Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

  • பி சுதாகர்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தமிழக கிராமங்கள்

தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சில கிராமங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கும் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல் இதைச் செய்வதன் மூலம், வணிக நோக்கத்திற்காக தண்ணீர் திருட்டும் செய்துகொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இது குறித்து பேசிய மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கடந்த காலத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காத போதும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், "முதல் கட்டமாக விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைத்து, இந்த மாதத்திற்குள் ஆய்வு செய்யவுள்ளோம்," என்றார்.

கோவை, திருப்பூர், ஈரோடு , திண்டுக்கல், தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 'நீர்வளம்' அதிகம் இருக்கும் பகுதியிலேயே இந்தத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று மாசுபட்டு, கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்ய முடியாமல், தொடர்ந்து அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

காயர் பித் கழிவுகள்

இயற்கை முறையில் தென்னை விவசாயம் செய்து வரும் சுமதி, "தேங்காய் மட்டையில் இருந்து, 40 சதவிகித நார்களை எடுப்பார்கள். மட்டையில் மீதம் உள்ள 60 சதவிகிதம் துகளைத்தான், காயர் பித் எனக் கூறுவார்கள். அதை நன்றாகக் கழுவி, கட்டியாக்கி ஹை ஈசி, லோ ஈசி என இரண்டு வகையாகப் பிரித்து ஏற்றுமதி செய்கின்றனர். ஹை ஈசி வகையைவிட லோ ஈசி வகையில் தான் லாபம் பலமடங்கு அதிகம்.

அதற்கு சுத்தமான நீர் அதிகமாகத் தேவை. காயர் பித் 8 மடங்கு அதிகம் தண்ணீரை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. ஒரு கிலோ பித்தில் 30 லிட்டர் தண்ணீர் இருக்கும். விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய தண்ணீர் தான் இதற்குச் செல்கிறது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் ஏக்கர் கணக்கில், மலைபோல மட்டைகள் மற்றும் பித்தை குவித்து வைத்திருப்பதைப் பார்க்க முடியும். இந்த இரண்டு முறைகளை விட, இடையகப்படுத்தல் (Buffering) எனப்படும் ரசாயனத்தின் மூலம் காயர் பித்தை கழுவும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

காயர் போர்டு சார்பாக வெளியிடப்பட்ட இதழிலேயே, அதனால் ஏற்படும் கெடுதல்களையும் கூறியுள்ளனர். இது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து. இந்தியாவிலேயே கேரளா தான் அதிகளவு தேங்காய் உற்பத்தி செய்கின்றனர். அங்கே இந்தத் தொழிலை சிவப்பு நிற பிரிவில் வைத்துள்ளதால், அங்கு இந்தத் தொழிற்சாலைகள் இயங்க முடியாது. அதனால் கேரளாவைச் சேர்ந்த பலர், இங்கு தொழிற்சாலை தொடங்கியுள்ளனர்.

 

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன

 

படக்குறிப்பு,

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன

தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 4-வது இடத்தில்தான் தமிழ்நாடு உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 50 சதவீத தொழிற்சாலைகள் பொள்ளாச்சியில்தான் உள்ளன. இந்தியாவில் உள்ள 50 சதவிகித காயர் பித் கழிவுகளை பொள்ளாச்சியில் கொட்டுகின்றனர்.

இந்தத் தொழிலைச் செய்யவே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், விதிகளைப் பின்பற்றி தொழில் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்," என்றார்.

தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி குமாராபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி பேசுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு ஊர் மக்கள் பலரும் தன்னுடைய கிணற்று நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்தார். நார் கப்பிகளைக் கொண்டு வந்து விவசாய நிலம் அருகே கொட்டுவதால், நான்கு ஆண்டுகளில் நிலத்தடி நீர் கெட்டு விட்டது. அதன் விளைவாக, உப்பு அளவு அதிகரித்து நீரைக் குடிக்கப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.

மேலும், "தண்ணீர் இல்லாமல் மரம் வாடிய காலம் போய் 'தண்ணீர் ஊற்றினால் மரம் காய்கிறது'. 350 தென்னை மரம் நட்டதில், வாரத்திற்கு இரு மரம் என இதுவரை 150 மரங்கள், முறிந்து விழுந்து விட்டன. இப்படியே போனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை," என்றார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடியைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில் 25 வருடங்களாக விவசாயம் மற்றும் பண்ணைக் கோழி வளர்த்து வருகிறார். தனது தோட்டத்து பண்ணை அருகே, காலி நிலத்தில் கொட்டப்பட்ட நார்த் தூள்களால், நிலத்தடி நீர் மாசுபட்டு நீரிலுள்ள திட கரைசல்களின் அளவு (TDS) 2300 க்கு மேல் இருக்கிறது.

 

நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது

 

படக்குறிப்பு,

நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது

இதனால் கோழிப் பண்ணைக்கும் கால்நடைகளுக்கும் தினமும் 3500 ரூபாய்க்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். குடிநீர் பிரச்சனையால் மாடுகள் எலும்பும் தோலுமாகியதால், 10 மாடுகளை வளர்க்க முடியாமல் விற்றுவிட்டதாகவும் மாசுபாடு குறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கண்ணன் கூறுகிறார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலையைச் சார்ந்த புஷ்பவள்ளி நம்மிடம் பேசும்போது, "நார்த் தூள்கள் தண்ணீர், உணவு மீது விழுவதால் கெட்டுப்போகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாசம், தோல் பிரச்னை ஏற்படுவதால் உறவினர் வீட்டிற்குச் சென்று தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தோட்டத்தில் தண்ணீர் விடவும், காய் பறிக்கவும் முடியாமல் நார்த் தூள்கள் கண்ணில் விழுகிறது. இதைச் சரிசெய்து இயக்கச் சொல்ல வேண்டும் எனப் புகார் கொடுத்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிவிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை," எனத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்காவிற்கு உட்பட்ட மருதுறை கிரமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் பேசும்போது, "திருப்பூர் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆறு பாதிக்கப்பட்டது. இப்போது தென்னை நார் தொழிற்சாலைகளால், மருதுறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்தின் சார்பாக கிராமங்கள் முழுவதும் தென்னை நார் கழிவுகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கொட்டுவதல், 250 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. நார் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தார்.

தொழிற்சாலைகளை மூடச் சொல்லவில்லை

எந்தவொரு விவசாயியும் தென்னை நார் தொழிற்சாலைகளை மூடச்சொல்லவில்லை. நீர், காற்று மாசுபட்டால், அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தென்னை நார் மற்றும் நார்த் தூள்களை கட்டியாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

 

படக்குறிப்பு,

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

தென்னை நார்த்தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி பொருட்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சிவமுருகானந்தம், பொள்ளாச்சியில் 324 சிறு குறு நடுத்தர தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் அனுமதி வாங்கிச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

அதோடு, ஒரு சில பெரிய நார்த் தொழிற்சாலைகளால்தான் நீர் காற்று மாசுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பலியாகின்றோம். எங்கள் சங்கத்திலுள்ள 324 தொழிற்சாலைகளின் மொத்த வர்த்தகம், ஒரு பெரிய நிறுவனத்தின் வர்த்தகத்திற்குச் சம்மாக உள்ளது. மாநில, மத்திய அரசுகள் ஒரு குழுவை உருவாக்கி ஆய்வு செய்து, சிறு குறு தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று சிவமுருகானந்தம் கூறினார்.

இந்தியாவில் தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் 16816 தமிழகத்தில் 4608 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் 7.30,381 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். வருடத்திற்கு 7.6 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு 3778.9 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக காயர் வாரிய தேசிய தலைவர் குப்புராமு தெரிவித்தார். மேலும், "ஒரு சில தொழிற்சாலைகள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய மாநில அரசுகள் காயர் வாரியம், மாசுக் காட்டுப்பாடு வாரியம், உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, ஆய்வு நடத்தி, அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்," என்றார்.

ஆரஞ்சு வகைப்பாட்டிற்கு மாற்றம்

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், "சுற்றுசூழல் மாசுபடாமல், நீர் ஆதாரத்தை காப்பதற்காகத்தான், வெள்ளை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிற வகைப்பாட்டிற்கு இந்தத் தொழிற்சாலைகளை மாற்றியிருக்கிறோம்.

எந்தவொரு தொழிலையும் முடக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்காது. தொழிற்சாலைகள் கழிவு நீரை வெளியேற்றினாலோ, மாசு ஏற்படுத்தினாலோ, வெள்ளை நிறத்தில் இருந்தால், மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒன்றும் கேட்க முடியாது என்பது மட்டுமே இதை ஆரஞ்ச் வகைபாட்டிற்கு மாற்றியதற்கான முக்கியக் காரணம். தற்போது ஆரஞ்ச் வகைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதால், ஒவ்வோர் தொழிற்சாலையையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும்," என்றார்.

 

பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது

 

படக்குறிப்பு,

பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது

"ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு நாரை கழுவுவதற்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழித்தால் மறுசுழற்சி செய்து 9 லட்சம் லிட்டர் தண்ணீரை மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு, மாசுபடுவதும் குறைகிறது," என்று கூறியவர் இது குறித்து தொழிற்சாலைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் உள்ள பல நிறுவனங்களுக்கு, சீனா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து முதலீடு இறக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் மண்வளம் இருக்காது. மேலும், காளான் போன்ற உணவுகள், மண்ணைவிட, தென்னை காயர் பித்தில் போட்டால் எளிதில் வந்துவிடும். இந்தக் காரணத்தால், வெளிநாட்டு விவசாயத்தை வாழ வைக்க, நம் விவசாய பூமியை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இடையகப்படுத்தல் முறையில் செய்யப்படும் காயர் பித் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லோ ஈசி முறை காயர்பித் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறிய அளவில் இயங்கும் ஒரு தொழிற்சாலையே சராசரியாக நாளொன்றுக்கு 5டன் காயர்பித் ஏற்றுமதி செய்கிறது. பெரு நிறுவனங்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 100 டன் காயர்பித் ஏற்றுமதி செய்து வருகிறது.

நீர் திருட்டு, காற்று நீர் மாசுபாட்டால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் என தென்னை நார்த் தொழிற்சாலைகளுக்கு எதிராக 30 வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் சில வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும் இருக்கின்றன.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு, காயர் பித்களை சிமெண்ட் தரையில் பரப்பி நீரைப் பாய்ச்ச வேண்டும். அந்த தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். காயர் பித்கள் பறக்காமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 விதிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது. இதைக் கடைபிடித்தாலே சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பாக இயங்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-61486757

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.