Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாறி மாறி முன்வைக்கப்படும் முத்தரப்பின் குற்றச்சாட்டுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-07

மாறி மாறி முன்வைக்கப்படும் முத்தரப்பின் குற்றச்சாட்டுகள்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மூன்று பிரதான தரப்புகள் ஒவ்வொன்றும் மற்றையவை இரண்டின் மீதும் மாறி மாறி சுமத்தும் குற்றச்சாட்டுகள் சுவாரசியமானவை.

மற்றைய இரண்டு தரப்புகளுமே சேர்ந்துகொண்டு, கூட்டாகச் செயற்படுகின்றன என்றுதான் மூன்றாவது தரப்பு குற்றம் சுமத்துகின்றது. அதை சற்று விரிவாகப் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் பொருத்தமானது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை இங்கு இன்றைய நிலையில் முக்கிய மூன்று தரப்புகள் எவை?

ஒன்று - தமிழர் தரப்பில் அவர்களின் உரிமைக்கான போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள்.

அடுத்தது - தமிழர் தரப்பின் உரிமைகளை மறுக்கும் அடக்குமுறைக் கட்டமைப்பாக தென்னிலங்கை அரசும் அதன் ஆட்சியாளர்களும்.

மூன்றாவது - அந்த அரசுக்கு ஒருபுறம் தலையிடியாகவும் அதேசமயம் அந்த அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சதா ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் மாற்றுத் தரப்பாக தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சி.

இந்த மூன்று தரப்புகள் ஒவ்வொன்றும் மற்றைய இரு தரப்புகள் மீதும் சுமத்துகின்ற குற்றச்சாட்டு விசித்திரமானது.

இன்று ஆட்சிப்பீடத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து இன்றுவரை புலிகள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. க. ஆகியவை மீது ஒரே பாணியிலான குற்றச்சாட்டையே சுமத்தி வருகின்றார். ஐ.தே. கட்சியினரும் புலிகளும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றார்கள் என்பதே அதுவாகும்.

கடந்த ஞாயிறன்று குருநாகலில் நடந்த தமது பெரும் பிரசாரக் கூட்டத்திலும் கூட இதனையே அவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், புலிகள் ஐ. தே. க. இரகசிய ஒப்பந்தம் இருப்பதாகத் தெரிவித்து, பெரும் பரப்புரைகளை மேற்கொண்ட மஹிந்தர் அணி, அதன் மூலம் தென்னிலங்கையை பிழையாக வழிநடத்த ஏமாற்றி, கணிசமான வாக்குகளைச் சுருட்டி, ஒருவாறு சமாளித்துக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெற்றது.

அந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் இந்தப் பிரசாரம் ஓயவில்லை. புலிகளுக்கு சார்பாக - அவர்களோடு சேர்ந்து - ஐ. தே. கட்சி செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டே ஆளும் தரப்பால் தொடர்ந்து முழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இதே பிரசாரத்தை மறுபுறமாகத் திருப்பிப்போட்டுத் தனது பரப்புரைகளை முன்னெடுக்கிறது பிரதான எதிரணிக்கட்சியான ஐ. தே. க.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலேயே மஹிந்த - புலிகள் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று குற்றம் சுமத்தும் ஐ.தே. கட்சி, அதன் அடிப்படையிலேயே தமிழர் தாயகத்தில் ஐ.தே.க. தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளைத் தடுக்கும் விதத்தில் தேர்தல் பகிஷ்கரிப்பு நாடகத்தைப் புலிகள் அரங்கேற்றினார்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் பின்னரும் புலிகளுக்குப் பெரும்தொகைப்பணம், மஹிந்த ராஜபக்ஷ தரப்பினால் வழங்கப்பட்ட பின்னர் இப்போதும் கூட மஹிந்தர் - புலிகள் கூட்டுச் செயற்பாடு இரகசியப் புரிந்துணர்வோடு தொடர்கின்றது என்பதுதான் ஐ. தே. கட்சி தற்போதும் முன்னெடுக்கும் வாதம்.

கிழக்கை முழுவதுமாக அரசுப் படைகள் மீட்டுவிட்டன என்று அறிவிக்கும் விதத்தில் கிழக்கு மாகாணத்தில் கடைசியாக முன்னெடுக்கப்பட்ட தொப்பிகல சமரிலும் கூட இந்தப் புரிந்துணர்வு, அரசு புலிகள் இணக்கப்பாடு, நீடித்தது என்றும், அதனடிப்படையிலேயே தொப்பிகல காட்டுப் பகுதியில் பல நூற்றுக்கணக்கில் நிலைகொண்டிருந்த புலிகளின் உறுப்பினர்களும், பிராந்தியத் தலைவர்களும், தங்களது வலிமையான ஆயுதங்களோடு இழப்பின்றித் தப்பிச்செல்ல ஒழுங்குகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர் என்றும் ஐ. தே. கட்சி கதை விடுகின்றது.

இப்படி சிங்கள ஆளும் தரப்பின் பக்கத்தில் இரண்டு பெரிய கட்சிகளுமே ஒன்று மற்றொன்றை புலிகளின் நேச சக்தியாக அடையாளப்படுத்துதன் மூலம் தனது செல்வாக்கை - ஆதரவை - தெற்கில் வளர்த்துக் கொள்ளப் படாதபாடு படுகின்றன.

சரி. மூன்றாவது தரப்பான புலிகள் என்ன கூறுகின்றார்கள்?

ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை - நீதியுடன் கூடிய உரிமைக்குரலை - கௌரவத்துடன் கூடிய வாழ்வை - மறுத்துரைப்பதில் தென்னிலங்கைச் சிங்களம் ஐக்கியப்பட்டே நிற்கின்றது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைப்பதற்குமாக தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என்று கன்னை பிரித்துத் தங்களுக்குள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும் கூட, தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுப்பதிலும் தமிழரின் தேசிய எழுச்சியை அடக்குவதிலும், அரச ஒடுக்குமுறையைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதிலும் அவர்கள் தமக்குள் ஐக்கியப்பட்டு, ஒரே முனைப்பாகவே செயற்பட்டு வருகின்றனர். தமிழர் பக்கத்தில் உள்ள வரலாற்று நியாயங்களையோ, அவற்றில் பொதிந்துகிடக்கும் உரிமைக்கான நீதிப்பண்புகளையோ புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ திராணியோ அவற்றுக்குக் கிஞ்சித்தும் கிடையாது.

பௌத்த - சிங்களத் தேசப்பற்றாளர்களாகத் தங்களை இனங்காட்டி, எதிராளிக் கட்சிக்காரரைக் காட்டிலும் தமிழ் விரோதப் போக்கில் தாங்கள் சூரர்கள் என்பதை வெளிப்படுத்தி, அதன் மூலம் தென்னிலங்கை சிங்கள அரசியல் லாபம் தேடும் கீழ்த்தரமான தந்திரோபாயப் போக்கைக் கைக்கொள்ளும் சிங்களத் தலைமைகள் இரண்டுமே, தமிழர் அடக்குமுறை விவகாரத்தில் ஒன்றித்தே - ஒரு நிலைப்பாட்டிலேயே - நிற்கின்றன.

இவ்வாறு முத்தரப்பில் ஒவ்வொரு தரப்பும், மற்றைய இரண்டு தரப்புகள் சேர்ந்து தமக்கு எதிராகச் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில் இலங்கையின் அரசியல் போக்கு நகர்ந்து செல்கிறது.

இதில் சிங்களத் தரப்புகள் இரண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் குறுகிய அரசியல் லாபத்துக்காகத் தமது குற்றச்சாட்டுகளை இப்படி முன்வைக்கின்றன என்பதும் -

தமிழர் தரப்போ தனது உயிர்வாழ்வுக்கான - இருப்புக்கான - வாழ்வா, சாவா போராட்டத்தின் யதார்த்த நிலைமையை அம்பலப்படுத்திக் காட்டும் விதத்தில் அக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றது என்பதும் -

துலாம்பரமாக வெளிப்படும் - தோற்றும் - உண்மையாகும்.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.