Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் பலமுனைப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் பலமுனைப் போர்

By VISHNU

18 SEP, 2022 | 07:34 AM
image

கார்வண்ணன்

 

“கடந்த 13 ஆண்டுகளில் தமிழர் தரப்பின் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தான் ஜெனிவாவில் முதன்மையான விடயமாக இருந்து வந்தன. இப்போது, அது பலமுனை அழுத்தங்களாக விரிவடைந்திருக்கிறது”

 

இலங்கையைப் பொறுத்தவரையில், ஜெனிவா இம்முறை வழக்கத்துக்கு மாறானதாரு போர்க்களமாக மாறியிருக்கிறது.

K2top_01.jpg

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ என இரண்டு சட்ட நிபுணர்களின் தலைமையில் ஜெனிவா கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கிறது.

K2top_04.jpg

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக இருக்கப் போகிறது என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் சில வாரங்களுக்கு முன்னரே, கூறியிருந்தார்.

K2top_03.jpg

கடந்தமுறை அவர் தான், ஜெனிவா கூட்டத்தொடரை அரசாங்கத்தின் சார்பில் எதிர்கொண்டிருந்தார். 

K2top_02.jpg

ஜெனிவா அமர்வுகளில் அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அறிந்திருந்த அவருக்கு, இம்முறை அழுத்தம் அதிகம் இருக்கும் என்ற யதார்த்தம் புரிந்திருக்கும்.

ஆனாலும் அதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.

இளங்கன்று பயமறியாது, வெளிவிவகார அமைச்சைப் பொறுத்தவரையில் அவர் ஒரு இளங்கன்று என்பதால், இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் உண்மையான ஜெனிவா களம் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கடுமையானதொன்று தான்.

போர் நடந்து கொண்டிருந்த காலங்களில், தமிழர் தரப்பை விட, மனித உரிமை அமைப்புகள் தான், ஜெனிவாவில் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

போர் முடிந்த பின்னர், மீறல்களுக்கு நியாயம் கோருகின்ற தரப்பாக தமிழர் தரப்பு மாறியது. 

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வலுவான தரப்பாக மாறியதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினராகவும், அரசியல் தரப்பினராகவும் தமிழர் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்து சென்று ஜெனிவாவில் அழுத்தங்களைக் கொடுத்தனர்.

இந்த அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க, புலம்பெயர் சிங்களக் குழுக்களும், அடிப்படைவாத அமைப்புகளும், போட்டியாக களமிறக்கப்பட்டன.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நாலக கொடஹேவ போன்றவர்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான வியூகங்களில் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் ஜெனிவாவில் நிறுத்தப்பட்டார்கள்.

அவர்கள் தமிழ் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பக்க அமர்வுகளில் கடுமையான எதிர்வாதங்களை நிகழ்த்த ஆரம்பித்த போது, இலங்கை அரசாங்கம் ஓளரவுக்கு நிலைமையை சமாளிக்கும் நிலையை எட்டியது.

ஆனாலும் எல்லாத் தரப்புகளையும் மீறி,பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் பேரவையின் உறுப்பு நாடுகளும் அனுசரணை நாடுகளும் செயற்பட்டுக் கொண்டிருந்தன.

அண்மைக்காலங்களில், ஜெனிவாவுக்கு சந்தியா எக்னெலிகொட போன்ற காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பு பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்கு படையெடுக்கும் நிலை உருவானது.

இந்தமுறை அரசாங்கத்துக்கு எதிராக ஜெனிவா சென்றுள்ள தரப்புகளின் எண்ணிக்கை மிகவும் பரந்துபட்டது.

வழக்கம்போலவே புலம்பெயர் தமிழர்கள், பாதிக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகளுடன், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரகலய போராட்டக் குழுவினர், முஸ்லிம்கள் தரப்பு, என்று பலமுனைகளில் தாக்குதலை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன ஆகியோருடன் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஜெனிவாவுக்கு சென்றுள்ளார்.

சிவில் செயற்பாட்டாளர் செகான் மாலகே, சுனந்த தேசப்பிரிய, சட்டத்தரணி நுவன் போபகே ஆகியோர் அரகலய போராட்டக் குழுவின் சார்பில் அங்கு சென்றுள்ளனர்.

இம்முறை ஜெனிவாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கு எதிரான மக்கள் போராட்டம், அதனை நசுக்கவதற்கு அரசாங்கம் கையாண்ட அணுகமுறைகளும் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பேரவையில் இம்முறை கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளன்று உரையாற்றிய அரகலய போராட்டக் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான சட்டத்தரணி, நுவன் போபகே, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் காலத்தில் அர்த்தமுள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாத தடைச்சட்டம், இராணுவ மயமாக்கம், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது, கைதுகள், தடுத்து வைப்புகள் போன்ற குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னர் ஜெனிவாவில் தமிழர் தரப்புத் தான் முன்வைத்துக் கொண்டிருந்தது.

இப்போது, ஜெனிவாவில் தமிழர்களுடன், முஸ்லிம்களும், சிங்களவர்களும் இணைந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்க்கிறார்கள்.  அதனை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

ஏனென்றால் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் இப்போது, எல்லா இன மக்களின் உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் வரை தற்போதைய சட்டம் பயன்படுத்தப்படாது என்ற வாக்குறுதியை மீறி, ஜனநாயகப் போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள், துரத்திப் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இதற்கு எதிராக சர்வதேச சமூகம், கடுமையான அறிக்கைகளை வெளியிட்ட போதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் எதையும் கண்டு கொள்வதாக இல்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலீடாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கிடையில், இந்தச் சட்டம் கொடூரமான வகையில் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிராக இப்போது பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவின் கதவைத் தட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

அத்துடன் பொருளாதாரக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், நீதி கோரி ஜெனிவாவை அடைந்திருக்கிறார்கள்.

எல்லாத் தரப்புகளும் இப்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு நிற்கின்றன.

கடந்த 13 ஆண்டுகளில் தமிழர் தரப்பின் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தான் ஜெனிவாவில் முதன்மையான விடயமாக இருந்து வந்தன.

இப்போது, அது பலமுனை அழுத்தங்களாக விரிவடைந்திருக்கிறது. ஒருமுனைப் போரை எதிர்கொள்வது இலகு. அதற்காக வளங்களையும் ஆட்களையும் ஒன்று திரட்டுவது சுலபம். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க்காலத்தில் பல இராணுவ நடவடிக்கைகள் அவ்வாறானதாகத் தான் இருந்தன. ஆனால், இறுதிக்கட்டப் போர் அவ்வாறானதல்ல.

அது கொக்குத்தொடுவாயில் இருந்து வவுனியா, மன்னார் வரை நீண்டு பரந்ததாக இருந்தது. பலமுனைகளில் தொடுக்கப்பட்ட அந்தப் போர் தான் புலிகளை வீழ்த்தியது.

பலமுனைகளில் புலிகளின் வளத்தை, போர் முனையை நோக்கி இழுத்தபோது, அவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் நின்று பிடிக்க முடியாமல் போனது. 

அதனால் பின்வாங்கி பின்வாங்கி கடைசியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிக் கொள்ள நேரிட்டது.

அதுபோலத் தான் இப்போது ஜெனிவா களத்தில் இலங்கை அரசு பலமுனைப் போரை எதிர்கொள்கிறது. எல்லாத் தரப்பகளும் சூழ்ந்து நின்று தாக்கத் தொடங்கியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தான் இப்போது எல்லோரதும் இலக்காக மாறியிருக்கிறது. 

குற்றவாளிகளை காப்பாற்றுவதையே இலக்காக கொண்டு செயற்படும் போது, ரணிலும் அவரது அரசாங்கமும் இந்த வியூகத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பது கடினம் தான். 

https://www.virakesari.lk/article/135778

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.