Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்துக் கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: அடுத்துக் கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சி

 

spacer.png

ராஜன் குறை

அடுத்து கெடுப்பது என்றால் ஒருவரிடம் நட்பாக இருந்து, அணுக்கமாக இருந்து அவருக்கு தீமை செய்வது.

பாரதீய ஜனதா கட்சி மாநில கட்சிகளுடன் கொள்ளும் உறவினை இப்படித்தான் வர்ணிக்க முடியும். மஹாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் அதற்கு இருந்த உறவு விரோதமாக மாறியது முக்கியமான உதாரணம். பீகாரில் நிதீஷுடன் அதன் உறவு நிதீஷை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பது நாளை தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க அரசை அடிமை அரசாக பயன்படுத்தும் அதன் மன நிலையை நாம் புரிந்துகொள்ள இந்த உதாரணங்கள் உதவும்.

பாரதீய ஜனதா கட்சிக்கு மாநில கட்சிகளின் மீது எந்த மரியாதையும் கிடையாது. மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசிற்கு முழுவதும் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே அதன் கொள்கை என்பதால் மாநில அரசியல் கட்சிகள் தேவையற்றவை, அவை மாநில நலன்களை பேசுவதால் தேசிய நோக்கில். அதாவது பெருமுதலீட்டிய நோக்கில், மத்திய அரசின் செயல்பாடுகளுடன் முரண்படும் என்பதால் மாநில கட்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கும் கட்சி.

அதற்கும் மேலாக “காங்கிரஸ் முக்த் பாரத்” அதாவது காங்கிரஸ் இல்லாத பாரத தேசம் என்று கோஷம் வைப்பதும், கம்யூனிஸ்டு கட்சிகள் தேச விரோத கட்சிகள் என்பதுமாக மொத்தமாக ஒரு கட்சி ஆட்சி முறையை விரும்பும், அதாவது பாரதீய ஜனதா கட்சி என்ற ஒரே கட்சி நாட்டில் இருந்தால் போதும் என்று நினைக்கும் கட்சி. பல கட்சிகள், கொள்கைகள், தேர்தல் போட்டி எல்லாம் தேசத்தை பலவீனப் படுத்தும், ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதுதான் தேசத்தை வலுப்படுத்தும் என்பதே அதன் பாசிச நோக்கு. பாசி (fasci) என்றால் இத்தாலிய மொழியில் இணைத்துக் கட்டுவது.

எல்லா வித்தியாங்களையும் அழித்து ஒற்றை அடையாளமாக, ஒரு கட்சியின், ஒரு தலைவரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாக மாற்றுவதே பாசிசம். இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் அதற்கான முக்கிய உதாரணங்கள். இத்தகைய மனோநிலையில் தமிழக அரசியலை, திராவிட சித்தாந்தத்தை பாஜக எப்படி அணுகுகிறது என்பதுதான் முக்கிய கேள்வி.

துக்ளக் அட்டைப்படம் வெளிப்படுத்தும் திராவிட விரோதம்

துக்ளக் பத்திரிகை ஒரு அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அதன் முதல் இதழிலிருந்தே இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போன்ற கேலிச்சித்திரத்தை வெளியிடுவது அதற்கு வழக்கம். இந்த இதழ் அட்டையில் அந்த கழுதைகளுக்கு அருகே செய்தித்தாளில் ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த கழுதை ஒன்று “இந்த செய்தி மட்டும் உண்மையானால் இனி நம்மவர்கள் ஆட்சிதான்” என்று கூறுகிறது. அதாவது திராவிடக் கட்சிகளின் ஆட்சியை கழுதைகள் நம்மவர்கள் ஆட்சி என்று பேசிக்கொள்கின்றன. இன்றுவரை பாஜக, அ.இ.அ.தி.மு.க கூட்டணியில்தான் இருப்பதாக கூறுகிறது. குருமூர்த்தியும் அவர்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானத்திற்கு, தர்மயுத்தத்திற்கு வழிகாட்டியதாக கூறிக்கொள்பவர். அதாவது அ.இ.அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவை அகற்றி அதை பாஜகவின் பினாமி ஆட்சியாக மாற்றியதில் பங்கு வகித்ததாக கூறிக்கொள்பவர்.

அந்த ஆட்சியை கழுதைகளின் ஆட்சியாக அவர் பத்திரிகையே கேலிச்சித்திரம் வெளியிடுகிறது. அ.இ.அ.தி.மு.க அதற்காக கோபிக்கப் போவதில்லை என்றாலும் இதற்குப் பின்னால் நீண்டகால வரலாற்றை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

துக்ளக் ஆசிரியாராக இருந்த சோ ராமசாமி ஆர்.எஸ்.எஸ் அனுதாபி. வாழ்நாளின் இறுதியில் அவர் பாஜக ஆதரவாளராகவே வெளிப்படையாக செயல்பட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த பத்திரிகைக்கு பொறுப்பேற்ற ஆடிட்டர் குருமூர்த்தி வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரவாளர். பார்ப்பனீய சிந்தனையில் சோ ராமசாமியைவிட தீவிரமானவர். துக்ளக் பத்திரிகை 1970 ஆண்டு துவங்கப்பட்டதே தி.மு.க ஆட்சியினை விமர்சிக்கத்தான். திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில சுயாட்சி கோரிக்கையை தொடர்ந்து விமர்சித்து, ஏளனம் செய்து வந்தவர் சோ ராமசாமி.

மாநில கட்சிகள், திராவிட அடையாளம் போன்றவை “தேசிய நீரோட்டத்திலிருந்து” தமிழகத்தை பிரித்துவிடும் என்பதே சோ ராமசாமியின் கவலையாக இருந்தது. அவருக்கு அதேபோல இன்னொரு கவலை இருந்தது. அது இந்திரா காந்தியின் சோவியத் ஆதரவும், சோஷலிஸ சிந்தனையும். எனவே இந்திரா எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு இரண்டும் அவருக்கு முக்கியமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி 1969 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் என்று இரண்டாகப் பிளந்தது. காமராஜ் பழைய காங்கிரஸின் தூண்களில் ஒன்றாக இருந்தார். அண்ணா இறந்த பிறகு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். இந்திரா வங்கிகளை தேசியமாக்கியது ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்ற ஒரு இலட்சியமாக இருந்தது. அதனால் சோஷலிச அணுகுமுறையில் இந்திராவை கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆதரித்தது. அடுத்த வந்த 1971 தேர்தலில் இந்திரா காங்கிரசும், தி.மு.க-வும் கூட்டணி அமைத்தன. எதிரில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காமராஜின் பழைய காங்கிரஸ், வாஜ்பேயின் ஜனசங்கம் ஆகியவை மகா கூட்டணி அமைத்தன. சோ மகா கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்தார். டெல்லியிலும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்திராவும், கலைஞரும் மாபெரும் வெற்றி பெற்றனர். ரஷ்ய மையால் தயாரிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகள் போடப்பட்ட வாக்குகளை மாற்றிவிடும் தன்மை கொண்டவை, அதனால்தான் இந்திரா வென்றார் என்ற குற்றச்சாட்டு துக்ளக் பத்திரிகையில் எழுதப்பட்டது.

 

எதற்காக இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அப்படி 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தியை அதி தீவிரமாக எதிர்த்த சோ, 1974 ஆம் ஆண்டு கோவை இடைத்தேர்தலில் இந்திராவும், காமராஜரும் இணைந்து போட்டியிட கடும் முயற்சி எடுத்தார் என்பதை கவனிக்கத்தான். காரணம் இந்திராவின் சோவியத் ஆதரவு சோஷலிஸ எதிர்ப்பைவிட, தி.மு.க எதிர்ப்பு முக்கியமானதாக இருந்தது. மாநில கட்சி நிலையாக ஆட்சி செய்வது அவருக்கு ஆபத்தானதாக தோன்றியது. தேசிய நீரோட்ட த்திலிருந்து தமிழ்நாடு விலகிவிடக்கூடாது என்பதே முக்கியமாகத் தோன்றியது.

அதற்காக எம்.ஜி.ஆரை தூண்டி தி.மு.க-வை பிளந்த போதும் மொத்த அரசியலும் மாநில கட்சிகளின் கட்டுப்பாட்டில் வந்ததே தவிர “தேசிய நீரோட்டம்” மீண்டும் பாயவில்லை. அதிலிருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு என்று இரட்டைக் குதிரையில் துக்ளக் பயணித்தாலும் அதன் உள்ளார்ந்த இலட்சியம் மாநில கட்சிகளை, கழகங்களை அழித்து, மீண்டும் தேசிய கட்சி ஆட்சியை உருவாக்குவதுதான். அதனால்தான் கழகங்களின் ஆட்சியை கழுதைகளின் ஆட்சி என்று கேலிச்சித்திரம் போடுகிறது துக்ளக்.

அ.இ.அ.தி.மு.க-வின் நிலை என்ன?

எடப்பாடி தலைமையிலான கூட்டம் கொள்கைக்கூட்டமாக இருந்தால் அடுத்துக் கெடுக்கும் பாஜக-வை உடனடியாக துண்டித்துவிடலாம். ஆனால் அது கொள்ளைக் கூட்டமாக இருப்பதால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, உளவுத்துறை எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியுள்ளது. மத்தியில் ஆண்டு வரும் பாஜக, தமிழக தலைமைச் செயலரின் அறையிலேயே ரெய்டு நடத்தி சாதனை படைத்தது. இந்த நிலையில் பாஜக-வுடன் ரகசியமாக கெஞ்சிக் கூத்தாடிதான் பேரம் செய்யவேண்டும். பாஜக எத்தனை தொகுதிகள் கேட்டாலும், கூட்டணி ஆட்சி என்றாலும் எடப்பாடி பழனிச்சாமியால் மறுக்க முடியுமா என்பது ஐயம்தான். மறுத்தால் பாஜக பழிவாங்காமல் விடாது. ஏற்றுக்கொண்டாலோ எடப்பாடி அரசு பினாமி அரசு என்று உறுதியாகிவிடும்.

பீஹாரில் நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்ததும், தேர்தலில் சரிபாதி தொகுதிகளை பாஜகவிற்குக் கொடுத்ததும் அவரை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் முழு விவரங்கள் தெரியவரும். கருத்துக் கணிப்புகள் லாலு மகன் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெரும் என்றுதான் கூறுகின்றன.

ஆனால் இந்த தேர்தலில் பெரிய வேடிக்கை ஒன்று நடந்தது. சமீபத்தில் மறைந்த தலித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் நிதீஷ் குமார் தலைமையை ஏற்காமல் 143 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறார். பல பாஜக தலைவர்கள் அவர் கட்சியில் இணைந்து போட்டியிருக்கிறார்கள். சிராக் பாஸ்வான் தான் மோடி தலைமையை ஏற்பதாகக் கூறுகிறார். மத்திய அமைச்சரவையில் பாஸ்வானின் இடம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அவர் பாஜக போட்டியிடும் இடங்களில் பெரும்பாலும் போட்டியிடாமல், நிதிஷ் குமாரின் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டும் போட்டியிடுகிறார். மோடியோ, பாஜக-வோ அவரை கண்டிப்பதில்லை. ஆனால் நிதிஷ்குமாருடன் கூட்டணியில் போட்டியிடுகிறார்கள். குழப்பமான இந்த நிலையை மூன்று அம்சங்களாக பிரித்து புரிந்துகொள்ள வேண்டும்.

சிராக் பாஸ்வான் நிதிஷ் குமாரை எதிர்க்கிறார்; பாஜகவை ஆதரிக்கிறார்.

நிதிஷ் குமார் பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கிறார்.

பாஜக சிராக் பாஸ்வானை கண்டிப்பதில்லை, எதிர்ப்பதில்லை. ஆனால் நிதிஷ் குமாருடன் கூட்டணியில் இருக்கிறது.

மாநில கட்சிகளை அடுத்துக் கெடுப்பதில் பாஜக புதிய சகாப்தம் ஒன்றையே படைத்து வருகிறது. நிச்சயம் அ.இ.அ.தி.மு.க இதையெல்லாம் பார்க்கத்தான் செய்யும். ஆனால் பாவம் அவர்களால் என்ன செய்ய முடியும். “அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா, நீ ஆற்றுவெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா” என்ற எம்.ஜி.ஆர் பாடலை கேட்டு பெருமூச்சு விடத்தான் முடியும்.

 

 

https://minnambalam.com/politics/2020/11/09/22/bjp-and-regional-parties-jdu-paswan-admk-edapadi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.