Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

“ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

“ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் – 01

கா‘ 

 

 

* இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகக் கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வழிகளிலும் தனித்துவமான சமூக- பொருளாதார- கலை-இலக்கிய- சமய-பண்பாட்டுக் கூறுகளை ‘மட்டக்களப்பு மாநிலம்’ கொண்டிருக்கிறது. 

* அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். 

* இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்படுவது கிழக்கு மாகாணத்தில் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கேஊவாமலைக்   குன்றுகளையும் எல்லைகளாகக்கொண்ட நிலப்பரப்பாகும். 

* மட்டக்களப்பு மண் வாசனைச் சொற்கள் எனும்போது முதலில் வருவது மட்டக்களப்புமாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ‘கா’ எனும் அசைச்சொல்லாகும். இந்தக் ‘கா’ எனும் அசைச்சொல் தமிழுலகில் வழக்கொழிந்து போனதும் தொல்காப்பியர் காலத்துமான அசைநிலை இடைச் சொற் பிரயோகம் என்று அமரபண்டிதர் வி.சீ.கந்தையா அவர்கள் தான் எழுதிய ‘மட்டக்களப்புத் தமிழகம்’ (1964) எனும் நூலில் பெருமையோடு பதிவு செய்கிறார். 

யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக்கிளவி”  

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தினால் சுட்டப்படும் ஏழு அசைச் சொற்களில் ‘கா’ வும் ஒன்று. மட்டுமல்லாமல், நன்னூலாசிரியர் காலத்தில் ‘கா’ என்பது உயர்ந்தோர் வழக்காக அழைக்கப்பட்டதைநன்னூலில் காணலாமென்கிறார். இவ்வழக்கு பின்பு காலவோட்டத்தில் அருகி மறைந்து போயிற்றுஎனலாம். 

தற்காலத்தில் நெருக்கமான உரித்துக்காரரைப் பெரும்பாலும் பெண்கள் பெண்களை விளிக்கும் போது இந்தக் ‘கா’ போட்டு அழைப்பார்கள். வாகா, போகா, இரிகா, சாப்பிடுகா என்று அன்போடும்- உரித்தோடும் கூறுவர். ஆனால் ஆண்பெண் பால் வேறுபாடுகளின்றியும் இக் ‘கா’ பாவனையிலுண்டு. கணவன் மனைவியரும் தங்களுக்குள்ளே இக் ‘கா’ போட்டும் விளிப்பர். ‘கா’ என்ற இவ்வசைச்சொல் பேச்சு வழக்கில் மட்டுமல்ல கவிஞர்களின் எழுத்திலும் ஏறி இலக்கிய அந்தஸ்தையும் பெற்றதொன்றாகும். உதாரணத்திற்கு, அமர் கவிஞர் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடக்கத்தில், வயலுக்குப் போக வெளிக்கிட்ட கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவுபரிமாறிக் கொண்டிருக்கையில் கந்தப்போடி தனது மனைவியை விளித்து 

சோக்கான கறிகாதோலிச் 

சுண்டலில்வை; முன்னால் நான் 

கேட்காமல் அள்ளி வைப்பாய் 

கிழவனாய்ப் போனேன் பாரு!….” 

இங்கே கணவன்-மனைவி அன்னியோன்னியத்திற்குக் ‘கா’ அசைந்து கொடுக்கிறது. 

அதே காவியத்தில், தன் வீட்டிற்கு வந்த தன் மச்சாள் கனகம்மாவை (கந்தப்போடியின் தங்கை) 

வா மச்சாள் வாகா! உள்ளே” என வரவேற்கிறாள் பொன்னம்மா.

அதேபோல் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சியாகச் செங்கதிரோன் எழுதிய ‘விளைச்சல்’ என்னும் குறுங் காவியத்தில் மட்டக்களப்பு மாநிலக் கிராமமொன்றில் கல்யாணம் கேட்டுப்போகும் காட்சி வருகிறது. பெண் வீட்டார் சீர்வரிசைப் பொருட்களுடன் மாப்பிள்ளை வீட்டை அடைகின்றனர். அங்கே, 

வட்டாவைக் கனகம் நீட்ட 

வாகா! வா மச்சாள் என்று 

தட்டோடு பொன்னுவாங்க 

தயாராகி நின்ற மற்றக் 

கிட்டடிச் சொந்தக்காரர் 

கிரமமாய் முன்னே வந்து 

பெட்டிகள் பெற்றுப் போனார்….”  என்று வருகிறது. இங்கே பொன்னு எனும் பொன்னம்மா தனது மச்சாள் கனகம் எனும் கனகம்மாவை “வாகா! வா!” என்று வாஞ்சையோடு வரவேற்கிறாள். 

மேலும், அமரர் பண்டிதர் வி.சீ.கந்தையா தனது மேற்படி நூலில் எலுவன், எல்லா, ஏலா என்ற பண்டைய விளிப்புப் பெயர்களின் திரிபான ‘இல’ என்பதுடன் ‘கா’ என்ற அசை சேர்ந்து ‘இலக்கா’ எனும் விளிப்புப் பெயராகியும் மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களிடையே வழங்கி வருவதையும் எடுத்துக் கூறியுள்ளார்.  

மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களிலே பெண்கள் ஒருவரையொருவர் விளிக்கும்போது ‘இலக்கா’- ‘இலக்கோ’ – ‘லக்கா’ – ‘லக்கோ என அழைப்பதைக்காது குளிரக் கேட்கலாம். 

பெண்கள் பெண்களை விளிக்கும்போது மட்டுமல்ல ஆண்களை விளிக்கும்போது கூட இந்த ‘கா’ அசைச்சொல் வருவதுண்டு. அதுபோல் ஆண்கள் பெண்களை விளிக்கும்போதும் இக் ‘கா’ வருவதுண்டு. ஆண்கள் ஆண்களை விளிக்கும்போது பெரும்பாலும் வயதானவர்கள் நாவிலும் இக் ‘கா’வரும் வழக்குண்டு. மட்டக்களப்பு மாநில நாட்டுப் பாடல்களிலே இக் ‘கா’ நர்த்தனமிடுவதைப் பார்க்கலாம். 

காதலி தன் காதலனைச் – மச்சானை- சந்திக்க வருமாறு இப்படி அழைக்கிறாள். 

சந்தன மரத்த மச்சான் சந்திக்கவேணுமெண்டா 

பூவலடிக்கு மச்சான் பொழுது பட வந்துடுகா”.  (பூவல் = கிணறு) 

தனது காதலனின்- மச்சானின் அழகில் மயங்கிய காதலி மச்சானைப் பார்த்து, 

வட்ட முகமும் உண்ட வடிவிலுயர் மூக்கழகும்  

கட்டு உடலும் மச்சான் என் கருத்தழியச் செய்யுதுகா.” என்கிறாள்.  

அதேபோல் காதலன் தன் காதலியிடம், 

குஞ்சு முகமும் உண்ட கூர் விழுந்த மூக்கழகும் 

நெற்றி இளம்பிறையும் கண்ணே நித்திரையில் தோணுதுகா.” என்கிறான். 

களவொழுக்கச் சம்பவமொன்று இங்கே ஒருவரால் இன்னொருவருக்குச் சங்கேத மொழியில் அல்லது குறியீட்டுப் பாணியில் செய்தியாகச் சொல்லப்படுகிறது. 

வில்லுக்கு வந்து கொம்பன் விடியளவும் புல்லருந்திக் 

கல்லில் முதுகுரஞ்சிக் கொம்பன் காடேறிப் போகுதுகா.  

வயற்காட்டில் தங்கியிருக்கும் தன் கணவனுக்கு இங்கே ஊரில் – வீட்டில்- தன் மகள் சமைந்த செய்தியை ஆதம் காக்கா மூலம் (முஸ்லீம்கள் தமையனைக் ‘காக்கா’ வென்று அழைப்பார்கள்) சொல்லியனுப்புகிறாள் ஒரு பெண். 

ஆதங்காக்கா!ஆதங்காக்கா!                                                                                                                                                     அவரைக் கண்டாச் சொல்லிடுகா

பூவரசம் கன்னியொண்டு பூ மலர்ந்து போச்சிதெண்டு” 

குமரிப் பெண்ணொருத்தி குடத்தில் தண்ணீர் மொள்ளுவதைக் கண்ட ஒருவர் இன்னொருவருக்கு அதை எடுத்துச் சொல்வதை 

பூவலைக் கிண்டி புதுக்குடத்தக் கிட்ட வச்சு  

ஆரம் விழுந்த கிளி அள்ளுதுகா  நல்லதண்ணி 

எனும் நாட்டுப்பாடல் நவில்கிறது. 

முறை மச்சாளை விளித்து மச்சான் கூறும் கூற்று இது. 

தாலிக்கொடியே!- எண்ட 

தாய்மாமனீண்ட கண்டே 

மாமிக்கொரு மகளே – மச்சி 

மறுகுதல பண்ணாதகா”  

இங்கேயும் ‘கா’ களிநடனம் புரிகிறது. 

மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களில், 

“நெல்லுருக்குதாகா”….. என்று நெல்லு வாங்கும் பெண்கள் கூவிக் கேட்க, “இருக்குது வாகா……” என்று கொடுப்பார் கூவி அழைப்பர். நெல் இல்லையென்றால் “இல்ல கா….” என்று பதில் கொடுப்பர். 

”புள்ளலெக்கா புள்ளலெக்கா -உன்ர 

புருசனெங்க போனதுகா 

கல்லூட்டுத் திண்ணையில 

கதபழகப் போனதுகா” 

என்று நாட்டுக் கவி வழக்கில் ‘கா’ முன்னிலைக்கேற்ற அசையாகி இரு பெண்களின் கேள்வியும் பதிலுமாக அமைந்திருக்கும். 

இவ்வாறு பேச்சு வழக்கிலும் – ஏடறியா வாய்மொழி இலக்கியமான நாட்டுப் பாடல்களிலும் – எழுத்திலக்கியங்களிலும் ‘கா’ மட்டகளப்பு மாநிலத்திலே மவுசுடன் விளங்குகிறது. 

இங்கெல்லாம் அதாவது இதுவரை கூறப்பட்ட உதாரணங்களிலெல்லாம் அசைச் சொல்லாக அணிசேர்க்கும் ‘கா’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பெயர்ச் சொல்லாகவும் வரும். அது என்னவென்றுபார்ப்போம். 

‘கா’ பெயர்ச் சொல்லாக வரும் சந்தர்ப்பம் என்னவெனில், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுமந்து செல்வதற்கு, முறியாமல் நன்கு வளையக்கூடிய மரக்கம்பு ஒன்றைத் தோளின் குறுக்காக வைத்து அந்தக்கம்பின் இரு அந்தங்கங்களிலும் பொருட்களைக்கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே தமது தோளில் காவிச் செல்லும் இப் பொறியைக் ‘கா’ என அழைப்பர். ‘கா’ என்பது இப் பொறியோடு சேர்த்துக் கொண்டு செல்லப்படும் பொருட்களையும் உள்ளடக்கியதாயிற்று. கல்யாணம் கேட்டுப் போகும் போதும் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு இக் ‘கா’ கொண்டு செல்வர். இக்காவில் தயிர், வாழைக்குலை போன்ற பொருட்களெல்லாம் உள்ளடங்கும். 

முன்பு கூறப்பெற்ற “விளைச்சல்” என்னும் குறுங்காவியத்திலே பெண் வீட்டார் மாப்பிள்ளைவீட்டாருக்குக் ‘கா’ கொண்டு செல்லும் காட்சி இவ்வாறு பதிவாகியிருக்கிறது. 

” கொழுக்கட்டைப் பெட்டி பின்னால் 

குலையுடன் கோழிச்சூடன் 

முழுக்கட்டை போல வெள்ளை 

மொந்தனும் தயிரும் காவில்…”

இங்கே கோழிச்சூடன் என்பது பறங்கி வாழைப்பழமாகும். வெள்ளை மொந்தன் என்பது கறி வாழைக்காயின் இன்னொருவகை. அத்துடன் தயிரும் காவில் கொண்டு செல்லப்படுகின்றன. 

இதைத்தான் மட்டக்களப்பு மாநிலத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், 

“ஆடவர் தோளிலும் கா 

அரிவையர் நாவிலும் கா 

என்று கூறுவர். ஆடவர் தோளிலே ‘கா’ பெயர்ச் சொல்லாகவும் அரிவையர் நாவிலே ‘கா’ அசைச் சொல்லாகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறது.  

தோளிலே காவிச் செல்வதால்தான் ‘காவடி’ எனப் பெயர் வந்தது எனக் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டுமுள்ளார். கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாநிலத்தைச் சேர்ந்தவரென்பதால் ‘கா’ அவரைக் கவர்ந்திருக்கிறது. ‘கா’வை அருகிவிடாமல் அடுத்த சந்ததிக்கும் காவிச்செல்வோமாக. 

 

 

https://arangamnews.com/?p=7143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)  

  — செங்கதிரோன் —                              

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் 

சென்றதடவை மட்டக்களப்பு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மண்வாசனைச் சொல் ‘கா’ பற்றிப் பேசினோம். 

இத்தடவை வேறு பல விசேட சொற்களை எடுத்து நோக்குவோம். 

‘வட்டை’ என்பது வயலைக் குறிக்கும். வன்னிப்பிரதேசத்திலே ‘கமம்’, ‘புலம்’ என்று வழங்குவர். மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வயலைக் குறிப்பதற்கு ‘வட்டை’ என்ற சொல் வழக்கிலுள்ளது. 

‘வட்டை’ என்ற சொல் ‘வட்டம்’ என்பதிலிருந்தே வந்திருக்கவேண்டும். காட்டை வெட்டிக் கழனியாக்கும் – வயலாக்கும் செய்கையின்போது காட்டை வெட்டுவதற்கு எல்லையிடுதலைக் ‘காடுவளைதல்’ என்றே கூறுவர். இங்கே வளைதல் என்பது வட்டவடிவமாகச் சுற்றிவருதல் என வரும். ஆரம்பத்தில் வயல்கள் வட்டவடிவில் தான் அமைந்திருந்தன. பயிர்ச்செய்கைக் காலத்தில் வயலைச் சுற்றிவந்து காவல் செய்வதை’வட்டை வளைதல்’ என்றே கூறுவர். வட்டத்தில் வளைவு இருப்பதால் ‘வளைதல்’, ‘வளைத்தல்’ என வந்திருக்க வேண்டும். அதாவது’வளைதல்’ – ‘வளைத்தல்’ என்றால் வட்டமாகச் சுற்றிவருதல் – வளைவாக வருதல் என்பதாகும். ஊரில் ‘வளைச்சு வா’ என்றால் ‘சுற்றி வா’ என்று அர்த்தம்.  

மேலும் ‘வெளி’யைக் குறிக்கும் ‘வெட்டை’ என்ற சொல்லின் திரிபாக’வட்டை’யைக் கொள்வாருமுளர். 

கிராமங்களிலே நவீன கழிப்பறை – மலசலகூட வசதிகள் புழக்கத்திற்கு வர முன்னர் ஆட்கள் அனேகமாக ஆண்கள் சனநடமாட்டங்களில்லாத அல்லது சனநடமாட்டங்கள் மிகவும் அருகிக் காணப்படுகின்ற ‘வெளி’ – ‘வெட்டை’ யில்தான் தமது இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்வார்கள். அதனை ‘வெட்டைக்குப் போதல்’ என்று கூறும் வழக்கமுமிருந்தது. ‘வெளி’ யைக் குறிக்கும் இந்த ‘வெட்டை’ திரிந்துதான் ‘வட்டை’ யாகி காலவரையில் வயல்வெளியை – வயல்பரப்பைக் குறிப்பதற்கும் பாவனையாகித் தற்காலத்தில் மட்டக்களப்பு மாநிலத்தில் வயலைக் குறிப்பதற்கு ‘வட்டை’ என்ற சொல் வழக்கில் வந்துவிட்டதுபோலும். 

வயல் பிரதேசங்களிலே எழும் நீர்பாசனப் பிரச்சினைகள் – எல்லைப் பிரச்சினைகள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளைக் கையாண்டு அவற்றைச் சம்மந்தப்பட்ட ஏனைய விவசாயிகளுடனும் அரச அதிகாரிகளுடனும் தொடர்பாடித் தீர்த்துவைப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் அதிகாரம் படைத்தாராக விவசாயிகள் தங்களுக்குள்ளே ஒருவரை நியமித்துச் செயற்படுவர். அவரை ‘வட்டவிதான’ (வட்டைவிதானை) என்றே அழைப்பர். ‘வட்டயர்’ (வட்டையர்) எனவும் அழைக்கப்படுவர். 

கார்கால மழைக் குளிருக்குத் தனது காதலனின் வெதுவெதுப்பான அணைப்பை எதிர்பார்த்திருக்கும் கன்னியொருத்தியின் ஏக்கத்தை எடுத்துக்கூறும். 

இந்த மழைக்கும் இனிவாற கூதலுக்கும் – என் 

சொந்தப் புருசனெண்டா சுணங்குவாரா வட்டையில’ 

நாட்டுப்பாடலிலே வயலைக் குறித்தே’வட்டை’ (வட்டையில) வருகிறது. 

கவிஞர் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தில் வரும், 

ஊருக்குள் மேட்டுவட்டை 

உழுது கொண் டிருந்தபோது 

ஆருக்குச் சோற்றுப்பொட்டி 

அடியன்னம் என்று கேட்க….‘ 

என்றுவரும் கவிதை வரிகளிலே மேட்டு ‘வட்டை’ மேட்டுவயல் என்பதாகும். பரந்த வயல் வெளியைக் குறிக்கப் ‘போட்டா’ என்ற சொல்லுண்டு. ‘போட்டா’ என்பதன் பொருள் பெருவரவை என்பதாகும். பரந்தவெளியையும் ‘போட்டா’ என அழைப்பதுண்டு. பரந்தவெளியிலே அமைந்துள்ள குறிப்பிட்ட வயல் பிரதேசமொன்றினைப்’ போட்டா வெளிக்கண்டம்’ என்று அழைக்கும் இடப்பெயர்கள் திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவில் இருக்கின்றன. 

போட்டா வரம்பால புறா நடந்து போறது போல்‘ 

என்ற நாட்டுப்பாடல் வரிகளிலே’போட்டா’ பரந்த வயல் வெளியைக் குறிக்கிறது. 

கணத்தைதான் கனத்தை ஆகியதோ? 

‘கணத்தை’ (கணத்த) என்ற சொல்லைக் கவனிப்போம். சேனைப்பயிர்ச் செய்கைக்கென காட்டைவெட்டிக் காய்ந்தபின் எரித்து அந்த நிலத்திலே பயிர் விதைப்பர். சேனைப்பயிர்ச் செய்கை மழையை நம்பியே செய்யப்படுவதால் இப்பயிர்ச்செய்கையின் காலம் செப்டம்பரிலிருந்து அடுத்த வருடம் மார்ச் வரையிலானதாகும். அதாவது வடகீழ்பருவப்பெயரச்சிக் (North East Monsoon) காற்றுக்காலம். சேனைப்பயிர்செய்கை அறுவடை முடிந்த அந்த நிலம் அடுத்ததடவை பயிர்செய்யப்படும்வரை சும்மா விடப்படும். இப்படி சும்மா விடப்படும் காலத்தில் அந்த நிலத்தில் பற்றைக்காடுகள் எழும்பிவிடும். ஆங்கிலத்தில் இதனைச் ‘Secondry Growth Jungle’ என்பர். இதனையே மட்டக்களப்பு மாநிலத்தில்’கணத்தை’ (கணத்த) என அழைப்பர். கணத்தை என்பது சிறுபற்றைக்காட்டை குறிக்கும். சிங்களத்தில் இடுகாட்டை – மயானத்தைக் குறிப்பதற்கான ‘கணத்த’ எனும் வார்த்தையின் வேர்’கணத்தை’ என்ற தமிழ்ச் சொல்லாகவும் இருக்கலாம். இடுகாட்டில் – மயானத்தில் பற்றைகள் வளர்ந்திருக்கும்தானே. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் ஓரிடத்தில் சம்மாந்துறை ஊரிலிருந்து சென்றவர்கள்; சேனைப்பயிர் செய்துவிட்டு, அதனை விட்டுச் சென்றுவிட்டனர். அந்த இடத்தில் பற்றைக்காடுகள் முளைத்துவிட்டன. அந்த இடம் இப்போதும் ‘சம்மாந்துறையாண்ட கணத்த’ என அழைக்கப்படுகின்றது. 

‘மறுகா’ என்பதும் மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்களில் ஒன்றாகும். ‘மறுகால்’ எனவும் வழங்கும். ‘மறுகா’ என்பதன் அர்த்தம் திரும்பவும் – மீளவும் – மீண்டும் – பிறகும் ஆகும். இலங்கையின் வடபுலத்திலே ‘பேந்து’ என வழங்குவர். 

மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்கும் ‘மறுகா’ எனும் இச் சொல் மட்டக்களப்பின் குறியீடாகவும் கொள்ளப்படுகின்றது. த.மலர்செல்வன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சிற்றிதழின் பெயர் ‘மறுகா’ என்பதாகும். மட்டக்களப்பிலிருந்து வெளிவருவதைக் குறிப்பதற்கு ‘மறுகா’ எனப் பெயர் சூட்டினார் போலும். 

கவிஞர் நீலவணனின் வேளான்மைக் காவியத்தின் 

அன்னம்மா அழகிதான்;;;;; இங் 

கார்வந்து முடிப்பான் பார்ப்போம்! 

பொன்னம்மா, மறுகால் …. கொண்ணன் 

பொடியனைக் கேட்டுக்கிட்டு….’  என்று கந்தப்போடி கறுவும் பகுதியிலே ‘மறுகால்’ எனும் சொல் இக்காவியத்திற்கு மண்வாசனை அளிக்கிறது. 

‘மறுகா வா!’ என்றால் போய்த் திரும்பவும் – மீண்டும் – மீளவும் – பிறகு வா என்ற அர்த்தமாகும். வடபுலத்தில்’பேந்து வா!’ என்பதைப் போல. ‘மறுகா என்ற சொல்லிலிருந்தே ‘மறுகுதல்’ எனும் வினைச்சொல் விளைகிறது. மறுகுதல் என்பது திரும்பத்திரும்பவருதல் அல்லது சுற்றிச்சுற்றி வருதலைக் குறிக்கும். 

செங்கதிரோனின் ‘விளச்சல்’ காவியத்திலே வரும் கதாநாயகி பாத்திரமான அன்னம் தன் அத்தான் செல்வன் முன்பு தன்னைச் சுற்றி சுற்றி வந்ததை நினைவூட்டும் போது,  

‘மாலைக்குள் மறைப்பில் நின்று  

மறுகுவாய் ஒழுங்கைக்குள்ளே….’ என்கிறாள். 

அடுத்து வருவது ‘கணகாட்டு’ எனும் சொல். ‘கணகாட்டு’ என்பது தொல்லையைக் குறிக்கும். 

‘என்ன கணகாட்டு இது!’ என்று பாட்டிமார் அலுத்துக்கொள்வர். என்ன தொல்லையிது என்பதுதான் அர்த்தம். 

‘சும்மா கணகாட்டுப்படுத்தாம இரு’ என்பார்கள். தொல்லைப்படுத்தாம இரு என்பதே பொருள். 

சிங்களத்திலே ‘கணகாட்டுவ’ என்றால் தமிழில் சண்டை- சச்சரவு எனப்பொருள் தரும்.; சண்டை- சச்சரவு கூட ஒரு தொல்லைதானே. 

தமிழிலிருந்து சிங்களத்திற்குச் சென்ற ஏராளமான சொற்களுள் இந்தக் ‘கணகாட்டு’ம் ஒன்று.  

‘பொருப்பத்தல்’ என்ற சொல் மட்டக்களப்பு மாநிலத்திற்கே உரியதொன்றாகும். ‘பொருப்பத்தல்’ என்பது பொருட்படுத்தல் – கவனமாகக்கொள்ளுதல் எனப் பொருள்தரும். 

கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்திலே, பொன்னம்மா கணவன் கந்தப்போடியிடம், 

‘கறுப்பன் சீனட்டி நெல், நம் 

  கையினால் வடித்த எண்ணெய் 

  கருப்பட்டி, உழுந்து, முட்டை 

  கடையிலே மஞ்சள் மட்டும்  

பொருப்பத்தி‘ வாங்கி வைத்தேன்…. என்கிறார். 

‘விளைச்சல்’ காவியத்திலே, கலியாணப் பேச்சுவார்த்தையின் போது கதாநாயகி அன்னத்தின் தந்தை அழகிப்போடி, மாப்பிள்ளை செல்லனின் தந்தை கந்தப்போடி 

(மனைவி பொன்னம்மாவின் தமையன்)யிடம் கூறுகிறார், 

விருப்பத்தைச் சொல்லு மச்சான்! 

 வேண்டியதெல்லாம் கேளு! 

மருக்கொழுந்தல்லோ அன்னம் 

 மடிக்குள்ளே வைத்து நாங்கள் 

பொருப்பத்தி வளர்த்த பெட்டை 

பொல்லாப்பு வேணாம் பின்னர்’ என்று. 

‘பொருப்பத்தி’ வாங்கி வைத்தேன் என்பது பொருட்படுத்தி- கவனமாக வாங்கி வைத்தேன் என்றும் , ‘பொருப்பத்தி’ வளர்த்த பெட்டை என்பது பொருட்படுத்தி- கவனமாக வளர்த்த பெட்டை என்றும் அர்த்தம் அளிக்கின்றன. 
 

 

https://arangamnews.com/?p=7157

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)

கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)  

   — செங்கதிரோன் — 

கிறுகுகிறுக்குகிறுக்கிகிறுகிறுப்பு, பூவல்வக்கடை,  நட்டுமை  

மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம். 

பாரம்பரிய விளையாட்டான ‘கிட்டிப்புள்’ விளையாட்டின் போது, 

கிட்டிப்புள்ளும் பம்பரமும் 

கிறுக்கியடிக்கப் பாலாறு…. பாலாறு‘ 

என மூச்சுவிடாமல் பாடிக்கொண்டு ஓடுவர். இங்கே கிறுக்கியடித்தல் என்பது  

சுழல- சுற்றி அடித்தல் எனப் பொருள்படும். 

‘கிறுகுதல்’ என்பது சில இடங்களில் சுழல்தல்-சுற்றுதல் எனவும் பொருள் தருகிறது. கிறுக்கு என்றால் சுற்று- திருப்பு எனப்பொருள் தரும். 

போத்தலின் மூடியைக் ‘கிறுக்கி’ என்பர். அதனைக் கிறுக்கி – சுற்றி – திருப்பி இயக்குவதால் இப்பெயர் வந்தது. ‘கிறுக்கியை இறுக்கி மூடு’ என்பார்கள். வீட்டில் கதவு, யன்னல்களை மரத்தோடு அல்லது சுவரோடு இணைத்துப் பூட்டுவதற்கு மரத்தால் அல்லது இரும்பால் செய்த ‘கிறுக்கி’ இருக்கும். இங்கும் இது கிறுக்கி – சுற்றி – திருப்பி இயக்கப்படும் ஒருபொறி. அலுமாரிக்கதவுகளைப் பூட்டுவதற்கும் கதவில் இக் ‘கிறுக்கி’ பொருத்தப்பட்டிருக்கும். 

தலை சுற்றுவதை – மயக்கம் வருவதை மட்டக்களப்பு மாநிலத்தில் கிறுகிறுக்கிறது (கிறுகிறுக்கிது எனப்பேச்சு மொழியில் வரும்) என்பர். ‘கிறுகிறுப்பு’ என்றால் மயக்கம். 

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா- அவன் 

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! 

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!……..‘ 

எனக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பாரதிபற்றிப் பாடிய பாடல் வரியிலே (‘மலரும் மாலையும்’ கவிதை நூல்)வரும் ‘கிறுகிறுத்து’ என்பது மயங்கி எனப் பொருளில் வருவது கவனிக்கற்பாலது. ‘கிறுகிறுப்பு’ என்பது தமிழ் நாட்டிலும் ‘மயக்கம்’ என்ற பொருளில் வழங்கிவருவதை இப்பாடல்வரி வழிமொழிகிறது. 

‘கிறுக்கு’ப் பிடித்தவன். ‘கிறுக்கு’ப் பேர்வழி எனும் போது ‘கிறுக்கு’என்பது’திமிர்’ ‘தலைக்கனம்’ என்ற அர்த்தத்தில்வரும் இடங்களும் உண்டு. கிறுக்கன்- திமிர்பிடித்தவன் என்பதற்குப் பெண்பால் பெயர் கிறுக்கி ஆகும்.  

‘பூவல்’ என்பது கிணறு ஆகும். பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக நிலத்தில் ‘பூவல்’ தோண்டுவர். இது கட்டிடங்கள் ஏதுமில்லாமல் வெறுமனே நிலத்திலே நிலத்தடிநீர் வரைக்கும் தோண்டப்பட்டிருக்கும். குளிப்பதற்கும், குடிப்பதற்கும்கூட இப்பூவல் ‘தண்ணி’பயன்படும். சில சந்தர்ப்பங்களில் மரக்குற்றிகளைக் குடைந்து அது குழாயைப்போன்று நிலத்திலே நிலைக்குத்தாக பதிக்கப்பட்டிருக்கும். இந்த மரக்குற்றிக் குழாய்கள் அதன் வாய்கள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு பூவல்- கிணறு நிர்மாணம் செய்யப்பட்டும் இருக்கும். இதனைக் ‘கொட்டுக்கிணறு’ என அழைப்பர். மரத்தைக் குடைந்து குழாய்போல் செய்து வருவதைக் ‘கொட்டு’என்பர். 

இதைத்தான் கவிஞர் அமரர் வீ.ஆனந்தன் தனது கவிதையொன்றிலே ‘மட்டக்களப்பான்- மரங்குடைந்து நீரெடுப்பான்’ என்று பதிவு செய்துள்ளார். 

நாட்டுப் பாடலொன்றிலே காதலி தன் காதலனை – மச்சானைச் சந்திக்கவருமாறு அழைக்கிறாள். 

சந்தன மரத்த மச்சான் சந்திக்க வேணுமெண்டா 

பூவலடிக்கு மச்சான் பொழுதுபட வந்திடுகா‘  

இங்கே பூவலடி என்பது கிணற்றடி. 

இன்னுமொரு நாட்டுப்பாடலும் உண்டு. 

பூவலக் கிண்டி புதுக்குடத்தக் கிட்டவச்சி 

 ஆரம் விழுந்தகிளி அள்ளிதுகா நல்லதண்ணி‘ 

அழகான குமர்ப்பெண்ணொருத்தி பூவலிலே தண்ணீர் மொள்ளுகிற காட்சியிது. 

‘வக்கடை'(வக்கட) என்பதும் மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்களிலொன்று. பரந்த வயல்வெளியை நீர்ப்பாசன மற்றும் விவசாய வசதிகளுக்காகச் சிறு வரவைகளாகப் (PLOTS) பிரித்திருப்பார்கள். இந்த வரவைகளின் எல்லைகளே வரம்பு ஆகும். இந்த வரம்பின் எல்லைகளுக்குள்ளே பயிருக்கான நீர் பிடித்து- தேக்கி வைக்கப்படும். இந்த வரம்பு ‘வரப்பு’ எனவும் அழைக்கப்பெறும். இதைத்தான் ஒளவையார்,  

‘ வரப்புயர நீர் உயரும் 

  நீருயர நெல்லுயரும்’ என்றார். 

போட்டா வரம்பால புறா நடந்து போறது போல்‘ 

என்ற நாட்டுப் பாடலிலே இந்த வரம்பு (வரப்பு) வருகிறது. ஒரு வரவையிலிருந்து 

இன்னுமொரு வரவைக்கு நீர்ப்பாய்ச்சுதற்கு அவ் வரவைகளின் பொது எல்லையாக இருக்கும வரம்பை ஒரு மண்வெட்டி அகலத்திற்கு வெட்டி வழியெடுத்துவிடுவர். தேவையேற்படாதபோது அந்த வழியை மண் மற்றும் புல்லுகளால், வைக்கோலால், மரக்கட்டைகளால் அடைத்தும் விடுவர். இந்த வழியை ‘வக்கடை’ என்பர். இந்த வழி (வக்கடை) வரம்பின் குறுக்காக இருக்கும். 

சிலவேளைகளில் இந்த ‘வக்கடை’க்குக் கீழால் நீர் கசிவதுண்டு. இப்படி நீர் கசிவதை – வெளித்தெரியாமல் கீழாலே (கள்ளமாகக்) நீர் போவதை ‘நட்டுமை’போவதென்பர். ‘நட்டுமை’ (நட்டும) என்பதும் மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொல்லே. நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளான அணைக்கட்டு, துருசி(மதகு), வான்(கலிங்கு), குளக்கட்டு போன்ற நிர்மாணங்களின் அத்திபாரங்களின் கீழால் நீர் கசிந்து ஒடுவதைக்கூட ‘நட்டுமை’ என்றுதான் கூறுவர். ஆங்கிலத்தில் ‘Undermining’ என அழைக்கலாம். வெளித்தெரியாது நிலத்திற்குக் கீழாலே ஏற்படுகின்ற நீர்க்கசிவு (Seepage) இதுவாகும். 

‘நட்டுமை’ என்பது நீர்கசியும் ஒரு ‘கள்ளவழி’தான். அதனைக் கண்டு பிடிப்பதற்கும் கவனமான மேற்பார்வை – அனுபவம் அவசியம். ‘நட்டுமை’யைக் கண்டுபிடித்தால் தான் அதனை அடைக்கலாம் (மூடலாம்). பயிருக்குத் தேவையான நீரை முறையாகத் தேக்கிவைக்க முடியும். ‘நட்டுமை’யினால் நீர்ப்பாசனம் பாதிக்கப்படும். 

எழுத்தாளர் தீரன் ஆர்.எம்.நெஸாத் அவர்கள் எழுதிய நாவலொன்றிற்கு ‘நட்டுமை’ எனப் தலைப்பிட்டிருக்கிறார். இந் நாவலின் கதை களவொழுக்கச் சம்பவமொன்றை மையப்படுத்தியது. நாவலின் தலைப்பு இங்கு குறியீடாக வருகிறது. கள்ள வழியால் நீர்கசிவது ‘நட்டுமை’ எனின் களவொழுக்கமும் ஒருவகையில் சமூகத்தில் நடைபெறும் ஒரு வகை ‘நட்டுமை’யே. இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் நாவலாசிரியர் தீரன் ஆர்.எம்.நெஸாத் அவர்கள் ‘நட்டுமை என்பது வரப்பினுள் பாதுகாப்பாகக் கட்டிவைத்திருக்கும் தண்ணீர், வரம்புகளின் அடியால் அல்லது பிளவுகளால் வேறு பக்கமாகக் களவாக ஓடிவிடல் ஆகும். இது விவசாயக் கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்கு உவமேயமாகப் பாவிக்கப்படுகிறது’ என அடிக்குறிப்புத் தந்துள்ளார்.  

 

https://arangamnews.com/?p=7173

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.