Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெருஞ்சித்திரனார் பேசினால்…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது)

 

 
பெருஞ்சித்திரனார் பேசினால்!
 
அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில்
பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே!
இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்!
முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்!
வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்!
எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே!
 
இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில்
தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான 
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும்
அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே!
யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில
பேர்விளக்கும் செய்திகளைப் பேசல் பொருத்தமுறும்!
 
நீண்டநெடுங் காலம் நெருக்கிப் பிறமொழிகள்
மூண்டுகலந் தேதமிழை முன்னழிக்குந் தீங்கிலிந்த 
நூற்றாண்டில் தூயதமிழ் நுட்பச் செழுமையுறும்
ஏற்றமிகு நூல்கள் எழுதியநற் பாவல்லார்!
மக்களிடம் தூயதமிழ் மன்னவே ஊன்றிய(து)
ஒக்க தமிழ்ப்பணியில் மிக்காரில் தொண்டர்!
செந்தமிழ் காக்கும் திண்வலிவுக் கேடயமாய்
வந்தபகை வீழ்த்தும்போர் வல்வாளாய் வாழ்ந்தவரே!
ஈடில் தமிழறிஞர்! எண்பிக்கும் ஆய்வாளர்!
கேடில் தமிழ்பொதுளும் கின்னரச்சொற் பெய்முகிலார்!
மூன்றிதழ்கள் செப்பமுற முன்முனைப்பில் நடத்தியவர்!
ஆன்ற திறஞ்சான்ற அச்சுத் தொழில்வல்லார்!
 
அச்சமிலா நெஞ்சர்; அடிமை விலங்கொடிக்க
உச்ச மறத்தில் ஒருமூன்று மாநாடு
வேட்பில் நடத்திய வெல்லும் வினைவல்லார்!
ஆட்டிப் படைக்கும் அடக்குமுறைக் கஞ்சாதே
முப்பத்தோ டைந்துமுறை மூடுசிறை ஏகியவர்!
எப்போதும் நாட்டுமொழி நன்மைக்கே தாமுழைத்தார்!
மெய்சொல்லும் செய்பணியும் மிக்கவொன்றி வாழ்ந்தவரே!
தொய்வில்லாத் தொண்டுதுரை மாணிக்கம் இன்னியற்பேர்!
தமிழ்த்தேசி யத்தின் தலைமைப்போ ராளி!
அமிழாச் சிறப்புபெருஞ் சித்திரனார் ஐயாவே!
 
அந்தநாள் முக்கழக அந்தமிழ்ப் பாநடையில்
செந்தமிழ்ச் செஞ்சுவைசேர் தீந்தமிழ்ப்பா தந்தார்!
 
இளைஞர் எழுச்சிக் கெழுதியவை பேராளம்!
வளஅரிமா நன்முழக்காய் மாணார் நடுங்க!
 
கெஞ்சுவ தில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவ தில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ தில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ தில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! 
 
ஆடினை ஆயிரம் பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்!
தமிழா! அட தமிழா  நீ
அழன்றெழு! அரிமா நடையிடு! வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!
எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா  அட தமிழா  நீ
இணைந்தெழு, இடியென முழங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!
 
ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.
 
தூங்கிக் கிடப்பதோ நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலியே, வீறேலோ ரெம்பாவாய்!
 
இளைஞரை ஊக்க எத்தனைப் பாக்கள்!
இளைத்தவர் மேலெழ ஈடில்லாத் தூண்டல்!
 
உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!
 
உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது
உணரந்திடு; விழி, எழு தமிழா!!
வெட்சிப் பூவணி, வேகப் படுநீ
வெற்றி முரசினை அதிர முழக்கு
 
நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்று வை
நேற்று நீ காற்றெனில் நீள்விசும்பு இன்று நீ
 
தமிழ்கொல்லும் தீயிதழ்கள் தாக்குறப் பாடி
இமிழ்கடல் வையத்(து) இனம்மொழி காப்பார்!
 
கல்லறை பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேறும் மணிநாளும் விரைந்த தன்றே!
 
பொதுமை உணர்வுப் பொதுளலிற் பொங்கும்
இதுவரை கேளா எழிலுறும் பாக்களில்!
 
ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை
வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்!
 
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!
 
பொதுமை உலகம் வரல்வேண்டும்  ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்
 
உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள் 
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்துவிடாதே!  நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
 
பொய்மை நிலைமாற்றப் புரட்சிக் குரல்கொடுக்கும்
மெய்யாய் உணர்ந்தே மிகக்கவன்ற மெய்யறிவர்!
 
சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும்நிலை வாய்ந்ததா?  பழஞ்
சாத்திரச் சேறும் காய்ந்ததா?  பணக்
கொட்டங்கள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை?
கூச்சலிட்டோம் பயன் இல்லையே!  ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!
 
சாதி ஒழிப்பிற்குச் சாட்டைச் சுழற்றிடுவார்!
ஏதிங்கே சாதியெதிர்த் தாரிவர்போல் வாழ்வினிலே!
 
சாதிப்புழுக்கள் நெளிந்திடுமோர் மொத்தைச்
சாணித்திரளையாய் வாழ்க்கையிலே  நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்உல
கோருக்குரைக்கத் துடிக்கிறோம்!
 
பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம் முதலியென்போம் நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர் படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள் நமைத்தமிழர் என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டோரே!
 
மாந்தநே யப்பண்பு மண்ணில் நிலைத்திடவே
பாந்தம் உரைப்பார் பரிவன்புப் பாங்கில்!
 
நல்லவனோ, இல்லை பொல்லாதவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் மானந்
துறக்கின்றான்  தம்பி
இல்லையென் னாதே! தொல்லையென்னாதே!
இருப்பதில் ஒருதுளி எடுத்துக்கொடு  இது
சரி; இது தவறெனும் ஆய்வை விடு!
 
உரைநடையில் சொற்பொழிவில் ஓங்கறிவுத் தீயாய்
திரையில்லா தேஒளிரும் தெள்ளியநற் கொள்கை!
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால் என்ன
அருமுரைகள் ஆற்றிடுவார் அத்தனையும் இம்மேடை
வெளிப்படுத்த ஒல்லாதே! வேட்கையுளார் அன்னார்
ஒளிவீசும் நூல்படித்தே  ஓர்ந்துகொள வேண்டுகிறேன்!
நூற்றுக் கணக்கான நூல்கள் கனிச்சாறாய்ப்
போற்றும் இலக்கியங்கள் புத்தெழுத்தில் தந்துள்ளார்!
சிங்களரின் வெங்கொடுமை தீர்த்தீழ நாடமைக்கப்
பங்காய் முயற்சி பலநூறு மேற்கொண்டார்!
நந்தமிழ நன்னலனே நாடி எழுதினரே
அந்தஎழுத் தெல்லாமே ஆட்சியரால் இப்பொழுது
பாட்டும் உரையுமெனப் பல்லாயி ரம்பக்கம்
நாட்டுடைமை ஆக்கி நலம்புரியப் பட்டுளதே!
 
இன்றிருந்தால் என்னஇவர் பேசிடுவார் எனபதற்கே
பொன்றாப் புகழ்ப்பாடல் ஒன்றிதனைக் கேட்பீரே!
 
பெற்றுவிட வேண்டும்  தமிழகம்
பெற்றுவிட வேண்டும்  தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைந்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது!   (பெற்று)
 
நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்!   (பெற்று)
 
உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழ்வென்ன வாழ்வோ?   (பெற்று)
 
இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்!
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்?
 
வெற்று நினைப்பினில் வாழ்ந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)
 
வாய்ப்பளித் தோர்க்கென் வணக்கமும் நன்றியும்
ஏய்வுற ஏற்க இயைந்து.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.