Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாத சகதிக்குள் புதையுண்ட இடதுசாரிகள்

Featured Replies

பேரினவாத சகதிக்குள் புதையுண்ட இடதுசாரிகள்

"கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்பதுபோல "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதை' என்பது போல காலங்கடந்த பின்னர் பிறந்த ஞானம் குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரண விசனம் தெரிவித்திருக்கின்றார்.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சிபார்சுகளைச் செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் குழுவின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷ அரசில் இடம்பெற்றிருக்கும் இடதுசாரிகளுள் முக்கியமானவராகத் தம்மை அடையாளப்படுத்துபவருமான திஸ்ஸ விதாரண, பழம்பெரும் இடதுசாரியும் அரசியல் மேதை என வர்ணிக்கப்படுபவருமான கொல்வின் ஆர் டி சில்வா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்கூறிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கின்றார்.

1956ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசு, தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்கு சாவுமணி அடிக்கும் கைங்கரியத்தை ஒப்பேற்றியபோது கொல்வின் ஆர் டி சில்வா சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை முன்வைத்தார் எனத் தெரிவித்து அதை இப்போது நினைவு கூர்கின்றார் அமைச்சர் விதாரண.

சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக அறிவிக்கும் அந்தப் பிரகடனம் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அதிகார மமதையோடு இலங்கைத் தீவு முழுவதும் திணிக்கப்பட்டபோது சிறுபான்மைத் தமிழினம் கொதித்தெழுந்தது.

அப்போதுதான் ""இரு மொழிகள் ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடுகள்! '' என்ற அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கூற்றை கொல்வின் ஆர் டி சில்வா வெளிப்படுத்தினார்.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் சமமாக மதித்து இரண்டு மொழிகளைப் பேணுவீர்களாயின் இலங்கை ஒரு நாடாக ஐக்கியமாக விளங்கும். அப்படி இல்லாமல் சிங்களத்தை மட்டும் முதன்மைப்படுத்தி அதற்குத் தனியுரிமையும் மேன்மையும் கொடுப்பீர்களானால் தமிழரும், சிங்களவர்களும் பிளவுபட்டு நாடு இரண்டாகும்; துண்டுபடும் என்று அப்போது எச்சரித்தார் கொல்வின்.

அந்தக் கூற்று இப்போது யதார்த்தமாகி வருகின்றது என்பதை விசனத்துடன் எடுத்தியம்பியிருக்கின்றார் அமைச்சர் திஸ்ஸ விதாரண.

அன்று அப்படி தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்த அரசுக்குத் தலைமை வகித்த அதே சுதந்திரக்கட்சித் தலைமையின் கீழ் பிற்காலத்தில் வந்த அரசுகளில்தான் கொல்வின் ஆர் டி சில்வா முதல், இன்று அவரது கூற்றைத் தூக்கிப்பிடித்து பெரிய தீர்க்கதரிசி என்று அவரைப் பிரபலாபிக்கும் அமைச்சர் திஸ்ஸ விதாரண வரை, இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள அரசியல்வாதிகளும் அங்கம் வகித்தனர், வகிக்கின்றனர் என்பதும்

தனிச்சிங்களச் சட்டத்தின் மூலம் சிறுபான்மைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும் அநீதியையும் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்காதமை மட்டுமன்றி, சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக மென்மேலும் இனப்பாகுபாடும், ஒடுக்குமுறையும், அடக்கு முறையும் காட்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இதே சிங்கள இடதுசாரிகளே இன்று வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பதும் சிறுபான்மைத் தமிழர்களால் மறக்கற்பாலதல்ல.

இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் சிறுபான்மைத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளைப் புறக்கணித்த பின்னணியை விடுதலைப் புலிகளின் மதியுரைஞர், "தேசத்தின் குரல்' அமரர் அன்டன் பாலசிங்கம் "போரும் சமாதானமும்' என்ற விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்று நூலில் தெளிவாகப் பொறித்துச் செல்கின்றார்.

""இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களிடையே ஒரு பலமான அடித்தளத்தை அமைக்கத் தவறிவிட்டது. தேசிய ஒடுக்கு முறையின் குரூர நிலைமைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்கள் அடி நாதமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும் அரசியல் தூரநோக்கு அவர்களிடம் இல்லாது போனதே அதன் தோல்விக்குக் காரணம் எனலாம். ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்துக்கு மேலானதாக வர்க்கப்போராட்டத்திற்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். தமிழ் மக்களின் தேசப்பற்றுணர்வைத் தவறாக எடைபோட்டு, அதை வெறும் இனவாதத் தேசியத்தின் பிற்போக்கு வடிவமாக முலாம் பூசினார்கள். அந்தப் போராட்டத்தின் உட்கிடையாக அமைந்த முற்போக்குப் பண்புகளையும் புரட்சிகரத் தன்மைகளையும் அவர்களால் இனங்காண முடியவில்லை. இரண்டு இனங்களிடையே முக்கிய முரண்பாடாகத் தேசிய ஒடுக்கு முறை நிலவும்போது, தொழிலாள வர்க்க ஒன்றுபடுதல் நடைமுறையில் சாத்தியமற்றது என்ற அரசியல் உண்மையை உணராது அனைத்துலகத் தொழிலாளர் வர்க்க ஒருமைப் பாடுபற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்தின் புரட்சிகர உட்கிடைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை......''

""...... இடதுசாரிகளான சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஐம்பதுகளில் தமிழரின் உரிமைகளுக்காக ஆதரவுக்குரல் கொடுத்து வந்தன. ஆனால் அறுபதுகளின் தொடக்கத்திலேயே அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு வளைந்து கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அரவணைத்துக் கொண்டன. தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதில் அனைத்து முக்கிய சிங்கள அரசியல் கட்சிகளும் முரட்டுப் பிடிவாதத்தோடும் உறுதியோடும் தொடர்ந்து நிற்பதைக்கண்டு, இன நல்லிணக்கத்துக்காக இனிமேலும் பாடுபடுவதில் அர்த்தமில்லை என்ற உண்மையைத் தமிழ் மக்கள் கசப்போடு உணர்ந்து கொண்டார்கள். .......'' என்று வரைந்து சென்றிருக்கிறார் மதியுரைஞர் பாலசிங்கம்.

1956இல் "ஒரு மொழி இரு நாடுகள்; இருமொழிகள் ஒரு நாடு!' என்ற தத்துவத்தை உதிர்த்த கொல்வின் ஆர் டி சில்வா, சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து 1978இல் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் தனியுரிமையும் உயர்ந்த அந்தஸ்தும், மேன் நிலையும் அளிக்கும் வாசகங்களை தனது ஆரம்ப உறுப்புரைகளாகவே கொண்ட பேரினவாத அரசமைப்பின் பிதாமகராக சிற்பியாக தம்மை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம்

"அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு வளைந்து கொடுத்து சிங்கள, பௌத்த பேரினவாதத்தை அரவணைத்துக்கொண்ட' இடதுசாரிகள் என்று பாலசிங்கம் குறிப்பிடும் போக்குக்கு சரியான உதாரணமாகின்றவர் கொல்வின்தான் என்பது தெளிவு.

பௌத்த சிங்களப் பேரினவாத சகதிக்குள் முற்றாக மூழ்கிப் புதைந்து கிடக்கும் இந்த அரசுக்குள் தம்மையும் சிறைவைத்திருக்கும் அமைச்சர் திஸ்ஸ விதாரணவும், இவ்விவகாரத்தில் கனகச்சிதமாகக் கொல்வினையும் அவரை ஒத்த இடதுசாரிகளையும் பின்பற்றும் தொண்டர்தாம். அதில் சந்தேகமேயில்லை

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.