Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம்

நீதி அமைச்சர் வீட்டில் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால்

கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக உரிய படிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வமைப்பு ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்,வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 20.02.2017 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்தோம்.இன்று எமது போராட்டமானது ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் தொடர்கிறது. இறுதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எமது உறவுகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டும் 20000 க்கும் மேற்ப்பட்டோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இது தவிர, இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வெள்ளை வானில் கடத்தப்பட்டும், துணை இராணுவக்குழுக்களால் கடத்தப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் தேடும் எமது போராட்டமானது நூற்றுக்கு மேற்ப்பட்ட பெற்றோர், தம் உறவுகளை பிரிந்த துயரால் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்பும் தொடர்கிறது. இது எமக்கான நீதி கிடைக்கும்வரை அல்லது எம்மில் ஒருவராவது உயிர் வாழும் வரை தொடரும். இந்த இறப்புக்களின் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இத்துன்பியல் தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை மூடுவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும்.

 

இலங்கை அரசானது உள்நாட்டில் தீர்வை வழங்குவதாக சர்வதேசத்திடம் கூறிவருகிறது. இலங்கை அரசிடம் இருந்து நீதி ஒருபோதும் எமக்கு கிடைக்காது. தமது கையால் தமது உறவுகளை கையளித்த உறவுகள் சிலர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, வருடக்கணக்கில் விசாரணைக்கெடுக்காமல் இழுத்தடித்து, இறுதியில் சரணடைந்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்ட பஸ் இலக்கத்தை முறைப்பாட்டாளர் தெரிவிக்காததால் சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. யுத்த சூழலிருந்து உயிர்ப் பயத்துடன் ஓடிவரும் ஒருவர் தனது பிள்ளை, கணவன் ஆகியோரைப் பிரியும் நேரத்தில் அழுது புலம்புவார்களா? அல்லது பேப்பர் பேனா தேடித் திரிவார்களா? அதற்குரிய மனநிலையிலா அவர்கள் இருந்திருப்பார்கள்? இலங்கையில் நீதித்துறை எவ்வளவு பாரபட்சமாக சிந்திக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை எனினும் நீதியாக செயற்படடும் ஓரிருவரால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் கூட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மிருசுவிலில் சிறுவர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்பவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் இராணுவத்தில் பதவி உயர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எட்டு தமிழர்களை கொலை செய்ததற்கு வெகுமதியாகவே இவரது பதவி உயர்வு கருதப்பட்டு ஏனையோரும் இது போன்ற படுகொலைகளைச் செய்யும் வண்ணம் ஊக்குவிக்கப்படுவார்கள். அதே போலவே திருகோணமலை கடற்படைமுகாமில் 11 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், திருகோணமலை 5 மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், முறையே சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டும், சாட்சியங்கள் போதவில்லை என்றும் வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன. அன்று படையினரை வழிநடத்திய இன்றைய ஜனாதிபதிக்கு எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது என்று கைவிரிக்க முடியாது. இன்று கூட எமது உறவுகள் கையளிக்கப்பட்ட வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், மாத்தளன், ஓமந்தை ஆகிய இராணுவ காவலரண்களின் பொறுப்பாக இருந்த படை அதிகாரிகளை உள சுத்தியுடன் விசாரிப்பதன் மூலம் எமது உறவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம். அப்படை அதிகாரிகள் தற்போது வெளிநாட்டின் தூதுவராகவோ அல்லது பதவி உயர்வு பெற்று தளபதியாகவோ தான் அவர் இருப்பார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அதைச் செய்யாது. காரணம் அவர்களுக்கு உண்மை வெளிவரக்கூடாது. ஏனென்றால் சிறிலங்காவில் இறுதியுத்தத்தின்பின் பதவியேறற் அத்தனை ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு வாக்குறுதியை சிங்கள மக்களுக்கு கூறுகிறார்கள் அது ‘யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை காட்டிக்கொடுக்க மாட்டேன். அவர்களை பாதுகாப்பேன்’ என்பதே அதை மிக துணிச்சலாக செய்தும்வருகிறார்கள். உதாரணம் மிருசுவில் படுகொலையாளி காப்பாற்றப்பட்டமை, வசந்த கரன்ன கொட பாதுகாக்கப்பட்டமை, இது போல பல உண்டு ஆனால் தமிழ் அரசியல்கைதிகள் நீண்ட காலங்களாக விசாரணையின்றி சிறையிலே வாடுகிறார்கள். அவர்கள் செய்த குற்றமாக விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உணவு வழங்கியதும் மற்றும் போராளிகளுடன் தொடர்பில் இருந்தமை போன்றவற்றை காரணம்காட்டி பலவருடங்களாக தடுத்து வைத்துள்ளார்கள்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காணப்படுகிறது. தமிழ் மக்களின் மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் கேள்வியாக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக எமது மத அடையாளாங்கள் அழிக்கப்பட்டு விகாரகைள் உருவாகின்றன. எமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதற்காகவே புது சட்டங்கள், திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. மக்களுக்கு அனுபவங்கள் மூலமாக ஏற்படும் உயிர்ப்பயம் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மௌனிக்கச்செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மன நிலையை பாதிக்கும் வகையில் எம்மீது இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்கிறது. பின்தொடர்தல் , தொலைபேசி அழைப்பு, வீடியோ எடுத்தல் என்பன எமது உறவுகளை அச்சமூட்டும் வகையில் உள்ளன. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவரின் குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.

எமது நீதிக்கான இந்த போராட்டத்தை தொடராமல் செய்வதற்கான குழப்பங்கள் உருவாக்கப்பட்டும் எம்மில் பலரை வயதாகிய தாய்மார், தனியாக குடும்பங்களை தலைமை ஏற்று நடத்தும் பெண்கள் என்று கூட பாராமல், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உழைச்சலை தருவதும் நீதிக்கான எமது பயணத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.

மதிப்பிற்குரிய மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களே,

எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவே நாம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராடிக்கொண்டிருக்கின்றோம். எம்மில் 75 வீதமானவர்கள் வயது முதிந்தவர்களே. அவர்கள் இந்த வயோதிப காலத்திலும் நீதியை தேடி வீதியிலே போராடுகிறாரகள். நாம் மன அழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் 112 பெற்றோர்களை இழந்து விட்டோம் மிஞ்சியிருப்பவர்கள் இறக்கும்முன்பு நீதி கிடைக்க வேண்டும்.

தங்களின் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருந்தீர்கள் அதை விரைவில் செய்வதற்கு ஏதுவாக உரியபடிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம் | February 21, 2022 (ilakku.org)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.