Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

  • சே.பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மாதிரி படம்

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரும் பொதுவான விளக்கம். அண்மையில் உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கோரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை 52 குழந்தைகள் குப்பையிலும் தெரு ஓரங்களிலும் மீட்கப்பட்டன. இவற்றில் நான்கு குழந்தைகள் நாய்களும் எலிகளும் கடித்து பரிதாபமாக உயிரிழந்தன. ஒருவேளை தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் திட்டம் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் முக்கிய இடங்களில் அரசின் தொட்டில்கள் ஆட வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது.

"தொட்டில் குழந்தை திட்டத்தைத் தற்போது செயல்படுத்துவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் முகமது.

மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் என்று ஒன்று இருப்பதை அரசு மறந்துவிட்டது. மக்களிடம் இதுகுறித்துப் பெரிதாக எந்தவொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை என்ற அமைப்பு இருப்பது பெரும்பாலான கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வீதியில் வீசுவதற்கு முன்பு குழந்தைகளுக்கு என்றே தனியாக அரசுத்துறை இருப்பது தெரிந்திருந்தால் குழந்தையை வீதியில் வீசுவது தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான முறையில் மக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதைச் சரியாகச் செயல்படுத்தினால் நிச்சயமாக குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும்," என்றார்.

 

தொட்டில் குழந்தை திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தையை வளர்க்க, பாதுகாக்க இயலாது என உணரும் எவருடைய குடும்பமும் தயங்காது 1098 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து, "குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார் குழந்தைகள் நலத்துறையின் முன்னாள் உறுப்பினர் குளோரி ஆனி.

மேலும், "குழந்தையை வீதியில் வீசி எறியாமல் அரசிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை பாதுகாப்பான ஓர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, அரசு முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டு, நல்லதொரு குடும்ப சூழ்நிலையில் வளரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமாக காவல்நிலையங்களில் பதாகைகள் வைக்க வழிவகைகளைச் செய்தல் வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அநீதியின் விளைவாக, குழந்தைகளை ஈனுமளவுக்கு நிலைமை கைமீறிச் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு சட்ட நெறிமுறைகளுடன் கூடிய மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலத்துறையுடன் அணுகி காவல்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும், 'குழந்தைகளை வளர்க்க இயலாது எனில் 1098 என்ற எண் வழியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தை அணுகி குழந்தைகளை ஒப்படையுங்கள், ரகசியம் பேணப்படும். சட்டத்திற்குப் புறம்பாகத் தத்துக் கொடுத்தல், குழந்தை திருமணம் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றம், போக்சோ (POCSO) வழக்கு பதியப்படும், போக்சோ வழக்கில் பிணை கிடையாது', என்ற வாசகங்கள் அடங்கிய பலகை/பதாகைகள் , போஸ்டர்கள் பொருத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்," என்றார்.

 

தொட்டில் குழந்தை திட்டம்

"1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் வந்தபோது இருந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை விடத் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. சமூக நலத் துறையாக இருந்தது தற்போது சமூகப் பாதுகாப்புத்துறையாக மாறியுள்ளது. இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும் 'தோழமை' அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்.

மேலும் இவர், "குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. இவர்கள் எளிதில் நாசமாக்கப்படலாம். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அறியாத பழக்கத்தாலோ பாலியல் வல்லுறவினாலோ குழந்தையை ஈன்றால், அதற்குத் தாய் குற்றவாளி இல்லை. அந்தக் குழந்தையும் குற்றவாளி இல்லை. 1991இல் தொட்டில் குழந்தை திட்டத்தில் நிறைய குழந்தைகள் வீசப்பட்டன.

தற்போது விழிப்புணர்வு காரணமாக இந்த எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது. முறை தவறிய உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் துாக்கி வீசப்படும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு அமைப்பு இருப்பது பெற்றோர்கள் சமுதாயத்திற்கு முழுமையாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இதுபோல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மற்றும் குழந்தையை சமூகம் தவறாகப் பேசக்கூடாது.

குழந்தையைத் துாக்கி எறியும் தாய்மார்கள் கர்ப்பகால சிகிச்சை பெற்றார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமீபகாலமாக இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இளம் பெண்களுக்கு வாழ்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை எனப் பல துறைகளுக்குத் தொடர்புள்ளது.

 

தொட்டில் குழந்தை திட்டம்

 

படக்குறிப்பு,

"இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் தேவநேயன்

ஆனால் மேற்கண்ட இந்த பல்நோக்கு துறைகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதா என்று பார்த்தால் கிடையாது. மேற்கண்ட துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீராகச் செயல்பட்டால் மட்டுமே குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் முன்பே தடுத்து நிறுத்த முடியும்," என்றார்.

சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய நாள் முதல், தற்போது வரை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார்கள்.

அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள தொட்டில்களில் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை உசிலம்பட்டிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கிருக்கும் மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற இந்த துயரச் சம்பவத்தை அடுத்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை,காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குழந்தைகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

https://www.bbc.com/tamil/india-61846282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.