Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது - 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது - 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேச தீட்சிதர் ஆகிய இருவரையும் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இப்போது சிறுமிக்கு 15 வயதாகிறது. சிறுமியை திருமணம் செய்துகொண்ட சிறுவனுக்கு 17 வயதாகிறது என்று காவல்துறை கூறுகிறது. இவர்கள் இருவரிடமும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

புகார் பெற்றபின் தாங்கள் விசாரணைக்காகச் சென்றபோது 13 வயது சிறுமியை ஒளித்து வைத்துக்கொண்டு, கைது செய்யப்பட்ட தீட்சிதர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

மாவட்ட சமூக நலத்துறைக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அந்தத் துறையின் அதிகாரிகள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்தக் கைது நடந்துள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இருவரும் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மற்ற தீட்சிதர்களுக்கு தகவல் தெரிந்ததால் கோவில் கோபுர வாயில் முன்பு உள்ள சாலையில் சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் தடுப்புக்காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர்.

இதுமட்டுமல்லாது சனிக்கிழமை மாலை 50க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோவில் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இரவு முதல் நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டம் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே பரபரப்பாகக் காணப்பட்டது.

 

குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது

சிறுமிக்கு திருமணம் - தீட்சிதர் சிக்கியது எப்படி?

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆரோக்கியராஜ் கூறுகையில், "குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து இந்த வழக்கில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியைப் பார்க்கச் சென்றோம். அப்போது, சிறுமியை மறைத்து வைத்து தீட்சிதர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

இதையடுத்து திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண மண்டபத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது அங்கு திருமணம் நடந்ததற்கான பதிவுகள் இருந்தன. அதன் மூலமாக கடந்த 2021 ஜனவரி 25ஆம் நாளன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்கு இந்த திருமணத்தைச் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.

"சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்பட ஆதாரம் எங்களுக்குக் கிடைத்தது. அதன்பின் சமூக நலத்துறை சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்தோம்," என்று புகார் அளித்த பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மீனா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

 

குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது

குழந்தை திருமணம் - 'தீட்சிதர்கள் மீது மட்டும் நான்கு வழக்குகள்'

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

''கடலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வருடம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தீட்சிதர்கள் மீது மட்டும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

"குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், அதனால் அந்த குழந்தைக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இதை நடைமுறை வழக்கமாகக் கருதி இவ்வாறு குழந்தைத் திருமணம் செய்து வருகின்றனர். ஆனால் இது சட்டத்துக்குப் புறம்பானது. தற்போது விதிமுறையை மீறி குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்று அவர் கூறினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் கோவில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்தது, கனக சபை மேடை மீது பக்தர்கள் ஏறி வழிபாடு செய்யத் தடை விதித்தது, கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண் பக்தர் ஒருவரை சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

https://www.bbc.com/tamil/india-63274722

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைத் திருமண பிரச்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒரே ஆண்டில் 4 குழந்தைத் திருமண வழக்குகளில் கைது

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

சிதம்பரம்: 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் – போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், தமது 13 வயது மகளுக்கு குழந்தைத் திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேச தீட்சிதர் என்பவரும் கைதாகியுள்ளார். குழந்தைத் திருமணம் செய்த குற்றத்துக்காக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஓராண்டில் கடலூர் மாவட்டத்தில் 23 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.‌ இந்த 23 வழக்குகளில் நான்கு குழந்தைத் திருமண வழக்குகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது தொடரப்பட்டுள்ளன.

''கடந்த 10 மாதத்தில் மாவட்டம் முழுவதும் 23 குழந்தை திருமணங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தொடர்பாகக் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு‌ வழக்கு, அக்டோபர் மாதம் இரண்டு வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்று பிபிசி தமிழிடம் பேசிய கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சித்ரா கூறினார்.

சனிக்கிழமையன்று நடந்த கைது இந்த ஆண்டின் நான்காவது சம்பவம். முதல் மூன்று சம்பவங்களின் விவரங்கள் கீழே.

 

சம்பவம் 1:

கடந்த ஜூன் 3ஆம் தேதி சிதம்பரம் கோவில் தீட்சிதரின் 17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் வந்தது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இந்த தகவலின் அடிப்படையில் சமூகநலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்‌ அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் என்பவரின் மகன் கபிலன் என்பவருக்கும் கோவில் தீட்சிதர் பெண்ணான 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்தது தெரிந்தது.

 

குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது

 

படக்குறிப்பு,

சனிக்கிழமை நடந்த கைதுக்கு எதிராக சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்திய போராட்டம்.

இதுதொடர்பாக மாப்பிள்ளை, அவருடைய தந்தை, சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் 2:

சிதம்பரம் கோவில் மற்றொரு தீட்சிதரான சோமசேகர் தீட்சிதரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கு 14 வயதே ஆகியிருந்த நிலையில், இவரை கடந்த ஆண்டு 24 வயதான பசுபதி தீட்சிதர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தாக புகார் வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்று சிறுமியிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருமணம் நடந்ததாக சிறுமி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை பசுபதி தீட்சிதர், மாப்பிள்ளையின் தந்தை கணபதி உட்பட 3 பேரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் 3:

இதேபோன்று, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதருடைய 13 வயது மகளுக்கு, 19 வயது தீட்சிதருடன் திருமணம் செய்து வைத்துள்ளதாக மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது.

 

குழந்தைத் திருமண விவகாரத்தில் இருவர் கைது

 

படக்குறிப்பு,

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இந்த ஆண்டு மட்டும் நான்கு குழந்தைத் திருமண வழக்குகளில் கைதாகியுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்டு மாப்பிள்ளை பத்ரீசன், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் தீட்சிதர், தாய் சித்ரா, மாப்பிள்ளையின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர் மற்றும் சிறுமியின் தாயார் தங்கம்மாள் உட்பட 6 பேர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் மாப்பிள்ளையின் சகோதரர் சூர்யா மற்றும் சிறுமியின் தாயார் இருவரையும் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த மாப்பிள்ளை, அவரது தந்தை மற்றும் தாயார் உட்பட மூன்று பேரை கடந்த 8ஆம் தேதி கைது செய்தனர்.

இறுதியாக கடந்த 2021 ஜனவரி 25ஆம் தேதியன்று சிதம்பரம் கோயில் செயலாளரின் 13 வயது சிறுமிக்கும் அதே கோவில் தீட்சிதருடைய 15வயது சிறுவனுக்கும் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமி மற்றும் சிறுவனின் தந்தை இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இந்தியாவில் குழந்தை திருமண பிரச்னை

ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட குழந்தைத் திருமண ஒழிப்பில் உலக நாடுகளின் நிலை குறித்த அறிக்கை, "இந்தியா குழந்தைத் திருமணம் மூலம் திருமணமான 22 கோடியே 30 லட்சம் பேரைக் கொண்ட நாடு. உலகளவில் அதிக குழந்தை மணப்பெண்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாது இடத்தில் உள்ளது," என்று கூறுகிறது.

 

குழந்தை திருமணம் - சித்தரிப்பு படம்

பட மூலாதாரம்,ARIJIT MONDAL / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

குழந்தை திருமணம் - சித்தரிப்பு படம்

18 வயதுக்குக் கீழே உள்ளவருக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் இப்போது 15-19 வயதுக்குட்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 16 சதவீதம் பேருக்கு திருமணமாகியுள்ளது. இதுதொடர்பாகக் கிடைத்த ஆதாரங்கள், சிறுமியின் ஒப்புதல் இன்றியே குடும்பத்தினரால் இந்தத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதாகக் கூறுகின்றன என்று ஐ.நா குழந்தைகள் நல அமைப்பு கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 47 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உலகளவில் கடந்த பத்தாண்டுகளில் சிறு வயதில் திருமண உறவுக்குள் தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

கோவிட் பேரிடர் காரணமாக, உலகளவில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள், வளரிளம் பருவ சிறுமிகள் பள்ளிப் படிப்பை இழந்துள்ளனர். அதில் 11 கோடி பேர் குழந்தைத் திருமண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-63282904

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.