Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத் தொடர் நடந்ததும் நடக்கப்போவதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத் தொடர் நடந்ததும் நடக்கப்போவதும்

 

 

 

. வி. கிருபாகரன் –பிரான்ஸ்

. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை சபை, தற்பொழுது தனது 50வது கூட்டத் தொடரை நடத்தியுள்ளது. இக் கூட்டத் தொடரிற்கு ஆஜன்ரினாவின் ஐ.நா.பிரதிநிதி, . பெடிறக்கோ வீலீகஸ், பிராந்திய சுற்றின் அடிப்படையில், 2022ம் ஆண்டிற்கான தலைவராக கடமையாற்றுகிறார்.

.நா.மனித உரிமை சபை என்றவுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழீழ மக்களிற்கு, விசேடமாக பாதிக்கப்பட்ட மக்கள் இச் சபையின் செயற்பாடுகள் பற்றி, தினமும் மிகவும் அக்கறையாக உன்னிப்பாக அவதானமாக பார்ப்பது வழமை. அந்த அடிப்படையில், இச் சபையினால்,
இலங்கை விடயத்தில் இது வரையில் பல தீர்மானங்கள் படிப்படியாக, 2012ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பொழுதிலும், இவை எதுவும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு – அதாவது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தவர்கள், உறவினர்கள், நெருங்கியவர்களிற்கு  போர் முடிந்து ஏறக்குறைய பதின்மூன்று வருடங்களாகியும் ஆக்கபூர்வமாக எதுவும், செய்யப்படவில்லை.

(இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் – 19/2, 22 மார்ச் 2012; 22/1, 21 மார்ச் 2013; 25/1, 27 மார்ச் 2014; 30/1, 1 ஒக்டோபர் 2015; 34/1, 23 மார்ச் 2017; 40/1, 21 மார்ச் 2019; 46/1, 23 மார்ச் 2021. இதேவேளை S11/1, 27 மே 2009 தீர்மானத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்).

இதேபோன்றே,உறவினர்களை இழந்தவர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் பல தசாப்தங்களாக வாடும் தமிழ் கைதிகளின் நிலைமையும். சுருக்கமாக கூறுவதானால், சிங்கள பௌத்த அரசுகளினால், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  மனித உரிமை மீறல், போர் குற்றம், இன அழிப்பு போன்றவற்றிற்கு சரியான பரிகாரம் இன்றுவரை சர்வதேசத்தினால் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

நிற்க, இது பற்றி சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள், .நா.வின் முக்கிய புள்ளிகளிடம் வினவினால், பதில் மிகவும் வியப்பிற்குரியது. காரணம் அவர்களை பொறுத்தவரையில் இன்று வரை இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் யாவும் மாபெரும் வெற்றிக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.காரணம், முதலாவதாக சிறிலங்கா அரசின் சர்வதேச பரப்புரையை யாரும் குறைத்து கணிப்பிட முடியாது. இரண்டாவதாக, நிச்சயம் எமக்கு எமது அழிவுகள், விபரீதங்கள் பெரிதானவை. ஆனால், அவர்களை பொறுத்தவரையில், .நா.வின் அங்கத்துவ நாடுகளான 193 டன், அடுத்து பார்வையாளராக உள்ள 2 நாடுகளையும் சமனாக தாம் நடத்த வேண்டும் என்பது அவர்களது விவாதம்.அத்துடன் சர்வதேச செயற்பாட்டாளர் பார்வையில், சிறிலங்காவின் விடயங்கள் சர்வதேச நீதியை நோக்கி முன்னேறி செல்கிறது.

இவர்களின் விவாதங்களில் ஒன்று – ஆர்மெனியா படுகொலை இன அழிப்பு. இதை உலகம் ஏற்று கொள்வதற்கு எழுபது வருடங்கள் சென்றுள்ளது என்பது உண்மை.

5568cadf16f7c.jpgயதார்த்தம் என்னவெனில், போராட்ட காலங்களில் சிறிலங்கா அரசுகளின் பரப்புரைக்கு நிகராக சென்ற எமது சர்வதேச பரப்புரை, மிக அண்மை காலமாக பின் தங்கியே காணப்படுகிறது என்பதற்கு மேலாக, சர்வதேசம் ஏற்க கூடியதாக எம்மவர்களின் செயற்பாடுகள் காணப்படவில்லை என்பது யதார்த்தம்.

மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்பு

எது என்னவானாலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளான  சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், .சி.யே. போன்ற சில சர்வதேச அமைப்புகளின் முன்னெடுப்பினால் பல வெற்றிகளை நாம் மனித உரிமை சபையில் கண்டுள்ளோம்.

தற்போதைய 50வது கூட்ட தொடர், சிறிலங்கா விடயத்தில் முக்கியம் அற்று காணப்பட்டாலும், எமது தொடர்ச்சியான வேலை திட்டம், என்றும் தொடர வேண்டும்.இவ் அடிப்படையில், விசுவாசமான உண்மையான நேர்மையான புலம்பெயர்வாழ் செயற்பாட்டாளர்கள் பலர்  பிரான்ஸ், சுவிஸ்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து, .நா.வில் தமது வழமையான சர்வதேச பரப்புரை செயற்பாடுகளில் இம்முறையும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த அடிப்படையில், ‘ராடோ’ என்ற மனித உரிமை அமைப்பினால் ஜெனிவாவில் நடைபெற்ற தகவல் பரிமாற்றக் கூட்டத்தில், “சிறிலங்காவின் தற்போதைய நிலை, ஆபிரிக்க நாடுகளிற்கு ஓர் எச்சரிக்கை” என்ற தலைப்பில், பிரித்தானியா தமிழர் பேரவையின் செயலாளர் நாயகம், திரு. வி. ரவிகுமார், தமிழீழ மக்களின் சரித்திரம், சமூக பொருளாதார அரசியல் விடயங்களை பல ஆதாரங்களுடன் உரையாற்றியிருந்தார். இக் கூட்டத்தில் வேறுபட்ட நாடுகளை சார்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதேவேளை, சுவிஸ்லாந்து லூற்சான் மாநிலத்து தமிழ் சங்கம் சார்பாக, சில பல்கலைக்கழக மாணவ மாணவிகள், .நா.மனித உரிமை சபை செயற்பாடுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

இதேவேளை, .நா.மனித உரிமை ஆணையாளர் திருமதி மீசேல் பாட்லேற்றுக்கும், எனக்குமான சந்திப்பு நடைபெற்றது.இவ் சந்திப்பில், என்னால் மிக அண்மையில் வெளியிடப்பட்ட, “நீதியை நோக்கிய செயற்பாடு…..(Reaching towards justice……)” என்ற நூலின் ஆங்கில பிரதியை, திருமதி மீசேல் பாட்லேற்றுக்கு, உத்தியோக ரீதியாக கையளிக்கப்பட்டதுடன், மிக சுருக்கமான உரையாடலும் இடம்பெற்றது.

சிறிலங்கா அரசின் சார்பாக, கடந்த 2012ம் ஆண்டு முதல், .நா.மனித உரிமை சபைக்கு வருகை தந்து, தமிழர்களின் வேலை திட்டங்களை குழப்புபவர்கள், இவ்முறை சமூகம் அளிக்காத காரணத்தினால், யாவருடைய வேலை திட்டங்களும் சுமுகமாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ள இவ்வேளையில், விதண்டாவாதங்களும், பழம் கதைகள் கதைத்து, காலத்தை கழிப்பதும் கவலைக்குரிய விடயம்.யாவரும் இப்படியான படலங்களில் ஈடுபடுவர்களேயானால், ஈழத் தமிழர் விவகாரம் கூடிய விரைவில் விபரீதத்தில் முடியும்.

பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

pi.jpg

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை செயற்பாட்டின் தலைமை காரியாலயம், ஜெனிவா என்பதை பலர் அறிந்திருப்பார்களென நம்புகிறேன். இவ் அடிப்படையில், உலகின் எந்த ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர், தமது காலத்தை ஜெனிவாவில் கழிப்பார்களேயானால், அவ் நபருடைய நாட்டில்  மனித உரிமை மீறல், போர் குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்கள் மிக உச்ச கட்டத்தில் காணப்படுகிறது என்பதே பொருள்.தமது நாட்டின் நிலைமையை  பொய்கள், கற்பனைக் கதைகள் மூலம் சர்வதேசத்தின் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காக ஜெனிவா வருகிறார்கள் என்பதே உண்மை.

இவ் அடிப்படையில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்திலும், சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நேரம் காலம் தவறாது, ஜெனிவா மனித உரிமை சபையில் தொடர்ச்சியாக கலந்து கொள்கிறார் என்பதன் பொருள் – “சிறிலங்காவிற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் கூடியுள்ளது” என்பதே உண்மை யதார்த்தம்.

ஜெனிவா மனித உரிமை சபையில் தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் ஜீ. எல். பீரிஸ், பௌத்த சிங்கள அரசிற்கு, எதை சாதித்து கொடுத்தார் என்று நாம் ஆய்வு செய்வோமானால், அங்கு எதுவும் இல்லை என்பதே உண்மை.

ஜீ. எல். பீரீஸ் ஜெனிவாவில் கதைப்பவற்றை, சிறிலங்காவின் அரச ஊடகங்கள் மூலமாக, மிகைப்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு, கடந்த 50வது கூட்டத் தொடரில் சிறிலங்கா சார்பாக உரையாற்றுவதற்கு மனித உரிமை சபையினால் ஜீ.எல்.பீரீஸ் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை.அத்துடன் 50வது கூட்ட தொடரில் எந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர் உரையாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரல், இருந்திருக்கவில்லை.சுருக்கமாக கூறுவதானால், ஜீ. எல். பீரீஸ், 50வது கூட்ட தொடரில், ஓர் அழையா விருந்தினர். ஜீ.எல்.பீரீஸ் தனது உரையை, சிறிலங்காவிற்கு பார்வையாளர் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வழமையான இடத்திலிருந்தே உரையாற்றினார். சுருக்கமாக கூறுவதானால், இவரும் தமிழ் செயற்பாட்டாளர் போன்று, சிங்கள பௌத்த அரசு சார்பாக பரப்புரை செய்வதற்காகவே ஜெனிவா வந்திருந்தார்.

.நா. மனித உரிமை பேரவையில் அவர் ஆற்றிய உரையை நாம் பார்க்கும்போது, ஊடகங்களுக்கு பரப்பப்பட்ட இவரது முழு உரையை, 50வது கூட்டத்தொடரில் ஆற்றுவதற்கு இவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.அவர் கூறியது என்னவெனில் – “வடக்கு மற்றும் கிழக்கில் 90 வீதமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், நட்டஈடு வழங்குவதற்காக 53 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், 314 தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என மிகைப்படுத்தினார்.மேற்கூறிய விடயங்கள் 50வது அமர்வில், பீரீஸின் உரையில், மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையாகவே காணப்பட்டது. ஜீ. எல். பீரீஸினால் மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் என்பதை ஐ.நா.வில் உள்ள பெரும்பாலான ராஜதந்திரிகள் நன்கு அறிவார்கள்.

மேற்கூறிய விடயங்கள் இவர் தனது அறிக்கையில் உள்ளடக்கியிருந்ததே தவிர, இவரல் அவற்றை மனித உரிமை சபையில் ஆற்றிய உரையில் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் நஸ்ட ஈடு வழங்குவதற்காக 53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஜீ. எல். பீரீஸினால் மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் என்பதை ஐ.நா.வில் உள்ள பெரும்பாலான ராஜதந்திரிகளும் நன்கு அறிவார்கள்.

இவர்கள் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையை பரப்பிய போது, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மொண்டெனேக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உள்ள இலங்கை தொடர்பான முக்கிய குழு (Core Group), சிறிலங்காவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: “மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா ஐ.நா.மனித உரிமையாளரின் காரியாலயத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் முன் வைக்கப்பட்டதுடன், சிறிலங்காவின் சிவில் சமூகத்தை சார்ந்த அங்கத்தவர்கள் கண்காணிக்கப்படுவதையும் அவஸ்தைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்ததுடன் சிவில் சமூகத்தை சார்ந்தவர்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்” போன்ற சில விடயங்களை முன்வைத்தார்கள்.

அணி சேரா நாடுகளின் அமைப்பு

அடுத்து சிறிலங்காவின் உரையில் தாம் ‘அணி சேரா நாடுகளின் அமைப்பின்’ அறிக்கையுடன் ஒத்துப் போவதாக கூறுவது வியப்பிற்குரியது.காரணம், தற்பொழுது ‘அணி சேரா நாடுகள்’ பல பல அணிகளாக காணப்படுகின்றன. இவர்கள் பெருமையாக ‘அணி சேரா நாடுகளின்’ அறிக்கையுடன் தம்மை சபையில் அடையாளப்படுத்தியிருந்தாலும், ஏற்கனவே பல அணிசேரா நாட்டின் அங்கத்தவர்கள், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்களிற்கு ஐ.நா.மனித உரிமை சபையில் வாக்களித்துள்ளனர். இதை ஜீ. எல். பீரீஸ் இன்றும் அறியவில்லையானால், இவர் வெளிநாட்டு அமைச்சராக இருப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணிசேரா நாடுகளின் அமைப்பு’ என்பது அன்று அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரு மாபெரும் பிரிவுகள் காணப்பட்ட வேளையில் பெரிதாக காணப்பட்டது. ஆனால் இன்று பனிப் போர் முடிந்து பல தசாப்தங்களிற்கு பின்னர், ‘அணி சேர்ந்துள்ள’ நாடுகளாகவே இவை காணப்படுகின்றன.இவற்றை புரிபவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கடந்த மனித உரிமை சபையில் சிறிலங்காவின் அறிக்கைகள்  தம்மை ஓர் வல்லரசு போன்று காண்பித்திருந்ததை – அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா போன்ற நாடுகள் பார்த்து வியப்படைந்தன. காரணம், சிறிலங்காவின் பெரும்பாலான அறிக்கைகள், சில நாடுகளிற்கு சார்பாக  சீனா, எரித்திரியா, சூடான், நிகரகுவா, பொலிவியா, புருண்டி, சிரியா, வெனிசுலா, எத்தியோப்பியா, டோகோ, சிம்பாப்வே போன்ற நாடுகளிற்காக, அர்த்தமில்லாது வக்காத்து வாக்கினார்கள். இப்படியானால், சிறிலங்கா எப்படியாக ஒரு ‘அணி சேரா’ நாடாக இருக்க முடியும்?

.நா.மனித உரிமை ஆணையாளர் திருமதி மீசேல் பாட்லேற்றின் வருடாந்த அறிக்கை, சிறிலங்கா பற்றி எடுத்துரைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எப்படியானலும், எதிர்வரும் ஐ.நா.மனித உரிமை சபையின் 51வது கூட்டத் தொடர், சிறிலங்காவின் தற்போதைய போக்கிற்கு, நல்ல பதில் கிடைக்கும். காரணம் சிறிலங்காவின் தீர்மானம், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவிற்கு வருவதனால், இவ் தீர்மானத்தின் தொடர்ச்சி, முடிவுரை என்ன என்பதை ஐ.நா.மனித உரிமை சபையின் அங்கத்தவர்கள், 51வது கூட்டத் தொடரில் தீர்மானிப்பார்கள்.

ஆய்வாளர்கள் சிலரின் கருத்திற்கு அமைய  நரியின் சிந்தனை செயற்பாடுகளை கொண்ட ரணில் பிரதமராகவும் பேராசிரியர் ஜீ. எல். பீரீஸ் வெளிநாட்டு அமைச்சராகவும் திருமதி அருணி விஜயவர்த்தன தற்பொழுது வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகவும் கடமை புரிவது, சிறிலங்காவிற்கு சர்பாக, பல விடயங்கள் சர்வதேச ரீதியாக நடைபெறலாமென கனவு காணுகிறார்கள்.இவ் ஆய்வாளர்கள், முன்பு நடந்தேறிய சில விடயங்கள் அறியவில்லை போலும்.இதே நபர்களின் மத்தியில் தான், முன்பு பல சர்வதேச விடயங்கள் வெற்றியாக சிறிலங்காவிற்கு எதிராக நடைபெற்றன.எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 47வது அமர்வில் இலங்கை மீது வாக்களிக்கப்பட்ட தீர்மானத்தின் முடிவுகளை உதாரணத்திற்கு இங்கு காண்பிக்கிறேன்:

ஆதரவாக (22): அர்ஜென்டினா, ஆர்மீனியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பிரேசில், பல்கேரியா, கோட்டி ஐவரி, செக்கியா, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து, கொரிய குடியரசு, உக்ரைன், பிரிட்டன், உருகுவே .

எதிராக (11): பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்ய, சோமாலியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா.

நடுநிலையாக (14): பஹ்ரைன், புர்கினா பாசோ, கேமரூன், காபோன், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா, மொரிடானியா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ.

.நா.மனித உரிமை சபையின் நாற்பத்தி ஏழு (47) நாடுகளின் அங்கத்துவம், கடந்த 2021ம் ஆண்டிற்கும், 2022ம் ஆண்டிற்கும் இடையில், பாரீய மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

.நா.மனித உரிமை சபையின் 50வது கூட்ட தொடர் வேளையில், .நா.மண்டபத்தில் வியட்னாம் நாட்டினால் ஓர் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.இவ் கண்காட்சியை பார்க்க சென்ற வேளையில், கடந்த 18 மாதங்களாக ஜெனிவாவில், சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதியாக விளங்கும் திரு சந்திரபெருமாவை சந்திக்க நேர்ந்தது.சிறிலங்காவின் பிரதிநிதிகளும், உண்மையாக விசுவாசமாக ஈழத்தமிழர்களிற்காக செயற்படும் புலம்பெயர் வாழ் செயற்பாட்டாளர்களும், .நா.வில் எதிரிகளாக திகழ்ந்தாலும், சிறிலங்காவின் தூதுவராலயத்து தொல்லையான துஸ்டர்கள் தவிர்ந்த மற்றவர்களுடன், மண்டபத்திற்கு வெளியில், ‘வழிப்பாதை உரையாடல்’ (corridor discussion) நடைபெறுவது வழமை. இவ் அடிப்படையில் திரு சந்திரபெருமாவிற்கும் எனக்குமிடையில் சிறு உரையாடல் பொது விடயத்தில் ஏற்பட்டது.

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை சபையின் தீர்மானம் தொடர்பில், அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரு பிரதமர் அதனை ஐந்தாண்டுகள் பிரச்சினையின்றி நிர்வகித்ததையும், அதற்கு எதிராகச் சென்று இணை அனுசரணையிலிருந்து விலகிய நிறைவேற்று ஜனாதிபதியும் இன்று ஒன்றாக செயற்படுவதை காணுகிறோம். ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்களை, .நா.வில் உள்ள அனைத்து 193 உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் வெளியுறவு அமைச்சர் ஒருவரை இப்போது பார்க்கிறோம்.

.நா.வின் செயற்பாடுகளுக்கு புதிய வியாக்கியானம் கூறும் பீரிஸ், என்றாவது தனது பிரதமரிடம், உங்களை மக்கள் வாக்களித்தா நீங்கள் பாராளுமன்றம் சென்றீர்களென வினவியதுண்டா?

பாலஸ்தீன – இஸ்ரேல் விசாரணை

.நா.மனித உரிமை சபையினால் – 2021 மே மாதம் உருவாக்கப்பட்ட “கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. சுதந்திர, சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் திரு. கிறிஸ் சிடோட்டி மற்றும் இந்தியாவை சேர்ந்த திரு மிலூன் கோத்தாரி ஆகியோர் இவ் விசாரணை ஆணையத்தின் மற்றைய இரண்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த மாதம் ஜூன் 13ம் திகதி அன்று, மனித உரிமை சபையில், திருமதி நவநீதம் பிள்ளை இவ் ஆணையத்தின் முதல் அறிக்கை பற்றி கூறியதாவது: “கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா உட்பட பலஸ்தீனப் பிரதேசத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, 15 வருட முற்றுகை, காசா மற்றும் இஸ்ரேலுக்குள் இருக்கும் நீண்டகால பாகுபாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை.இவற்றை தனித்து பார்க்க முடியாது என்பது எங்களின் வலுவான கருத்து.கடந்த கால கமிஷன்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இஸ்ரேலின் தெளிவான மறுப்பு காரணமாக, சர்வதேச சமூகம், சர்வதேச சட்டத்திற்கு இஸ்ரேல் இணங்க கூடிய புதிய வழிகளை அவசரமாக ஆராய வேண்டும். பாலஸ்தீனத்தின் நிரந்தர ஆக்கிரமிப்பு நிலை மற்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிலும் நீண்டகாலமாக பாகுபாடு காட்டப்படுவதும், நடந்து வரும் வன்முறைகளுக்கு அடிப்படை அடிப்படைக் காரணமாகும்” என கூறியிருந்தார்.

.நா.மனித உரிமை சபையின் கடந்த பதினாறு வருட நடவடிக்கைகளை ஆராயும் பொழுது, என்றோ ஒரு நாள், சிறிலங்காவும் இப்படியான நிலைக்குள், அதாவது ஐ.நா.வின் வலைக்குள் சிக்கும் என்பது, பல சர்வதேச அவதானிகளின் கருத்தாகும்.

மறைந்த மூத்த மனித உரிமை ஆர்வலரும், .நா.வின் முக்கிய புள்ளியும், சர்வதேச மனித உரிமைகள் நிறுவனத்தில், எமது விரிவுரையாளருமான திருமதி அஸ்மா ஜங்கீர் ஒருமுறை கூறினார், “.நா.வின் ஆலைகள் மெதுவாக தான் இயங்கும், ஆனால் உறுதியாக நிச்சயமாக விடை காணுமென“. ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம்.

https://thinakkural.lk/article/191471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.