Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன அவசியம் எடப்பாடிக்கு பாஜக கூட்டணி அமைக்க?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: என்ன அவசியம் எடப்பாடிக்கு பாஜக கூட்டணி அமைக்க?

spacer.png

 

ராஜன் குறை

அகில இந்திய அண்ணா திமுக பேச்சாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மூச்சுக்கு மூச்சு பாரதீய ஜனதா கட்சியுடன் எங்களுக்கு தேர்தல் கூட்டணி மட்டும்தான், கொள்கை உடன்பாடு கிடையாது என்று கூறுகிறார்கள், இது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் நடைமுறைதான். தமிழக வரலாற்றில் தனியுடைமை, சுதந்திர சந்தை ஆகியவற்றை ஆதரித்த சுதந்திரா கட்சியும், பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொண்ட மார்க்ஸிஸ்ட் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் இடம்பெற்றுள்ளன. காந்தியவாதியான பெருந்தலைவர் காமராஜர், அவரது நெடுநாள் அரசியல் எதிரியான ராஜாஜியுடனும், காந்தியை கொலை செய்த கருத்தியலுக்கு சொந்தக்காரர்களான பாஜகவின் பழைய வடிவமான ஜனசங்கத்துடனும் 1971 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துள்ளார். (ஆனால், தமிழகத்தில் ஜனசங்கம் போட்டியிடவில்லை). கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதற்கு இப்படியான பல உதாரணங்களை சொல்ல முடியும்.

பெரும்பாலும் தொலைக்காட்சி விவாதங்களில் அஇஅதிமுகவின் இந்த “கொள்கை வேறு; கூட்டணி வேறு” விளக்கத்தை விமர்சிப்பவர்கள், பாஜகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமியோ, கட்சியோ எதிர்க்காததை சுட்டிக் காட்டுகிறார்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தீர்களா, மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு திணிப்பை எதிர்த்தீர்களா, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு அதாவது “அரியவகை ஏழைகளுக்கு” இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தீர்களா என்று பல சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி கேட்கிறார்கள். உடனே அஇஅதிமுகவினர் நாங்கள் கடிதம் எழுதினோம், கருத்துக்கூறினோம், அறிக்கை வெளியிட்டோம், எங்களுக்குள் பேசிக்கொண்டோம் என்று ஏதோவொரு பதிலை சொல்கிறார்கள்.

ஆனால் இந்த பிரச்சினையில் இன்னொரு கோணமும் இருக்கிறது. சரி, அப்படியே கொள்கை வேறு என்றே வைத்துக்கொள்வோம்; கொள்கை வேறுபாட்டையும் கடந்து தேர்தல் கூட்டணி வைப்பதென்றால் அது தேர்தல் வெற்றிக்கு உதவுவதாகத்தானே இருக்க வேண்டும்?

இன்றைய தினம் அஇஅதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பெரியார், அண்ணா காலத்தை நினைவுகூர்ந்து திராவிட கருத்தியலுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக; தேசிய கட்சிகள் உள்ளே நுழைய பார்ப்பதாகவெல்லாம் பேசியுள்ளார். இப்படியெல்லாம் பேசும் கொள்கைக் குன்றுகள் எதற்காக தாங்களாகவே வலிந்து போய் அமித் ஷாவை பேரரசரை வரவேற்பதுபோல வரவேற்று கூட்டணி, கூட்டணி என்று போட்டி போட்டுக்கொண்டு கதற வேண்டும்? இந்த கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படி எடப்பாடிக்கு உதவப் போகிறது? இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ள தமிழகத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி எத்தகையது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மலராத தாமரை மொட்டு

பாரதீய ஜனதா பேச்சாளர்கள் தமிழகத்தில் அவர்கள் கட்சி வளர்ந்து வருவதாக பேசுவது வழக்கம். தாமரை மலர்ந்தே தீரும் என்று பஞ்ச் டயலாக்குகளும் பேசுவார்கள். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது தேர்தல்களில் அதன் பங்கேற்பில்தான் வெளிப்படும். உள்ளபடியே பாஜக தேர்தல்களில் தன் முயற்சியில் குறை வைக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு வந்ததை எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்று தெரியவில்லை. அதாவது 2006, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வென்றதில்லை என்பதுடன் பெருவாரியான தொகுதிகளில் டெபாசிட் எனப்படும் வைப்புத்தொகையைக் கூட திரும்பப் பெற்றதில்லை. ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால்தான் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். அதாவது 60,000 வாக்குகள் பதிவானால் குறைந்தது 10,000 வாக்குகளாவது ஒரு வேட்பாளர் பெற வேண்டும். அப்போதுதான் டெபாசிட் திரும்பக் கிடைக்கும்.

 

பாரதீய ஜனதா கட்சி அதிகபட்சமாக 225 தொகுதிகளில் 2006ஆம் ஆண்டு போட்டியிட்டது. நான்கே நான்கு தொகுதிகளில் மட்டும் டெபாசிட் தொகையை பெற்றது. அடுத்து 2011ஆம் ஆண்டு 204 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் டெபாசிட் தொகையை பெற்றது. அதன் பின் கடந்த 2016 தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்டு எட்டு தொகுதிகளில் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலாக இரண்டு தொகுதிகளில் டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றதை காண முடிகிறது. நான்கு தொகுதிகள், ஆறு தொகுதிகள், எட்டு தொகுதிகள் என்று படிப்படியாக டெபாசிட் தொகையை திரும்பப் பெறும் தொகுதிகள் எண்ணிக்கை வளர்வதை பார்க்கிறோம். இதைத்தான் அவர்கள் கட்சியின் வளர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள். வாக்கு சதவிகிதம் மாநில அளவில் பதிவான வாக்குகளில் 2006இல் 2.02%, 2011இல் 2.22%, 2016இல் 2.84% வாக்குகளை பெற்றுள்ளது. இன்னம் மூன்று சதவிகித வாக்குகளைக்கூட எட்டவில்லை. அது போட்டியிட்ட தொகுதிகளில் மட்டுமே கூட 3.57% சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள்ளது.

ஒரு அட்டவணையாகப் பார்ப்போம்.

spacer.png

இத்துடன் ஒப்பிட்டால் அஇஅதிமுக 2006இல் 32.64%, 2011இல் 38.4%, 2016இல் 40.77% வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலை மட்டும் எடுத்துக்கொண்டால் அஇஅதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 135 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 188 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியதுடன், 180 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. அஇஅதிமுகவை ஒரு முதலை என்று கொண்டால், பாரதீய ஜனதா கட்சி ஒரு பல்லி எனலாம். இவ்வளவு பலவீனமான ஒரு கட்சியுடன் எதற்காக ஒரு வலுவான கட்சி கூட்டணி வைக்க விரும்ப வேண்டும்?

 

இந்த இட த்தில் சிலர் தி.மு.க 2001ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை குறித்து யோசிக்கலாம். அப்போது திமுக பாஜகவின் வாஜ்பேயி தலைமையிலான ஒன்றிய அரசில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருந்தது. அதுவும்கூட காங்கிரஸ் கட்சி ஜெயின் கமிஷன் அறிக்கை என்ற பெயரில் திமுகவை ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புபடுத்த முயன்றதாலும், அதற்காக திமுக பங்கேற்ற ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசை 1998ஆம் ஆண்டு கவிழ்த்ததாலும், பின்னர் சுப்பிரமண்யம் சுவாமி டீ பார்ட்டியில் சோனியாவும், ஜெயலலிதாவும் சந்தித்து வாஜ்பேயி அரசை 1999ஆம் ஆண்டு கவிழ்த்ததாலும் திமுகவுக்கு உருவான நெருக்கடிதான் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியை நோக்கி செலுத்தியது. அது ஒன்றிய அரசில் அதிகார பகிர்வாக மாறியதால் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் அதற்கான விலையை திமுக கொடுக்க வேண்டி நேர்ந்தது. ஐந்தாண்டுகள் நல்லாட்சி கொடுத்தும் சட்டமன்றத் தேர்தலில் தோற்றது.

இன்றைய நிலையில் அஇஅதிமுக ஒன்றிய அரசில் இடம்பெறவில்லை. பாரதீய ஜனதாவுடன் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்ததாவது ஒன்றிய ஆட்சியில் பங்குபெறும் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் கடுமையாக முயன்றும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே கூட மூன்றரை சதம் வாக்குகளைத் தாண்ட முடியாத பாஜகவுடன், கொள்கை மாறுபாடுகளையும் கருதாமல் கூட்டணி வைக்க வேண்டிய தேவை என்ன?

அது மட்டுமல்ல. பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் எங்கள் தேசியத் தலைவர்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என்று கூறுகிறார்கள். அஇஅதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்த பிறகு அதை மீண்டும் பாரதீய ஜனதா அறிவிக்கவோ, அங்கீகரிக்கவோ தேவை என்ன இருக்கிறது? கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக்கொண்டு தேர்தலில் நிற்க வேண்டியதுதானே?

மிரட்டும் மத்திய அரசின் அதிகாரம்; மிரளும் எடப்பாடி

பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எடப்பாடி பாஜக கூட்டணி தேவையில்லை என்று முடிவு செய்தால் ஓபிஎஸ் மீண்டும் கட்சியை உடைக்கலாம். ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்தில் எத்தனை பேர் பாரதீய ஜனதா பக்கம் சாய்வார்கள் என்று சொல்ல முடியாது என்பதால் ஒரு சில சாத்தியங்கள் உடனடியாக தென்படுகின்றன.

ஆட்சி பெரும்பான்மையிழக்கலாம். கலைக்கப்படலாம். எடப்பாடி முதல்வர் பதவியை இழந்த பிறகு அவரால் தன்னை தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக, கட்சித் தலைவராகத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பது முக்கியக் கேள்வி. ஆட்சி அதிகாரமே கட்சியை இப்போது பசைபோல இயங்கி ஒட்டி வைத்துள்ளது. ஆட்சி பறிபோனால் அந்த பசை இல்லாமல் கட்சி சிதறலாம்.

ஆட்சியில் இருந்தால் போலீஸ் துணையுடன் தேர்தலைச் சந்திக்கலாம். தேனியில் செய்தது போல மின்சாரத்தை துண்டித்துவிட்டு பண மழை பெய்யச் செய்யலாம். இதெல்லாம் ஆட்சியில் இல்லாவிட்டால் சாத்தியமில்லை.

பாரதீய ஜனதா அமலாக்கத் துறையை வெளிப்படையாக அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது வழக்கம் என்பதால் மீண்டும் அது நடக்கலாம். தலைமைச் செயலர் அறையிலேயே ரெய்டு நட த்தி வரலாறு படைத்ததை மறக்க முடியாது. அத்தகைய சூழலில் தேர்தலைப் பணபலத்துடன் எதிர்கொள்வது கடினமாகிவிடும்.

 

அதைவிட பெரிய பிரச்சினை இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்றுவது. இன்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது போல ஓபிஎஸ் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி இரட்டை இலையை கோரினால், தேர்தல் ஆணையம் மீண்டும் சின்னத்தை முடக்கலாம். இரட்டை இலை இல்லாவிட்டால் குறைந்தபட்சம் மூன்று அணிகளாகத் தேர்தலை சந்திக்கும் அஇஅதிமுக பிரிவுகளுக்குள் வித்தியாசம் குறைந்துவிடும். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவரையும் நிராயுதபாணியாக சந்திக்க நேரிடும்.

இன்றைய நிலையில் எடப்பாடியின் ஒரே பலம் அவர் முதல்வராக இருப்பதுதான். தேர்தலையும் அவர் முதல்வராகவே சந்தித்தால்தான் அவரால் கட்சியையும், பிரச்சாரத்தையும் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் தரையில் போட்ட மீனைப்போல தவித்துவிடுவார். மேலும் இரட்டை இலை இல்லாமல் அவர் தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா வாரிசாகக் கூறிக்கொள்வதும் கடினம்.

அதனால்தான் தமிழகத்தில் மூன்று சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத பாஜக, நாற்பது சதவிகித வாக்குகளைப் பெற்ற அஇஅதிமுகவை மிரட்ட முடிகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்று ஜே.பி.நட்டா வரும்போது அவர்தான் கூறுவார் என்று மீண்டும், மீண்டும் கூறுகிறார்கள் பாஜக தலைவர்கள். பாஜக என்ன கேட்கிறது, எடப்பாடி என்ன சொல்லி மன்றாடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக சிக்கல் மிகவும் அதிகரித்திருப்பதாகத்தான் தெரிகிறது. பாரதீய ஜனதாவுக்குப் பணிந்து போவதில் எடப்பாடிக்குச் சிக்கல் இருக்காது; ஆனால் அப்படிச் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோமே என்ற அச்சம்தான்.அதே சமயம், பாஜக-வை எதிர்த்து நின்றாலும் பெரியதொரு சிக்கல்தான். பாரதீய ஜனதாவின் கொள்கையும் பலன் தராது; கூட்டணியும் பலன் தராது. ஆனால் அவர்களைப் புறக்கணிக்கவும் முடியாது. அடுத்த வாரமாவது ஏதேனும் தீர்வு பிறக்குமா?

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
 

 

https://minnambalam.com/politics/2020/12/28/11/what-necesseary-edapadi-allaince-with-bjp-eelction-datas-tells-story

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.