Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசியல்வாதிகளின் தவறால் மலையக மக்கள் புறக்கணிக்கப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல்வாதிகளின் தவறால் மலையக மக்கள் புறக்கணிக்கப்பா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?

தமிழர் பிரச்னைக்கு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுதந்திர தினத்திற்கு முன்னதாக தீர்வை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சர்வகட்சி சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் கட்சிகளை அழைத்து அண்மையிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

 

 

தமிழர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் மாத்திரம் கருத்தில் கொள்ளப்படுகின்றார்கள் எனவும், தென் பகுதியில் வாழும் மலையக தமிழர்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய இனப் பிரச்னை விவகாரத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்க் கட்சிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப் பிரச்னை விவகாரத்தில் அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக மலையக கட்சிகளுடனும், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு மலையக தமிழ் கட்சிகள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில், சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

''வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மாத்திரமே பிரச்னை உள்ளது என இதுவரை காலமும் நினைத்துக்கொண்ருந்தோம். வடக்கு, கிழக்கு பற்றி பேசுவது தப்பில்லை. ஆனால், மலையகத்தை மறந்து விட்டனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது." என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.  

இந்த விடயம் தொடர்பில் தானும், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும் ஜனாதிபதியுடன்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?
 
படக்குறிப்பு,

மனோ கணேசன்

மலையக மக்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

''வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப்பிரச்னையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்றோம். எமது மக்களுக்கும் அரசியல், சமூக மற்றும் கலாசார அபிலாஷைகள் உள்ளன. தேவைப்பாடுகள் உள்ளன. எனவே, எங்கள் பிரச்னை பற்றியும் கண் திறந்து பாருங்கள், காது கொடுத்து கேளுங்கள் எனவும் குறிப்பிட்டோம்." என அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில் மலையக கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

அரசியல் ஆய்வாளரின் பார்வை

இந்த சந்தர்ப்பத்தில் தப்பித்தல்வாதத்தை பயன்படுத்தாமல், மலையக மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.  

''இனப் பிரச்னை தீர்வு என்றாலே, அது வடக்கு மக்களுக்கான பிரச்னையின் தீர்வு என்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரம் இனப் பிரச்னை அல்ல. இலங்கையிலுள்ள எல்லா இன மக்களுக்கும் பிரச்னை இருக்கின்றது என்பதை சொல்லும் பொறுப்பு, அந்தந்த குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அரசியல் தலைவர்களின் பொறுப்பு. வடக்கு அல்லது வடகிழக்கு பிரச்னையை மாத்திரம் ஜனாதிபதி பேசுகின்றார் என உணர்வார்களாயின், அது யாராக இருந்தாலும், அவ்வாறு உணர்வார்களாயின், அது பலவீனமான அம்சம். இந்த பலவீனமான அம்சத்தின் பெரும்பங்கை இந்த அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. 

ஏனெனில், தங்களுடைய இனப் பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்ற செய்தியை அழுத்தமாக இவர்கள் அரசுக்கு சொல்லவில்லை. அதை உணர செய்யவில்லை. சர்வதேசத்திற்கு உணர செய்யவில்லை. குறைந்த பட்சம், இந்தியாவிற்கு கூட இவர்கள் உணர செய்யவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது, இந்தியாவின் செல்ல பிள்ளையாக இலங்கையில் இயங்கக்கூடிய ஒரு கூட்டணி. அவர்கள் கூட கூட்டணியாக 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இந்தியாவிற்கு பிரச்னையை உணர செய்யவில்லை. 

 

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?
 
படக்குறிப்பு,

எம்.திலகராஜ்

இது எல்லாம் பலவீனத்தின் குறிக்காட்டியாகும். மற்ற விடயம், எதிர்கட்சியில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேசுகின்றார்கள் என்றால், அதே போல எதிர்கட்சியில் இருக்கக்கூடிய இவர்களை அழைத்து பேசவில்லை என்றால், நாடாளுமன்ற குழு பலவீனமாக இருக்கின்றது. தங்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் உயர்த்தி பேசவில்லை.

மூன்றாவது விடயம் என்னவென்றால், ஒரு ஆசனத்துடன் வருகைத் தந்த ஒருவர் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அந்த ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டே இனப் பிரச்னையை தீர்க்க போகின்றேன் என கூறி வேலைகளை செய்கின்றார் என்றால், ஐந்து ஆசனத்தை வைத்துக்கொண்டிருப்பவர்கள் அந்த ஒரு ஆசனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும். அதை செய்யாது. புறக்கணிப்பது என்பது தப்பித்தல்வாதம். 

இப்போது தப்பிப்பதை செய்யக்கூடாது, எப்படி உள்ளே போவது என்பதை யோசிக்க வேண்டும். பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன்னர் இனப் பிரச்னையை முடிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். அவர் முடிக்கின்றாரா? இல்லையா? என்பது வேறு விடயம். அது நடக்காது என்பது வேறு விடயம்.  ஆனால், பிப்ரவரி 4ஆம் தேதி என்ற காலக்கேடு விதித்து, தீவிர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தங்களை முன்னிலைப்படுத்த தெரியாத தலைவர்கள், தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

 மறுபக்கமாக ஒரேயொரு ஆசனத்தில் தேசிய பட்டியல் ஊடாக வந்துக்கொண்டு, இத்தனை வருட கால இனப் பிரச்னையை தீர்ப்பதற்கான காலக்கெடுவை மூன்று மாதத்திற்குள் வைத்திருக்கின்றனேன் என சொல்ல வருவது, ஒரு தைரியத்தை கொடுக்கின்றது. பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் இப்படியாக விடயத்தை ஜனாதிபதி கூறுகின்றார்.

அது கிடைக்கும், கிடைக்காது என்பதற்கு அப்பால், தங்களையும் உள்ளீர்த்துக்கொண்டு, அந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு இந்த அரசியல் தலைவர்களுக்கு உரித்தானது. நான் ஒரு வேண்டுக்கோள் அல்லது சவாலாக ஒரு விடயம்தை முன்வைக்கின்றேன். குறைந்த பட்சம், நாளை ஜனாதிபதி இவர்களை அழைத்து விடுவாராக இருந்தால், மலையக மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான இவர்கள் வைத்திருக்கும் முன்மொழிவுகள் என்ன?" என அரசியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.  

 

மூத்த ஊடகவியலாளரின் பதில்

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது, அரசியல்வாதிகளின் குறையா?

பட மூலாதாரம்,ஆர்.சிவராஜா

 
படக்குறிப்பு,

ஆர்.சிவராஜா

மலையக மக்களின் பிரச்னை தீர்க்கும் விடயத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தவறுகள் எதுவும் கிடையாது என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

''அரசியல் தீர்வு என்று பார்க்கும் போது, போரால் பாதிக்கப்பட்ட நேரடியான சமூகமாகவே வடக்கு மக்களை பார்க்கின்றார்கள். அடுத்த கட்டமாக மலையக பிரச்னைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்த விடயத்தில் ரணில் மீது தவறு இல்லை. இது இவர்கள் மீதே தவறு காணப்படுகின்றது. ஆரம்பத்திலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, மலையக கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்னையை தீர்ப்பதற்கு இவர்கள் எந்தவொரு ஏற்பாட்டையும் செய்யவில்லை. 

மலையக தமிழ் அரசியல் கட்சிகள், அல்லது மலையக புத்திஜீவிகள் சேர்ந்து, இதற்கான ஒரு ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும். அப்படியொன்றை செய்யவில்லை. இந்த விடயத்தில் ரணிலை குறை சொல்வது என்பது இரண்டாவது விடயம். அதற்கான முதல் ஏற்பாட்டை மலையக புத்திஜீவிகள் சமூகமோ அல்லது அரசியல் சமூகமோ  செய்திருக்க வேண்டும். 

ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்ப கூட்டம் நடைபெற்றது. அந்த நேரம் மலையகத்தையும் உள்ளடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லியிருக்க  வேண்டும். அப்போது ஏன் இவர்கள் அதை சொல்லவில்லை. இது மலையக அரசியல்வாதிகளின் தவறு கிடையாது.  அது இவர்களின் குறைபாடாகும். அந்த குறையை இவர்கள் நிவர்த்தி செய்திருக்க வேண்டும். மலையக மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் விடயத்தில், மலையக அரசியல் கட்சிகள் அல்லது மலையக புத்திஜீவிகள் கடைபிடிக்கும் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என நான் கூறுகின்றேன்." என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார். 

https://www.bbc.com/tamil/articles/c51p0gv4153o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியாத அவல நிலையில் மலையக மக்கள் - கள நிலவரம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிராசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கை, கனேபல்ல பகுதி, வறுமை
 
படக்குறிப்பு,

இலங்கை மலையக மக்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் குழந்தைகள் பலர், தமது பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டுள்ளதைக் காண முடிகின்றது. இந்த விஷயம் தொடர்பில் ஆராய்வதற்காக பிபிசி தமிழ், கள ஆய்வொன்றை மேற்கொண்டது. கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை பகுதியிலுள்ள சிறிய பெருந்தோட்ட பகுதியே கனேபல்ல தோட்டம். மலையகப் பகுதியாக கனேபல்ல தோட்டத்தில், இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றார்கள். இறப்பர் பால் வெட்டுதல் மற்றும் நாளாந்த கூலித் தொழில்களில் இந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனேபல்ல தோட்டத்தின் மேல் பிரிவு பகுதியில் மாத்திரம் சுமார் 125 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு வாழ்ந்து வரும் 125 குடும்பங்களில் 5 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை கல்வி கற்கும் வயதெல்லையைக் கொண்ட சுமார் 80 மாணவர்கள் இருக்கின்றார்கள். இந்த 80 மாணவர்களில் 20 மாணவர்கள் தற்போது தமது பாடசாலை கல்வியைக் கைவிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது, இந்த தோட்ட பகுதியில் மாத்திரம் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள், தமது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். மலையகத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் பலவற்றிலும் இந்தப் பிரச்னை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மலையகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்னையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கை, வறுமை, கல்வி

சசிகலாவின் குடும்ப நிலைமை

கனேபல்ல பகுதியில் வாழும் சசிகலாவுக்கு, நான்கு பிள்ளைகள். 21 வயது நிரம்பிய மூத்த மகன், கொழும்பில் வேலைக்குச் சென்று, தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாக அவர் கூறுகின்றார். ஏனைய மூவரும் 18 வயதுக்குக் குறைவான பாடசாலை கல்வியை தொடரும் வயதைக் கொண்டவர்கள். எனினும், இந்த மூவரில் ஒருவர் மாத்திரமே தற்போது பாடசாலை கல்வியைத் தொடர்ந்து வருகின்றார். 18 வயதாகும் தனது இரண்டாவது மகள், குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை கல்வியைப் பாதியில் கைவிட்டு, தற்போது ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருவதாக சசிகலா கூறுகின்றார். ''ஒரு மகன் தான் வேலை செய்கிறார். பாடசாலை செல்லும் வயதில் ஒருவர் வேலை செய்கிறார். ஒருவர் மாத்திரமே படிக்கின்றார். வசதி இல்லாததால் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கின்றேன்," என சசிகலா தெரிவிக்கின்றார்.

இலங்கை, வறுமை, கல்வி

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்ற நிலையில், மூன்று அப்பியாச கொப்பிகளை வாங்குவதற்கு அந்த ஆயிரம் ரூபா சென்று விடுமென அவர் கூறுகின்றார். ''ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம். அதுல கொப்பி வாங்க எல்லாம் போதாது. 1000 ரூபாய்க்கு மூன்று கொப்பி வாங்கினேன். வேறு பொருட்களை வாங்க முடியாது. கஷ்டம் காரணமாகத்தான் இவரை பாடசாலைக்குச் செல்லாமல் நிறுத்தினேன்," என்று சசிகலா குறிப்பிடுகின்றார். பாடசாலை செல்லும் வயதில், வேலைக்குச் செல்லும் சசிகலாவின் இரண்டாவது மகள் சுஜித்ரா, பிபிசி தமிழுக்குத் தனது கவலையைப் பகிர்ந்துக்கொண்டார். ''முடிந்த அளவுக்கு பாடசாலைக்குச் சென்றேன். வீட்டில் கஷ்டம். அதற்குப் பிறகு போக முடியவில்லை. பஸ் செலவுக்குப் பணம் இல்லை. அதனால் தான் வீட்டிலிருந்து வேலைக்குப் போகின்றேன். இப்போது வேலைக்குப் போகின்றேன், ஆனாலும் படிப்பதற்கு ஆசை இருக்கின்றது. வீட்டு கஷ்டத்தால் படிக்க போக முடியவில்லை. ஒவ்வொரு நேரம் சாப்பிடக்கூட பணம் இருக்காது," என சுஜித்ரா தெரிவிக்கின்றார்.

கல்வி, வறுமை
 
படக்குறிப்பு,

சுஜித்ரா

இதேபோன்று, தனது குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத மற்றுமொரு தாயைச் சந்தித்தோம். இவர் கனேபல்ல பகுதியைச் சேர்ந்த தனபாக்கியம். ''மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையை மட்டும்தான் படிக்க வைக்க முடியும். மற்ற இரண்டு பேரையும் படிக்க வைக்க முடியாது. எங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். ஒரு ஆள் வேலை செய்ற சம்பளத்தை வைத்துத்தான் வீட்டைக் கொண்டு போகின்றோம்.

இலங்கை மக்கள், கல்வி
 
படக்குறிப்பு,

தனபாக்கியம்

ஒருவருடைய சம்பளத்தில் எல்லாம் செய்ய முடியாது. ஐந்து பேர் இருக்கின்றோம். ஒரு ஆளுக்கு தான் வேலை. அதில் தான் குடும்பத்தை கொண்டு போகின்றோம்.

எனக்கு சரியாக வேலைக்கு போக முடியவில்லை. மகளுக்கு சுகமில்லை என்றால், நான் செல்ல வேண்டும். பணம் இல்லா விட்டால், யாரிடமாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அவர் வந்த பின்னர் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் கடைசி மகளைத் தான் பாடசாலைக்கு அனுப்புகின்றேன். கிழமைக்கு ஐந்து நாளும் அனுப்ப முடியாது. ஒரு நாள் மட்டும் தான் அனுப்ப முடியும். பஸ்ஸிற்கு போக காசு இருக்காது. இப்படித்தான் குடும்பத்தைக் கொண்டு போகின்றோம்," என்று தனபாக்கியம் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cd15egn4701o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.