் வீழ்த்திவிடுவோம் என்று நம்பினார்கள். ராஜபக்‌ஷக்களின் தீவிர பிரசாரப் பீரங்கிகள் அதனை ஒவ்வொரு நாளும் ஒப்புவிக்கவும் செய்தார்கள்.  

அதாவது, ‘’விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு, கொரோனாவை அழிப்பதொன்றும் பெரிய வேலையில்லை’’ என்றார்கள். ஆனால், அடுத்த சில நாள்களில், நூற்றுக்கணக்கில் கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றுகளோடு அடையாளம் காணப்பட்டார்கள். தெற்கில், தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்பங்கள், அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டார்கள். சில குடும்பங்கள், அயலில் உள்ளவர்களால் தாக்கப்பட்டார்கள், ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். 

‘’நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றி வரும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரை மக்கள் அவமானப்படுத்தக் கூடாது; அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று இறைஞ்சும் நிலை, பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்பட்டது. இது, ராஜபக்‌ஷக்களின் தனி ஆவர்த்தன நிலைப்பாடுகளால் ஏற்பட்ட ஒன்றாகும். 

கடற்படையினர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான செய்தி வெளியாகி, பரபரப்பான நாள்களில், ஒரு வைத்தியர் இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார், ‘’கொரோனா வைரஸ் தொற்றை, எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், வைத்தியத்துறையினரே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விடயத்தை, அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பிடம் கையளித்தமை ஏற்கக் கூடியதல்ல. கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களைக் கையாள்கிற இராணுவத்தினருக்குப் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை; பொதுவான அறிவுறுத்தல்களே அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.   

அத்தோடு, அவர்களுக்குப் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. பணியில் ஈடுபட்டிருக்கின்ற வைத்தியர்களிடம், முகக்கவசங்களை இராணுவத்தினர் இரவல் கோருகின்ற நிலையும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து, நூற்றுக்கணக்கில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை பெரிய அதிசயம் இல்லை.  

அவசர நிலையொன்று நீடிக்கும் நேரங்களில், இராணுவமும் பொலிஸாரும் அதிகாரங்களோடு இருப்பார்கள். சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு மாத்திரமல்ல, அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களில் கூட, அவர்களின் தலையீடு இருக்கும். ஆனால், கொரோனா என்பது, ஆயுதங்களைக் கொண்டு அடக்கி ஆளக்கூடிய விடயமல்ல. அது மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொள்ளை நோய். அது குறித்த ஆராய்ச்சிகள், கடந்த சில மாதங்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.   

இப்படியான நிலையில், தமது குறுகிய தேவைகளுக்காக, அனைத்து விடயங்களையும் இராணுவத்தின் கீழ் கொண்டுவந்து, ராஜபக்‌ஷக்கள் விடயங்களைச் சிக்கலாக்கி விட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், இராணுவத்தினரைக் கொண்டாடித் தீர்த்த தென் இலங்கை இன்றைக்கு, அவர்களைத் தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கிறது.  

இன்னொரு பக்கத்தில், பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த நாடாளுமன்றம் இராணுவப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. கடந்த மார்ச் மூன்றாம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், ஜூன் 3ஆம் திகதிக்குள் கூட்டப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சொல்கின்றது. அப்படிக் கூட்டப்படாதவிடத்து, ஏற்கெனவே இருந்த நாடாளுமன்றம் மீள் நிறுவப்படும் என்று அரசமைப்பு நிபுணர்கள் வாதிடுகிறார்கள்.  

அதுவும், 2015ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் பிரகாரம், ஐந்து ஆண்டுகள் கொண்ட நாடாளுமன்றத்தை மீள் நிறுவதற்கான காலம் இருக்கின்றது. ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்றிருக்க வேண்டிய பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், திகதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர், ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது என்ற அரைகுறை அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. அந்த அறிவிப்பை, தேர்தல் ஆணைக்குழு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிவிப்பே அரசமைப்புக்கு மீறியது என்ற விடயம், இப்போது பேசு பொருளாகியிருக்கின்றது.  

ஜூன் 3ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் தேர்தலொன்றை நடத்திக் கூட்டப்படாதுவிடத்து, நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி இரத்தாகும். அப்படியானால், ஏற்கெனவே இருந்த நாடாளுமன்றம் மீள் நிறுவப்படும். அப்படியான நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்காமல், பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. அடிப்படையில், அரசமைப்பைத் தாண்டிய அதிகாரத்தைத் தேர்தல் சட்டங்கள் கொண்டிருக்கவில்லை. ஆக, அரசமைப்புச் சிக்கலொன்றை நோக்கி, நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது.  

இந்தச் சிக்கலைக் கையாள்வது தொடர்பில், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை ராஜபக்‌ஷக்கள் உடனடியாக நிராகரித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில், தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்ல முடியாத நிலையில், நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதன் மூலம், ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்பது, எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கோரிக்கையாக உள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்க்க மாட்டோம்; ஊதியங்களைப் பெறமாட்டோம் என்பது தொடங்கி, நியாயமான விடயங்களைக் கூறி, அரசமைப்பின் படி ஒழுகுவதற்கான ஆர்வத்தினை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாடாளுமன்றம் இல்லாத நிலையில், ஓர் இடைக்கால அமைச்சரவையால் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே, நிதி அதிகாரத்தைக் கையாள முடியும். அவ்வாறான நிலையிலும், நாடாளுமன்றமொன்றின் தேவை, ஜூன் 3ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்படுகின்றது.  

ஆனால், இவ்வாறான சிக்கல்களையெல்லாம், வாய்ச்சவடால்களின் வழி கடந்து விடலாம் என்று ராஜபக்‌ஷக்கள் நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்கினால், கொரோனா வைரஸுக்கு எதிரான போரை, ராஜபக்‌ஷக்கள் நடத்தினார்கள் என்கிற பெயர், அடிபடும் என்பது அவர்களின் நினைப்பு.  

இது, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான காட்சிகளை, சிலவேளை கலைத்துவிடும் என்பதும் அவர்களின் பயம். அதற்காக, பௌத்த பீடங்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவது என்கிற நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளுவதற்கான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  

ஒரு நாட்டின் அரசமைப்புத் தொடர்பிலான சிக்கல்களை, பௌத்த பீடங்களைக் கொண்டு தீர்க்க முனையும் ராஜபக்‌ஷக்களின் செயற்பாடுகள் மூலம், அவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள், அரசமைப்பை மீறிய சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. அதனை ஓர் ஒழுக்கமாகவே, இப்போதும் முன்நகர்த்த நினைக்கிறார்கள்.  

‘’கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை தென்கொரியா நடத்தியிருக்கின்றது. அப்படியான நிலையில், எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது? டெங்கு காய்ச்சலால் 700 பேர் கொல்லப்பட்ட காலத்தில் கூட, தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; இப்போது பத்துக்குக் குறைவானவர்களே கொரோனாவால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்படியானால் தேர்தலை நடத்த முடியாதா?” என்று ராஜபக்‌ஷக்களின் அமைச்சர்கள், ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தென்கொரியா தேர்தலுக்காக முன்னெடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையோ, அதற்காக ஒதுக்கிய நிதியின் அளவையோ இலங்கையால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அப்படியான நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்பது, பூச்சியம் என்கிற கட்டத்தை அடைகிற வரையில், தேர்தலொன்றை நோக்கிச் செல்வதென்பது, மக்களை மரணத்தின் வெளியில் நிறுத்துவதுதான். இப்போது, தேர்தலைக் காட்டிலும் செய்ய வேண்டியது, ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வதாகும். ஆனால், அதற்கு ராஜபக்‌ஷக்கள் இணங்கமாட்டார்கள். அதுதான், அவர்களின் கடந்த வரலாறு உணர்த்துவது. ஆக, ஆபத்து இன்னும் பெரிய வடிவில் காத்திருக்கிறது. மக்கள்தான் அவ தானமாக இருக்க வேண்டும்.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷகளின்-தேர்தலுக்கான-அவசரம்-ஆபத்தின்-வாசலில்-மக்கள்/91-249845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.