Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவமாய் முடிந்து இந்தியாவுக்கு அவமானம் தேடித் தந்த ஒப்பந்தம்!

Featured Replies

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்ந்து நேற்றுடன் இரண்டு தசாப்தங்கள் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றன.

இலங்கைத் தீவின் அயல் தேசமான இந்திய வல்லாதிக்கம், தனது புவியியல், அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் வகுத்த உருப்படியற்ற அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் முடிவாக இத்தீவின்மீது வலிந்து திணித்த செயற்பாட்டின் இருபது ஆண்டுகளே இப்போது பூர்த்தியாகியிருக்கின்றன.

இந்திய மேலாதிக்கத்தின் நெருக்குவாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது இலட்சியங்களைக் கூடக் கைவிடத் தயாரான ஈழத் தமிழ்த் தலைவர்களின் அரைகுறை ஒப்புதலோடும் கொள்கையிலும், இலட்சியத்திலும் பற்றுறுதி மிக்க ஈழத் தமிழ்த் தலைமையைப் பேச்சுக்கு என அழைத்து, புதுடில்லி அசோக் ஹோட்டலில் காவலில் வைத்துக்கொண்டும் ஈழத் தமிழரின் தலைவிதியைத் தீர்மானித்து, ஒப்பமிடும் அதிகாரமும் ஆணையும் இந்தியஅரசுத் தலைவருக்கு உண்டு என்ற மேலாதிக்க மமதையோடும்

இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இத்தீவின் மீது 1987, ஜூலை 29 இல் பலவந்தமாகத் திணித்தது நமது அயல் வல்லாதிக்கம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது நேரடி இராணுவ அதிகாரத்தைத் தமிழர் தாயகம் மீது செலுத்த இந்தியா எடுத்துவிட்ட முடிவு, ஒப்பந்தம் கைச்சாத்தான சில மணி நேரம் கழித்து, இலங்கையின் வடபுலத்தில் "அமைதிப் படை' என்ற பெயரில் வந்து இறங்கத் தொடங்கிய இந்தியத் துருப்புகளின் நகர்வோடு துல்லியமாக அம்பலமாயிற்று.

1983 இல் இலங்கைத் தீவில் ஈழத் தமிழருக்கு எதிரான பெரும் வன்முறைப் புயலாகக் கட்டவிழ்ந்த ஆடிப்பேரலை அதிர்வு, இத்தீவின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கான அகப்புறச் சூழல்களையும் சாதகமான சந்தர்ப் பத்தையும் ஏற்படுத்தித் தந்தது.

தனது அண்டை, அயல் தேசங்களில் அரசியல், இராணுவ ரீதியில் ஸ்திரமற்ற நிலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் அப்பிராந்தியங்களில் தனது நேரடித் தலையீட்டை ஏற்படுத்திக் கொள்வதும், தனது பாதுகாப்பை அதன் மூலம் மேம்படுத்தி, தனது அதிகாரத்தை விசாலித்து, விஸ்தரித்து, வியாபித்து நிலை நிறுத்துவதும் இந்திய வல்லாதிக்கத்தின் அப்போதைய அரசியல் இராஜதந்திரமாக இருந்திருக்கக் கூடும்.

இன்று, இலங்கைத் தீவின் ஐக்கியம், ஒருமைப்பாடு, இறைமை குறித்து, இலங்கை அரசை விட அதிக கரிசனை கொண்ட தரப்பாகத் தன்னைக் கருதி, அதனடிப்படையில் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் புதுடில்லி.

தமது தனித் தாயகக் கனவுக்கு உருக்கொடுக்கும் இலட்சிய வெறியோடு வந்த தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு அன்று தஞ்சமளித்து, ஆயுதப் பயிற்சி தந்து, கொழும்புக்கு எதிராகச் செயற் பட ஊக்கமளித்து, வழிகாட்டி, தூண்டியமையும் மறுபுறத்தில் அத்தகைய ஈழத் தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்கள், தமது இலட்சிய இலக்கை அடைந்து விடாமல் பார்க்கும் நோக்கில், ஒரே சமயத்தில் பல இயக்கங்களை போஷித்து வளர்த்து, அவற்றுக்கு இடையே மோதல்களையும், சச்சரவுகளையும் உருவாக்கி, எந்த ஓர் இயக்கத்துக்கும் தனித்துச் செயற்படக்கூடிய ஆயுத, போரியல் வலிமை ஏற்படாமல் தடுத்து மட்டுப்படுத்திக்கொண்டு, தனது கைவரிசையை புதுடில்லி காட்டியமை, அதன் அந்த அரசியல் இராஜதந்திரப் போக்கை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.

வாழ்வியல் உரிமைகளுக்கான ஈழத் தமிழரின் சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், விடுதலைத் தாகத்தையும் இப்பிராந்தியத்தில் தனது வல்லாதிக்க அரசியல் தந்திரோபாயத்துக்கான பலிக்கடாவாகப் பயன்படுத்த முயன்ற புதுடில்லி, இவ்விடயத் தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அதே சமயம் விடுதலை அவாவில் இரும்பு போன்ற பற்றுறுதி கொண்ட ஈழத் தமிழினத்தின் எழுச்சி கண்டு மிரண்டது. அந்த எழுச்சியை அடக்கு வதற்காகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற நாணயக் கயிற்றைத் தமிழர் தரப்பு மீது "இந்திய அமைதிப்படை'யின் இராணுவ அதிகாரம் மூலம் அது கட்ட முயன்றது.

ஆனால் தனது அரசியல் புவியியல் நோக்குகளுக்காகவே இந்தியா, ஈழத் தமிழரின் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டி, வளர்த்து பின்னர் அதைப் பலிக்கடாவாக்கப் பார்க்கிறது என்பதை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைமையும் தெளிவாகவும், ஐயம் திரிபுறவும், ஆழமாகவும் புரிந்துகொண்டு, முன்னெச் சரிக்கையாகவும் இலட்சிய உறுதியில் தடுமாறாமலும் நடந்து கொண்டன.

பலிக்கடாவாக்க இந்தியா வளர்த்த ஈழத் தமிழரின் விடுதலை எழுச்சி, இந்தியாவுக்கு "வளர்த்த கடா, மார்பில் பாய்ந்த கதை' யானது இப்படித்தான்.

ஓரினத்தின் சுதந்திரத் தாகத்தை தன்னுடைய அரசியல், கேந்திர நலன்களுக்கு வசமாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த இனத்தை அடிமைத் தளையில் நட்டாற்றில் விடுவதற்கு இந்தியா மேற்கொண்ட வஞ்சகத்தனமான போக்கு, சரித்திரத் தில் மறக்க முடியாத பெரும் அவமான வடுவை அதன் முகத்தில் நிரந்தரமாகப் பொறித்து விட்டிருக்கின்றது. தனது ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் உடலங்களைச் சுமந்தபடி, காயமுற்ற பல்லாயிரக்கணக்கான படையினரை தூக்கிக் கொண்டு, பலத்த ஆயுத தளபாட இழப்புகளோடும் இரண்டரை ஆண்டுகால அவமானப் பட்டறிவோடும் திரும்பவும் இலங்கையிலிருந்து மூடை முடிச்சுகளோடு நடை யைக் கட்டவேண்டிய சிறுமை இந்தியாவுக்கு நேர்ந்தது.

கடந்த நூற்றாண்டில் பெரும் போரியல் பின்னடைவுகளைப் பட்டியலிடும் இராணுவ சரித்திர ஆய்வாளன் வியட்நாமில் அமெரிக்காவுக்கும், கம்பூச்சியாவில் சீனாவுக்கும், ஆப்கானிஸ் தானில் ரஷ்யாவுக்கும் ஈழத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்ட யுத்தத் தோல்விகளை நிச்சயம் வரிசைப்படுத்துவான்.

இந்த அவமானப் பட்டறிவை இந்தியாவுக்குச் சம்பாதித்துக் கொடுத்த இலங்கை இந்திய ஒப்பந்தமே நேற்றுடன் இருபது ஆண்டுகளைப் பூர்த்திசெய்திருக்கின்றது.

அந்த ஒப்பந்தத்தில் வரையறை செய்யப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்ற தமிழர் தாயக ஒருமைப்பாட்டை, இப் போது துண்டித்து, அந்த ஒப்பந்த வாசகங்களைத் தூக்கிக் குப்பைக்கூடைக்குள் வீசியதன் மூலம், கொழும்பு அரசு, இருபது ஆண்டுகள் கழித்து தற்சமயம் புதுடில்லியை அவமானப்படுத்தி நிற்கின்றது.

இந்த அவமானங்களுக்கும் அவமாய் முடிந்த விவகாரங்களுக்கும் இந்தியா பிராயச்சித்தம் செய்யப்போவது எங்ஙனம்?

நன்றி : ஆசிரியர் தலைப்பு

உதயன் ஜுலை 30 2007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.