Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஊடக சுதந்திரமும் ராஜபக்ச அரசாங்கமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடக சுதந்திரமும் ராஜபக்ச அரசாங்கமும்

-தாயகத்திலிருந்து செ.கார்த்திகாயினி-

அண்மையில் தமிழ்நெற் இணையத்தளத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் விதித்த தடையானது, ஊடக சுதந்திரத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையின் புதியதொரு பரிணாமமாக அமைகிறது.

அதாவது, இதுவரை நாளும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மீதே பலவிதமான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் பிரயோகித்து வந்த அரசாங்கம் தற்போது முதன்முறையாக சர்வதேச ரீதியில் பார்க்கக்கூடியதாக அமையும் இணையப் ஊடகங்களிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கடந்த சில தசாப்தங்களாகத் தொடரும் போரில், தமிழ் மக்களின் பார்வையில் நின்றவாறு தமிழர் தாயகப் பகுதிகள் தொடர்பான செய்திகளையும் ஆய்வுகளையும் உடனுக்குடன் தமிழ்நெற் வெளியிட்டு வருவதால் அது இராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட பல தரப்பட்டோர் மத்தியில் பிரபல்யமான ஒரு இணையத்தளமாக விளங்குகிறது.

தமிழ்நெற் இணையத்தளமானது வடக்கு கிழக்கில் இடம்பெறும் செய்திகள் தொடர்பில் அக்கறை செலுத்தும் சுதந்திரமாகச் செயற்படும் குறித்ததொரு குழுவினரால் 01 யூன் 1997 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கும் இந்த இணையத்தளம் தொடர்பாக அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த இந்தியாவின் புறொண்ட் லைன் சஞ்சிகையானது, 'இலங்கையினது இன மோதல்களினைத் தொடர்ந்தும் அவதானிக்கும் இராஜதந்திரிகள், ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைவரும் கட்டாயம் உலாவும் இணையம் இது என்றும் இலங்கையின் இனப்போரினைப் தமிழ் மக்களின் பார்வையில் பதிவு செய்யும் ஒரு செய்தி ஊடகம்" என்றும் கூறியிருந்தது.

சிறிலங்காவினது சனாதிபதிச் செயலகத்தினது மூத்த அதிகாரி ஒருவர்கூட 'என்னைப் பொறுத்தவரையில் தினமும் முதலில் நான் பார்க்கும் இணையத்தளம் தமிழ்நெற்தான்" என வெளிப்படையாகவே கூறுமளவிற்கு தமிழ்நெற் அனைவர் மத்தியிலும் பிரபல்யமடைந்திருக்கிறது.

குறித்த இந்த இணையத்தின் பிரதம செய்தி ஆசிரியர்களில் ஒருவராகவிருந்த ஆய்வாளர் சிவராம் அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களால் கொழும்பில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, குறித்த சில இணைய ஊடகங்களை தங்களது நாடுகளில் பார்ப்பதைத் தடை செய்திருக்கும் நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவுடன் தமிழ்நெற் இணையத்தளத்தினைத் தடை செய்ததின் மூலம் இலங்கையும் இணைந்துகொண்டுள்ளது. ஒரு இணைத்தளத்தினை குறித்ததொரு நாட்டில் பார்க்க முடியாதவாறு செய்வதென்பதைவிட ஒரு படி மேலே போயிருக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்காகப் பேசவல்ல அமைச்சரான கேகலிய கெஹெல்லிய ரம்புக்வெல, புலிகளின் ஆதரவு இணையமாகச் செயற்பட்டு வரும் தமிழ்நெற் இணையத்தளத்தினது செயற்பாட்டினை முடக்குவதற்கு அரசாங்கமானது இணையச் செயற்பாடுகளைச் சிதைக்கும் வல்லமைகொண்ட ஹக்கர்களை (ர்யஉமநசள) வாடகைக்கு அமர்த்தப்போதாகக் கூறியுள்ளதன் மூலம், சர்வதேச விதிகளுக்கமைய ஒழுகாத நாடு என்பதை இலங்கை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

சிறிலங்காவின் வரலாற்றில் தமிழ்நெற் இணையத்தளமே முதன் முதலில் தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து வேறு பல இணையங்களும் தடை செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல், ஆகியவற்றின் அடுத்தகட்ட நடவடிக்கையே இதுவாகும்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை உபாயங்களில் கடத்தல்கள், கைதுகள், படுகொலைகள், தமிழ்த் தேசியவியலாளர்களும் சமூகத் தலைவர்களும் கொலை செய்யப்படுவது, அச்சுறுத்தப்படுவது மற்றும் தமிழ் மக்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற்றுதல் ஆகியவற்றுடன் தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் கெடுபிடிகளும் உள்ளடங்குகிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதற்குப் பின்னர், ஊடகவியாளர்களும் ஊடகத்துறையைச் சேர்ந்த பணியாளர்களுமுட்பட பத்திற்கு மேற்பட்டோர் சிறிலங்கா ஆயுதப் படைகளாலும் அதன் துணைக்குழுக்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் உதயன், தினக்குரல், சுடரொளி ஆகியவற்றின் அலுவலகங்கள் பல முறை சோதனையிடப்பட்டதுடன் தாக்குதல்களிற்கும் உள்ளாகியுள்ளன.

ஊடக சுநதந்திரம் மிக மோசமாக மீறப்படும் நாடுகள் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்கா 141 இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் 115 ஆவது இடத்திலிருந்த சிறிலங்கா கடந்த வருடம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவற்றினால் 26 இடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஊடக சுதந்திரம் மிக மோசமாக மீறப்படும் நாடாக வடகொரியாவும் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நாடுகளாக பின்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பினால் 2003 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிறிலங்கா 89 ஆவது இடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பாகவும் தற்போது நடைபெற்று வரும் போர் ஊடகங்கள்மீது ஏற்படுத்தி வரும் தாக்கம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக பதினொரு அமைப்புக்கள் அடங்கிய குழுவொன்று இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை சிறிலங்காவின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்கிறது. இந்தக் குழுவில் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு, சர்வதேச ஊடக அமைப்பு, வரையறையற்ற பத்திரிகையாளர் அமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட 11 ஊடக அமைப்புக்கள் உள்ளடங்குகின்றன. இந்த சர்வதேச குழு சிறிலங்காவில் தங்கியிருக்கும் போதே அரசாங்கத்தினால் தமிழ்நெற் மீதான தடை நடவடிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ஊடக சுதந்திரத்திற்கான தடை, மோசமான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்காக அடிக்கடி சர்வதேச சமூகத்தின் கண்டனத்தை எதிர்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை மேலும் இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டித் தமது நிதியுதவியின் கணிசமான பகுதியை நிறுத்தியுள்ளன. தமிழ்நெற் இணையத்தின் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் தடைக்கு எதிரான தனது கண்டனத்தை உடனடியாகவே எல்லகைளற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன தெரிவித்திருந்தன.

எனினும், சிறிலங்கா அரசாங்கமானது சர்வதேச சமூகத்தின் உதவிகளில் தங்கியிருக்கவில்லை எனவும் அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாதென்றும் தெரிவித்த சிறிலங்கா அரசாங்கம், இத்தகைய மனித உரிமை அமைப்புக்களின் குரல்களுக்கு எவ்வளவுதூரம் செவிசாய்க்கும் என்பதே மிகப் பெரிய வினாவாகும்.

இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல் மனித உரிமைகள் என்றுமில்லாதவாறு மிக மோசமாகப் மீறப்படுவதற்கு அது துணை போவதால் சர்வதேச கண்டனங்களுக்கும், கண்டிப்புக்களுக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உள்ளாகியுள்ள தற்போதைய சூழமைவில், உலகளாவிய ரீதியில் பெரிதும் மதிக்கப்படும் ஊடக சுதந்திரத்தினை நசுக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

ஊடக சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்காக உழைக்கும் அமைப்புக்கள் எவையோ அவற்றினதும் இது விடயம் தொடர்பிலான சர்வதேசத்தின் கருத்துக்களையும் கரிசனைகளையும் சிறிலங்கா அரசாங்கமானது செவிசாய்க்க மறுக்கிறது.

கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றினைத் மதிக்கத் தவறி நிற்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச சட்ட நியமங்களின் படி ஒழுக மறுப்பதோடு பொறுப்பற்ற விதத்தில், யாருக்கும் பதில் சொல்லும் தேவை தனக்கில்லை என்ற இறுமாப்பில் செயற்பட்டு, எவருக்குமே கட்டுப்படாத ஒழுக்கம்கெட்ட ~அடங்காப்பிடாரி நாடு| என்பதை மேற்குறித்த இந்த நடவடிக்கைகளினால் சிறிலங்கா தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.