Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதி ஷஹ்ரான் குறித்து பல உண்மைகளை வெளிப்படுத்திய ஷானி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2019 ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாக கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை என கூறுவது நம்பும் படியாக இல்லை எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42ம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

 
 

“நிலந்த ஜயவர்தன எப்போதும் ஆர்ப்பாட்டங்கள், ஏனைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை ஜனாதிபதிக்கு அறிவித்துக்கொண்டிருப்பவர். அப்படி இருக்கையில், இந்த தகவலை மட்டும் கூறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் ஊடாகவே தகவல்களை அறிந்துகொள்வார். இதுவே இதுவரை காலமும் நடந்து வந்தது. என ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதன்போது ஆணைக் குழுவுக்கு அப்போது தலைமை தாங்கிய மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, அப்படியானால் நிலந்த ஜயவர்தன தான் அறிவிக்கவில்லை என கூறுவது பொய்யா? அதற்கான ஏதும் சான்றுகள் உங்களிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதன்போது கடந்த 2019 ஜூன் 7ம்திகதி சி.ஐ.டி.யின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது பயணங்கள் குறித்து பதிவிடும் புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவினையும் ஆதாரமாக கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர பதிலளித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து நாடாாளுமன்ற தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட்டு அங்கு சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன. அதற்கு உளவுச் சேவை அதிகாரிகளும் சாட்சிக்காக அழைக்கப்பட்ட நிலையில், அச்செயற்பாட்டுக்கு உளவுச் சேவை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டனர். இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில், ஒரு கலந்துரையாடல் அது குறித்து நடந்தது. அதில் நிலந்த ஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் உளவுச்சேவை அதிகாரிகள் அழைக்கப்படுவது அவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கை எனவும், அச்செயற்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தான் தனக்கு கிடைத்த உளவுத் தகவலை பாதுகாப்பு செயலருக்கும், தேசிய உளவுச் சேவை பிரதானிக்கும் அறிவித்ததாக கூறும் போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு, அந்த தகவலை எனக்கும், பிரதமருக்கும் அறிவிக்கவில்லை என குறிப்பிட்டார். எனினும் உண்மையில் ஜனாதிபதிக்கு அந்த தகவல் அறிவிக்கப்பட்டிருக்காவிட்டால், எல்லா தகவல்களையும் பகிர்ந்துகொண்ட போதும், ஏன் எனக்கு அந்த தகவலை தரவில்லை என்றே முன்னாள் ஜனாதிபதி கேட்டிருக்க வேண்டும். தனக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றே அவர் குறிப்பிட்டார். அங்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது.’ என தெரிவித்தார்.

இதனிடையே, மாவனெல்லை சிலை உடைப்பு, வனாத்துவில்லு வெடிபொருள் மீட்பு சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் அவற்றின் பின்னணியில் சஹ்ரான் தலைமையிலான அடிப்படைவாதிகள் உள்ளமை வெளிப்படுத்தப்பட்ட பின்னர், அது குறித்து ஜனாதிபதியை அறிவுறுத்தியதாகவும், பாதுகாப்பு பேரவையில் அது குறித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அது குறித்து அறிவிக்க சி.ஐ.டி. பிரதானியை பாதுகாப்பு பேரவைக்கு அழைப்பதாக கூறியபோதும், இறுதிவரை அது நடக்கவில்லை என அவர் அரச சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு வெளிப்படுத்தினார்.

‘கடந்த 2019 பெப்ரவரி 2 ஆம் திகதி நானும், சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் வீட்டுக்கு சென்றோம். வேறு ஒரு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் வாக்குமூலத்தைப் பெற நாம் அங்கு சென்றோம். அதன் பின்னர் நாம் அவருடன் கலந்துரையாடினோம். அப்போது இரவு உணவினை நாம் மூவரும் ஒன்றாக உட்கொண்டோம். அப்போது குறித்த உணவு மேசையில் வைத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, மாவனெல்லை, வனாத்துவில்லு சம்பவங்களின் பின்னணியில் ஒரே குழுவே உள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மிக ஆபத்தானதாக விளங்குவதால் அது தொடர்பில் பாதுகாப்பு பேரவையில் கூறி அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விளக்கினார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு, ‘ சரி ரவ்… நான் உங்களை பாதுகாப்பு பேரவைக்கு ஒரு நாள் அழைக்கின்றேன். நீங்கள் இது குறித்து விளக்குங்கள்.’ என கூறினார். எனினும் இறுதிவரை அந்த அழைப்பு வரவே இல்லை. என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆணைக் குழுவில் குறிப்பிட்டார்.

இதன்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அப்போது சஹ்ரானின் பெயரை நீங்கள் கூறினீர்களா என வினவினர். அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர, அது ஞாபகத்தில் இல்லை. எனினும் இவ்வளவு பெரிய விடயத்தை கூறியே கணக்கில் கொள்ளாதவர், அப்போது சஹ்ரானின் பெயரை மட்டும் கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பாரா என்பது சந்தேகமே என பதிலளித்தார்.

அத்துடன் வனாத்துவில்லு பகுதியில், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது. அங்கு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்த போது 2019 மே மாதம் இலங்கையில் பல இடங்களில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்தமை தெரியவந்தது. ஹிக்கடுவை, நுவரெலியா, கண்டி போன்ற இடங்களில் அதற்கான உளவு பார்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தன. அப்படி இருக்கையில், அந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டமை மிக வெற்றிகரமான விசாரணை. ஒருவேளை சஹ்ரான், சி.ஐ.டி. அவரை நெருங்குவதை அறிந்து கூட ஏப்ரல் மாதத்தில் இவ்வாறான திடீர் தாக்குதல் ஒன்றினை நடாத்தியிருக்கலாம் என ஷானி அபேசேகர சுட்டிக்காட்டினார்.

அப்படியானால், மாவனெல்லை, வனாத்துவில்லு சம்பவங்களின் பின்னால் சஹ்ரான் குழு இருப்பதை தெரிந்தும், ஏன் அவரைக் கைது செய்ய முடியாமல் போனது என ஆணைக்குழு கேள்வி எழுப்பியதற்கு,

பதிலளித்த சி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சஹ்ரானை கைதுச் செய்ய பல இடங்களில் நாம் தேடுதல் நடாத்தினோம். கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய கெக்குனுகொல்ல, காத்தாண்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தேடுதல் நடாத்தப்பட்டது. எனினும் அவர் அப்பகுதிகளுக்கு நாம் செல்லும்போதும் அங்கு இருக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டரிய முடியவில்லை என்றார்.

இதன்போது, சி.ஐ.டி. பல குற்றவாளிகளை சூட்சுமமாக மிக திட்டமிட்டு கைது செய்யும் போதும், ஏன் சஹ்ரானை மட்டும் கைதுச் செய்ய முடியாமல் போனது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர, ‘பொதுவாக சி.ஐ.டி.யினர் ஒரு சந்தேக நபரின் இருப்பிடத்தை கண்டரிய தொலைபேசி கோபுரத்தகவல்கள், உளவுத் தகவல்கள், அவரின் நடமாட்டம் குறித்த அவதானிப்புக்களையே பயன்படுத்துவர். எனினும் இங்கு சஹ்ரான், அவரது சகாக்களுடன் உரையாட ‘ திரிமா’ எனும் தொலைபேசி செயலியை பயன்படுத்தியுள்ளார். அதனால் அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை. அச்செயலியை அவர் இருக்குமிடத்தை காண்பிக்காமல் இருக்க அவர், சூட்சுமமாக பயன்படுத்தியமையால் கைது செய்ய முடியாமல் போனது’ என்றார்.

இதன்போது சஹ்ரான் குறித்த செயலியை பயன்படுத்துவது 21/4 தாக்குதல்களுக்கு முன்னரே சி.ஐ.டி. அறிந்திருந்ததா, அவ்வாறு எனில் ஏன் தொழில்நுட்ப உதவிகளைப் பெறவில்லை எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர,

‘ஆம்… சி.ஐ.டி. 21/4 தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் திரிமா செயலியிப் பயன்படுத்துவதை அறிந்திருந்தது குறித்து நாம் தொழில்நுட்ப உதவிகளைப் பெற போதுமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அதற்கான கோரிக்கைகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்தன. எனினும் அந்த செயலியை உடைத்து சஹ்ரான் இருக்குமிடத்தை கண்டறிய, உரிய உதவிகள் கிடைக்கவில்லை. அந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் தோல்வி கண்டன என தெரிவித்தார்.

இதனையடுத்து, வனாத்துவில்லு வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவரை விடுவித்தமை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர,

‘ இது குறித்து 2019 பெப்ரவரி வரை அல்லது மார்ச் முதல் பகுதியில் பாதுகாப்பு செயலரின் கீழ் கலந்துரையாடல் ஒன்று நடந்தது. அதில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும் இருந்தனர். இதில் குறித்த நவீட், நப்ரிஸ் எனும் சந்தேக நபர்கள் எந்த தொடர்பும் அற்றவர்கள் என்பதால் அவர்களை விடுவிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நான் அப்போது அக்கோரிக்கையை நிராகரித்தேன். அவர்கள் தடுப்புக் காவலில் உள்ளதால், விசாரணை நிறைவடையும் வரை அது குறித்து தீர்மானம் எடுக்க முடியாது என நான் திட்டவட்டமாக அறிவித்தேன். அதன் பின்னர் என்னுடன் அது குறித்து யாரும் தொலைபேசியில் கூட பேசவில்லை.

பின்னர் விசாரணை அதிகாரியான மாரசிங்கவின் முன் மொழிவுகள், உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லாமையால் அவர்களை நிபந்தனையின் கீழ் விடுவிக்க பரிந்துரைத்தேன். அதனை சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா

அதிபரும் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பி, 8 நிபந்தனைகளின் கீழ் அவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அரசியல் தலையீடு உள்ளதாக பலரும் கூறினாலும், நான் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை எதனையும் கேட்பவனும் அல்ல. அவ்விருவரும், இதுவரை இந்த தாக்குதல் குறித்தோ ஏனைய அடிப்படைவாத விடயங்கள் குறித்தோ கைது செய்யப்படவும் இல்லை. அவ்விருவரும் இன்றும் குறித்த நிபந்தனைகளின் படி சி.ஐ.டி.க்கு வந்து கையொப்பமிட்டு செல்கின்றனர். எனவே அரசியல் அழுத்தம் காரணமாக பயங்கரவாதிகளை விடுவித்ததாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை” என குறிப்பிட்டார்.

பயங்கரவாதி ஷஹ்ரான் குறித்து பல உண்மைகளை வெளிப்படுத்திய ஷானி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.