Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க, இந்திய நலன்கள்- 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, இந்திய நலன்கள்- 13 ஐ கோரும் தமிழ்க் கட்சிகள்

- 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கைக்காகவே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம்கூட எழுகின்றன.  அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கை விவகாரத்தை முழுமையாக வெளியில் அகற்றும் ஏற்பாடாகவுமே 13 பற்றிய கோரிக்கையும் கட்சிகளின் கலந்துரையாடலும் என்ற கருத்துக்களும் தற்போது வலுவடைந்து வருகின்றன–

-அ.நிக்ஸன்-

பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய இலங்கை அரசுகளிடம் கோரவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் எனப்படும் ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அதன் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம், தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

13 ஆவது திருத்தச் சட்டம் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தபோதும், அதனை அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் சிங்களத் தலைவர்கள் எவருமே உரிய முறையில் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. மாறாக அதில் இருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களைக் கொழும்பு கையாண்டு வருகின்றது.

13 ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்தரத் தீர்வல்ல என்று அமிர்தலிங்கம் தலைமையிலான அன்றையை தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட பல தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதுவும், 2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் சென்றுவிட்டதொரு சூழலில் மீண்டும் 13 பற்றிப் பேசப்படுவது வேடிக்கையெனக் கடந்த சில வாரங்கள் தொடர்ச்சியாக  விமர்சிக்கப்பட்டுமிருந்தது.

அதுவும் குட்டிமணி. தங்கத்துரை போன்ற மாவீர்களைக் கொண்ட செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும்கூட.

அழைப்பு விடுத்த நாள் முதல் கூட்டத்தில் பங்குகொள்வதில்லை எனவும், 13 ஐ அரசியல் தீர்வுக்கான அடிப்படையாகக்கூடக் கருத முடியாதெனவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால், இன்றைய கூட்டத்தில் அவருடைய கட்சியின் சார்பில் பேராசிரியர் சிவநாதன் கலந்துகொண்டாா். 13 ஐ தீர்வாக ஏற்க முடியாதெனத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியதாக பேராசிரியர் சிவநாதன் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஆனால் அது தொடர்பாக பேராசிரியர் சிவநாதன் ஊடகங்களுக்குப் பகிரங்கமாக இதுவரை கருத்து வெளியிடவில்லை.

அதேவேளை, விக்னேஸ்வரனின் கட்சியில் கூட்டாக இணைந்திருக்கும் அனந்தி சசிதரனின் சுயாட்சிக் கழககத்துக்கு விடுக்கப்படவில்லை. அதனால் அனந்தி சசிதரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

13ஐ ஆரம்ப முயற்சியாக எடுத்தக் கொள்ளலாமென முதலில் கூறியிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் 13 தீர்வு அல்ல என்றும் அதனை இந்தியாவிடம் கோருவதில் பயனில்லை எனவும் சூம் கலந்துரையாடலில் பகிரங்கமாகச் சொல்லியிருந்தார்.

spacer.png

அத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படவுமில்லை. ஆனால் சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் எஸ் சிறிகாந்தா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சி அரசைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஏற்ப அமெரிக்க இந்திய நிகழ்ச்சி நிரல்கள் வேகமாக நகர்ந்து வரும் நிலையில், அதற்குரியதான நடவடிக்கைகளில் தமிழ்த்தேசியம் என்று மார் தட்டும் மேற்படி கட்சிகள் இந்தக் கூட்டத்தை நடத்தியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏனெனில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இந்தக் கட்சிகளின் ஆதரவும் தேவை.

ஆகவேதான் இதன் பின்புலத்தில் அமெரிக்க இந்திய நகர்வுகள் இருக்கலாமென்ற சந்தேகம் எழுகின்றது. 13 தீர்வு அல்ல என விக்னேஸ்வரன் கூறினாலும், இந்தக் கூட்டத்தில் அவருடைய பிரதிநிதி பங்குபற்றியதன் மூலம் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு ஒத்துப்போதல் என்ற செய்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற முடிவுக்கும் வரலாம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள் சொல்லும் செய்தியும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது போலும்.

வடக்குக் கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதின்மூன்று பேரில் தற்போது நான்கு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியதாக் கருத முடியும். அதாவது  ரெலோவின் மூன்று உறுப்பினர்களும் விக்னேஸ்வரனையும் சேர்த்தே நான்கு உறுப்பினர்களெனக் கருத முடியும்.

ஆகவே 13 தீர்வு என்பதற்குத் தமிழ்த்தேசியம் பேசிய இந்த நான்கு உறுப்பினர்களும் ஆதரவு என்ற செய்தி அமெரிக்க இந்திய அரசுகளுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக ஏனைய உறுப்பினர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது.

தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்திருந்தாலும், தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.சிறிதரன் 13 தீர்வு அல்ல என்றும் அதனை ஏற்க முடியாதெனவும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இருந்தாலும் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியின் தீர்மானமும் இதற்குச் சாதமாக மாறக்கூடிய ஏது நிலை வரலாம்.

அதேவேளை. யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணண் 13க்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கிறார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒற்றையாட்சிக்குள் இருக்கும் 13 தீர்வு அல்ல என வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் கஸ்வர்த்தன ஸரிங்லா வந்தபோது யாழ்ப்பாணத்தில் உள்ள துணை இந்தியத் தூதரகத்தில் நடந்த சந்திப்பிலேயே கஜேந்திரகுமார் அவ்வாறு கூறியிருந்தார்.

ஆனாலும் ராஜபக்சக்களின் ஆட்சியில் அதுவும் பதினொரு ஆண்டுகளின் பின்னரான சூழலில் அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13 ஐ எடுத்தக் கொள்ள வேண்டுமென்ற அமெரிக்க- இந்திய நிகழ்ச்சி நிரல்கள் குறித்துப் பகிரங்கமான முறையில் மக்களிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எடுத்துக் கூறவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

இன அழிப்பு என்பதை முதன்மையாகக் கோரி வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிதான் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வு என்பதை ஒருமித்த குரலில் கோர முடியாத தமிழ்த்தேசியக் கட்சிகள், இந்திய மற்றும் மேற்குலக சக்திகளின் தேவைக்கு ஏற்ப இயங்குகின்றன என்பதே 13 பற்றிய இந்தக் கூட்டத்தின் வெளிப்பாடு.

இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் கூர்மைச் செய்தித் தளத்துக்குக் கருத்து வெளியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எந்தளவு அதிகாரங்களோடு இருந்ததோ அதேமாதிரியான அமைப்போடு 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டுமென முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

குறிப்பாகக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மீளவும் வழங்ககப்பட வேண்டுமெனவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்ப்பட்டதுடன், ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியைக் கூட்டத்தில் நிராகரித்தாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அதேவேளை. 13 ஐ நிராகரிக்கவில்லையெனவும் ஆனால் சமஸ்டி ஆட்சி முறைதான் தீர்வு என்றும் பேராசிரியர் சிவநாதன் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் 1987 ஆம் ஆண்டில் 13 இருந்தது போன்ற நிலைமையை ஏற்படுத்த இணக்கம் வெளியிட்டிருக்கின்றனர்.

கூட்டத்தின் முடிவுகள் தொடர்பாக ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளோடு பேசி முடிவெடுத்த பின்னரே இந்திய இலங்கை அரசுகளுக்கு அறிவிப்பதென சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மை செய்தி இணையத்தளத்துக்குக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்தரத் தீர்வுக்கு ஏற்ற முறையில் 13 ஐ இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கள் நடைமுறைப்படுத்த முடியாது என்றே அரசியல் ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

அரைகுறையாகவுள்ள 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கைக்காகவே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம்கூட எழுகின்றன. அதற்காகவே செயலணியில் தமிழ் பிரதிநிதிகள்கூட நியமிக்கப்படவுமில்லை என்ற கருத்தும் வலுக்கின்றது.

அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கை விவகாரத்தை முழுமையாக வெளியில் அகற்றும் ஏற்பாடாகவுமே இந்தப் 13 பற்றிய கோரிக்கையும் அதற்கான இந்தக் கட்சிகளின் கலந்துரையாடலும் என்ற கருத்துக்களும் தற்போது வலுவடைந்து வருகின்றன.

 

http://www.samakalam.com/அமெரிக்க-இந்திய-நலன்கள்-13/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.