Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ஷவினரின் தப்புக்கணக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவினரின் தப்புக்கணக்கு

சத்ரியன்

 

ராஜபக்ஷவினர் தங்களின் பலத்தை மிகையாகவும், மக்களின் பலத்தை குறைவாகவும் கணித்து விட்டனர். முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை மாத்திரமன்றி, மூன்று தசாப்தங்களாக சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகளுக்கும், முடிவு கட்டியவர்கள் ராஜபக்ஷவினர்.

k1-LAFT01.jpg

அவர்கள் தனியாக நின்று அதனைச் செய்திராத போதும், தங்களால் தான் அதனை சாதிக்க முடிந்தது என்ற இறுமாப்பு அவர்களிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது.

தங்களின் ஆயுத பலம் மீது கொண்டிருந்த மிகையான நம்பிக்கை, விடுதலைப் புலிகள் போரில் தோல்வி காண நேரிட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

தங்களின் பலத்தை மிகையாக நம்புவதும், மதிப்பிடுவதும், போர்க்களத்தில் எப்போதுமே சறுக்கலைத் தான் ஏற்படுத்தும்.  விடுதலைப் புலிகளுக்கும் அது தான் நடந்தது.

அவர்கள் தங்களின் விநியோக வலையமைப்பும், வழிகளும் நிரந்தரமானவை என்று நம்பினார்கள். தங்களின் ஆட்டிலறிகள் போரில் கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள்.

அதனால் அவர்கள், வெறும் ஆயுதங்களால் மட்டும் வெற்றிகளை தீர்மானிக்க முடியாது என்ற பாடத்தைக் கற்கவும், பேரழிவைச் சந்திக்கவும் நேரிட்டது.

அதுபோலத் தான், ராஜபக்ஷவினரும், தங்களின் பலத்தை மிகையான கணித்தனர். கற்பனை செய்தனர்.

k1-LAFT_03.JPEG

அவர்களால், 2015 தோல்விக்குப் பின்னர், மீண்டெழ முடிந்த போதும், அந்த வெற்றியை மூன்று ஆண்டுகளுக்குக் கூட, தக்கவைக்க முடியாமல் போனது.

2015 ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட போதே, ஒதுக்கிச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அவரால், அப்படியிருக்கவும் முடியவில்லை. ஒதுங்கியிருக்க அவரைச் சுற்றியிருந்தவர்களும் விடவில்லை.

ஏனென்றால், ராஜபக்ஷ குடும்ப அரசியல் கப்பலுக்கு அவர்தான் தலைவன். அவர் இல்லாவிட்டால், ராஜபக்ஷ குடும்ப அரசியல் ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் அவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

அதேவேளை, நல்லாட்சி அரசை அமைத்தவர்கள், ராஜபக்ஷவினரின் ஊழல் மோசடிகளை சரியாகப் புலனாய்வு செய்து, அவர்களின் குற்றங்களை நிரூபித்து, தண்டனை பெற்றுக் கொடுக்கவும் தவறி விட்டனர்.

அது அவர்களின் மீள் எழுச்சிக்கு வாய்ப்பாக மாறியது.

அதனைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் சிங்கள பௌத்த பேரினவாத்த்தின் ஏக பிரதிநிதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்தனர்.

பிரித்தானிய ஆட்சிக்குப் பின்னரான, சிங்கள, பௌத்த அரசியலில், என்றைக்கும் இல்லாத அதிகாரங்களுடனும், மக்கள் ஆணையுடனும், ஆட்சியில் அமரும் வாய்ப்பு ராஜபக்ஷவினருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பை இந்தளவு விரைவாக அவர்கள் இழப்பார்கள் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

எதிர்க்கட்சியினருக்கு இவ்வாறான கனவு கூட வந்திருக்காது. அந்தளவுக்கு ராஜபக்ஷவினர் பலத்துடன் மீள எழுந்திருந்தார்கள்.

அவர்கள் தங்களின் பலமும், இருப்பும் நிலையானதாக கருதியதால், மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகள், மனவுணர்வுகளை ஒருபோதும் கருத்தில் கொள்ளவேயில்லை.

அதிகாரம் கையில் உள்ளதென்ற திமிர், அவர்களின் கண்களை மறைத்து விட்டது. சிங்கள பௌத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தங்களுக்கு, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என்று ஒதுக்கினார்கள்.

காலப்போக்கில், அவர்கள் சிங்கள மக்களிடம் இருந்தும் ஒதுங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. கடைசியில், சாதாரண மக்களின் மனவுணர்வில் இருந்து, ராஜபக்ஷவினர் வெகுதொலைவுக்குச் சென்று விட்டனர்.

சில பதவி மாற்றங்களும், பதவி விலகல்களும், தங்களின் உயர் அதிகாரமுள்ள பதவிகளை தக்கவைக்கப் போதுமானதாக இருக்கும் என்றே அவர்கள் கணக்குப் போட்டனர்.

k1-LAFT_02.jpg

மஹிந்த – கோட்டாவின் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக, மே-9 இல் மஹிந்த ராஜபக்ஷ பதவியை துறந்தார்.

பின்னர் மக்கள் எழுச்சி தீவிரமான கட்டத்தில், வேறு வழியின்றி கோட்டாவின் பதவியையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்பில், பஷில் ராஜபக்ஷ ஜூன்-9 இல் பதவி விலகினார்.

இதன் மூலம், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ஆக்கி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் களத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை ராஜபக்ஷவினர் முன்னெடுத்தனர்.

ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ராஜபக்ஷவினர் மீளவும் தங்களைத் தயார்படுத்த தொடங்கியிருந்தனர்.

பஷில் அடுத்த தேர்தல்களுக்கு மொட்டு கட்சியை தயார்படுத்த தொடங்கினார். நாமலும், மஹிந்தவும், மறைமுகமாக அரச நிர்வாகத்தில் தலையிடத் தொடங்கினர்.

கோட்டா, தோல்வியுற்ற தலைவனாக பதவி விலகிச் செல்லப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

ஜூ-9 இற்குப் பின்னரான அரசியல் நகர்வுகள் போராட்டத்தைச் சிதைத்து விட்டதாகவும், அங்கிருந்து தங்களின் பலத்தை மீளக் கட்டியெழுப்பலாம் என்றும், ராஜபக்ஷவினர் கணக்குப் போட்டார்கள்.

ஆனால், ராஜபக்ஷவினரைத் தொடர்ந்து துரத்தும் 9ஆம் திகதி கோட்டாவை அவரது மாளிகையில் இருந்தும் தப்பியோடும் நிலைக்கு கொண்டு சென்றது.

கடைசியில் அவர் பதவி விலகும் நிலையையும் ஏற்படுத்தியது. நாட்டை அராஜக நிலைக்குள் தள்ளமாட்டேன் என்றும், தோல்வியுள்ள தலைவனாக பதவியை விட்டுச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்த கோட்டா, கடைசியில் அமெரிக்கா கொடையாக வழங்கிய கஜபாகு போர்க்கப்பலில் ஏறித் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

நவீன இலங்கை வரலாற்றில், ஆட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாறான மக்கள் கிளர்ச்சி முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் முதல் வேலையாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தினார்.

கிட்டத்தட்ட ஏழு பற்றாலியன்களைக் கொண்டதாக – ஆயிரக்கணக்கான படையினருடன் அது விரிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் அரச புலனாய்வுச் சேவையும், தேசிய புலனாய்வுச் சேவையும், கோட்டாவுக்கு விசுவாசமான படை அதிகாரிகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.

மொத்தத்தில், இராணுவ ஆட்சியில் உள்ள ஒரு நாட்டில், எந்தளவுக்கு ஆட்சியாளருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் நெருங்கிய உறவும் தொடர்பும் இருக்குமோ அதுபோன்ற உறவு கட்டியெழுப்பட்டது.

ஆனாலும், அவர்களால், நாட்டு மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது, ராஜபக்ஷவினரின் தோல்விக்கு முக்கியமானதொரு காரணம்.

இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்று புலனாய்வு தகவல்கள் வழங்கப்பட்டும் அவர்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் செயற்பட்டிருந்தால், அது அவர்களின் பெரும் தவறு.

அவர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கொண்டு, ஒட்டுமொத்த  நாட்டையும் தங்கள் விருப்பப்படி ஆளலாம் என மனக்கோட்டை கட்டியிருந்தார்கள்.

மக்களின் ஆக குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் கூட, பதவியை இடைநடுவில் கைவிட்டுத் தப்பியோடும் நிலை வந்ததில்லை.

எந்தவொரு காலகட்டத்திலும் ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதி செயலகமும், அரசாங்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத இடமாக மாறியதில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ ஜூன் 9ஆம் திகதியே பதவியை விட்டு விலகிச் செல்ல இணங்கியிருந்தால், சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் மிஞ்சியிருந்த கொஞ்ச மதிப்பையாவது காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், அவர் தனக்கு அளிக்கப்பட்ட ஆணை இன்னமும், நடைமுறையில் இருப்பாக நினைத்துக் கொண்டு, ஒரு மாதம் பதவியில் இருக்கப் போய், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டப் பிடிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

வரிசையாக ராஜபக்ஷவினர் இழைத்த தவறுகளும், போட்ட தப்புக்கணக்குகளும் தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.

சிங்கள, பௌத்த மக்களின் அரசியலில் இருந்து ராஜபக்ஷவினர் நீக்கப்பட்டுக் கொண்டிருந்த போதும், அவர்கள் மீள வருவோம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு தங்களை அதி புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருந்தார். அதன் விளைவு, அவர்கள் உலகின் மூலை முடுக்குகளுக்குள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 

https://www.virakesari.lk/article/131584

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.