Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா

'இலவசங்கள்' வழக்கில் திமுகவை விமர்சித்தாரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா? என்ன நடந்தது?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
உச்ச நீதிமன்றம் இலவசங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் 'இலவசங்கள்' தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம், அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்கள் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவை பற்றிய விவாதம் தேவை என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தும் நோக்கத்தில் உள்ள நலத்திட்டங்களை 'இலவசங்கள்' என்று அழைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் "இலவசங்கள்" ஆகுமா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான பி. வில்சன் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைக்க முற்பட்டார். அப்போது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா அவரை நோக்கி, "மிஸ்டர் வில்சன், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பற்றி நான் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் நான் தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். ஞானம் என்பது உங்களுக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ உரியது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மட்டுமே அறிவார்ந்த கட்சி அல்ல. இந்த விஷயத்தில் எல்லோருக்குமே பொறுப்பு உள்ளது. உங்கள் தரப்பு பேசும் விதம், அறிக்கைகள் கொடுப்பது மற்றும் சொல்வதையெல்லாம் நாங்கள் முற்றாக கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்," என்று கூறினார்.

தலைமை நீதிபதியின் இந்த கருத்தை வெளியிட்டதும் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "ஆமாம், தமிழ்நாடு நிதியமைச்சர் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக டிவியில் பேசிய கருத்துக்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவை சரியானவை அல்ல" என்றார்.

 

இதையடுத்து நீதிபதி ரமணா, "இலவசங்களை மாநிலங்களால் வழங்க முடியாது என்று மத்திய அரசு நாளைக்கே ஒரு சட்டத்தை இயற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு உட்படாது என்ற சொல்ல முடியுமா? நாட்டின் நலனுக்காக, இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்கிறோம்," என்று தெரிவித்தார்.

"உதாரணமாக, சில மாநிலங்கள் ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சைக்கிள்களை வழங்குகின்றன. சைக்கிள்களை வழங்குவதன் மூலம் வாழ்க்கை முறை மேம்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலவசம் எது, ஒரு நபரின் முன்னேற்றத்திற்கு எது பயன் தருகிறது என்பதுதான் பிரச்னை. கிராமப்புறத்தில் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, அவரது வாழ்வாதாரம் என்பது அவரிடம் இருக்கும் சிறிய படகு அல்லது சைக்கிளையோ சார்ந்ததாக இருக்கலாம். இதைப்பற்றி இங்கு அமர்ந்து கொண்டு விவாதிக்க முடியாது."

மேலும், "இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது அதன் உரிமை. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவசங்கள் குறித்து விரிவாக விவாதிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்," என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 
Banner

இந்த வழக்கு உண்மையில் என்ன?

 
தலைமை நீதிபதி என்.வி. ரமணா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

என்.வி. ரமணா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

  • யார் தொடர்ந்த வழக்கு இது? தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதை தடுக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞரும் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
  • எந்த கட்சிகள் வழக்கில் இணைந்தன? ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர்சிபி போன்ற அரசியல் கட்சிகள் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொண்டு நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை "இலவசங்கள்" என்று கருதக் கூடாது என்று ஒற்றை குரலில் மனு தாக்கல் செய்தன.
  • நீதிமன்றம் என்ன சொன்னது? இந்த வழக்கின் முந்தைய விசாரணைகளின் போது, "இலவசங்கள்" மூலம் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட சுமை குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், நலத்திட்ட நடவடிக்கைகளுக்கும் பொது பொருளாதாரத்துக்கும் இடையே சமநிலையை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
  • தலைமை நீதிபதியின் யோசனை என்ன? இந்த வழக்கு விசாரணையின்போது இந்திய தேர்தல் ஆணையம், இந்திய நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய நிபுணர் குழுவின் பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை கூறியது.
 
Banner

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. அதன்படி, அவர் "இந்த விவகாரத்தை நிதி ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். பிரச்னை விவாதிக்கப்படும்போது, அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் என் கேள்வி. அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். அந்த அமைப்புதான் நிதி ஆணையம்," என்றார்.

கபில் சிபல் வழங்கிய யோசனை

இதையடுத்து தமது தரப்பு விளக்கத்தையும் கபில் சிபல் வழங்கினார். "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புணர்வு மேலாண்மை சட்டத்தில், 3 சதவீதத்துக்கு மேல் 'பற்றாக்குறை' என்பது இருக்க முடியாது. இலவசங்கள் இருந்தால் அது பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு மேல் ஆக்கும். மாநிலத்தின் நிதிப் பிரிவு நிதி ஒதுக்கீடு பிரச்னையை கவனிக்கிறது. எனவே நீங்கள் இலவசங்களை அரசியல் ரீதியாக அல்ல, நிதி திட்டமிடல் மூலம் சமாளிக்க வேண்டும்," என்றார் கபில் சிபல்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், "தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட இலவசங்கள் குறித்தது மட்டுமே தற்போதைய வழக்கு. அது இதுபோன்ற வாதங்கல் மூலம் திசை திருப்பப்பட்டு வருகிறது என்று கூறினார், மேலும் இலவசங்களுக்கான விதிகளை வகுக்க நாடாளுமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் சட்டம் இயற்றும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, மனுதாரர் தேர்தல் வாக்குறுதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோருகிறார். இது அரசியலமைப்பு விதி 19(1) (ஏ) வழங்கியுள்ள உரிமைக்கு மீறலாக அமையும் என்று வாதிட்டார். தேர்தலில் பேசப்படும் விஷயங்களுக்கு நீதிமன்றத்தால் கட்டுப்பாடு விதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க போதிய நேரமின்மையால், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (ஆகஸ்ட் 24) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://www.bbc.com/tamil/india-62647529

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலவசங்கள் வழக்கு: “பொதுப் பணத்தை செலவிட சரியான வழி எது?” – தலைமை நீதிபதி ரமணா கேள்வி

26 ஆகஸ்ட் 2022, 07:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலவசங்கள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு: உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது.

அந்த வழக்கில் இன்று இலவசங்கள் தொடர்பான இந்த வழக்கை வேறு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தவிட்டுள்ளார். மேலும், இலவசங்களை அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது என்று கூறிய அதேவேளையில், இலவசங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

மேலும் இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஏன் கருத்து கேட்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, இலவசங்கள் குறித்த விவாதம் தேவையெனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

இந்நிலையில், இந்த வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, மத்திய அரசு வல்லுநர் குழுவை அமைத்து ஆராயவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

"வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது"

"அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டுள்ள இந்தப் பிரச்னை குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது. நீதிமன்றம் மூலம் வல்லுநர் குழுவை நியமிப்பது ஏதேனும் பயனளிக்குமா, இதில் நீதித்துறை தலையிடுவதன் தேவை என்ன என்பன போன்ற சில பூர்வாங்க விஷயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

 

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல்வேறு தரப்பினர் சுப்பிரமணியம் பாலாஜி வழக்கின் தீர்ப்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று தெரிவித்தனர். அந்த வழக்கில், இதுபோன்ற நடைமுறைகள் ஊழல் நடவடிக்கைகளாகக் கருதப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்தப் பிரச்னையின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றுகிறோம்," என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் இலவசங்களுக்கு எதிராக பாஜக தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாய உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்படும் இலவச வாக்குறுதிகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அமைக்கலாமே என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

அதோடு, "திமுக மட்டும் தான் மிகவும் புத்திசாலித்தனமான சாதுர்யமான கட்சி என்று நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து நாங்கள் பேசாமல் தவிர்ப்பதால், அதுகுறித்து அறியவில்லை என்று நினைக்கவேண்டாம்," என்று அஸ்வினி உபத்யாய தொடர்ந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்திருந்தார்.

பிரச்னையின் சிக்கலான தன்மையை ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி ரமணா, நீதிமன்றத்தின் நோக்கம் இந்தப் பிரச்னை குறித்த ஒரு பரந்த பொது விவாதத்தைத் தொடங்குவது என்றும் அதற்காகவே ஒரு வல்லுநர் குழுவை உருவாக்குவதாகவும் கூறினார்.

முந்தைய விசாரணையின்போது, இலவசங்கள் குறித்த பிரச்னை சிக்கலானது என்றும் நலத் திட்டங்கள் மற்றும் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

அரசியல் கட்சிகளின் இலவசங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற பங்குதாரர்களைக் கொண்ட ஆணையம் தேவை எனக் கூறியுள்ளது.

 

இலவசங்கள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு: உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு உதவிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நிதி ஆயோக் போன்ற "அரசியல் சார்பற்ற அமைப்பு" இந்தப் பிரச்னையை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கலாம் எனக் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி, "தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செல்விடுவதற்கான சரியான வழி எது என்பது தான் கேள்வி," என்று கூறியிருந்தார்.

"தேர்தல் செயல்முறையின் தூய்மையைக் கெடுக்கும்"

ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் இந்த மனுவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தன.

இலவச தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகள் 'இலவசம்' அல்ல, சமத்துவமற்ற சமுதாயத்தில் இந்தத் திட்டங்கள் முற்றிலும் அவசியம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

உபத்யாய தாக்கல் செய்த மனுவில், பொது நிதியிலிருந்து கண்மூடித்தனமான இலவசங்களை விநியோகிப்பதாக உறுதியளித்த அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்களைக் கைப்பற்றவும் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கோரப்பட்டிருந்தது.

தவறான ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக வாக்குறுதிகள் அல்லது கண்மூடித்தனமான இலவசங்களை வழங்குவது, வாக்காளர்களைத் தங்களுக்கு ஆதரவாகக் கவர்ந்திழுப்பது, அது லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கிற்கு ஒப்பானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் பொது நிதியிலிருந்து கண்மூடித்தனமான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது அல்லது விநியோகிப்பது, வாக்காளர்கள் மத்தியில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்துன், சுதந்திரமான, நியாயமான தேர்தலின் வேர்களை அசைத்து, தேர்தல் செயல்முறையின் தூய்மையைக் கெடுக்கும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.bbc.com/tamil/india-62684978

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.