Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி!

 
அலையாற்றி
C31HJeJVYAUHdyR.jpg
 
 
இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த பலவகைக் கொடைகளைக் கொண்ட இடம் புங்குடுதீவு. ஆனால் புங்குடுதீவாராகிய நாம் செய்த செய்யும் புறக்கணிப்புகளால் இயற்கையின் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன புங்குடுதீவில் இருக்கிறது என்று கேட்போர் ஒருமுறை கண்ணாத்தீவுக்குச் சென்று வாருங்கள். நம் முன்னோர் கண்ணாமரங்கள் வளர்ந்து இருந்த தீவைக் கண்ணாத்தீவு என அழைத்தனர். அது நம் புங்குடுதீவிற்கு மிக அருகே உள்ள ஒரு சிறு தீவு. நம் கண்ணாத் தீவு சிறு மீன், நண்டு, இறால் போன்றவற்றின் உறைவிடமாய் இருந்தது. அதன் கரையோர மணலில்
சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்”
என்ற உருத்திரமூர்த்தியின் வரிகளை சிறு நண்டும் கடலும் நாளுமே நடாத்திக் கொண்டிருந்தன.
 
நெய்தல் நிலத்து சங்க இலக்கியப் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக என் தந்தை கண்ணாத்தீவுக்கு என்னை முதன் முதல் அழைத்துச் சென்றார். அதற்கு முன் கடல்வாழ் உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறிந்திராத எனக்கு கண்ணாத்தீவு அவற்றை நேரடியாகக் காட்டிக் கற்றுத் தந்தது. 
நீருக்கு மேல் சுவாசிக்கும் வேர்கள்
mangrove.jpg
 
கடல்வாழ் உயிர்கள் ஒன்றினுள் ஒன்று தங்கி ஒன்றினை ஒன்று உண்டு வாழ்வதை அறிவதும் ஓர் அநுபவமே. கண்ணா மரங்கள் வேரினால் சுவாசிப்பதற்காக வேரைக் கடல் நீருக்கு மேலே வைத்திருப்பதைப் பார்ப்பது ஓர் அழகு. இவ்வேர்களின் இடையே ஆயிரமாயிரமாகச் சிறு மீன்கள் மின்னியாச் சுழன்று நாட்டியமாடிச் செல்வதும் ஓர் அற்புதம். பெரிய மீன்களிலிருந்து தப்பி தம்முயிரைக் காக்க கண்டல் வேர்களிடையே பதுங்கும் இறால்களின் கண்ணாமூச்சு விளையாட்டு ஓர் ஆனந்தம். கண்ணா மரவேர்களில் சறுக்கிச் செல்லும் நண்டு வளைபுகுவது ஓர் எழில். கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அறியவிரும்புவோர்க்கு கண்ணாத்தீவு ஓர் அமுதசுரபி. 
 
இத்தகைய அழகை சங்ககாலப் பெண்கள் பார்த்து மகிழ்ந்து விளையாடியதை சங்க இலக்கியம் காட்டுகிறது.
“சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும்
சிறுவிளையாடல்”                   
                                      - (நற்றிணை: 123: 10 - 11)
 
 
 
 
 
என அளையில் இரண்டு இரண்டாகச் சேர்ந்திருந்த நண்டுகளைப் பார்த்து விளையாடிய கன்னியரை நற்றிணை சொல்கிறது.
 
இன்று கண்ணாத்தீவு எந்த நிலையில் இருக்கிறது? புங்குடுதீவின் வட கிழக்கே கண்ணாத்தீவையும், வடமேற்கே சற்றுப் புங்குடுதீவுக்கு உள்ளே கண்ணாப்பிட்டியையும் பார்க்கலாம். கண்ணாப்பிட்டியை ஏனோ முனிவர் பிட்டி என்றும் அழைக்கின்றனர். ஊருக்குள் இருக்கும் மரங்களை விட கண்ணாத்தீவிலும் கண்ணாப்பிட்டியிலும் உள்ள மரங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவை. இயற்கை புங்குடுதீவின் கடல் அரிப்பைத் தவிர்ப்பதற்கென்று கொட்டிக் கொடுத்த கொடை இந்தக் கண்ணா மரங்கள் என்பேன்.
 
அலையாற்றி பற்றிக் கூறாமல் கண்ணாமரம் பற்றிச் சொல்கிறேனா? அலையாற்றி மரங்களில் ஒருவகையே காண்ணாமரம். ஆற்று நீர் கடலோடு கலக்கும் நெய்தல் நிலக் கழிமுகங்களில் பெரும்பாலும் அலையாற்றி மரங்கள் வளரும். அதாவது நன்னீராறு கடலுடன் கலக்கும் இடத்தை கழிமுகம் என்பர்.  எனவே அந்நாளில் புங்குடுதீவில் நந்நீர் ஆறு ஓடியது என்பதற்கும் சான்றாக நிற்பன அலையாறி மரங்களே! அந்த ஆற்றின் அடிச்சுவடே இப்போதும் மழைக்காலங்களில் கள்ளியாறாய் கேரதீவின் மூன்று பக்கமும் சுற்றி ஓடி கடலோடு கலக்கிறது. சுவடே இன்றி அழிந்து ஒழிந்த சரஸ்வதி நதியை தேடிப் பாயவைக்கும் தற்காலத்தில் நம் புங்குடுதீவின் உயிர்நாடியாம் கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்க முடியாதா!
 
கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்கிறோம் எனக்கூறி எவராவது சென்று கள்ளியாற்றை ஆழப்படுத்தவோ அகலப்படுத்தவோ JCP அல்லது Bulldozerஐக் உடனே கொண்டு சென்று இறக்கி வேலை செய்யத் தொடங்காதீர்கள் என என் உறவுகளைக் கேட்கிறேன். ஏனெனில் அங்கிருக்கும் பல நூறு நன்னீர் ஊற்றுக் கண்களை நாம் அடைத்து விட நேரிடும். அந்த ஊற்றுக் கண்களை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு என்ன செய்வது? அடுத்த பதிவில் அதனைச் சொல்கிறேன். 'இன்றும் புங்குடுதீவில் நன்னீர் உண்டு' என்னும் பதிவைப் பாருங்கள்.
 
நான் புங்குடுதீவில் பிறந்தவளும் அல்ல. வளர்ந்தவளும் அல்ல. ஆனால் என் முன்னோர் பல நூறு ஆண்டுகளாக காதல் மொழிபேசிக் களித்திருந்த இருந்த இடம் புங்குடுதீவு.  அந்தப் பற்றில் புங்குடுதீவின் வரலாறுகளைச் சுட்டிக் காட்டிய என் தந்தையுடன் [பண்டிதர் மு ஆறுமுகன்] புங்குடுதீவைச் சுற்றி சனி, ஞாயிறு நிலவொளியில் நடை பயின்றிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே புங்குடுதீவு மேல் தீராக் காதல் இருக்கும் போது அங்கு பிறந்து வளர்ந்து நடைபயின்ற உங்களுக்கு நம் ஊரின்மேல் உயிரே இருக்கும். எனவே ஊரின் புவியியல் தன்மையை அழிக்கும் கொடுஞ்செயலை செய்யமாட்டீர்கள் என முழுமையாக நம்புகிறேன்.
 
கள்ளியாறு மீண்டும் உயிர்பெற்றால் அலையாற்றி மரங்கள் பல்கிப் பெருகி பெருவனமாக மாறும். அலையாற்றி மரங்களில் மோதும் பேரலைகள் சிதறிச் சிறு நுரையாகக் கரைந்து போகும். இவ்வாறு கடலில் எழுந்து வரும் பேரலைகளை அமைதியாக்கி ஆற்றுப்படுத்திய மரங்களை அலையாற்றி என்றனர். கொதித்துப் பொங்கும் குடிநீரை ஆற்றிக் குடிப்போம் அல்லவா. அப்படி வேகமாகப் பாய்ந்து வரும் பேரலைகளை இம்மரங்கள் ஆற்றின. கொதிநீரை ஆற்றித்தா என்று கூறுவதை ‘ஆத்தித்தா’ என்பது போல அலையாற்றி மரங்களை ‘அலையாத்தி’ என்கிறார்கள். இதற்கும் ‘ஆத்தி’, ‘அத்தி’ மரங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. 
தில்லை மரப்பூ
%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B-%2B%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
 
அலையாற்றி என்பது சதுப்பு நிலத்தாவரங்களின் பொதுப்பெயர் எனலாம். ஆற்றிவகையில் அலை ஆற்றி, வெள்ள ஆற்றி என இருவகையுண்டு. தில்லை நடராசன் திருநடம் செய்யும் தில்லைவனமும்[சிதம்பரம்] அலையாற்றிக் காடே. தில்லை, கண்டல், சுரபுன்னை போன்றவற்றின் பொதுப்பெயரே அலையாற்றி. கண்டல் மரத்திலும் பல இனமுண்டு. சிறுகண்டல், செங்கண்டல், கருங்கண்டல், தேன்கண்டல். தேன்கண்டல் மரத்தை கண்ணா என்பர். இலங்கையில் மட்டும் மரம், செடி, புல் என நாற்பதுக்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் இருக்கின்றன. கடல் அலை கண்டல் மரத்தை மோதுவதைக் காஞ்சிப்புலவர்
“புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” 
                                                -(நற்றிணை: 123: 9)
எனக்கூறுகிறார். மீன்வாடை[புலவு] வீசும் கடலலை[திரை] மோதும்   [உதைத்த] வளைந்த அடியுடைய கண்டல்களாம்.
 
இயற்கையே உலகின் படைப்பையும் அழிப்பையும் செய்கிறது. தீவகங்களையும் ஆக்கியும் அழிப்பதும் இயற்கையே என்று நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமக்கு ஆக்கங்களைத் தரும் கடலலை மணல் அரிப்பால் அழிவையும் தருகிறது. கடற்பெருக்குக் காலங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுவதற்கும் அது வழிவகுக்கிறது. அதற்காக மணல் அரிப்பைத்தடுக்கத் தடுப்புச்சுவர் கட்டுவதால் பயனில்லை. அதுபோல் மழைக்காலத்தில் ஓடிவரும் நன்னீரைத் நாம் சேமித்து வைப்பதற்காகத் தேக்குவதும் புங்குடுதீவைச் சூழவுள்ள கடல்வாழ் உயிரினங்களின் சமநிலையைப் பாதிக்கும். 
 
அதற்கு நம் முன்னோர்கள் போல கடற்கரைச் சோலைகளை உருவாக்குவதே மிகச்சிறந்த வழியாகும். கடலும் கடற்சோலையும் போல சொல்லுக்கு பொருள் இருக்கவேண்டும் என்பதை 
“கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்”
                                            - (பரிபாடல்: 15: 11 - 12)
என இளம்பெரு வழுதியார் கூறியுள்ளார். பொருள் விளக்கம் அற்ற சொல்லால் என்ன பயன்? அது போல கடற் சோலையில்லா கடலால் பயன் என்ன? அத்தகைய கடல் அழிவையே கொடுக்கும் என்பதை சங்கப்பாடல்களில் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் உயிர்கள் நல்ல காற்றைச் சுவாசித்து ஒளித்துப் பிடித்து விளையாடி இனப்பெருக்கம் செய்ய கடற்சோலை உதவுகிறது. அத்துடன் ஊரை அழிக்கவென்று ஓங்கி எழுந்து வரும் பேரலையை தடுத்து நிறுத்துவதும் கடற்சோலையே.
 
நம்முன்னோர்கள் புவியியல் உயிரியற் சமநிலையைப் பேணித் தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களுக்கு என்னென்ன வகையில் அலையாற்றி கைகொடுத்தது என்பதை இந்த வருடம் நான் வெளியிட இருக்கும் ‘புங்குடுதீவு பற்றிய நூலில்’ கண்டுகொள்ளுங்கள்.
இனிதே,
தமிழரசி.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தகவல்கள் ....... பகிர்வுக்கு நன்றி சகோதரி....!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.