Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்த்தமில்லாத அரசியலமைப்பு திருத்த வரைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமில்லாத அரசியலமைப்பு திருத்த வரைவு

political.jpg

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை முழுமையாக ஒழிக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு சட்டவாதி ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைப்பதற்கான அரசியலமைப்பு திருத்த வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்கு அனுமதிக்கப்படுவாரேயானால், அவரின் வரைவு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு நீதி, அரசியலமைப்பு சீர்திருத்த மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவு பிரகாசமான உதாரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்தஏப்ரிலில் சமர்ப்பித்த திருத்தவரைவு 21ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் என்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்ததால் அமைச்சர் விஜேதாச சமர்ப்பித்திருப்பது 22 திருத்தவரைவு என்று குறிப்பிடப்படுகிறது.அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவுடன் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் என்றே அமையும்.

மக்களின் வீதிப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தவேளையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானதாகவே புதிய வரைவு அமைந்திருக்கிறது.

மே 11 நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மைத்திரி - ரணில் அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளைக் கூட ஆதரிக்கத்தயாராயிருப்பதாகவும் உறுதியளித்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்கு பிறகு மக்கள் போராட்டங்கள் ஓரளவு தணிந்தநிலையில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தவரைவு 19 ஆவது திருத்தத்தின் மிகவும் பலவீனமான ஒரு வடிவமேயாகும்.

ஜனாதிபதி கோட்டாபய தனக்கு முன்னைய ஜனாதிபதிகளை விடவும் கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்காக 2020 ஒக்டோபரில் கொண்டுவந்த 20 ஆவது திருத்தத்தின் கீழ் அவர் அனுபவிக்கி்ன்ற அதிகாரங்களில் பலவற்றை 22 ஆவது திருத்தவரைவு தொடர்ந்து அனுமதிக்கிறது.

Thana_01.jpg

இந்த திருத்தத்தின் மூலமாக குறைக்கப்படுவதாக கூறப்படுகின்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் கூட தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.அதாவது தனது பதவிக்காலம் முடிவடையும்வரை கோதாபய தற்போதைய அதிகாரங்களில் கணிசமானவற்றை தன்வசம் தொடர்ந்து வைத்திருப்பார் என்பதே அதன் அர்த்தம்.

நாடு இன்று எதிர்நோக்குகின் முன்னென்றுமில்லாத பொருளாதார,அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பெருமளவுக்கு பொறுப்பானவர் என்று குற்றஞ்சாட்டி மக்கள் எந்த ஜனாதிபதியை வீட்டுக்குப்போகுமாறு கேட்கிறார்களோ அதே ஜனாதிபதியை அதே அதிகாரங்களுடன் பதவிக்காலம் முடியும் வரை அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கும் ஒரு அரசியலமைப்பு திருத்தவரைவு உண்மையில் மக்களை பெரிதும் அவமதிக்கிறது.

தனது பதவிக்காலத்தின் முடிவுவரை முழுமையான அதிகாரங்களுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் தொடருவதற்கு விடாப்பிடியாக நிற்கும் கோட்டாபயவின் குறுகிய நோக்கத்துடனான நலன்களுக்கு வசதியான முறையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் விஜேதாசவும் செயற்பட்டிருக்கிறார்கள் என்று இந்த வரைவை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

குறைந்தபட்சம் 19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் இருந்த அளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கவேண்டும்.மாறாக, 20 ஆவது திருத்தத்தில் இருக்கும் பெரும்பாலான கடுமையான அதிகாரங்களுடன் கோதாபய பதவியில் தொடரப்போகின்றார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.“மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். இரண்டாவது கட்டமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான இன்னொரு திருத்தம் வரும் என்று மக்கள் நம்பவேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.அவ்வாறான எந்த நோக்கமும் இல்லை.தற்போதைய உடனடித்தேவை ஒரு முறைமை மாற்றமே (System Change) யாகும்.அதைத்தான் மக்கள் கேட்கிறார்கள்“ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் போராட்டங்களின் நெருக்குதல்களில் இருந்து ஓரளவுக்கு விடுபடக்கூடிய கால அவகாசம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி 22ஆவது திருத்தவரைவை நிறைவேற்றிவிடப் பார்க்கிறார்கள். மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 19 ஆவது திருத்தத்துக்கு எந்த வகையிலும் அண்மையானதாக புதிய வரைவு இல்லை.விக்கிரமசிங்க மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் தவறாகப் போய்விட்டது என்று அரசியலமைப்புச் சட்டநிபுணரான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன கூறுகிறார்.

Thana_02.jpg

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீனமான குழுவாக செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 41 எம்.பி.க்களின் சார்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் விஜேதாச ராஜபக்ச சமர்ப்பித்த 21ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவை திரும்பிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதேகாலகட்டத்தில்பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த வரைவைப் போன்று விஜேதாசவின் வரைவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்குமாறு கோரவில்லை. மத்தும பண்டாரவின் வரைவு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு மீண்டும் செல்வதற்கான ஏற்பாட்டையும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவுசெய்வதற்கான ஏற்பாட்டையும் கொண்டிருந்தது.

விஜேதாசவின் வரைவு ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமான அளவுக்கு குறைத்த 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கோரியதுடன் அரசியலமைப்பு பேரவையை(Constitutional Council) பலப்படுத்தக்கூடிய ஏற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது.. ஜனாதிபதி அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் தன்னெண்ணப்படி நியமிக்க இயலாது என்பதுடன் அவர்களின் நியமனங்களையும் பொறுப்புக்களையும் மாற்றமுடியாது. அவ்வாறு செய்வதானால் பிரதமரின் ஆலோசனையின் மீதே செய்யமுடியும் என்ற ஏற்பாடும் விஜேதாசவின் வரைவில் இருந்தது.

ஆனால்,மூன்று மாதங்களுக்குள் அந்த வரைவின் ஏற்பாடுகளுக்கு முற்றிலும் முரணான திருத்த வரைவை இப்போது அமைச்சர் என்ற வகையில் விஜேதாசசமர்ப்பித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. 22 ஆவது திருத்தவரைவில்ஜனாதிபதி தொடர்ந்தும் வைத்திருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் மூன்று முக்கிய சர்ச்சைக்குரிய விடயங்கள் அரசியலமைப்பு சட்ட நிபுணர்களினால் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதாவது பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் இருக்கும் ; அமைச்சரவையை நியமிப்பதிலும் அமைச்சர்களின் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஒதுக்குவதிலும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் கொண்டுவரப்படுகின்ற கட்டுப்பாடுகள் அடுத்த பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் ; அரசியலமைப்பு பேரவையில் அரசாங்க உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்களாக இருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அதன் வகையும் தொகையும் சூட்சுமமான முறையில் தீர்மானிக்கப்படுகிறது.

20ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள அரசியலமைப்பு பேரவையின் தொடர்ச்சியாகவே புதிய திருத்தத்தின் ஏற்பாட்டிலும் அந்த பேரவை அமைகிறது.ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாகஇருந்தால் 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையில் 7 உறுப்பினர்கள் அரசாங்க தரப்பினராக இருப்பர்.பேரவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்பட்சத்தில் “சுயாதீன ஆணைக்குழுக்கள் ” சுயாதீனமானவையாக இருக்கமுடியாது.

பாராளுமன்ற கூட்டத்தொடரை தான் விரும்புகின்ற வேளையில் ஒத்திவைப்பதற்கும் (Prorogation) பாராளுமன்ற பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அதன் அங்கீகாரமின்றி அதை கலைப்பதற்கும் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.அதனால் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மீதான ஜனாதிபதியின் கட்டுப்பாடு தொடர்கிறது.

பிரதமரின் ஆலோசனையின் மீதே அமைச்சர்களையும் பிரதி யமைச்சர்களையும் ஜனாதிபதி நியமிக்கலாம் என்று 19 ஆவது திருத்தத்தில் இருந்த ஏற்பாடு பாராளுமன்றத்தை பெரிதும் பலப்படுத்தியது.அத்துடன் ஜனாதிபதி தனது விருப்பத்தின்படி பிரதமரை பதவி நீக்குவதற்கு இருந்த அதிகாரமும் அந்த அரசியலமைப்பு திருத்தத்தில் அகற்றப்பட்டது.

அதன்படி பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைக் கொண்டிருக்கும்வரை அவரை நீக்கமுடியாது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விக்கிரமசிங்கவை 2018அக்டோபரில் பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தபோது இது நிரூபிக்கப்பட்டது.52 நாள் அரசியலமைப்பு சர்ச்சைக்கு பிறகு பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்ஷ பதவி நீக்கப்பட்ட பிறகு மீண்டும் விக்கிரமசிங்க பிரதமராக முடிந்தது.19 ஆவது திருத்தத்தின் கீழ் பிரதமரை பதவிநீக்கும் விவகாரம் முற்றிலும் பாராளுமன்றத்தின் செயற்களத்திலேயே இருந்தது.

Thana_03.jpg

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பிரதமரைப் பதவி நீக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு மீண்டும் கொடுத்தது. ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படவேண்டும் என்ற ஏற்பாட்டை 22ஆவது திருத்தவரைவு மீணடும் கொண்டுவருகிறது.ஆனால் அடுத்த பாராளுமன்றம் தெரிவான பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்பதால் அது தற்போதைய தருணத்தில் பயனற்றதாகிறது.மறுவார்த்தைகளில் சொல்வதானால் பழைய பாணியிலேயே கோதாபய ஆட்சியைத் தொடரப்போகிறார் என்று கலாநிதி விக்கிரமரத்ன கூறுகிறார்.

நாட்டை வங்குரோத்து அடையச்செய்த ஒரு ஜனாதிபதி தனது அதிகாரங்களில் பலவற்றை தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு வகைசெய்யும் இடைக்கால ஏற்பாடுகளைக்கொண்ட இந்த திருத்தவரைவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.அதை கொண்டுவருவதன் மூலம் அரசாங்கம் இன்றைய நெருக்கடி நிலைவரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது.வீதிப்போராட்டங்கள் மீண்டும் தீவிரமடையவே இது வழிவகுக்கும்.

தனது திருத்த வரைவு விமர்சிப்பவர்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு போகாமல் எத்தகைய திருத்தத்தை வரையமுடியும் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறும் விஜேதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியினர் இதை புரிந்துகொண்டிருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவுடன் நிறைவேற்றப்படுவதுடன் சர்வஜனவாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டிய தேவையைக் கொண்டவை என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பல ஏற்பாடுகளைக் கொண்ட 21ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவை முன்வைத்திருக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சர்வஜன வாக்கெடுப்பை தவிர்க்கவேண்டும் என்பதற்காக மக்களின் ஆணையை இழந்துவிட்ட ஒரு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவியில் தொடர அனுமதிக்கும் வகையிலான திருத்தம் ஒன்றை நாட்டின் மீது திணிப்பது எந்த தர்க்க நியாயத்துக்கும் பொருந்தாத ஒருவாதமாகும். பிரதமர் விக்கிரமசிங்க தனது கட்சியின் ஒரேயொரு உறுப்பினராகவே பாராளுமன்றத்தில் இருக்கிறார்.பொதுஜன பெரமுனவின் தயவிலேயே அவரின் பதவி இருப்பதால் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அவர் இழக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

அதனால் அவசரநிலையொன்று ஏற்படும்பட்சத்தில் பிரதமரை பதவிநீக்குவதற்கான அதிகாரம் தொடர்ந்தும் தன்னிடம் இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய விரும்புவதாக வெளிப்படையாகவே விஜேதாச ஒத்துக்கொள்கிறார்.22 ஆவது திருத்த வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது பொதுஜன பெரமுனவின் ஆதரவிலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கிறது என்று கூறுவதன் மூலம் அவர் அரசாங்கத்தின் போக்கை இன்னமும் ராஜபக்ஷக்களே தீர்மானிக்கிறார்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறார் எனலாம்.

இறுதியாக,20 வது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது விஜேதாச தனதுரையில் தெரிவித்த முக்கிய கருத்தை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

“ 20 வது திருத்தம் ஜனாதிபதிக்கு அதிவிசேடமான அதிகாரங்களை வழங்குகிறது. இது ஆபத்தான போக்காகும்.இந்த திருத்தம் இலங்கையை அமெரிக்காவின் குடியேற்ற நாடாக்குவதற்கு வழிவகுக்கும்.எமது நாட்டுக்கு பொருத்தமான முறையில் இந்த திருத்தம் வரையப்பட்டதாக நான் நம்பவில்லை.“ 

இவ்வாறு கூறிவிட்டு அதே 20 வது திருத்தத்துக்கு ஆதரவாக விஜேதாச வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம். இப்போதும் 22 வது திருத்த வரைவிலும் அதே சந்தர்ப்பவாதமே வெளிப்படுகிறது.

 

 

https://www.virakesari.lk/article/130919

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.