Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை தாமதமின்றி ஜனாதிபதி அமைக்கவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை தாமதமின்றி ஜனாதிபதி அமைக்கவேண்டும்

Tricycle-Driver_-Ranil-Wickremesinghe_-S

 

கலாநிதி ஜெகான் பெரேரா

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது வாழ்க்கைக் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்வதற்கு இந்த முச்சக்கரவண்டி சாரதி கொஞ்சமேனும் தயங்கவில்லை. தனது பெற்றோல்கோட்டாவை பெறுவதற்கு இரு நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியிருந்தது என்று கூறினார்.

தனது மூன்று பிள்ளைகளுக்கும் தினமும் காலைவேளையில் சிறிய பிஸ்கட் பக்கெட்டுகளையும் பால் பக்கெட்டுக்களையும் வாங்கிக்கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் இப்போது செலவுகளைக் குறைக்கவேண்டும் என்பதற்காக அந்த மூவரும் பகிர்ந்து உண்பதற்காக ஒரு பிஸ்கட் பக்கெட்டையே கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்று கூறினார்.

அவர்களது அன்பான தேசம் தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்திப்பதன் விளைவு இது. அந்த தோல்விகளுக்கெல்லாம் பிள்ளைகளோ அல்லது தேசமோ காரணமல்ல.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தோ அல்லது உதவி வழங்கும் நாடுகளிடமிருந்தோ குறிப்பிடத்தக்க அளவில் உதவிகளை பெறுவதில் முன்னேற்றம் ஏற்படுவதாக இல்லை என்பது பிந்திய தோலவியாகும்.

பல நாடுகள் இலங்கைக்கு நன்கொடைகளை செய்கின்றன. ஆனால் அவை இலட்சக்கணக்கில் தான் கிடைக்கின்றன. டொலர் தட்டுப்பாட்டு சிக்கலில் இருந்து இலங்கை விடுபடவேண்டுமானால், கோடிக்கணக்கில் உதவிகள் கிடைத்தாக வேண்டும்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டபோது மக்களை ஆரோக்கியமானவர்களாக வைத்திருப்பதற்கும் பொருளாதாரத்தை இயங்கச்செய்வதற்கும் எரிபொருட்கள்,உணவு மற்றும் மருந்து வகைகளை பெறுவதற்கு நாட்டுக்கு தேவையான கோடிக்கணக்கான டொலர்களை அவர் கொண்டுவருவார் என்று பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அந்த மாதிரி எதவும் நடக்கவில்லை.பயன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை.சர்வதேச நாணய நிதியம் அதன் அதிகாரிகள் இலங்கைக்கு 10 நாள் விஜயத்தை மேற்கொண்டு திரும்பிச்சென்ற பிறகு காரணங்களைக் கூறியிருக்கிறது. விஜயத்தின் முடிவில் அந்த அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் ஊழல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கவேண்டிய அவசியம் பற்றி விசேடமாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு உதவி வழங்குனர்கள் மற்றும் மேற்கத்தைய அரசாங்கங்கள் என்ற வடிவில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்னதாக அரசியல் உறுதிப்பாடும் ஊழலற்ற நிர்வாகமும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கின்றது.

தற்போதைய நெருக்கடியைக் கையாளுகின்ற விடயத்தில் நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டையும் ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதையும் உத்தரவாதப்படுத்திக் காட்டவேண்டியதே அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவசரத் தேவையாக இருக்கிறது.இந்த விடயங்களில் அரசாங்கத் தலைவர்கள் வெறுமனே வாயாமூல உறுதிமொழிகளை அளிப்பது மாத்திரம் போதாது.

சர்வதேச சமூகத்தினதும் இலங்கை மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அரசியல் ஏற்பாடுகள் தேவை.அரசாங்கம் பற்றுறுதியுடன் செயற்படுகிறது என்பதற்கான உத்தரவாதங்கள் தேவை.சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்படக்கூடிய உடன்படிக்கை வரும்போது குறிப்பிடத்தக்க பெருமளவிலான உதவிகளை செய்வதாக பல வெளிநாட்டு அரசாங்கங்கள் கூறியிருக்கின்றன.

இதுவரையில் அரசாங்கம் அதன் பொறுப்புக்கூறலுக்கான முறைமைகள் நம்பகத்தன்மைவாய்ந்தவை என்று சர்வதேச சமூகத்தை நம்பச்செய்வதில் வெற்றிபெறவில்லை. இலங்கைக்கு கோடிக்கணக்கில் அல்லாமல் இலட்சக்கணக்கில் உதவிகள் கிடைப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள்

அரசியலமைப்புக்கான 22 வது திருத்த வரைவு தற்போது பாராளுமன்றத்தின் முனானால் இருக்கிறது. நிலைவரங்களைச் சீர்செய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய பற்றுறுதியை வெளிக்காட்டுவதற்கு அது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த திருத்த வரைவு அரசியலமைப்பு பேரவையை நிறுவுதல், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் இரட்டைக்குடியுரிமை ஆகிய மூன்று அம்சங்களில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

ஆனால், அமைச்சரவை அங்கீகரித்த இந்த வரைவு எதிரணி அரசியல் கட்சிகளினாலும் சிவில் சமூக குழுக்களினாலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விடவும் மிகவும் பலவீனமானதாக இருக்கிறது.எந்த பயனையும் தரமுடியாத அளவுக்கு வரைவு தளர்த்தப்பட்டிருக்கிறது.

உண்மையில் இது தோல்வி காணவேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டதாக தோன்றுகிறது. ஏனென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கு அவசியமான பல்வேறுபட்ட கட்சிகளினதும் குழுக்களினதும் ஆதரவை இது பெறவதற்கான சாத்தியமில்லை.

முதலாவதாக, அரசியலமைப்பு திருத்த வரைவு ஜனாதிபதியின் அதிகாரங்களை எந்த விதத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கவில்லை.அடுத்த ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நடைமுறைக்கு வரத்தக்கதாகவே ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறைப்பை இந்த வரைவு செய்திருக்கிறது.

தனது தோல்வியைப் பகிரங்கமாக ஒத்துக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி தனது அடாத்தான தற்துணிபின் பேரில் பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிப்பதற்கும் பதவி நீக்குவதற்கான அதிகாரங்களை தொடர்ந்தும் கொண்டிருக்கப்போகிறார்.

மிகவும் உயர்மட்ட அரசாங்க சேவை அதிகாரிகளான அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்குமான அதிகாரங்களையும் இந்த ஜனாதிபதி கொண்டிருப்பார்.சுருக்கமாக சொல்வதானால் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரக் கூறுகள் ஜனாதிபதியின் தேவைகளுக்கு இசைவாக செயற்படவேண்டும் அல்லது தங்களது பதவிகளை இழக்கவேண்டிவரும்.

இது பாராளுமன்றத்தில் தனது கட்சிக்கு தனியொரு ஆசனத்தைக் கொண்டிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சுயாதீன பலத்தையே கொண்டிருக்கிறார் என்பதையும் ஜனாதிபதியின் விருப்பு வெறுப்பில்தான் அவரது பதவி தங்கியிருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுகிறது.

இரண்டாவதாக, திருத்த வரைவு பொறுப்புக்கூறும் கடப்பாடு மற்றும் ஊழல் விரோத நோக்கங்களுக்கான தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் (Checks and Balances) ஏற்படுத்தும் முறைமையொன்றை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பிலான முன்னோடி நடவடிக்கையாக அமைந்தது 2001 ஆம் ஆண்டின் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும்.

அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அந்த திருத்தம் கொண்டிருந்தது.அதன் பிரகாரம் சகல அரச நிறுவனங்களும் பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் எதிர்ப்பு பொறுப்புக்களைச் செயற்படுத்தவேண்டியவையாக இருந்தன.இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு,பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே நீதித்துறை உயர்பதவிகளும் செய்யப்பட வேண்டியிருந்தது. அரசியலமைப்பு பேரவையின பத்து உறுப்பினர்களில் 7 பேர் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடும் 17 ஆவது திருத்தத்தில் இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக, தடுப்புக்கள் மற்றும் சமப்படுத்தல்கள் கோட்பாட்டுக்கு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில் 22 ஆவது திருத்த வரைவில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களின் வகையும் தொகையும் தொடர்பான ஏற்பாடு 17 ஆவது திருத்தத்தின் ஏற்பாட்டுக்கு முற்றிலும் மாறாக அமைந்திருக்கிறது.இது தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளை அரசியல்மய நீக்கம் செய்யும் ஏற்பாடுகள் குறித்து அரசியல் தலைமைத்துவத்துக்கு இருக்கும் பீதியை வெளிக்காட்டுகிறது.

அரசியலமைப்பு பேரவையின் பத்து உறுப்பினர்களில் 7 பேர் அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதியினாலும் நியமிக்கப்படுவார்கள். இது பெரும்பான்மையான அரசியலபை்பு பேரவை உறுப்பினர்கள் அரசாங்கதரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாக கொண்டதாகும்.மூவர் மாத்திரமே சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

திருத்தவரைவின் இந்த ஏற்பாடு அரசியலமைப்பு பேரவையினால் நியமனங்கள் செய்யப்படுகின்ற நிறுவனங்களின் சுயாதீனத்தை மலினப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கிறது.ஊழலைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கும் இது பாதிப்பாக அமையும்.

அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவுகின்ற தட்டுப்பாட்டைப் பொறுத்தவரை பாரிய ஊழல் இடம்பெறுகிறது என்று பெற்றோலுக்கும் டீசலுக்கும் முடிவற்ற வரிசைகளில் காத்துநிற்கும் மக்கள் சீற்றமடைவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வரும் என்று ஒரு வாரத்துக்கு முன்னர் அரசாங்கம் உறுதியளித்தது.

பிறகு இப்போதைக்கு கப்பல்கள் வரும் சாத்தியமில்லை என்று காரணம் கூறாமலேயே செய்திகள் வந்தன. வேறு நாடுகளில் என்றால் அரசாங்க தலைவர்கள் இதுவரையில் பதவி விலகியிருப்பார்கள். எரிபொருட்கள் இல்லாத காரணத்தால் கிராமமப்புற விவசாய பண்ணைகளில் மரக்கறி வகைகள் அழுகுகின்றன.

நகர்ப்புறச் சந்தைகள் வெறுமையாக காணப்படுகின்றன. விலைகள் கடுமையாக அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதேவேளை, வசதிபடைத்தவர்களுக்கும் அரசியல் செல்வாக்குடையவர்களுக்கும் பெரும் தனவந்தர்களுக்கும் எரிபொருள் விநியோகத்தில் விசேட சலுகை காட்டப்படுவதாக ஊடகங்கள் மோசடிகளை அம்பலப்படுத்துகின்றன.

மக்கள் எதிர்பார்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.ஊழல் நடவடிக்கைகளை பொறுத்தவரை நிலைவரம் மேலும் மோசமாகிக்கொண்டேபோகிறது.

இலங்கை மக்கள் மிகுந்த பொறுமை காக்கிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டவேண்டும். சமூக ஒருமைப்பாட்டு பிணைப்புகள் இன்னமும் வலுவாக இருக்கின்றன. ஆனால் தன்னலம் கருதிச் செயற்படுகின்ற -- தகுதியற்ற அரசியல் தலைவர்கள் மீதான மக்களின் கோபம் கொதிநிலையை அடைகிறது. மே 9 இதை நாடு கண்டது.

பாராளுமன்றத்தில் உள்ள கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

பதிலாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி நியமித்தார். அதன் மூலமாக தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகள் முடிவுக்கு வந்தன.

மே மாதம் இடம்பெற்ற எதிர்பாராத படுமோசமான வன்முறைகளை அடுத்து ஜனாதிபதி தனது அதிகாரங்களைக் குறைப்பதாகவும் அந்த அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு மாற்றுவதாகவும் 15க்கும் மேற்படாத அமைச்சர்களுடன் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாகவும் நாட்டுக்கு உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. அதை அவர் நிறைவேற்றி அடுத்து தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். விரைவாக இதைச் செய்யவேண்டியது நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவர அவசியமானதாகும்.

 

 

https://www.virakesari.lk/article/130955

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.