Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் அவுஸ்திரேலிய பிரதமரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் அவுஸ்திரேலிய பிரதமரும்

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது ஒருபோதுமே முடிவுறப்போவதில்லை எனவும் பல தசாப்த காலங்களுக்கு அது நீண்டு செல்லும் என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹோவார்ட் தனது நாட்டு மக்களை எச்சரித்திருப்பதுடன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்வதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எல்லைகளற்ற இந்த அச்சுறுத்தலின் யதார்த்த நிலை தொடர்பாக விழித்தெழுமாறு தனது நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். தங்களின் வாழ்க்கை முறை மீது இஸ்லாமிய அடிப்படை வாதம் வெறுப்புணர்வைக் கக்குவதாக சாடியுள்ளதுடன் மத சுதந்திரத்தை இந்த அடிப்படைவாதம் அழித்து நாசமாக்குவதுடன் நின்றுவிடாது தாங்கள் மிகுந்த பற்றுறுதியுடன் கைக்கொள்ளும் வாழ்க்கையோட்டத்தை சிதைத்து நாசப்படுத்துவதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமரிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரிட்டனில் பயங்கரவாத சதி முயற்சியில் இந்திய மருத்துவரான முகமட் ஹனீவ் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியப் பிரதமரிடமிருந்து இந்தக் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. ஆனால், செப்டெம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென அமெரிக்கா பிரகடனப்படுத்தி உலக நாடுகளை சாம, பேத, தான, தண்டத்தைப் பயன்படுத்தி தனது அடிவருடிகளாக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றது என்பது புதிய விடயமல்ல. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் (அவுஸ்திரேலியா உள்ளடங்கலாக) நடத்திவரும் காட்டுத்தர்பாரினால் தினமும் பல நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன் உடைமைகள், சொத்தழிப்புகள், கலாசார சீரழிவுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென்ற போர்வையில் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் வலுக்குறைந்த நாடுகளை சூறையாடுவது ஒருபுறமிருக்க, இதே போர்வையை இதர பல வறிய நாடுகளும் போர்த்திக் கொண்டு சுய நிர்ணய உரிமை கோரி போராடும் இனக் குழுக்களை குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியொடுக்கி அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

`பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம்' என்ற அமெரிக்காவின் சுலோகத்தை தாரக மந்திரமாக உச்சாடனம் செய்துகொண்டு தமது ஆட்சிக் கதிரையை தக்க வைக்கவும் அதிகாரத்தை நீடிக்கவுமே பெரும்பாலான அரசாங்கங்களின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் விரும்புகின்றன என்பதே இன்றைய யதார்த்த நிலைமை.

இதன் ஒரு அங்கமாகவே அவுஸ்திரேலியப் பிரதமரின் கருத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவுறாது என்று கூறிக்கொண்டு அதற்காக பொது மக்கள் உடல், பொருள், உயிரைத் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் என்ற அழைப்புகளே இன்று ஆட்சியாளர்களிடம் மலிந்து கிடக்கின்றது.

அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தமது இருப்புக்காக போராடும் மக்களை மத அடிப்படைவாதம், இனவாதம் மற்றும் இன்னோரன்ன புதுப்புது வாதங்களை, தோற்றுவித்துக்கொண்டு தமது அதிகாரத்தை பலப்படுத்தவும் பொருளாதார நோக்கங்களை தடையின்றி நிறைவேற்றவும் ஆட்சித் தலைவர்கள் முயன்று கொண்டிருக்கும் வரை அவுஸ்திரேலியப் பிரதமர் கூறும் `பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' முடிவுறாது. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் ஆபத்துப் பற்றி எச்சரிக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் தனது சொந்த நாட்டிலுள்ள பழங்குடியினருக்கான உரிமைகள் உரிய முறையில் வழங்கப்பட்டிருக்கின்றதா என்பது பற்றியும் அவர்கள் அந்நாட்டுப் பொது ஓட்டத்தில் கலந்துள்ளார்களா என்பது குறித்தும் சிந்திப்பது சிறப்பானதும் அவசியமானதுமாகும். இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி விழிப்புணர்வு வேண்டுமென அவுஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தும் பிரதமர் ஹோவார்ட், `ஆக்கிரமிப்பு வாதத்தினால் தான் ஆட்சி செய்யும் மண்ணிலுள்ள பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் காலாதி காலமாக அங்கு அடிமை வாழ்வை நடத்தி வரும் வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்க்க மறந்து விட்டார் போலும்.

அத்துடன் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றாக விளங்கும் அரச பயங்கரவாதத்தின் கொடூரத்தை உலகின் பல பகுதிகளிலுமுள்ள இனக் குழுக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.`பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்ற போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு, `அரச பயங்கரவாதம்' காட்டாட்சி செய்வதையும் நாடுகளி`அலுள்ள நலிந்த சமூகங்கள் சகித்துக் கொண்டு அவல வாழ்வைத் தொடர்வதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.