Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் திரிபுக்கு உருத்திரகுமாரன் மறுப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் திரிபுக்கு உருத்திரகுமாரன் மறுப்பு.!

Sumanthiran.jpg

1) கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை திரு. உருத்திரகுமாரன் ஏன் தம்மிடம் கேட்பதாக சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை. எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை. மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தைப் பகிர்வது என்பது குறித்தே பேசினார்கள் என சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

தாங்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தவர் என்ற வகையில் உண்மைதான் என்ன?

பேச்சுவார்த்தை என்பது போராட்டத்தை வேறு வழிகளில் தொடர்வதாகும். அகக் காரணிகள் அல்லது புறக் காரணிகளால் அல்லது இருவிதக் காரணிகளாலும் விடுதலை இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது; விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அது ஒரு வழி. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் பொருள் அரசியல் இலக்கைக் கைவிடுவதன்று. பாலத்தீன விடுதலை அமைப்பு பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கண்டுள்ளோம். இதன் பொருள் பாலத்தீன விடுதலை அமைப்பு சுதந்திர அரசு என்னும் தனது இலக்கைக் கைவிட்டு விட்டது என்பதன்று. உண்மையில் பல விடுதலை இயக்கங்கள் / ஒடுக்குண்ட மக்கள் பேச்சுவார்த்தையின் ஊடாக சுதந்திர அரசு என்னும் தமது இலக்கை அடைந்ததுண்டு.

(எடுத்துக்காட்டுகள்: மச்சாகோஸ் உடன்படிக்கை தென் சூடானிய மக்கள் சுதந்திர அரசு அமைக்கும் உரிமையை அங்கீகரித்து, ஆறாண்டு கழித்து தென் சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்தது. புனித வெள்ளி உடன்பாட்டின் படி வட அயர்லாந்து மக்கள் ஏழாண்டுக்கு ஒரு முறை பொது வாக்கெடுப்பின் ஊடாகத் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம். செர்பிய – மாண்டிநீக்ரிய உடன்படிக்கை மாண்டிநீக்ரிய மக்கள் சுதந்திர அரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரித்து, மூன்றாண்டு கழித்துப் பொது வாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்தது. பாப்புவா நியூ கினி – பூகன்வில் உடன்பாட்டின் படி, பூகன்வில் பத்து முதல் பதினைந்து ஆண்டு காலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்திக் கொள்ளலாம்.)

visuvanathan-rudrakumaran-1.jpeg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையின் முகப்புரை சொல்கிறது: ”சனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசின் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரின் ஒட்டுமொத்தக் குறிக்கோள் சிறிலங்காவில் தொடர்ந்து வரும் இனப் பூசலுக்குப் பேச்சுவார்த்தையின் ஊடாகத் தீர்வு காண்பதாகும்.” பேச்சுவார்த்தை வழித் தீர்வு என்பதில் அமைதியாகப் பிரிந்து செல்வதும் அடங்கும். பேச்சுவார்த்தை வழித் தீர்வு ஐக்கிய சிறிலங்காவிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று போர்நிறுத்த உடன்படிக்கையில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

மக்களுக்குள்ள மனிதாபிமானத் தேவைகளைக் கவனிப்பதே அமைதிப் பேச்சுவார்த்தையின் உடனடிக் குறிக்கோள். அதற்காகவே “வடக்கிலும் கிழக்கிலும் மனிதாபிமானம், புனர்வாழ்வு சார்ந்த உடனடித் தேவைகள் பற்றிய துணைக் குழு” அமைக்கப்பட்டது. அது சிறிலங்க அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்படவில்லை. துணைக்குழுவின் இயைபு இருதரப்பின் சமத்துவத்தைக் காட்டுகிறது. மேலும், நன்கொடையாகத் தரப்படும் நிதியை உலக வங்கியே நேராகத் தமிழ் அரசுசாரா அமைப்புகளுக்குப் பகிர வேண்டும், சிறிலங்கா அரசுக் கருவூலத்தின் வாயிலாகப் பகிரக் கூடாது என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு. தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய சிறிலங்காவுக்குட்பட்ட ஒரு தீர்வை எண்ணிப் பார்த்ததும் இல்லை, அதற்கு உடன்பட்டதும் இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது.

ஆழிப் பேரலையால் பாதிப்புற்றவர்களின் தேவைக்காகப் பன்னாட்டுச் சமுதாயத்தின் அனுசரணையோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் சேர்ந்தமைத்த ஆழிப்பேரலைக்குப் பிறகான நடவடிக்கை மேலாண்மைக் கட்டமைப்பே (P-TOMS) கூட சிறிலங்கா அரசமைப்புக்கு உட்பட்டதன்று. அதனால்தான் சிறிலங்கா உச்ச நீதிமன்றம் அக்கட்டமைப்பு அரசமைப்புக்குப் புறம்பானது என்று சொல்லி அதனை அழித்தது. ஐக்கிய சிறிலங்கக் கட்டமைப்புக்குள் அதனை அமைக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் உடன்படவில்லை.

ஒரு மெய்ந்நிலை அரசுக்குச் சட்டநிலையிலும் அங்கீகாரம் பெற அமைதிச் செயல்வழி ஒரு வாய்ப்பை வழங்கியது. அமைதிச் செயல்வழியின் போது தமிழீழத்தின் எல்லைகளை வகுத்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார முன்மொழிவின் முதல் உறுப்பு சொல்கிறது: “இடைக்காலத் தன்னாட்சி அதிகாரம் நிறுவப்படும், அது அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருக்கோணமலை, வவுனியா ஆகிய எட்டு மாவட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.”

இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட நிலத்துக்கு மட்டுமல்லாமல், அந்த நிலத்தை ஒட்டிய கடலுக்கும் சட்டநிலை அங்கீகாரம் கேட்டார்கள். அமைதிச் செயல்வழியின் போது விடுதலைப் புலிகள் இறுதித் தீர்வு ஐக்கிய சிறிலங்காவுக்குட்பட்டதாக இருக்கலாம் என்று செயலளவிலோ சொல்லளவிலோ கூட (காட்டாக, செய்திக் குறிப்புகளில்) சுட்டியதில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உண்மையில், ஈழத்தை கைவிட்டு விட்டது போல் ஒரு தோற்றம் ஏற்பட இடமளித்து விடக் கூடாது என்று விடுதலைப் புலிகள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

அமைதிச் செயல்வழியின் போது தேசியத் தலைவருடனிருக்கும் பேறு பெற்றேன். அந்த உரையாடல்களின் போது அவர் புலிகள் கூட்டாட்சித் தீர்வை ஏற்றுக் கொள்வார்கள் என்று (அல்லது ஆய்ந்து பார்ப்பார்கள் என்று கூட) ஒருபோதும் கூறியதில்லை. சுதந்திர அரசு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தைக் கைவிட எங்கே கட்டளை பெற்றார்கள் என்று தேசியத் தலைவரிடம் நான் கேட்கவில்லை.

2) கேள்வி : 2001ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிக்கப்பட்ட உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுக்கு தயார் என 2001ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒரு நாட்டுக்குள் தீர்வைத்தானே குறிப்பிடுகின்றது என சுமந்திரன் வாதிடுகின்றார்.

இதற்குத் தங்களின் பதில் என்ன ?

தேசியத் தலைவர் உள்ளக சுயநிர்ணயம் குறித்துப் பேசிய போது, சுயநிர்ணயத்தின் இரு கூறுகளுக்கும், அதாவது உள்ளக சுயநிர்ணயத்துக்கும் அதே போல் வெளிப்புற சுயநிர்ணயத்துக்கும் தமிழர்கள் உரித்துடையவர்கள் என்று அறுதியிட்டுச் சொன்னார். மேலும் தமிழ்ப் பகுதியில் முழு சுயாட்சி வேண்டும் என்றார்.

உள்ளக சுயநிர்ணயம் என்பது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாகும். அதிகாரப் பங்கீடு என்பது மேல்நிலை அதிகாரத்திலிருந்து [கொழும்புவில் உள்ள சிங்கள ஆதிக்க அரசாங்கத்திடமிருந்து] அதிகாரம் பங்கிட்டளிக்கப் படுவதைக் குறிக்கும். உள்ளக சுய நிர்ணயத்துக்கு முழு சுயாட்சி வேண்டும். உள்ளக சுய நிர்ணயத்துக்கு மையத்தில் சமத்துவ அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும்.

அதிகாரப் பங்கீடு என்பது எவ்விதத்தும் உள்ளக சுயநிர்ணயம் ஆகாது. வன் வலுவும் (தரைப் படையும் கடற்படையும் வான்படையும் 25,000த்துக்கு மேற்பட்ட ஆயுதப் போர் வீரர்களும்) மென் வலுவும் திறன் வலுவும் கொண்ட ஓர் அமைப்பு உள்ளக சுயநிர்ணயம் பற்றிப் பேசுமானால் அது ஓர் உத்தி. கடைசியாக ஆறாம் திருத்தச் சட்டத்தின் தடையூறு இல்லாமல் நடைபெற்ற தேர்தலில் சுதந்திரத் தனியரசு கோரிய வாக்காளர்களின் பிரதிநிதியான ஓர் அமைப்பு தனக்கென அதிகாரமில்லாத நிலையில் உள்ளக சுயநிர்ணயம் கேட்டால் அது சரணாகதியே.

http://keetru.com/index.php/abel/abel-aug-2020/40696-2020-08-21-05-17-53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.