Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரகுவரன்

Featured Replies

 @teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு.
 
கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன்.
ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள்.
அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா? என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர்.
எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.
அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார்.
அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார்.
1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது.
1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று.
அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார்.
குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார்.
ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது.
லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை.
தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு.
ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.