Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ‘சிறிமா யுகமா”?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-என்.கண்ணன

இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முற்பட்ட காலங்களில், மாபியா என்றால், அது பிரதானமாக போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக குழுக்களைத் தான், குறிப்பதாக இருக்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் தான் மாபியா என்று அழைக்கப்பட்டன. குறிப்பாக, இத்தாலியின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தான் மாபியா என்ற பெயரில் அறியப்பட்டன.

இப்போது இலங்கையில் பல மாபியாக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் மற்றும் அதனை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் மாபியாக்கள் இருக்கின்றனர்.

அரிசி பதுக்கல் மாபியா, மணல் கடத்தல் மாபியா, போன்ற பல வகை மாபியாக்கள் அரசியல்வாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்போது புதிதாக மின்சார மாபியா பற்றியும் பேசப்படுகிறது.  

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை பதுக்கி வைத்தல், கறுப்புச் சந்தையை தோற்றுவித்தல், அதிக விலைக்கு விற்றல் எல்லாமே, சட்டப்படி தவறு தான். 

நுகர்வோரைப் பாதுகாக்கும் கட்டமைப்புகள் பல அரசாங்கத்தில் இருக்கின்றன. விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகளும் இருக்கின்றன.

ஆனாலும் இவற்றை மீறி பல்வேறு துறைகளில் உள்ள மாபியாக்கள் தான், விலைகளை தீர்மானிக்கின்றன. கள்ளச் சந்தையை தோற்றுவிக்கின்றன. தட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய மாபியா குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் தான், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை அமைந்திருக்கிறது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, அரசாங்கம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது. 

உண்மையில் அந்த தடைவிதக்கப்பட்டதற்கான காரணம், அந்நியச் செலாவணி வெளிநாட்டுக்கு செல்வதை தடுப்பது தான். அதேவேளை, மஞ்சள் போன்ற உள்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களின் இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதன் விளைவாக இப்போது மஞ்சளின் விலை 5000 ரூபாவுக்கு மேல் சென்று விட்டது.

அரசாங்கம் மஞ்சளுக்கான கட்டுப்பாட்டு விலையாக 750 ரூபாவை நிர்ணயித்திருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு விலைக்கு பொருளை பெற்றுக் கொடுத்தால் அதுதான் பொறுப்பு வாய்ந்த அரசு. ஆனால் தற்போதைய அரசு என்ன செய்கிறது? கறுப்புச் சந்தையை ஊக்குகிக்கிறது. தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும், ஏற்படுத்துகிறது.

மாபியா குழுக்களே பொருட்களின் விலையை, அவை சந்தையில் கிடைக்கும் சூழலை தீர்மானிக்கின்றன. உள்ளூரில் மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகளின் நலன் கருதியே, இறக்குமதி  தடை விதிக்கப்பட்டதாக கூறுகிறது அரசாங்கம்.

இந்த தடையை 2 ஆண்டுகளுக்கு நீக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியிருக்கிறார்.

இலங்கையில், ஆண்டுக்கு சுமார் 7000 மெட்றிக் தொன் மஞ்சள் தேவைப்படுகிறது. ஆனால் உள்ளூரில் உற்பத்தியாகும் மஞ்சளின் அளவு வெறும் 2000 மெட்றிக் தொன் மட்டும் தான்.

எஞ்சிய 5000 மெட்றிக் தொன் மஞ்சளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் தான் இலங்கை இருக்கிறது. இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் மாதம் மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களின் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்தது.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க என்று காரணம் கூறப்பட்டது. இந்தக் காரணத்தில் தவறு இல்லை.  உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டால் தான் தேசிய உற்பத்தி அதிகரிக்கும்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், நடைமுறைச் சாத்தியங்களை புரிந்து கொண்டு தான், ஒரு அரசாங்கம் இறக்குமதி தடைகள், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவிய போது, மஞ்சளும் அதனை தடுப்பதற்கான ஒரு மருந்துப் பொருளாக கருதப்பட்டது. அப்போதே செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

அந்தச் சூழலில், அரசாங்கம் மஞ்சள் இறக்குமதி தடையை விதித்தது. இலங்கையில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த தடையை அரசாங்க குறைந்தது ஜனவரி, பெப்ரவரி மாதத்தில் விதித்திருக்க வேண்டும்.

ஏனென்றால், மஞ்சள் பயிர், மார்ச்- ஏப்ரல் மாதங்களில் பயிரிடப்படும். அதனை அறுவடை செய்ய 8 தொடக்கம் 10 மாதங்கள் தேவைப்படும். டிசம்பர்- பெப்ரவரி மாதங்களில் தான் இது ஆறுவடையாகும்.

ஆக, மஞ்சள் நடுகை காலம் முடிந்த பின்னர் தடையை விதித்தது அரசு. இந்த தடையினால் பயனடைந்தது விவசாயிகள் அல்ல. மஞ்சள் இறக்குமதி செய்யும் பெருமுதலாளிகள்தான்.

அவர்கள் தான் இப்போது மஞ்சள் மாபியாக்களாக  மாறியுள்ளனர்.  அவர்களுக்குப் பின்னால் அரசாங்கம் இருக்கிறதா என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், தற்போது பயிரிடப்பட்ட மஞ்சள் டிசெம்பருக்குப் பின்னர் சந்தைக்கு வந்தாலும் கூட தட்டுப்பாடு தீராது. ஏனென்றால், உற்பத்தியாகப் போவது 2000 மெட்றிக் தொன் தான். அடுத்த ஆண்டு டிசம்பரில் தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

அதுவரை மஞ்சளைப் பயன்படுத்த முடியாத நிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் அன்றாட உணவுப் பொருளாக, மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.

இன்று அது சாதாரண மக்களுக்கு கிடைக்காத ஒன்றாக மாறியிருக்கிறது. சந்தையில் அதிக விலைக்கு கிடைக்கும் மஞ்சள் கூட, கலப்படமாகவே உள்ளது.

இந்த நிலைமை எதனை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது? இந்தியாவில் இருந்து மஞ்சள் கடத்தல் மாபியாக்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

இதில் ஒரே ஒரு நன்மை என்னவென்றால், கஞ்சா போன்ற போதைப்பொருட் கடத்தலில்  ஈடுபட்டவர்கள், இப்போது மஞ்சள் கடத்தலில் இறங்கியிருக்கிறார்கள்.  இதனால் கஞ்சா கடத்தல் குறைந்திருக்கலாம்.

அதேவேளை, தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துப் பழக்கப்பட்ட சாதாரண மக்கள், இப்போது செய்வதிறியாது நிற்கிறார்கள்.  ஆனால் அரசாங்கமோ, மஞ்சள் விவசாயிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக கூறுகிறது. இந்தளவுக்கும் நாட்டில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் எண்ணிக்கை வெறும் 5000 பேர் மட்டும் தான்.

5000 விவசாயிகளின் நலனுக்காக, நாட்டில் உள்ள இரண்டரைக் கோடி மக்கள் மஞ்சளுக்காக பிச்சை ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இறக்குமதிகளை தடை செய்து மூடிய பொருளாதாரத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்கிறது,

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானவை என்று, கூறியிருக்கிறார் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர. இது வாகன இறக்குமதி தடையை நியாயப்படுத்தும் கருத்து.

இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான வாகனங்கள் நாட்டில் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டிருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், அந்த வாகனங்களின் விலை, நிலையானதாக இருக்கப் போவதில்லை.

அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்த சுமையை சாதாரண மக்கள் தான் அனுபவிக்கிறார்கள்.

மோட்டார் சைக்கிள்களின் விலை சராசரியாக 50 ஆயிரம் ரூபா வரை அதிகரித்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது எங்கு கொண்டு போய் விடப் போகிறது? பெருமுதலைகளின் வாய்க்குள் தான், இந்த இலாபம் சென்று சேர்கிறது.

கொரோனா காலத்தில் உள்நாட்டு உற்பத்தி,சுயசார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டிருப்பதாக கூறியிருக்கிறார் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே.

ஆனால், இது சுயசார்பு பொருளாதாரம் அல்ல. மக்களின் தேவைகளை கட்டுப்படுத்தி, அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து தான் இந்த நிலை உருவாக்கப்பட்டது.

இந்தநிலை எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகிறது?  மஞ்சளைப் போன்று தான், ஒவ்வொரு இறக்குமதிப் பொருளின் நிலையும் நாட்டில் ஏற்படலாம்.

இலங்கை வாசனைத் திரவியங்களுக்கு பெயர் பெற்ற நாடு.  ஆனால் தரமான ஏலக்காயை கண்களால் கூட காண முடியவில்லை. அதன் விலையை காதால் கூட கேட்க முடியவில்லை. மஞ்சள், ஏலக்காய் போன்றன இல்லாத சமையலுக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர் நாட்டு மக்கள். 

சோளம் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதால், சிறிய நடுத்தர கைத்தொழிலான கோழிப் பண்ணையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோழி, மாடு போன்ற கால்நடைகளின் பிரதான தீவனம் சோளம். ஆண்டுக்கு  ஆறு இலட்சம் தொன் சோளம் தேவைப்படுகிறது. 

ஆனால் இலங்கையில் மூன்று இலட்சம் தொன் சோளம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிப்பது அதுவும் உடனடியாக சாத்தியப்படக் கூடியதல்ல.

இந்தளவுக்கும், ஆமி வோம் எனப்படும் புழுவின் பாதிப்பில் இருந்து இன்னமும், மீளாத நிலையில் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிப்பது எப்படி சாத்தியப்படும்?

அரசாங்கத்தின் தவறான அணுகுமுறையினால், கோழிப்பண்ணைத் தொழில் முடங்கியிருக்கிறது.  கோழிகளுக்கு தீவனம் கொடுக்க முடியாதவர்கள் தரமான அரிசியை தீவனமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில் கோழி வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை, கோழி இறைச்சி உற்பத்தி வீழ்ச்சி கண்டு விலை அதிகரித்துள்ளது.

இதனால் மக்களின் நுகர்வு குறையும் போது போசாக்கின்மை – பட்டினி என்பன ஏற்படும். இது தான் சுயசார்பு பொருளாதார வளர்ச்சியா?

இத்தகைய பொருளாதார வளர்ச்சியினால் அரசாங்கத்தின் அந்நிய செலவாணி கையிருப்பு உயரலாம். ஆனால், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது. கீழே தான் செல்லும்.

சரியான பொருளாதார திட்டமிடல்கள் இல்லாமல் அரசாங்கம் செயற்படுவதால், நாடு மோசமாதொரு நிலையை நோக்கி செல்கிறது.

இந்த நிலைதான் நாட்டை மீட்சிக்கு கொண்டு செல்லும் என்றால், இத்தகைய செழிப்பை பெரும்பாலான மக்கள் விரும்பமாட்டார்கள்.

திறந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மக்கள், வடகொரியாவை ஒத்த நிலைக்கு பின்நோக்கி கொண்டு செல்லப்படுகிறார்கள்.

சீனா போன்ற நாடுகளே திறந்த பொருளாதாரத்துக்கு மாறியுள்ள நிலையில், இலங்கை மாத்திரம் இருண்ட- மூடிய பொருளாதாரம் நோக்கி நகருகிறது. இது விரைவில் “சிறிமா யுகத்தை” ஏற்படுத்தலாம். 

அது, மக்களை கிளர்ச்தெழும் நிலைக்கும் கொண்டு செல்லக் கூடும்.

https://www.virakesari.lk/article/89167

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.