Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் கச்சதீவில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by T Yuwaraj on 2022-03-11 19:38:35

 
 

 

கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று(11.03.2022) நடைபெற்றது.

01__3_.jpg

இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாடடில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கங்களையும் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும்  அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக பாதிப்புக்களை எதிர்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் சார்பாக,  வட மாகாண கடற்றொழிலாளர் சமேளனத்தின் தலைவர் அ. அன்னராசா உரையாற்றுகையில்,

தொப்புள் கொடி உறவிற்கு தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியக் கடற்றொழிலாளர்களை வினயமாகக் கேட்டுக் கொண்டதுடன், வளங்களை பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

01__2_.jpg

அதேவேளை கருத்து தெரிவித்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள், இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், மாற்றுத் தொழில் முறைக்கு தம்மை தயார்ப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் குறுகிய காலத்தினை  நிர்ணயம் செய்து, அந்தக் காலப் பகுதிகள் அனைத்து இந்திய இழுவைமடிப் படகுகளையும் மாற்றுத் தொழிலுக்கு தயார்படுத்துவதற்கு உறுதியான பொறிமுறையை உருவாக்குவது சிறப்பானதாக இருக்கும் என்ற கருத்தினையும் முன்வைத்தனர்.

அதேவேளை, தங்களின் படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டமை தமக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியதாக இந்தியக் கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் பதில் அளித்த இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், பல்வேறு அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் வகையில் தரித்திருந்த படகுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை இந்தியக் கடற்றொழிலாளர்களினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வழங்கிய அழுத்தம் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

01__1_.jpg

இவ்வாறு இரண்டு நாட்டு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் தமது ஆதங்கங்களை வெளியிட்ட நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய சிநேகிதபூர்வமான சந்திப்பில் இரண்டு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புக்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டுள்ளமை ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புவதாகவும்,  விரைவில் இந்திய வெளிவிகார அமைச்சர் டாக்டர் ஜெயசங்கர் இலங்கை வரவுள்ள நிலையில் அவருடனான சந்திப்பின்போது, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உறவுகளை பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆதங்கத்தினை ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், இந்திய மற்றும் தமிழக தலைவர்களுக்கும் எடுத்துரைத்து விரைவில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் கச்சதீவில் இலங்கை -  இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவில் கூடிய இந்தியா, இலங்கை மீனவர்கள் - மனம் விட்டுப் பேச்சு நடத்த ஒப்புதல்

11 மார்ச் 2022
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கச்சத்தீவு

 

படக்குறிப்பு,

கச்சத்தீவு திருவிழாவுக்காக கூடிய இந்தியா, இலங்கை மீனவர்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடும் நடத்தும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் கச்சத்தீவில் இன்று (11) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய உற்சவத்தில் பங்குப்பற்றுவதற்காக வருகைத் தந்துள்ள மீனவர்களுக்கு இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, இரண்டு நாட்டு மீனவர்களும், தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 

கச்சத்தீவு

இந்திய மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழிலினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, இலங்கை மீனவர்கள் இதன்போது கருத்துரைத்திருந்தனர்.

வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா இதன்போது கருத்து தெரிவித்தார்.

''தொப்புள் கொடி உறவிற்கு தடையாக இருக்கின்ற இழுவைமடி வலைத் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். கடல் வளங்களை பாதிக்காத நாட்டுப் படகு போன்ற தொழில் முறைகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் ஈடுபடும் பட்சத்தில், நிபந்தனைகளுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் தயாராக இருக்கின்றனர்" என அன்னராசா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய மீனவர்களும் இந்த சந்திப்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

இந்தியா இலங்கை

 

படக்குறிப்பு,

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்ற மீனவர்களுடன் கலந்துரையாடும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

''இழுவைமடித் தொழிலால் வளங்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்கின்றோம். மாற்றுத் தொழில் முறைக்கு தயார்ப்படுத்த காலவகாசம் தேவைப்படுகின்றது" என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், 2004ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினை தீர்க்கப்படாது உள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் குறுகிய காலத்தினை நிர்ணயம் செய்து, அந்த காலப் பகுதிக்குள் இழுவைமடிப் படகுத் தொழிலிலிருந்து மாற்று தொழிலுக்கு செல்ல தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும் பொறிமுறையொன்றை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும் என இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

மேலும், தமது படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதானது, தமக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு இலங்கை மீனவர்கள் பதிலளித்துள்ளனர்.

Facebook பதிவை கடந்து செல்ல, 3

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 3

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதில் கிடைக்கும் பணத்தை வழங்குமாறு, தாம் கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த அழுத்தங்கள் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.

''இன்றைய தினம் நடைபெற்ற சிநேகப்பூர்வ சந்திப்பில் இரண்டு தரப்பினருக்கும் தங்களது எதிர்பார்ப்புக்களையும், ஆதங்கங்களையும் வெளியிட்டமை, ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகின்றேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரை சந்தித்து, கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, உறவுகளை பாதிக்காத வகையில் தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்படும்" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

கச்சத்தீவு

 

படக்குறிப்பு,

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடங்கியது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, "பாரம்பர்ய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதோடு, மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யும் இலங்கை அரசு, விசைப்படகை அரசுடைமையாக்கி உத்தரவிடுவதால் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக படகுகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இதற்கு இலங்கை மீனவர்கள் இழுவை மடி மீன்பிடி முறையைக் கைவிட்டுவிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசி வருகின்ற மே மாதத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது குறித்து ஆலோசித்துள்ளோம்," என்றார்.

முன்னதாக, கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இந்தியாவில் இருந்து 76 பேரும் இலங்கையில் இருந்து 88 பேரும் கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்று நிகழ்வில் நெடுந்தீவு பங்குதந்தை வசந்தம் மற்றும் வேர்கோடு பங்குதந்தை தேவசகாயம் இருவரும் கலந்துகொண்டு அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-60714350

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களுக்கு அனுமதி: கச்சத்தீவில் சமாதானம்!

spacer.png

 

டி.எஸ்.எஸ்.மணி

கச்சத்தீவில், இலங்கை- இந்திய மீனவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில், 100 இந்திய தமிழ்நாட்டு மீனவர்களும், 100 இலங்கை வடமாகாண தமிழ் மீனவர்களும் மட்டுமே கலந்து கொள்ள, கச்சத்தீவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை அரசு அனுமதி அளித்திருந்தது.

மார்ச் 11, 12 கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடந்தது. இலங்கை கடல் தொழிலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில ஆண்டுகளாகவே, அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு வருவது போலவே இந்த ஆண்டும் வந்திருந்தார். வருவதற்கு முன்பே இரு நாட்டு மீனவர்கள் மத்தியிலும் உள்ள பிணக்கைத் தீர்க்க, பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறியிருந்தார். அதுபோலவே இந்தியத் தரப்பிலிருந்து சென்ற விசைப்படகு மீனவர் தலைவர்களும், நாட்டுப்படகு மீனவர் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார் என அறிவித்திருந்தனர்.

இலங்கை கடல் தொழிலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரு நாட்டு மீனவர்களையும் அழைத்தார். இந்தியா சார்பாக, விசைப்படகு மீனவர்களும், நாட்டுப்படகு மீனவர்களும் அமர்ந்தனர். இலங்கை சார்பாக, வட மாகாண மீனவர்கள், குறிப்பாக, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மீனவர்கள் பேச்சுவார்த்தையில் அமர்ந்தனர். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.

“நான் இரு நாட்டு மீனவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறேன். ஆகவே நான் யார் சார்பாகவும் கருத்துச் சொல்ல மாட்டேன். நான் நடுநிலையாகத்தான் இருப்பேன். இரு நாட்டு மீனவர்களும், தங்கள், தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூறுங்கள்” என்றார்.

spacer.png

இந்தியாவின் விசைப்படகு மீனவர்களும், நாட்டுப் படகு மீனவர்களும், தங்களால் இலங்கை கடல்பகுதிக்கு பாதிப்பு வராது என்றும் ஆகவே “எங்களை மீன்பிடிக்க அனுமதியுங்கள்” என்றும் கேட்டார்கள். அதற்கு இலங்கை மீனவர்கள் மாற்றுக் கருத்துக் கூறினார்கள். இந்திய விசைப்படகுகள், “இழுவலையுடன் வருகின்றன. ஆகவே விசைப் படகுகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது” என வாதிட்டனர். அதே சமயம், நாட்டுப்படகு மீனவர்களால், இலங்கை கடற்பகுதிக்கு பாதிப்பு கிடையாது. ஆகவே நாட்டுப் படகுகளை அனுமதிக்கலாம் என்றும் கூறினார்கள். இந்திய நாட்டுப் படகுகளை, இலங்கைக் கடற்பகுதிக்குள் அனுமதிக்கின்ற அத்தகைய கருத்துக்களை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இலங்கை வட மாகாண மீனவர்கள் கூறியது குறிப்பிடத்தக்க நல்ல அறிகுறி.

மேலும் இலங்கை மீனவர்கள், “எங்கள் அமைச்சர் டக்ளஸ் வழக்கமாகக் கூறுவது போல, மீன்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. ஆகவே அவை இலங்கை கடற்கரையில் உற்பத்தியானாலும், இந்தியக் கடற்கரைக்கு போகத்தான் செய்யும். நீங்கள் இழுவலை மூலம், இலங்கை கடற்கரையோரத்தில் உள்ள மீன்களை அழித்துவிட்டால், இரண்டு நாட்டுக் கடலும் காலியாகி விடும். அது இரண்டு நாட்டிற்குமே நட்டம்” என்று வாதிட்டார்கள்.

அவர்களது வாதம் “இந்திய விசைப்படகுகளில் உள்ள இழுவலை ( Trawllor) மட்டுமே பிரச்னை” என்பதாகத் தெரிகிறது. இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ்,

“நீங்கள் இருதரப்பும் கூறிய வாதங்களை நான் கேட்டேன். இது தீர்ப்பு கூறும் கூட்டமல்ல. ஆனாலும் இரு தரப்பு மீனவர்களும் பேசுவதற்கான முதல் தொடக்க கூட்டம். நீங்கள் கூறிய கருத்துக்களை, நான் இந்த மாதம் இறுதியில் கூடும் இலங்கை அமைச்சரவை முன்பு எடுத்துச் சொல்வேன். இலங்கை அமைச்சரவைதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க, இந்திய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு என்னிடம் பேசினார். நான் ஒப்புக் கொண்டேன்.நான் தமிழ்நாடு முதல்வரிடம் பேச ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை. அதையும் தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தெரிவியுங்கள்” என்றார்.

spacer.png

உடனே இந்திய விசைப் படகு மீனவர்கள், இலங்கையில் பிடிபட்டுள்ள தங்கள் படகுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கேட்டனர். அதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “அது வழக்காக கோர்ட்டில் நிற்கிறது. அதில் சட்டப் பிரச்னை இருக்கிறது. அதில் தீர்ப்பு வந்தால் பரிசீலிக்கலாம்” என்றார். மேற்கண்ட நிகழ்வுகளுக்குப் பிறகு, எப்படியோ இருநாட்டு மீனவர்களும், அமர்ந்து பேசுவதற்கு அந்தோணியார் கோயில் திருவிழா பயனுள்ளதாக அமைந்தது எனக் கருதினோம்.

டக்ளஸ் தேவானந்தா “இந்த முறை இரு நாடுகளிலிருந்தும், 100-100 மீனவர்கள்தான் கச்சத்தீவு திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அடுத்த ஆண்டு, இரு நாடுகளிலிருந்தும், ஆயிரம்-ஆயிரம் மீனவர்கள் அனுமதிக்கப்பட ஏற்பாடு செய்கிறேன் “ என நம்மிடம் கூறினார்.

 

https://minnambalam.com/politics/2022/03/12/20/permission-for-tamilnadu-fisherman-in-katacha-theevu-discussion

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.