Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சென்னை கனமழை

முக்கிய சாராம்சம்
  • சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது.
  • மழைப் பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த பேரழிவுகரமான வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஏழு ஆண்டுகளில் மழைப் பொழிவைக் கணிப்பது மேன்மேலும் கடினமாகி வருகிறது. அதைத் தாக்குப்பிடிக்கும் திறன் இந்த ஏழு ஆண்டுகளில் சென்னை பெருநகரத்திற்கு வந்துள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வல்லுநர்களிடம் பேசினோம்.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1.2 கோடி மக்கள் வாழும் கடற்கரை நகரத்தின் தெருக்களிலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்கியிருப்பதைக் காண முடிகிறது. இனி வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யும் என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நிலையில் இருக்கின்றனர்.

அக்டோபர் 31ஆம் தேதியன்று தொடங்கிய பருவமழைக்கு நடுவே நடந்த மழை தொடர்பான சம்பவங்களில் நவம்பர் 5 வரை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரவு கூறுகிறது.

மழை பெய்வது தீவிரமடைது மட்டுமின்றி, முன்பு போல் கணிக்க முடியாத வகையிலும் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் அதிகாரிகள் விரைந்து செயலாற்றுவது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல்.

 

பொதுவாக, பருவமழையின் இடையிலும் இறுதியிலும் தான் சென்னை போன்ற நகரங்களில் வெள்ளநீர் தேங்குவது நிகழும். ஆனால், இந்த ஆண்டில் பருவமழை தொடங்கிய மூன்று நாட்களில் இருந்தே தமிழகத் தலைநகரின் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கத் தொடங்கிவிட்டது.

2021ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் 3 நாட்களில் பெய்த சராசரி மழை அளவு 147.27மிமீ. இந்த ஆண்டின் நவம்பர் தொடக்கத்தில் பெய்த மூன்று நாள் மழை அளவு 205.63மிமீ.

“உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது. வானிலையைக் கணிப்பது சரியாக இருந்தால் முன்னறிவிப்பு செய்து எச்சரிக்க முடியும்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஆனால், காலையில் கணிப்பது மாலையில் மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, பருவமழை தொடங்கிய 24 மணி நேரத்தில் 140மிமீ அளவிலான மழைப்பொழிவு நிகழும் என்று யாரும் கணிக்கவில்லை. அது எதிர்பாராத வானிலை நிகழ்வு,” என்கிறார் இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் முனைவர் எஸ். ஜனகராஜன்.

இந்த எதிர்பாராத கனமழையால் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிளில் தமிழக அரசு மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை நீக்கியது. நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புக் குழுக்களும் முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், “பருவமழையின் தொடக்கத்திலேயே குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகும் அளவுக்கு இருப்பதே சென்னையின் பேரிடர் பாதுகாப்பு நிலை எந்தளவுக்கு உள்ளது” என்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான்.

காலநிலை சீராக இல்லாமல் ஒழுங்கற்றதாகி வருவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர்.ராக்சி மேத்யூ கோல்.

 

சென்னை கனமழை

அவர், “பருவமழை வடிவம் மிகவும் ஒழுங்கற்றதாகிவிட்டது. மேக வெடிப்புகள், கன மழை போன்றவை கணிக்க முடியாதவையாகி வருகின்றன. இவற்றை முன்னறிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும், கண்காணிப்பதே சவாலானது. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மேக வெடிப்புகள் பெரிய வெள்ளத்திற்கு வழிவகுத்தது அதற்கொரு சான்று. சமீபத்திய தசாப்தங்களில் இவை அடிக்கடி நடப்பதைக் காண்கிறோம்,” எனக் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சி இம்முறை முன்னெச்சரிக்கையோடு 2022 பருவமழையைத் தாக்குப்பிடிக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கடந்த சில மாதங்களில் மும்முரமாக இறங்கியது. ஆனால், “அந்த கட்டமைப்புகள் போதாது என்பதை பருவமழை தொடக்கத்திலேயே காட்டிவிட்டதாக” கூறுகிறார் ஹாரிஸ் சுல்தான்.

சென்னை மாநகராட்சி மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்காதது ஏன்?

மழைப்பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அண்னா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ.

சென்னையின் நீர்த் தேவையை கோடைக் காலங்களில் பூர்த்தி செய்வதற்கான போராட்டம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. நகரத்தில் பல்வேறு நீர்நிலைகள் இருந்தாலும், நீர்த்தேவையில் மூன்றில் ஒரு பங்கு தேவைக்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது. அதை மீள்நிரப்பு செய்வதற்கு மழைப்பொழிவு அவசியம்.

 

சென்னை கனமழை

அதற்கான “கட்டமைப்பு இங்கு இல்லை. அதிகப்படியான மழை பெய்யும்போது அதைச் சேமித்து வைத்தால் தானே அடுத்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய கோடை வறட்சியை நகரம் எதிர்கொள்ள முடியும்!” என்கிறார் சுல்தான்.

மழையின்போது தேங்கும் வெள்ளநீரை உடனடியாக அகற்றிவிட்டோம் என்று அரசு பெருமை பேசுவதையும் தாண்டி, வெள்ள நீர் தேங்காமல் இருக்கவும் அடுத்த ஆண்டு கோடைக்காக கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கவும் வழி செய்ய வேண்டும் என்கிறார் சுல்தான்.

நகரக் கட்டமைப்பு எப்படியிருக்க வேண்டும்?

தென்னிந்திய நகரங்களில் மழைப்பொழிவு ஒழுங்கற்றதாக உள்ளது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அளவு ஒரே நாளில் பெய்து தீர்த்துவிட்டு நின்றுவிடுவது, வரலாறு காணாத அளவுக்கு மழைக்காலம் முழுவதும் கொட்டித் தீர்ப்பது என்று ஒழுங்கற்ற பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.

“மழைநீர் எங்கு பொழிகிறதோ அங்கேயே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்து, சேமிக்க வேண்டும். அரசு, தனியார் என்று அனைத்து கட்டடங்களின் கூரைகளிலும் மழைநீரைப் பிடித்து நிலத்தடியில் சேகரிக்கும் கட்டமைப்பு வேண்டும். இதைச் செய்தால், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பான நகரமாக மட்டுமின்றி வறட்சியில் இருந்தும் சென்னை பாதுகாப்பாக இருக்கும்,” எனக் கூறுகிறார் பேராசிரியர் ஜனகராஜன்.

 

சென்னை கனமழை

இதை ஏற்றுக்கொள்ளும் ஹாரிஸ் சுல்தான், “கட்டடங்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளோடு தெருக்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளை இணைக்க வேண்டும். அவற்றை நகரத்தின் நீர்த்தேக்கங்களோடு இணைக்க வேண்டும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம், சென்னை எதிர்கொள்ளும் ஒழுங்கற்ற பருவநிலை நிகழ்வுகளைச் சமாளிக்கலாம்,” எனக் கூறுகிறார்.

தமிழகத் தலைநகரம் உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, கடல்மட்டத்தில் இருந்து தாழ்வான சமவெளியில் அமைந்துள்ளது. சென்னை காலநிலை மாற்ற விவாதங்களில் உலகளாவிய கவனம் பெறுவதற்கு அதன் நிலவியலும் ஒரு காரணம் என்கிறார் நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன்.

மேலும், “சமீபத்திய ஐபிசிசி அறிக்கையில் ஆறு இடங்களில் சென்னையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் நகரம் மொத்தமும் நிலவியல்ரீதியாக பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 5 மீட்டர் என்ற அளவில் தான் சென்னையின் பெரும்பான்மை பகுதிகள் உள்ளன. அதனால் தான் சென்னை உலகளாவிய கவனம் பெறுகிறது,” என்றார்.

ஐபிசிசி அறிக்கை கடல் மட்ட உயர்வால் இந்தியாவின் மும்பை, சென்னை ஆகிய நகரங்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று எச்சரித்துள்ளது. பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வதால், நகரங்களின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மிகப்பெரும் பேரழிவுகளைச் சந்திக்கவுள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று.

 

சென்னை கனமழை

உலகளவில் 2050ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் வெள்ள சேதங்களை எதிர்கொள்ளும் 20 கடலோர நகரங்களில் சென்னையும் ஒன்று.

உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்களில் 56 சதவீதம், சூறாவளி, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகிய 6 பேரிடர்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாதிக்கப்படுகின்றன. சென்னை, நகோயா, டெஹ்ரான் ஆகிய பெருநகரங்கள் 80 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்.

தென்னிந்திய நகரங்களில் காலநிலையின் தாக்கம் இனி எப்படியிருக்கும்?

“பலவீனமான புயலில் இருந்து மிகக் கடுமையான சூறாவளியாக உருவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை எடுத்துக் கொண்ட சூறாவளிகள், இப்போது ஒரே நாளுக்குள் தீவிரமடைந்து வருகின்றன. இது, முன்னறிவிப்பு செய்வது, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு இனி மிகச் சொற்ப நேரத்தையே வழங்கும்,” என்கிறார் ராக்சி மேத்யூ கோல்.

நாம் நகரங்களை “மறுவடிவமைப்பு” செய்ய வேண்டும் என்கிறார் ராக்சி, “இப்போது காலநிலை மாற்றம், புயல்களின் தீவிரம் ஆகியவை நம் முன்னறிவிப்பு கட்டமைப்புகளுக்கு மேலதிக சவால்களைக் கொடுக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் முன்னறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, தீவிரமடைந்து வரும் புயல்கள், உயரும் கடல் மட்டங்களுக்கு ஏற்ப கடலோர சமூகங்களுக்கு உதவும் நீண்ட கால கொள்கைகளை நாம் வகுக்கவேண்டும்.” என்கிறார் ராக்சி.

https://www.bbc.com/tamil/articles/c980gwjrjdwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பருவ மழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது

 

மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழகத்தில் பருவ மழையால் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பு 

 

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழை பெய்தது வருகிறது. இதனால் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்தது. பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது, விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. 

 

மயிலாடுதுறையில் இதுவரை இல்லாத கனமழை

 

மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இதனை அடுத்து தற்போது பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையையும் சேர்த்து ஒரு லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது.

 

குறிப்பாக மயிலாடுதுறை மாப்படுகை, அருண்மொழித்தேவன், நீடூர், மணலூர் ,வில்லியநல்லூர் , பாண்டூர் , மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

 

தொடர்ந்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடி விளைநிலத்தில் கலந்து வருவதால் நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

வாய்க்கால்கள் முறையாக தூர்வாராமல் விட்டதால் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு தற்போது தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும் , உடனடியாக வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இன்னும் இரு தினங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கக் கூடிய நிலையில் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில்  ஒரே நாளில் அதிகப்படியாக சீர்காழியில் 436 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 250.15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

 

 

 

மழை

வரலாறு காணாத அதீத கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி நகர் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. 

 

இதுபோல பல்வேறு கிராமப் பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

 

அதனை எடுத்து மயிலாடுதுறை ஒன்றியம் அருள்மொழித்தேவன், அருவாபடி, கீழ மருதநல்லூர், ஆனதாண்டாபுரம். சேத்தூர், பொன்வாசநல்லூர், பட்டவர்த்தி. புலவனூர், உள்ளிட்ட சுமார் 2500 ஏக்கர் சம்பா சாகுபடி விலை நிலங்கள் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழையால் மூழ்கி சேதமடைந்துள்ளது. 15000 குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.

 

 257 கிராமங்கள் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 15000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது இதனால் 58 முகாம்கள் அமைக்கப்பட்டு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

 

இந்த மழையில் 189 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் பயிரிடப்பட்ட ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 850 ஏக்கரில் 87 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பத்து துணை மின் நிலையங்கள் சேதமடைந்தும், 2260 மின்மாற்றிகள் 200 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. 

 

இதனால் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 354 மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

 

இந்தப் பகுதிகளில் விட்டாரு, உப்பனாறு, அய்யாவினாறு, மற்றும் வடிகால் வாய்க்கால் கன்னி வாய்க்கால் போன்றவற்றை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சரிவரத் தூர் வரப்படாததால் பயிர்கள் அனைத்தும் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வடிகாலில் சென்றால்தான் மீதமுள்ள பயிர்கள் அழுகி விணாகமல் தப்பிக்கும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனாலும் வருகிற 16 முதல் மழை திரும்ப தொடரும் என அரசு அறிவித்ததால் விவசாயிகள் பெறும் கவலை கொண்டுள்ளனர். சில பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்தது. 

 

 

மழை

 

படக்குறிப்பு,

கடலூர்

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு

 

இந்த நிலையில் சீர்காழியின் எருக்கூரை அருகே  ராமு-சங்கீதா தம்பதியரின் மகள் அச்சுதா,  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது,  வாய்க்காலில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கதவணை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இதனை அடுத்து மீட்கப்பட்ட குழந்தையை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

சிதம்பரம் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிப்பு

 

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் சிதம்பரம் சுற்றுவட்டார கிராமங்கள் பெரிதாக பாதிக்கப்பட்டது.  குறிப்பாக சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை, கடவாச்சேரி, பெராம்பட்டு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அதிக சேதத்தை ஏற்படுத்தியது

 

பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது.

 

இதனிடையே கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மெய்ய நாதன்   மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா,  விவசாய இயக்குனர் சுப்பையா, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று  பார்வையிட்டடு ஆய்வு மேற்கொண்டனர். 

 

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற்று தருவதாக சட்டமன்ற பேரவை உறுப்பினர் ராஜகுமார் வாக்குறுதி அளித்தார் .

 

செந்தில் பாலாஜி

மின் விநியோகம் சீர் செய்யப்படுகிறது - மின்துறை அமைச்சர்

 

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், 

 

"பருவமழையினால் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் மின்விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் 36 மணி நேரத்தில் சரி செய்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீர்சூழ்ந்த பகுதியில் உள்ள மின்மாற்றிகள் நீர் வடிந்த பிறகு தான் சரி செய்ய முடியும்," என செந்தில் பாலாஜி தெரிவித்தார் 

 

தமிழகத்தில் மயிலாடுதுறை பகுதிகளில் பாதிப்பு அதிகம் - முதல்வர் 

 

இந்நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட முதல்வர், பல்வேறு பகுதிகளில் முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

 

பின்னர் பேசிய அவர், “மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் விளை நிலங்கள் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்," என தெரிவித்தார். 

"பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க கோரிக்கை"

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பாதிப்பு ஏற்படுள்ளதாக தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.  

 

"பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது.

 

அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீரில் பயர்கள் மூழ்கியது மற்றும் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளும் மூழ்கியது. இறந்துபோன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீதி இருக்கும் ஆடு. மாடுகளுக்கு உரிய மருத்துவ வசதி செய்ய வேண்டும்," என்றார் அவர்.

  

"அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு ஒன்றியங்களை பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க வேண்டும். மழை பாதிப்பு தொடர்பாக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாலும், அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்," என்று இளக்கீரன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cjend5ppvglo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

தாத்தா காலத்திலும் வெள்ளம்😂
மகன் காலத்திலும் வெள்ளம்😁
பேரன் காலத்திலும் வெள்ளம்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.