Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை

-டிட்டோ குகன்-

இலங்கையின் தற்போதைய அரசியல் மேடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தாலும், அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென்ற விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுபட்டு விடுகின்றன.

உதாரணமாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்கிடையே அன்று தொடக்கம் இன்று வரை எப்போதுமே ஒத்துவராத கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் ஒன்றாக செயற்படாவிட்டாலும் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயற்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்று பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு கட்சியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தால் ஏதோவொரு விதத்தில் தாங்கள் பாதிக்கப்பட்டதாகவே கருதுகின்றன. அதற்கான காரணங்களும் இருக்கின்றன. முன்னதாக ஜனாதிபதி தேர்தலின் போது, ஜே.வி.பி.யினர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஆதரவு வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டு, "மகிந்த சிந்தனை" வேலைத் திட்டத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வெற்றிபெறவும் ஆதரவளித்தனர். இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஜனாதிபதி "மகிந்த சிந்தனையை காட்டிக் கொடுத்துவிட்டதாக அவரையும், அவரது அரசாங்கத்தையும், கடுமையாக விமர்சித்து, அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை ஆழ ஊடுருவும் படையணிகளாக செயற்பட்டு பகிரங்கப்படுத்துமளவிற்கு ஜே.வி.பி. ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் வெறுப்புக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தால் இந்த நாட்டில் அழிப்பதற்கு இனி எதுவும் எஞ்சியில்லை என ஜே.வி.பி. யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான அநுர குமார திஸாநாயக்க `தினக்குரல்' க்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது, "2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது நாம் ஆதரவளிக்க ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்‌ஷ என்ற இரு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இதில் இருவரும் கெட்டவர்கள் தான். ஒருவர் பெரிய கெட்டவன். மற்றையவர் சிறிய கெட்டவன். எனவே, அப்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஏற்படும் அழிவை முடிந்தளவு குறைத்துக் கொள்ள சிறிய கெட்டவனை தேர்ந்தெடுத்தோம். அவர் இன்று பெரியாளாகி விட்டார் எனவும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. அந்த பேட்டியில் பகிரங்கமாகவே ஜனாதிபதியை சாடியிருந்தார்.

ஐ.தே.க.வை எடுத்துக் கொண்டால், அக் கட்சிக்கும், ஆளுந்தரப்பின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கடந்த வருடம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி செயற்படுவதற்காகவென கூறியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும், ஒப்பந்தம் கைச்சாத்தான சில நாட்களிலேயே ஐ.தே.க. விலிருந்து 18 உறுப்பினர்கள் அரசு பக்கம் இழுக்கப்பட்டதால், ஐ.தே.க. ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது. அன்று, தொடக்கம் அக்கட்சி அரசாங்கம் குறித்தும், ஜனாதிபதி மற்றும் அவரது, சகோதரர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. இதன் விளைவாக, அரசாங்கத்துக்கு "ராஜபக்‌ஷ சகோதரர்கள் கம்பனி" என்ற பெயரைக் கூட ஐ.தே.க. சூட்டியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்துக்கு எதிரான இன்னுமொரு அணியாக புதிதாக இணைந்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னின்று உழைத்த இவ்விருவரும் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஏற்பட்ட உட்பூசல்கள் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதன் பின்னர் ஸ்ரீபதி சூரியாராச்சி கைது, போன்ற பல முடக்கல் நடவடிக்கைகளின் பின்னர் இருவரும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினராக எதிர்த்தரப்பில் இணைந்துள்ளதுடன், அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் பற்றி பல விடயங்களை அம்பலப்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்.

இவ்வாறு எதிர்த்தரப்பிலுள்ள தெற்கு கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தை நம்பி ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் அரசாங்கத்துடன் ஒப்பந்தமெதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், எப்போதுமே ஒரே நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு காலமும் எதிர்த்தரப்பு கட்சிகள் குறிப்பாக தெற்கிலுள்ள அரசியல் கட்சிகள், பாரிய அமைச்சரவை, ஊழல், மோசடிகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் என பல விடயங்களை வைத்து, அரசாங்கத்தை விமர்சித்து வந்தன. அத்துடன், இலங்கையில் யுத்தமும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகள் குறித்து ஐ.தே.க.வும் அரசாங்கம் ஏதாவது சமாதான பேச்சுகள் பற்றி செயற்பட்டால் ஜே.வி.பி.யும் விமர்சித்து எதிராக செயற்பட்டு வந்தன. ஜாதிக ஹெல உறுமயவினர் சமாதான பேச்சுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தப்போதும், தற்போது அரசில் அங்கம் வகிப்பதால் அவர்கள் இதுபற்றி எதுவும் வாய் திறப்பதில்லை.

தொப்பிகலை பகுதியை கைப்பற்றியதன் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், படையினர் பெற்றதாக கூறப்படும் வெற்றியை பாராட்டி வாழ்த்த வேண்டிய நிலைமைக்கும் அதேநேரம், அரசாங்கத்தை எப்படியாவது விமர்சித்தே தீர வேண்டுமென்ற சூழ்நிலைக்கும் இந்த எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன என்பது அவர்களின் கருத்துகளிலிருந்தே புலப்படுகின்றன. இதன்மூலம் அரசாங்கத்துக்கு சார்பான ஆதரவு சொற்பமேனும் அதிகரித்து விடக்கூடாது என்ற ஆதங்கம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பொதிந்து கிடப்பதாகவே தோன்றுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே சாதாரண மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துமென்ற போதிலும், அரசாங்கத்தின் இந்த யுத்த வெற்றியானது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை மாயையாக மறைத்துவிடக்கூடுமென எதிர்க்கட்சிகள் அவதானமாக செயற்படுவதாகவே தெரிகிறது.

ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் ஆட்சி மாற்றமொன்றை விரும்பி நிற்கும் எதிர்க்கட்சிகள், கிழக்கு மாகாண யுத்த வெற்றி மூலம் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து விடக்கூடாது என்பதிலும், அரசாங்கத்துக்கு ஆதரவான சொல்லொன்று தங்களது வாயிலிருந்து வந்து விடக்கூடாது என்பதிலும் மிகவும் அவதானமாக செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

நாட்டு மக்கள் விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் போது, அரசாங்கம் தொப்பிகல வெற்றியெனக் கூறி மக்களின் பணத்தை செலவு செய்து, விழா எடுக்கவுள்ளதாக, காலியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. ஆட்சியின் போதும், சிரேஷ்ட அதிரடிப் படையினர் மூலம் தொப்பிகலையை பிடித்திருந்ததாகவும், அது பின்னர் புலிகள் வசமாகியதாகவும் ரணில் விக்கிரமசிங்க அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொப்பிகல படை நடவடிக்கை தொடர்பாக ஐ.தே.க. வினர் இவ்வாறான விமர்சனங்களை மேற்கொண்டதுடன், அரசின் தொப்பிகல வெற்றி ஊடகங்களில் மட்டுமேயெனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியேயும் விமர்சித்து வந்தனர்.

தொப்பிகலையை படையினர் முழுமையாக கைப்பற்றி விட்டதாக அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்ததையடுத்து, படையினர் பெற்ற வெற்றியின் மூலம் அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல விமர்சித்துள்ளார்.

தொப்பிகலயை கைப்பற்ற பாடுபட்ட முப்படையினருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதேநேரம், நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவையும், ஊழல் மோசடிகளையும் மக்களிடம் மறைக்க அரசாங்கம் இந்த வெற்றியை பயன்படுத்திக்கொள்ள எடுக்கும் அரசியல் முயற்சியை ஐ.தே.க. வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரான விமல் வீரவன்ச எம்.பி.யும், படையினர் பெற்ற தொப்பிகலை வெற்றியை பாராட்டியுள்ளதுடன், படையினர் வெற்றிவாகை சூடியிருக்கும் தறுவாயில் நோர்வே தூதுவர் ஹன்சன் பிரட்ஸ்கரை கிளிநொச்சி சென்று புலிகளை சந்திக்க அரசாங்கம் ஏன் இடமளிக்க வேண்டுமெனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

நோர்வே தூதுவர் இலங்கையிலிருந்து விலகிச் செல்லவுள்ள நிலையில், புலிகளுடனான பிரியாவிடை சந்திப்புக்கென கிளிநொச்சி சென்றிருந்தமை ஒருபுறமிருக்க, ஏற்கனவே, படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்றபோது, அவை சமாதான நடவடிக்கைகள் என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளதுடன், அரசாங்கம் இவ்வாறான நாடகங்களை நிறுத்த வேண்டு மெனவும் சாடியுள்ளார்.

புதிய எதிரணியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும், தொப்பிகலையில் படையினர் பெற்ற வெற்றிகளை பாராட்டி வாழ்த்தியுள்ளதுடன், அப்பகுதியை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள எந்தத் திட்டமுமின்றி அரசாங்கம் இந்த படை நடவடிக்கையை முன்னெடுத்திருக்குமெனில் அது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட படையினருக்கு செய்யும் அவமதிப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொப்பிகலையைத் தொடர்ந்தும் தக்கவைக்க 10 ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான படையினர் தேவையெனவும், அதற்கான படையினரை அரசாங்கம் எங்கிருந்து திரட்டப் போகிறதெனவும் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மோதலொன்றில் வெற்றிபெற்று முழு யுத்தத்திலும் வெற்றிபெற முடியாமல் போன உதாரணங்கள் பல உலகத்தில் இருப்பதாகவும், எனவே படையினரின் வெற்றிகளுக்காக சந்தோஷப்படும் அதேநேரம், அரசியல்வாதிகளினதும் தனிநபர்களினதும் தேவைகளுக்காக மோதல்கள் முன்னெடுக்கப்படுவதை கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்

இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது, எதிர்க்கட்சிகள், தொப்பிகல வெற்றியின் மூலம் அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் புள்ளிகள் அதிகரித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது புலனாகிறது. அரசாங்கத்தின் கீழேயே முப்படைகளும், பொலிஸாரும் இருக்கின்ற போதிலும், படையினர் பாராட்டப்படுகின்ற போதிலும், அரசாங்கம் தனித்து, விமர்சிக்கப்படுவதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அரசாங்கத்தின் இந்த வெற்றிக்காக அதை பாராட்டி விட்டால், இதுவரை தாங்கள் செய்து வந்த விமர்சனங்களை மக்கள் பொய்யென கருதக் கூடுமெனவும், அரசாங்கத்துக்கெதிரான ஆதரவை மீண்டும் கட்டியெழுப்புவது, கடினமான பணியாக அமைந்து விடுமெனவும் எதிர்க்கட்சிகள் எண்ணுவதாகவே தோன்றுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது சகோதரர்களின் பிடியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமென்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது.

தங்களது கட்சியிலிருந்து அரசுடன் இணைந்துகொண்ட 18 உறுப்பினர்களுக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய ஜனாதிபதிக்கும் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஐ.தே.க.வுக்கு இருப்பதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெறுவதற்கு உழைத்திருந்த போதிலும் இறுதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும், பழிதீர்த்துக் கொள்ளவேண்டிய தேவைப்பாடு ஜே.வி.பி., மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருக்கும் இருப்பதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு சொல்லையாவது வெளியிட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

இருப்பினும், தொப்பிகலையை கைப்பற்றியதன் மூலம் விடுதலைப்புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிவிட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் உண்மையான கள நிலைவரம் என்னவென்பது, களத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெளிவு.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகல கைப்பற்றலும் கிழக்கின் எதிர்காலமும்

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத் தரப்பலிருந்து எடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எனப்படும் நாடுகளும் இந்தியாவும் பார்த்து ரசித்து வந்துள்ளன. அதில் தமக்கு ஏதாவது நன்மைகள் , நலன்கள் கிடைக்குமா என்பதையிட்டு அவை அக்கறையாக இருந்தனவே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரியவாறு உதவவோ, ஆலோசனை வழங்கவோ அன்றி நடவடிக்கைகள் எடுக்கவோ அவை முன்வரவில்லை

இந்த வாரம் நடுப்பகுதியில் கிழக்கின் தொப்பிகல பிரதேசத்தை இலங்கை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக அறிவித்துக் கொண்டது. புலிகள் இயக்கமும் தாம் பின்வாங்கியிருப்பதாகக் கூறியுள்ளது. தொப்பிகலவைக் கைப்பற்றியதன் மூலம் முழு கிழக்கு மாகாணத்தையும் தாம் மீட்டெடுத்து இருப்பதாக அரசாங்கம் முரசறைந்து நிற்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாவிலாறு நோக்கி ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை முழுக் கிழக்கையும் புலிகள் இயக்கத்திடமிருந்து கைப்பற்றும் நோக்குடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இராணுவமும் அரசாங்கமும் பிரகடனம் செய்துள்ளன. இராணுவ ரீதியில் பெற்றுள்ள இவ் வெற்றியைக் கொண்டாட அரசாங்கம் தயாராகியும் வருகின்றது.

அரசாங்கமும் ஜனாதிபதியும் கூறிவரும் இந்த இராணுவ வெற்றி உண்மையான ஒரு வெற்றியாக இருக்க முடியுமா? இதற்குப் பதிலாக ஒரு நியாயமான தீர்வின் அடிப்படையில் புலிகள் இயக்கமும் ஏனைய தமிழ் அமைப்புகளும் சமாதானத்தை விரும்பும் சக்திகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் வெற்றி நிலைநாட்டப்பட்டிருந்தால் அது விழா எடுக்க வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கும். அதை விடுத்து இராணுவ வெற்றிக்காக குதூகலிப்பது அரசியல் நோக்கங்களுக்கு வலுச் சேர்ப்பதற்கும் யுத்தத்திற்குக் காரணமான இனப்பிரச்சினையைத் திசை திருப்புவதற்குமேயாகும். அத்துடன், எத்தகைய இராணுவ வெற்றியும் நிரந்தரமான ஒன்றாக அமைய முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். கைப்பற்றலும் வெற்றியும் பின் வாங்கலும் தோல்வியும் இராணுவ ரீதியில் மாறி வரக் கூடியவைகளாகும். கடந்த கால் நூற்றாண்டுகால யுத்தத்தில் இவற்றின் மாறும் போக்குகளைக் காண முடிந்திருக்கிறது. நாம் அக்கறைப்படவும் அவதானிக்கவும் வேண்டிய விடயம் யாதெனில் இத்தகைய இராணுவ வெற்றிகளால் யுத்தத்திற்குக் காரணமான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா என்பதேயாகும்.

இத்தகைய யுத்த வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவர மாட்டாது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், தொப்பிகல வெற்றிக்கு வாழ்த்துக் கூறி நிற்கும் ஜனாதிபதி இதேபாதையில் வடக்கையும் வெற்றிகொள்ளப் போவதாகப் போர்ச் சங்கு ஊதி நிற்கிறார். அதனுடைய அர்த்தம் யுத்தத்தின் மூலமான இராணுவத் தீர்வே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியும் என்பதாகும். இப்போதெல்லாம் தேசிய இனப்பிரச்சினை பற்றியோ அதன் காரணமான யுத்தம் என்பது பற்றியோ அரசாங்கமும் ஜனாதிபதியும் அவர்கள் சார்பான ஊடகங்களும் குறிப்பிட்டுக் கொள்வதில்லை. பயங்கரவாதம் என்பது பற்றியே உரத்துப் பேசுகிறார்கள். ஏனெனில், அதுவே வசதியானதும் வாய்ப்பானதுமாகும். உள்நாட்டில் எழுந்து நிற்கும் பிரச்சினைகளுக்கு மறைப்புக் கட்டவும் சர்வதேச அரங்கில் தேசிய இனப் பிரச்சினையை மூடி மறைக்கவும் பயங்கரவாதம் நல்லதோர் கவசமாகும்.

அதனாலேயே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத் தரப்பிலிருந்து எடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எனப்படும் நாடுகளும் இந்தியாவும் பார்த்து ரசித்து வந்துள்ளன. அதில் தமக்கு ஏதாவது நன்மைகள், நலன்கள் கிடைக்குமா என்பதையிட்டு அவை அக்கறையாக இருந்தனவே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரியவாறு உதவவோ அன்றி ஆலோசனை வழங்கவோ அன்றி நடவடிக்கைகள் எடுக்கவோ அவை முன்வரவில்லை. பதிலுக்கு யுத்தம் உக்கிரமடையக் கூடிய வழிவகைகளைக் காட்டி ஆயுத விற்பனையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகரிக்கவே முன்னின்று வந்தன.

இதன் காரணமாகவே கிழக்கை அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை சர்வதேச சமூகமும் இந்தியாவும் தமது மௌன அங்கீகாரம் மூலம் ஆதரித்து நின்றன. இதனை இப்போதும் விளங்கிக் கொள்ள மறுக்கும் தமிழ்த் தலைமை எனப்படுவோர் அமெரிக்காவையும் இந்தியாவையும் தங்கள் உரிமைகளுக்கான நண்பர்களாகவும் அதற்கும் அப்பால் இரட்சகர்களாகவும் வரித்து நிற்பதுதான் விசனத்திற்குரியதாகும். மனிதாபிமான நடவடிக்கைகள் என்றும் மனித உரிமை மீறல்கள் என்றும் சலசலப்புக் காட்டுவது அவர்களின் சொந்த தேவைகளுக்கே அன்றி நமது நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்து சமாதானமும் சுபிட்சமும் வர வேண்டும் என்பதற்காக அல்ல. இதனை இந்நாட்டின் அனைத்து மக்களும் தூரநோக்கில் உணர்ந்து கொள்ளாதவரை மீட்சி என்பது கிடைக்கப் போவதில்லை.

மேலும், கிழக்கைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி வெற்றி விழாவாக முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கம் தான் எதிர்நோக்கி நிற்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறது. மக்கள் அணுகமுடியாத அளவிற்கு வேகமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியவில்லை.

ஊழல், மோசடி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பன தலைவிரித்தாடுகின்றன. அவற்றில் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருப்போரின் கைகள் தாராளமாக இருந்து வருகின்றன. அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் அடிக்கடி பேசப்படுகின்றது. பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றன. ஏற்கனவே பாராளுமன்றக் குழு `கோப்' ஆராய்ந்து முன்வைத்த விடயங்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏனையவற்றுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழு எதையும் சாதிக்கப் போவதில்லை. அதேபோன்றே மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுக்களும் இழுபட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் சமாளிக்கவும் திசை திருப்பவும் `பயங்கரவாதம்' என்பது மிகவும் கவர்ச்சிக்கு உரியதாக மக்கள் முன்காட்டப் படுகின்றது.

மேலும், தொப்பிகல கைப்பற்றப்பட்ட இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக கிழக்கில் அரசியல் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதியும் அரசாங்கமும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டன. புலிகள் இயக்கத்திற்குள் உருவாக்கப்பட்ட பிளவும் வடக்கு, கிழக்கு என்ற பிரதேசவாத எண்ணங்களும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பலவீனப்படுத்தல்களுக்கும் கிழக்கு களமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது இரகசியமல்ல. இதனை உறுதிப்படுத்தவும் பேரினவாத செயற்றிட்டங்களைக் கச்சிதமாக முன்னெடுக்கவுமே கிழக்கில் தேர்தலை நடத்தவும் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் எதிர்காலம் சுபிட்சமடையும் எனக் கூறப்படுவது எவ்வகையிலும் நம்பகத்திற்குரியதல்ல. கடந்த காலங்களில் பேரினவாதத்தின் துரித செயற்பாடுகளில் குறிவைக்கப்பட்ட பிரதேசமாக இருந்து வந்ததே கிழக்கு மாகாணம் என்பதை எல்லோரும் நன்கு அறிவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நில-நீர் அபகரிப்புகளும் இனவன்முறை மூலம் பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் சிதைக்கப்பட்டமையும் நடந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களாகும். அவ்வாறே அண்மைக் காலங்களில் கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது கிராமங்களுக்கும் நடந்தேறி வருகின்றன.

இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் இருந்தே கிழக்கின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகள், இராணுவ நகர்வுகளால் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாவற்றையும் இழந்த எதுவுமற்ற ஏதிலிகளாக மாற்றப்பட்டு விட்டனர்.

மீளக்குடியமர்வு, புனரமைப்பு, புனர்வாழ்வு என்பதெல்லாம் வெறும் வாயுரைப்புகளில் தான் இருந்து வருகின்றது. அதற்கும் மேலாக அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆங்காங்கு கிள்ளித் தெளிக்கும் உதவிகளில் இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து வருகின்றன. அத்தகைய உதவிகளால் இழந்த வீடுகளை மீளமைக்கவோ, தொழில்களுக்கு மீளவோ முடியாத நிலையில் தான் மக்கள் இருந்து வருகின்றனர்.

இயல்பாகவே வடக்குடன் ஒப்பிடும் போது கிழக்கின் மக்கள் பொருளாதார, சமூக ,கல்வித் துறைகளில் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் விவசாயிகளும் மீனவர்களுமாவர். அவர்கள் தமிழர்கள், முஸ்லிம் என்ற அடையாளங்களுக்குள் வாழ்ந்த போதிலும், வர்க்க ரீதியில் பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் சுரண்டப்பட்டு வருபவர்களாகவே உள்ளனர். அத்தகைய மக்கள் தான் பேரினவாத ஒடுக்கு முறையிலும் பாதிக்கப்பட்டு அல்லற்படும் மக்களாகவும் உள்ளனர். அத்தகைய கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் காட்டும் தேர்தலும் நிர்வாகச் செயல் முறைகளும் விமோசனமாக மாட்டாது என்பது மட்டும் உண்மையானதாகும்.

பேரினவாத ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் ஒடுக்கப்படும் எந்தவொரு தேசிய இனமும் விமோசனத்தையோ, சுபிட்சத்தையோ பெற முடியாது. அதற்குப் பதிலாக சிலவகைச் சலுகைகளை அனுபவிக்கும் அரசியல் பிரதிநிதிகள் ஏதாவது நன்மைகளையும் இலாபங்களையும் அடைய முடியுமே தவிர மக்களுக்கு வெறும் எலும்புத் துண்டுகள் மட்டுமே சென்றடையக் கூடியனவாகும்.

அரசாங்கம் கூறும் கிழக்கின் தேர்தலாலும் ஜனநாயக நடைமுறைகள் எனப்படுவனவற்றாலும் இராணுவ செயற்பாடுகளில் இருந்து மக்கள் விடுபடப் போவதில்லை. மூதூர் கிழக்கு சம்பூர் அதி உயர் பாதுகாப்பு வலயம், பொருளாதார வர்த்தக வலயம் என்பன கைவிடப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படப் போவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவும் விரிசலும் மேன்மேலும் பேரினவாதத்தால் கிழக்கில் தூண்டப்படும்! அத்துடன் சிங்கள மக்களுடனான கசப்புணர்வுகளுக்கும் இன வக்கிரங்களுக்குமான பேரினவாத எண்ணெய் வார்ப்பு மேலும் கிழக்கில் அதிகரிக்கவே செய்யும். இத்தகைய நிலை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள சாதாரண மக்களுக்கும் சாதகமான ஒன்றல்ல. முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே சாதகமானதும் வாய்ப்பானதுமாகும்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.