Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு…

அ.சி.விஜிதரன்

spacer.png

 பதின்மூன்று வருடங்கள் கடந்து போயுள்ளன. முள்ளிவாய்க்காலின் பெரும் துயரம், கனத்த உணர்வு காலங்களின் கடத்தலிலும் மாறாத பெரும் ஊணாகவே இருக்கிறன.  எத்தனை காலங்கள் கடந்தாலும் மறக்க முடியாத பெரும் அவலத்தின் நினைவுகள் அவை. மனிதம் என்ற வார்த்தையின் எல்லா அர்த்தங்களும் துப்பாக்கிச் சன்னங்களால் சிதைத்துப் போடப்பட்ட நாட்கள் அவை. இதுவரை மனித இனம் என்று தங்களை அர்த்தப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் செய்த கொடும் செய்கைகளில் ஒன்றாக மாறிப் போயிருக்கிறது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை.

சரியாகச் சொன்னால் இன்னும் அதன் வீச்சங்களில் இருந்து நாற்றம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும் அழிப்பில் சிக்கிய மக்கள் அதில் இருந்து மீள முடியாத பெரும் தாக்கத்தில் இருக்கிறார்கள். உறவுகளை இழந்து, குடும்பங்களை தொலைத்து, அங்கங்கள் இழந்து, காணாமல் ஆக்கப்பட்டு, கைதிகளாக பிடிக்கப்பட்டு என முள்ளிவாய்க்காலின் கொடூர கனங்கள் இன்றைய தீயாய் தகித்துக் கொண்டே இருக்கின்றது.

பதின்மூன்று ஆண்டுகளின் கணக்கையும், இதயங்களோடு இருண்டு போன வாழ்வையும் வைத்துக் கொண்டேதான் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த ஆண்டும் தீபங்கள் ஏற்றி, கஞ்சி கொடுத்து அஞ்சலி செலுத்துகிறோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள் அமைதிபெரும் என்ற நம்பிக்கையோடும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடும், கொடும் கொலைகளைச் செய்த ராஜபக்சேக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஆதங்கத்தோடும், இனியாவது இலங்கை நிலத்தில் வாழ்வு அமைதி பெறுமா என்ற ஏக்கத்தோடும்…

முள்ளிவாய்க்காலில் உயிர், உறவுகள், உடல்பாகங்கள், உடமைகள் இழந்த அனைத்து உயிர்களுக்கும் எமது அஞ்சலிகள்.

 நாம் வெறும் நம்பிக்கைகளையும், ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும், ஆதங்கங்களையும்  மட்டும் வைத்துக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது. அவற்றை மட்டும் வைத்திருப்பதினால்தான் அதை அறுவடை செய்து, தின்று கொழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்  ஒரே மொழி பேசுகிறோம் என்று அரசியல் பேசுவோர்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்… இலங்கையில் தமிழ் அரசியல் என்று பேசுவோர் போர் முடிவுற்றதில் இருந்து இன்றைய நாள் வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று?  இனப் படுகொலையின் மறுமுகம் கொண்ட பங்காளிகளுக்கு ஆதரவு கொடுப்போம், அரசியல் தீர்வு பெறுவோம், பொங்கல் போக… சித்திரை நாள் வரும் அரசியல் கைதிகள் வருவார்கள் என்ற கூச்சம் அற்ற பேச்சுக்கள் நமது காதுகளை அடைத்ததே தவிர… நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. வலிகளில், ரணங்களில் கொஞ்சமும் குறைவில்லை. ஆனால் அவர்களுக்கு அரசு அரியாசனங்கள் கிடைத்தது, ஆடம்பர வாழ்வு கிடைத்தது. இப்போதும் கிடைக்கிறது. பேரம் பேசி அரசியல் செய்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லவா வேண்டும். சிறப்பாக செய்கிறார்கள்.

அங்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழம் மீண்டும் பிறக்கும் என்று வாய் கிழிய பேசி வயிறு வளர்க்கும் கூட்டங்களின் வாய்களில் எச்சில் வடியும் பண்டமாக நாமும், நமது நம்பிக்கைகளும் மாறிப் போய்யுள்ளோம். போர் என்ற கொடூரத்திற்கு உயிர்களை பலி கொடுத்த நமக்கு இருக்கும் வலி அவர்களுக்கு தேவை இல்லை. அவர்களுக்கு தமிழ் மக்கள் வீரம் பேசுவதற்காய் பலிகொடுக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளையே கவனிக்காத இவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு என்ன செய்யமுடியும்?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளில் உள்ள ‘பெரும்’ தமிழர்களும் அப்படியே. அவர்களின் அன்றாட பிரச்சனைகளில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை வருவதில்லை. எனவே அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, எப்படி கருத்து சொல்லி, புலி வீரம் மட்டும் பேசி அனைத்தையும் அழித்து ஒழித்தார்களோ! அதேபோல் இன்றும் மக்களின் வலிகளின் சுவடுகளை உணராமல் இன்னும் அழித்து ஒழிக்க கதையளந்து திரிகிறாரகள். அறிவாளிகளாக, யூடியூப் ஆலோசகர்களாக இருந்து இல்லாததை கற்பனையில் கண்டு, அதில் ஒரு சதுரங்க ஆட்டம் போடும் கட்டுக்கதை நாயகர்களாக முள்ளிவாய்க்காலின் அழிவை, மனித பேரவலத்தை கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று நன்றாக உற்றுப் பாருங்கள் குளிரூட்டிகளின் குளுமையில் அமர்ந்து திறந்திருக்கும் கணினி வழியே முகநூலில் முள்ளிவாய்க்காலின் வலியை பெருமை என பேசி, மக்கள் அழிந்ததை வீரம் என ஆகா! ஓகோ! என்று கொண்டாடும் ஈனங்களின் எதிர்பார்ப்பு; வழக்கமான பதிவுகளை விட இன்று அஞ்சு, பத்து லைக்குகள் அதிகம் வாங்குவதே. இல்லையென்றால், அதுபற்றி பேசி யூடியூபில் சம்பாதிப்பதே. இதை எதிர்பார்த்தே அவர்களின் இன்றைய நாள். அடுத்த நாள் கடக்கும் போது அவர்களுக்கு இது பழசாகி விடும். இனி அடுத்த வருட நினைவு நாள் வரை தீண்டாத பொருட்களாகவே இருக்கும் முள்ளிவாய்க்காலும், அதன் மக்களும். மக்களைப் பற்றி சிந்திக்காத புலிப் பெருமைவாதிகளுக்கு, முள்ளிவாய்க்கால் கொடூரம் ஆண்மை வீரம் பேசும் இன்னொரு நாள்.

இவர்களுக்கு எல்லாம் நிலம் மட்டுமே ஈழம். நிலம் மட்டுமே வீரம். நிலம் மட்டுமே பெருமை, நிலம் மட்டுமே நாடு. நிலம் மட்டுமே ஆசை. ஆனால்  நிலம் அல்ல நாடு, நாடு என்பது மக்கள்.  நிலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களே எல்லாம். ஆனால் அவர்களால் மக்களின் நிலை பற்றி யோசிக்கவோ, இழப்பினால் இழந்து போய் இருக்கும் மக்களை உணரவோ முடியாது. அவர்களுக்கு உணர்ச்சி பொங்க ஒன்று வேண்டும். அவர்களுக்கு ஈழம் குலுக்க, குலுக்க பொங்கும் உணர்ச்சி சோடா போத்தில்.

நாம் நிலத்தை, வெறும் வீரத்தை, ஆயுதத்தை, போரை, அழிவைக் கொண்டாடும் ஒவ்வொருவரையும், கேள்விக்குள் வைத்துப்பார்க்க வேண்டும். ஏன் என்றால் இன்று வரை போர் முடிந்தும் அழிந்துகொண்டிருக்கும், அழுகிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அவர்களுக்கு எவ்வித கரிசனங்களும் இல்லை. அவர்கள் வெறும் காதிதப் புலிகள்.

உண்மையில் ஈழம் என்று பேச வேண்டும் என்றால் தமிழ் மக்களின் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாதத்திற்கு எதிராக புறப்பட்ட  தமிழ் பேசும் மக்களின் விடுதலைக் கருத்தியலைப் பேச வேண்டும். நாடு என்பது நிலம் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் என உணர வேண்டும். தமிழ் பேசும் மக்கள் குழுமமாக, இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு இருக்கும் வடக்கு- கிழக்கு தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் பற்றிப் பேச வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பேசப்படுவதே இல்லை. இன்று இப்படிப் பேசுவது  மடைமாற்றும் வேலை என்று  கூறினால் ஆம்! இது மடைமாற்றும் வேலைதான். மக்களை மதிக்காமல் நிலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சிந்திக்கும் சிந்தனையில் இருந்து, மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சிந்தனைக்கான மடைமாற்றும்தான்.

இலங்கையில் இப்போது முக்கிய தருணம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சூத்திரதாரிகள் ராஜபக்சேக்கள் ஓடிக் கொண்டிருக்கும் காலம். அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவோம் என்று நாடு நாடாய் நம்மை பிச்சை எடுக்க வைத்தார்களே, அவர்களால் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அந்த ராஜபக்சேக்களை, அந்த அழிவுவாதிகளை சிங்கள மக்களே தூக்கி எறிந்து கொண்டிருக்கிறார்கள். தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்று அந்த பேரினவாதிகளை, இனப் படுகொலைக்கு காரணமான அவர்களை அனைத்து பதவிகளில் இருந்தும் இறக்கி, மக்கள் மன்றத்தில் விசாரித்து தண்டனை பெற வைக்க நம்மால் கூற இயலும்  அதற்கு இந்த முக்கிய தருணத்தில் தமிழ் மக்கள் போராட்ட களத்திற்கு வந்தால்தான் முடியும்.

இந்த வாய்ப்பு முள்ளிவாய்க்காலுக்கு காரணமானவர்களை தண்டிப்பது மட்டுமல்ல, அதன் துயரங்களான காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இனவாதம் போன்றவற்றிற்கு  உறுதியான ஒரு முடிவை பெற வாய்ப்பாக இருக்கும். இவற்றை  அரசியல் கோரிக்கையாக மாற்றி ஒட்டு மொத்த இலங்கையின் கோரிக்கையாக வைப்பதற்கு பெரும் வாய்ப்பு நம் முன்னே உள்ளது.

நிலப் பெருமை பேசுபவர்கள் மீண்டும் நம்மை முள்ளிவாய்க்காலின் துயர உணர்ச்சிகளை மட்டும் தூண்டி, வீரம் பேசி இந்த வாய்ப்புகளை நழுவ விட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே சிங்கள அரசுகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலை வெறுமனே ஆண்டுதோறும் தூக்கிச் சுமப்பது மட்டுமே அவர்கள் வேலை. நாம் நினைவு நாளை அனுசரிப்பதில் மட்டும் நிறைவடையப் போகிறோமா? அல்லது இந்த படுகொலைகளுக்கும், தொடரும் இனவாதத்திற்கும் முடிவு கட்டப் போகிறோமா?

காலம் காலமாய் அரசியல் தீர்வுகளுக்கு வாய்ப்பில்லாமல், பெரும் அழிவுகளுக்கு  மறுபக்க காரணமாக இருந்த எவரும், ஏன் அவரகளின் ஆதரவாளர்கள் கூட இன்றளவும் தங்கள் சார்பில் பெறுப்புக் கூறவோ, தங்களின் தவறுகளை ஒப்புக் கொள்ளவோ தயாரில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒருவர்கூட தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதாய் தெரியவில்லை. தாங்கள் செய்ய அனைத்தும் சரி என்றே நிற்கிறார்கள். இனி அவர்களை நம்பிச் செல்ல வேண்டிய நிலை வேண்டாம்.  அவர்கள் எதையும் வைத்து அவர்கள் நலனுக்காக பேரம் பேசுவார்கள். இனியாவது அரசியல் என்பது மக்களால் களத்தில் தீர்மாணிக்கப்படுவதாக இருக்கட்டும். தமிழ் பேசும் மக்கள் குழுமமாக நாம் ஒன்றிணைந்து நமது கோரிக்கைகளுக்காக; போராட்ட களத்தில் இருக்கும் சிங்கள மக்களோடு உரையாடுவதே தீர்வினை நோக்கிய  வழியாக இருக்கும்.

சிங்கள மக்கள் இனவாத சிந்தனையில் இருந்து விடுபட்டு சிந்திக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். வரலாற்றிலேயே முதல் முறையாக கொழும்பில் பொது இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடக்கிறது. ’இனவதம் வேண்டாம்’ என்கிற சிங்கள மக்களின் குரல்கள் கேட்கின்றன. நாடு நாடாய் இவர்கள் பிச்சை கேட்டு, பேரம் பேசி எதையும் மாற்றவில்லை. மக்கள் போராட்டமே இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது. “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பதுதான் இன்றைய நிலை. அப்போது ஒன்றுபட்ட இலங்கைப் போராட்டத்தில் நாம் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலின் அழிவுகளுக்கும் சேர்த்து, இனி ஒரு முள்ளிவாய்க்கால் நடக்காமல் இருக்க வழிவகை செய்வதே…இழந்து போன உயிர்களுக்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும்.

ஆயுதங்களின் பசிக்கும், போரின் கோரங்களுக்கும் பலியான மக்கள் அனைவருக்கும் அஞ்சலிகள்.

image-5.png?w=683 கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு

https://utattam.wordpress.com/2022/05/18/asv202205/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.