Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் சாண வண்டுகளை பாதிக்கும் மனிதர்களின் கரிம வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் சாண வண்டுகளை பாதிக்கும் மனிதர்களின் கரிம வெளியீடு

  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சாண வண்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

(பூமிக்குள் ஒரு தனி உலகமாக அறியப்படுவது சிற்றுயிர்களின் உலகம். அத்தகைய சிற்றுயிர்களின் உலகில் உள்ள, மனிதர்களுடைய வாழ்வைச் செழுமையாக்க உதவுகின்ற பூச்சிகளின் சுவாரஸ்யமான வாழ்வியல் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வெளியிடுகிறது பிபிசி தமிழ். அந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை இது.)

பூச்சிகள் பூமியில் இயற்கை சுழற்சியின் ஒரு முக்கியமான பாகமாகச் செயல்படுபவை. மனிதர்களைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருப்பவை பூச்சிகளே. இயற்கையின் தாவர இனப்பெருக்க உத்தியான மகரந்தச் சேர்க்கை முதல் கழிவுகள் மறுசுழற்சி வரை, பூச்சிகளின் பங்கே மேலோங்கி இருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.

அத்தகைய பூச்சிகள் காலநிலை நெருக்கடியின் விளைவுகளைச் சத்தமின்றி சந்தித்து வருகின்றன. அதில் பெரியளவில் நாம் அறிந்திராத, பூச்சி உலகில் ஒரு நாயகனாக உலா வரும் சாண வண்டு என்ற வகை வண்டினமும் மெல்ல மெல்ல எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.

2011ஆம் ஆண்டில் மலபார் கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நகர்ப்பகுதிகளில் சாண வண்டுகள் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டது. 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மற்றுமோர் ஆய்வு, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் சாண வண்டின் ஐந்து துணை இனங்களில் எண்ணிக்கைக் குறைவு கணிசமாக இருப்பதைப் பதிவு செய்தது.

 

"இங்குக் காணப்படும் 142 வகையான சாண வண்டுகளில், 35 வகைகள் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓரிட வாழ்விகள். மேற்குத்தொடர்ச்சி மலையில் காடழிப்பு, வாழ்விட மாறுதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு 137 வகை வண்டுகள் பதிவு செய்யப்பட்ட இடங்களில் இப்போது, 87 வகைகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட 50 வகை சாண வண்டுகளைப் பார்க்க முடியாமல் இருப்பது, அவற்றின் எண்ணிக்கை குறைந்து, அவை அரிதாகி விட்டதை உணர்த்துகிறது," என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

 

சாண வண்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சாண வண்டுகள் தம் வாழ்வியல் முறையின் மூலமாக சூழலுக்கும் வேளாண்மைக்கும் பல நன்மைகளைச் செய்கின்றன.

பெரிதாக யாரும் கவனித்திராத, ஆடு, மாடு அல்லது வேறு ஏதேனும் உயிரினத்தின் சாணத்தை உருண்டையாக்கி உருட்டி உருட்டிச் செல்லும் இந்த சிறு பூச்சியைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

சாணத்தை உருட்டி, குழி தோண்டிப் புதைக்கும் வண்டுகள்

அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அளவுக்கான நன்மைகளை அவை தம் வாழ்வியல் முறையின் மூலமாகவே சூழலுக்கும் வேளாண்மைக்கும் செய்கின்றன.

இவை, சாணத்தை சிறு துண்டாக உருட்டி பந்து போல் செய்கின்றன. பிறகு அவற்றை ஒரு சிறிய குழிக்குள் உருட்டிச் செல்கின்றன. அந்தக் குழிக்குள் மற்ற சாண வண்டுகள் சாப்பிடவும் இனப்பெருக்கம் செய்யவும் அது புதைக்கப்படுகிறது. சாண வண்டுகளில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று சாணத்தை உருண்டையாக்கி வேறோர் இடத்திற்கு உருட்டிச் சென்று குழி தோண்டி புதைத்து வைத்து பயன்படுத்துகின்றன.

இரண்டாவது வகை சாண வண்டுகள், எந்த இடத்தில் சாணம் உள்ளதோ அதற்கு அருகிலோ அல்லது சாணத்திற்கு அடியிலோ ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, சாணத்தில் நார்ச்சத்துள்ள பகுதியைத் தேர்வு செய்து அதை உருட்டி புதைத்து பயன்படுத்துகின்றன.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

மூன்றாவது வகை சாண வண்டுகள், சாணத்தை உறைவிடமாகப் பயன்படுத்துகின்றன. அவை சாணத்தையே உறைவிடமாகவும் உணவாகவும் பயன்படுத்துவதோடு அதிலேயே இனப்பெருக்கமும் செய்கின்றன. இப்படியாக மூன்று வகை சாண வண்டுகளும் மூன்று விதமான வாழ்விடத்தைத் தேர்வு செய்வதன் மூலம், அவற்றுடைய மதிப்புமிக்க வளமான மற்ற உயிரினங்களின் கழிவுகளைப் போட்டியின்றிப் பயன்படுத்துகின்றன.

இப்படி அவற்றுக்குள் வகை பிரித்து வாழ்ந்துகொண்டிருந்தாலும், மனிதர்களுக்குள் இருப்பதைப் போலவே வண்டு உலகிலும் மற்றவற்றின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் பூச்சிகள் இருக்கின்றன.

சாணத்துக்கு நடக்கும் சண்டை

ஒருமுறை பாண்டிச்சேரியிலுள்ள ஆதிசக்தி நாடகக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வளாகத்தில் அதிகாலை வேளையில் பூச்சிகளின் நடத்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்தேன்.

உருண்டை பிடித்து எடுத்துச் செல்லும் வகையைச் சேர்ந்த ஒரு சாண வண்டு, நாய் ஒன்று இட்ட கழிவை உருண்டை பிடித்து அதன்மீது நின்று மெல்ல உருட்டிச் சென்று கொண்டிருந்தது. கழிவு கிடந்த இடத்திலிருந்து ஒன்றிரண்டு அடிகளே நகர்ந்திருக்கும். அதற்குள் திடீரென இன்னொரு சாண வண்டு அந்த இடத்திற்கு வந்து உருட்டிச் சென்ற வண்டிடம் இருந்து சாண உருண்டையைப் பிடுங்க முயன்றது.

காணொளிக் குறிப்பு,

சாண வண்டுகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்

உடனே, உருட்டிச் சென்ற வண்டு அதன் சாண உருண்டை மீது ஏறி நின்று தன்னை திடப்படுத்திக் கொண்டு சண்டையிடத் தொடங்கியது. கீழே இருந்த வண்டு ஒவ்வொரு முறை மோத வரும்போதும் அதை எதிர்த்து தூக்கி வீசியது. சில நிமிடங்களுக்குத் தொடர்ந்த இந்தச் சண்டையின் இறுதியில், கீழே இருந்த வண்டு சாண உருண்டையின் அடிப்புறத்தில் அதன் பின்னங்கால்களால் திடமாகப் பிடித்துக் கொண்டு, மேல்நோக்கி ஓர் உந்து உந்தியது. அப்படி உந்திய வேகத்திலேயே மேலே நின்றிருந்த வண்டின் முன்னங்கால்களைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தது.

இப்போது சாண வண்டு ஒருபுறமிருக்க, அதன் அருகிலேயே இரண்டு வண்டுகளும் மல்லாக்க விழுந்தன. ஆனால், முன்பு கீழே நின்றிருந்த வண்டு விழுந்த வேகத்தில் எழுந்து உருண்டையின் மீது ஏறிக் கொண்டு வேகமாக அதை உருட்டிச் செல்லத் தொடங்கியது. மேலிருந்து கீழே விழுந்த வண்டு அதன் பின்னால் சண்டையிட்டுக் கொண்டே சென்றது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அது தோற்றுப் போய் திரும்ப வேண்டியதாகிவிட்டது. இது உழைத்து உருண்டை பிடித்த சாணத்தை, பாதியில் வந்த அந்த வண்டு வெற்றிகரமாக அபகரித்துச் சென்றுவிட்டது.

சாண வண்டுகளின் செயல்களைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சில நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு வண்டுகள் கூட, ஒரு வண்டின் சாண உருண்டையைப் பறிக்க முயலும். அந்த நேரத்தில், ஒன்றைத் தடுக்கும் முயற்சியில் உருண்டையை உருட்டிய வண்டு மும்முரமாக இருக்கும் நேரத்தில் அதன் பின்புறத்தில் இன்னொரு வண்டு உருண்டையை எடுக்க முயலும்.

"ஃபாப்ரேஸ் புக் ஆஃப் இன்செக்ட்ஸ்" என்ற நூலின் ஆசிரியர் பிரெஞ்சு பூச்சியியலாளர் ஜான் ஹென்றி ஃபாப்ரே, இத்தகைய நடத்தையை ஆவணப்படுத்தியுள்ளார். அவருடைய கூற்றுப்படி, ஒரு சூழ்நிலையில், பெண் வண்டுக்கு சாணத்தை உருட்ட உதவிய ஆண் சாண வண்டு, அந்த உருண்டையைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்த்த ஆண் வண்டு, பெண் சாண வண்டு உருண்டையைப் புதைப்பதற்காக மும்முரமாக குழி தோண்டிக் கொண்டிருந்த நேரத்தில், உருண்டையைத் திருடிக் கொண்டு ஓட முயலும்.

 

சாண வண்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சாணம் மிக முக்கியமான ஒரு வளம். அதற்காக தம் இனத்தைச் சேர்ந்த வண்டுகளோடும் சாணம் உண்ணும் ஈக்களைப் போன்ற மற்ற பூச்சிகளோடும் அதற்காக அவை போட்டியிட வேண்டும்

சாணம் ஒரு மதிப்பு வாய்ந்த வளம்

இந்த வண்டுகளுக்கு, சாணம் மிக முக்கியமான ஒரு வளம். அதற்காக தம் இனத்தைச் சேர்ந்த வண்டுகளோடும் சாணம் உண்ணும் ஈக்களைப் போன்ற மற்ற பூச்சிகளோடும் அதற்காக அவை போட்டியிட வேண்டும். சில சாண வண்டுகள், அசைபோடும் விலங்குகளைத் தவிர்த்து, குதிரை, நாய், பன்றி, மனிதர்கள் போன்ற உயிரினங்களின் நார்ச்சத்து நிறைந்த கழிவுகளை விரும்புகின்றன.

மற்ற வகைகள், ஆடு, செம்மறி ஆடு, ஒட்டகம், எருமை, மாடு, மான் போன்றவற்றின் சாணத்தை விரும்புகின்றன. இதுபோக, அனைத்துண்ணிகளின் மிகவும் துர்நாற்றம் வீசும் கழிவுகளைக்கூட சில வகை சாண வண்டுகள் விரும்புகின்றன. யானை சாண வண்டு என்றொரு வகை உண்டு. இவை யானையின் சாணத்தை மட்டுமே நம்பி வாழ்பவை. பூச்சி உலகில் யானை சாணத்திற்குக் கடுமையான போட்டி உள்ளது.

"மண்ணில் குழி தோண்டி, சாணத்தை புதைப்பதன் மூலம் இவை மண்ணில் காற்றோட்டத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகப்படுத்துகின்றன. இவை மற்ற உயிரினங்களின் சாணத்தைச் சாப்பிடுவதால் அதில் மீதமிருக்கும் நார்ச்சத்தை உட்கொள்வதால் அவை தழைச்சத்தை மண்ணில் வெளியிடுகின்றன. இதை தாவரங்கள் எளிமையாகக் கிரகித்துக் கொள்கின்றன," என்று கூறுகிறார் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர். பிரியதர்சன் தர்மராஜன்.

மண் வளம் என்பது வேளாண்மைக்கு மிக அவசியமான ஓர் அம்சம். சாண வண்டுகள் மண்ணுக்கு வளம் சேர்ப்பதன் மூலம் விவசாய உற்பத்திக்கும் உதவுகிறது. "சாண வண்டுகள் இல்லையென்றால், அது சூழலியலிலும் வேளாண்மையிலும் நிச்சயமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். இவை சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளில் ஒன்று."

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்துகிறது

"பெங்களூருவில் நிறைய செம்மறி ஆடுகள் இருந்தன. நகரமயமாக்கல் காரணமாக, அவற்றுக்குப் போதுமான மேய்ச்சல் நிலம் இல்லாமல் போனது. ஆகவே, செம்மறி ஆடுகள் வளர்ப்பதைத் தவிர்த்து மாடுகள் வளர்ப்புக்கு மக்கள் மாறினர். இதனால், ஆடுகளின் கழிவுகளை உருட்டிச் செல்லும் பழக்கம் கொண்ட வண்டு வகைகள் குறைந்து, இப்போது அங்கு உருட்டிச் செல்லாமல் சாணம் உள்ள இடத்தையே குழி தோண்டி புதைத்துப் பயன்படுத்தும் வகை வண்டுகள் அந்த இடத்தை நிரப்பின.

கர்நாடகாவின் பிலிகிரிரங்கா மலைத்தொடரின் பல வாழ்விடங்களில் லன்டானா என்ற ஆக்கிரமிப்புத் தாவரம் பரவிவிட்டன. இதனால், பாலூட்டிகள் பலவும் அந்த வாழ்விடங்களை விட்டு நகர்ந்துவிட்டன. இதனால் அங்கு பாலூட்டிகளின் உயிரினப் பன்மை குறைந்தது. அப்படிப்பட்ட பகுதிகளில் சாண வண்டுகளைப் பார்க்க முடிவதில்லை," என்று கூறுகிறார் பிரியதர்ஷன்.

மேலும், "சாண வண்டுகள், அவை வாழும் நிலவியல் பகுதியின் சூழலியல் தரத்தை அறிவதற்கான அளவுகோலாகச் செயல்படுகின்றன. தாவரங்கள், காலநிலை, உயிரினப் பன்மை என்று பல காரணிகள் அவற்றைப் பாதிக்கின்றன. ஆகவே, வாழ்விடச் சிதைவு, காலநிலை மாறுவது ஆகியவற்றுக்குச் சிறந்த அளவுகோலாக அவை செயல்படுகின்றன," என்றார்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான பாகிஸ்தானின் சிந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாதிர் அலி ஷா மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள், "சாண வண்டுகள் கால்நடைகளின் சாணத்தைச் சாப்பிட்ட பிறகு, மனிதர்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா அதில் இருப்பதில்லை.

 

சாண வண்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, சாண வண்டுகள் மற்ற உயிரினங்களின் சாணத்தை, கழிவுகளை மண்ணுக்குள் புதைத்து வைப்பது, அதைச் சாப்பிடுவது ஆகியவற்றின் மூலம் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான மீத்தேன் வெளியீட்டில் கணிசமான பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இதன்மூலம், மீத்தேன் வெளியீட்டில் அதிகபட்சமாக 12 சதவீதத்தை அவற்றால் கட்டுப்படுத்த முடியலாம்" என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் சாண வண்டுகளின் வளர்ச்சி

நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் உயிரினங்களுக்கு வளிமண்டலத்தில் கரிம வாயு அதிகரிப்பது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சான்றாக, கரிம வாயுவை வெளியிட்டு ஆகிஜனை நுகரும் மனித நுரையீரலை கூறலாம். ஆனால், மண்ணைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு அது உகந்ததல்ல. மண் சார்ந்த பொருட்களை நிறைய உட்கொண்டு, ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதில் மற்ற மண் சார்ந்த உயிரினங்களோடு போட்டியிட வேண்டும்.

2021ஆம் ஆண்டு, அதுகுறித்து சாண வண்டுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அதிக கரிம வாயு இருக்கும்போது அவை புழு வடிவத்திலிருந்து முதிர்வயதுக்கு வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்தது தெரியவந்தது. கட்டுப்பாடற்ற மனித நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும் கரிம வாயு இந்தப் பாதிப்பிற்குக் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறியது.

 

சாண வண்டுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாண வண்டுகளின் முட்டைகள், சாண உருண்டைகளுக்குள் பொறிந்து லார்வாக்கள் வெளியே வந்ததும் அவை உள்ளிருந்து உருண்டையின் உட்புற சுவர்களைத் தின்று, சாணத்தைச் செரித்து வளர்ந்து வெளியேறும். அந்தச் செயல்முறையில் சாணத்தில் இருக்கும் நார்ச்சத்து போன்ற பொருட்கள் அவை சாப்பிட ஏதுவான வகையில் மாறுவதில் பல நுண்ணுயிர்கள் பங்கு வகிக்கின்றன. ஆனால், இப்போது அதிகரிக்கும் கரிம அளவால், இந்த உறவு பாதிக்கப்பட்டு, சாண உருண்டையின் உட்புற வெப்பநிலை, குளிர்ச்சி, அதன் தன்மை போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அது அவற்றுடைய வாழ்வியல் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

பல இடங்களில், நாய்கள் முதல் ஆடு, மாடு என்று அனைத்து விதமான உயிரினங்களின் கழிவுகளும் கிடப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், அவற்றை யாரும் நீக்கவே இல்லையென்றாலும், அவை விரைவில் அந்த இடத்தைவிட்டு மறைந்துவிடும். அதற்குக் காரணம் சாண வண்டுகளைப் போன்ற சிற்றுயிர்கள்.

https://www.bbc.com/tamil/science-63215892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.