Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு)

[17 - June - 2007]

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தை பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையினமாகக் கொண்ட பிரதேசமாக கபளிகரம் செய்யும் நோக்குடனான பல்வேறு செயற்றிட்டங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான விமானக் குண்டு வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் என்பவற்றாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெருகல், கதிரவெளிப் பிரதேசங்களுக்கு உடுத்த உடுப்புடன் இடம்பெயர்ந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து வாகரை, கதிரவெளி, வெருகல் பிரதேசங்கள் மீது மீண்டும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக உக்கிரமான இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக அப்பிரதேச மக்களும் மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கூட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பெரும் அவலத்திற்கு மத்தியில் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையேற்பட்டது.

இந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சிறுவர், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என்று 150 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைய வேண்டிய பரிதாபகரமான நிலைமை உருவாக்கப்பட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக மூதூர் கிழக்கு பிரதேசத்திலுள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 26 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 16 ஆயிரம் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இப்பிரதேசங்களிலுள்ள வீடுகள், பொதுக்கட்டிடங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் உடைமகைளும் பெருமளவில் சூறையாடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்த அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சம்பூர் பிரதேசத்திற்கு மட்டும் எவரும் செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில் இப்பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அனல் மின் நிலையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் அரச தரப்பினரால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பூர் பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேசத்தில் அனல் மின் நிலையமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இதற்கென இப்பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாவற்றுக்குமப்பால் தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசமான மூதூர் கிழக்கிலுள்ள இலங்கைத் துறை முகத்துவாரம் பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி பெரும்பான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகளும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இலங்கைத்துறை முகத்துவாரம் `லங்கா பட்டுண' என்று பெயர் மாற்றப்பட்டு அங்கு பௌத்த விகாரையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் இலங்கைத்துறை முகத்துவாரம் `லங்கா பட்டுண' என்று பெயர் மாற்றப்பட்டு புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ள அபாயகரமான நிலைமை தொடர்பாக மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம். சௌந்தரராஜன் தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பாக அரச அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடகாலத்திற்கும் மேலான காலப்பகுதியில் அரச படையினர் மற்றும் பேரினவாத அரசியல் சக்திகளின் அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி மன்னாருக்கு சென்று அங்கிருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான கந்தளாயில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டு அது இன்று முற்ற முழுதாக பெரும்பான்மையினப் பிரதேசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு காரணமாக கந்தளாய்ப் பிரதேசத்தில் எஞ்சியுள்ள தமிழ் மக்களும் தொடர்ந்தும் வாழ முடியாத பரிதாபகரமான, துன்பகரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான விளை நிலங்கள், கால்நடைகள் என்பன அபகரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறே திருகோணமலை மாவட்டத்தின் மற்றொரு பிரதேசமான சேருநுவரப் பிரதேசம் முற்று முழுதாக பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் அரச நிர்வாக செயற்பாடுகள் படிப்படியாக வட மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரச நிர்வாக செயற்பாடுகள் என்பன தொடர்பாக சகல உயர் மட்ட கலந்துரையாடல்களிலும் அண்மைக் காலமாக வட மத்திய மாகாண முதலமைச்சருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதில் அவர் பிரசன்னமாகியிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தமிழ் மக்களின் அற்ப சொற்ப நம்பிக்கையாக விளங்கிய வட, கிழக்கு மாகாணம் சட்டத்துறையின் துணையுடன் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் படிப்படியாக தமிழ் மக்களின் பிடியிலிருந்து நழுவிச் செல்வதற்கான செயற்பாடுகளே அரச உயர்மட்டத்தினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகவும் திருகோணமலை மாவட்ட அரச அதிபராகவும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அதுவும் படைத்தரப்பிலிருந்து ஓய்வு பெற்றவர்களே நியமிக்கப்பட்டு வருவது அரச உயர் மட்டத்தின் ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பழைமை வாய்ந்த புரதான வழிபாட்டுத் தலமாக திருகோணேஸ்வரர் ஆலயப்பகுதி படையினரின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் வழிபாடுகளுக்கு

செல்வோர் கடும் கெடுபிடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேநேரம், கடல்கோள் அனர்த்தத்தையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு என்ற போர்வையில் சென்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் திருகோணமலை பஸ் நிலையத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவி பெரும் முறுகல் நிலையொன்றை உருவாக்கிய சம்பவம் தொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதற்கு துணைபோனமையும் பேரினவாத ஆக்கிரமிப்பின் உச்சநிலையையே வெளிக்காட்டி நிற்கிறது.

இவ்வாறே புனித பிரதேசப் பகுதி என்ற போர்வையில் அம்பாறை மாவட்டத்தின் தீகவாவி பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பேரினவாதத்தால் சூறையாடப்பட்டு இன்னமும் தீர்வு காணப்படாத பிரச்சினையாக பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறே பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலப்பகுதியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டு பெரும் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டு அதன் விளைவாக ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பல முஸ்லிம்கள் உயிரிழந்த சம்பவங்களும் அண்மைய காலங்களில் இடம்பெற்றதை எவரும் மறந்துவிட முடியாது.

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் பெரும்பான்மையினத்தவரை குடியேற்றுவதற்கு ஏற்புடையதான புனித பூமித்திட்டங்களும் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறத்திலுள்ள மன்னன்பிட்டி பாரம்பரிய தமிழ்க் கிராமம் `மன்னம்பிட்டிய' என்று மாற்றப்பட்டு பெரும்பான்மையினராக இருந்த தமிழ் மக்கள் படிப்படியாக வெளியேறும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களான புனானை வெலிக்கந்தை வரை பொலநறுவை மாவட்ட பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டு அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கை ஆக்கிரமிக்கப்போகும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் ஆபத்தானது என்ற உண்மையை தென்னிலங்கை அரசுகளுடன் தமது சுயநலன்களுக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

1995 ஆம் ஆண்டு ரிவிரெச இராணவ நடவடிக்கையையடுத்து யாழ்ப்பாணம் அழகிய தமிழ்ச்சொல் `யாப்பண பட்டுணு' என்றும் 1996 ஆம் ஆண்டு ஜெயசிக்கிறு இராணுவ நடவடிக்கையடுத்து மன்னார்- வவுனியா வீதியில் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறையனாலங்குளம் `சப்மல்புர' என்றும் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் உள்வாங்கப்பட்டதைப் போன்றே இன்று மூதூர் கிழக்கின் பூர்வீக தமிழ்க் கிரமமான இலங்கைத்துறை முகத்துவாரம் `லங்கா பட்டுண' என்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

எல்லாத்துக்கும் மிக விரைவில் முடிவு கிடைக்கும் கண்டியளோ

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் மிக விரைவில் முடிவு கிடைக்கும் கண்டியளோ

அகதிகளாக உள்நாட்டிலும், பிறநாடுகளுக்கும் திருமலைத் தமிழர்களை இடம்பெயர வைப்பதில் சிங்கள அரசு வெற்றிபெற்றுள்ளது.. சில வருடங்களில் திருமலையில் தமிழில் உரையாடுவதுகூட இல்லாமல் போகத்தான் சாத்தியம் உள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.