Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.ஐ.ஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா?

Featured Replies

சி.ஐ.ஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா?

மத்திய பா.ஜ.க அரசின் சட்டத் திருத்தங்களை மக்களவையில் ஆதரிக்கும் அ.தி.மு.க., மாநிலங்களவையில் அதே சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தொடர்கதையாகிவருகிறது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் வியூகத்தை வெளிப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

`மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாயச் சட்டங்களுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறதா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா?' என்ற சிக்கலான கேள்விக்கு விடையைக் கண்டறிவதுதான் தமிழக அரசியலின் ஆகப்பெரும் விவாதமாக மாறிவருகிறது.

அண்மையில் மத்திய பா.ஜ.க அரசு, புதிய வேளாண் சட்டங்களை மக்களவையில் நிறைவேற்றியது. `இந்த வேளாண் சட்டங்கள் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து, பெரு நிறுவனங்களிடம் விவசாயிகளை அடகுவைத்துவிடுவதாக அமைந்திருக்கின்றன' என்று நாடு முழுக்க எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு குரல் கொடுத்துவருகின்றனர்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை நடத்திவருகின்றனர். தமிழகத்திலும் விவசாய அமைப்புகள் இந்தப் புதிய சட்ட மசோதா நகல்களை எரித்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றன.

இந்த விவகாரத்தில், ஆரம்பித்திலிருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள், மக்களவையில் புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக வாக்களித்தன. ஆனால், அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத், ``மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் மசோதாக்கள், விவசாயிகள் - கொள்முதல் செய்வோர் என இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடியவை’’ என்று பாராட்டிப் பேசியதோடு, மசோதாவை ஆதரித்தும் வாக்களித்தார்.

மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அ.தி.மு.க எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ``விவசாய விளைபொருள்களைப் பதுக்கல் செய்ய, கள்ளச் சந்தையில் விற்க, அதீத லாபம் ஈட்ட என அனைத்து வசதிகளையும் பெரு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித்தரும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன புதிய வேளாண் சட்டங்கள்.

ஏற்கெனவே மாநில அரசுகள் உருவாக்கிவைத்திருக்கும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அழித்து, விவசாயிகளைப் பெரு நிறுவனங்களின் கூலிகளாக்கவே இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன'' என்பது போன்ற மிகக் கடுமையான வாதங்களால் எதிர்ப்பைப் பதிவு செய்தார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் இந்த எதிர்ப்பு, தமிழக அரசியல் தலைவர்களை மட்டுமல்லாமல் மத்திய பா.ஜ.க தலைவர்களையும் ஒருசேர அதிரவைத்தது.

புகழேந்தி
புகழேந்தி
`மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு' என்று அ.தி.மு.க அரசு எடுத்திருக்கும் இந்த இரட்டை நிலைப்பாடு, தமிழக அரசியலில் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான புகழேந்தியிடம் பேசினோம்.

``முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தும், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கருத்தும் ஒரே கருத்தாக அமைந்திருக்கின்றன. ஆனால், மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் கருத்து வேறாக அமைந்திருப்பது புதிராக இருக்கிறது.


ஏன் அப்படி வேறுபட்ட கருத்து அமைந்தது, கட்சியின் அனுமதி பெற்றுத்தான் அவ்வாறு பேசினாரா என்ற ஐயப்பாடெல்லாம் எழுகின்றன. இவை குறித்தெல்லாம் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றபடி இது குறித்து கட்சித் தலைமை அவரிடம் விளக்கம் கேட்குமா, கேட்காதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது'' என்றார் சுருக்கமாக.

ப்ரியன்
ப்ரியன்
இந்த நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ப்ரியன் இந்த விவகாரத்திலுள்ள அரசியல் பின்னணிகள் குறித்துப் பேசினார்.

``அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் தியானம் உட்கார்ந்தது முதல் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் இணைந்தது வரையிலாக பின்னணியில் பா.ஜ.க இருந்ததைச் சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு இப்போதுவரை தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மத்திய பா.ஜ.க அரசை அனுசரித்தே செல்ல வேண்டும் என்பதில் முதல்வரும் உறுதியாகவே இருந்துவருகிறார்.

அந்தவகையில், மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் விரோதச் சட்டங்களை ஆதரிப்பதில் அ.தி.மு.க அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதாவது முத்தலாக் தடைச் சட்டம் குறித்து முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க-எம்.பி அன்வர் ராஜா எதிர்ப்பு குரல்தான் கொடுத்தார். ஆனால், மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத், முத்தலாக் மசோதாவை ஆதரித்தார். மறுபடி மாநிலங்களவையில் `இது சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது’ என்று அ.தி.மு.க எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதேபோல், சி.ஐ.ஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலும்கூட மக்களவையில் ஆதரவும், மாநிலங்களவையில் எதிர்ப்புமாக இரு வேறு கருத்துகளுடன்தான் செயல்பட்டார்கள்.

இதுமட்டுமல்ல.... அண்மையில் `இருமொழிக் கொள்கைதான் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்' என்று முதல்வர் உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், ஆயுஷ் அமைச்சக கலந்துரையாடலின்போது, `இந்தி தெரியாதவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள்' என்று ஓர் அதிகாரி சொன்னதற்கு எந்தவித பலத்த எதிர்ப்பையும் முதல்வரோ அல்லது துணை முதல்வரோ தெரிவிக்கவேயில்லை. அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் மட்டும்தான் இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆக, மத்திய பா.ஜ.க-வை பகைத்துக்கொண்டால், ரெய்டு, வழக்கு என்று தனிப்பட்ட பிரச்னைகளில் ஆரம்பித்து மாநிலத்துக்குத் தேவையான நிதியைப் பெறுவது வரையிலாக பல்வேறு விஷயங்களில் சிக்கல்கள் வருமோ என்ற பயம் அ.தி.மு.க தலைவர்களிடம் இருக்கிறது. அதேசமயம் இது போன்ற மக்கள் விரோதச் சட்டங்கள் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை பாதித்துவிடக் கூடாது என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
அதற்காகத்தான், `கூட்டணியில் இருப்பதால் ஆதரித்து வாக்களித்தோமே தவிர... சட்டத்திலுள்ள பாதகங்களை ராஜ்யசபாவில் எடுத்துச்சொல்லியிருக்கிறோம் பாருங்கள்...' என்று மக்களிடம் சமாதானம் சொல்வதற்கு வசதியாக இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

ஏன் இது போன்ற முரண்பாடான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று கடந்த முறையே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், எங்களுக்குத் தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் போன் செய்து, `மசோதாவை ஆதரிக்க வேண்டும்’ என்று சொன்னதாக பதில் கூறினார். ஆக, ஒரு கட்சி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசுத் தரப்பிலிருந்து யார் என்ன சொன்னார்கள் என்ற கேள்வியெல்லாம் அப்போதே எழுந்தன.

புதுக்கோட்டை: நண்பன் பெயரில் சிம்; கல்லூரி மாணவிகள் டார்கெட்! - சிக்கிய சிவகங்கை ஆசாமி
Also Read
புதுக்கோட்டை: நண்பன் பெயரில் சிம்; கல்லூரி மாணவிகள் டார்கெட்! - சிக்கிய சிவகங்கை ஆசாமி

ஆனால், இந்த முறை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்பதுபோல் அ.தி.மு.க தரப்பிலிருந்து சொல்கிறார்கள். இது எப்படி தனிப்பட்ட கருத்தாகும்... இது என்ன தெருமுனைக் கூட்டத்தில் பேசிய பேச்சா... நாடாளுமன்ற அவையில் ஒரு கட்சியின் சார்பாகப் பேசும்போது, அது எப்படி தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியும்?

ஆக, எந்தச் சூழ்நிலையிலும் மத்திய பா.ஜ.க அரசோடு இருக்கும் இணக்கத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களது இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பலத்த தோல்வியை அ.தி.மு.க கூட்டணி சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எனவே, இனியும் இதே மாதிரியான இரட்டை நிலைப்பாட்டையே அ.தி.மு.க தொடருமானால், அது அரசியல்ரீதியாக மிகப்பெரிய ஆபத்தை அந்தக் கட்சிக்குக் கொடுத்துவிடும். வெளிப்படையாக பா.ஜ.க-வை எப்போது அ.தி.மு.க எதிர்க்க ஆரம்பிக்கிறதோ... அப்போதுதான் அ.தி.மு.க-வின் செல்வாக்கும் உயர வாய்ப்பிருக்கிறது!'' என்றார்.

இதையடுத்து அ.தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாடுகளுக்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் பேசினோம்... ``மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?
Also Read
செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?
மற்றபடி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசிய கருத்துகள் என்பது அவருடைய தனிப்பட்ட சொந்தக் கருத்துகள். `ஒரு மசோதா மீது நிறை-குறைகளைப் பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று தலைமை சொல்லுமானால் நான் ஆதரித்துத்தான் வாக்களிப்பேன்' என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்
அதேபோல், இருமொழிக் கொள்கை விவகாரத்திலும் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை முதல்வர் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டார். ஆயுஷ் அமைச்சக அதிகாரி, கலந்துரையாடலின்போது பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான நானும் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டேன். ஆக, இந்த எதிர்ப்பை அ.தி.மு.க எனும் கட்சியின் கருத்தாகத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். எனவே, இதில் இரட்டை நிலைப்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை. எப்போதும் அ.தி.மு.க-வுக்கு ஒரே நிலைப்பாடுதான்... அது உறுதியான நிலைப்பாடு!'' என்றார்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/article-on-admks-dual-stand-in-new-agriculture-bill

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.