Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அடிமிசன் அடி, ரேகிங், கஞ்சா பயன்பாடு, சிறுவனின் மரணம்: செங்கல்பட்டு சிறார் இல்லத்தின் மறுபக்கம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விவரங்கள் உங்களை மனரீதியாக சிரமப்படுத்தலாம்.)  

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

சிறுவனின் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த கூர்நோக்கு இல்லம் குறித்து அங்கு முன்னர் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

இறந்த சிறுவனின் தாயார் பிரியா, சிறார் இல்லத்தில் தனது மகனுக்கு மோசமான அனுபவம் இருந்ததாகவும் மர்மமான முறையில் தாக்கப்பட்டு தனது மகன் இறந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பிபிசி தமிழிடம் பேசிய இறந்த சிறுவனின் தாயார் பிரியா தனது மகனைக் கடைசியாகச் சந்தித்த தருணத்தில், தன்னை முடிந்தவரை விரைவில் ஜாமீனில் எடுக்கவேண்டும் என்றும், செங்கல்பட்டு இல்லத்தில் நடக்கும் 'விஷயங்கள்' மிகவும் அச்சம் கலந்தவையாக இருப்பதாகவும் சொல்லியதாகத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு இல்லத்தில் முன்னர் பணிபுரிந்த அனுபவமுள்ள அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, சிறுவர்கள் சிலர் தங்களைத் தாக்க வந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஒரு சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள காரணங்களால் அவர்களைச் சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நேரத்தில் தங்களுக்கும் ஆபத்துகள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

ஒரு சில சிறார்கள், இல்லத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்று திட்டமிட்டு அதிகாரிகளைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன என்கிறார்கள்.

பாதுகாப்பு கருதி பிபிசி தமிழிடம் பேசிய அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தில் முன்னர் தங்கியவர்கள், இளைஞர் நீதி குழுமம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

செங்கல்பட்டு இல்லம் கவனம் பெறுவது ஏன்?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்துவதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான சீர்திருத்த பள்ளிகளில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லம்.

1900களில் இருந்து செயல்பட்டு வரும் செங்கல்பட்டு இல்லத்தில், ஒன்றிணைந்த மதராஸ் மாகாணமாக இருந்த பகுதிகளில் இருந்து தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகும்கூட, 1970களின் தொடக்க காலம் வரையில், செங்கல்பட்டு இல்லத்தில், கேரளா, ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தண்டனை பெற்ற சிறுவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்று 1970களில் அந்த இல்லத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி ஒருவர் நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

''நான் பணிபுரிந்த காலகட்டத்தில் 1,200 சிறுவர்கள் அங்கு இருந்தார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் இங்கு கொண்டு வந்து ஒப்படைப்பார்கள்.

அந்தந்த மாநில அரசுகள் தமிழக அரசுக்கு இந்த சிறார்களை பராமரிப்பதற்கான செலவுக்கான நிதியை அளித்துவிடுவார்கள். 1970களின் பிற்பகுதியில்தான் பிற மாநிலங்களில் தனியாக சிறார் கூர்நோக்கு இல்லங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை அங்கு சிறுவர்கள் இறந்து போனதற்கான தரவுகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை,'' என்று அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

அடிமிசன் அடி, ரேகிங், கஞ்சா பயன்பாடு, சிறுவனின் மரணம்: செங்கல்பட்டு சிறார் இல்லத்தின் மறுபக்கம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

சிறார் சிறையாக இருந்த செங்கல்பட்டு இல்லம்

ஆரம்பக்கட்டத்தில் சிறார் சிறை என்று அறியப்பட்ட இந்த இல்லம், பின்னர் 'அப்ரூவர்' ஸ்கூல் என்று அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் அதை சீர்திருத்தப் பள்ளி என்றார்கள்.

தற்போது சிறார் கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறார் சிறப்பு இல்லம் என இரண்டு பிரிவாக அந்த இல்லம் செயல்பட்டு வருகிறது என்கிறார் ஒரு முன்னாள் அதிகாரி. குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணை நடைபெறும் நேரத்தில் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள். அவர்கள் மீது குற்றம் நிரூபணம் ஆகிவிட்டால், அவர்களின் தண்டனை காலத்தை சிறப்பு இல்லத்தில் கழிக்கவேண்டும் என்பதுதான் நடைமுறை.

''ஒரு கட்டத்தில் சிறார் இல்லம் முழுநேர கல்விக் கூடமாகவும் மாறியது. பல மாணவர்களுக்கு கல்வியைத் தொடரும் வாய்ப்பை அளித்தது. காலப்போக்கில், தண்டனை பெற்று வந்த சிறுவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறமைகளை வளர்க்கும் இடமாகவும் மாறியது.

பாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புகளும் கற்பிக்கப்பட்டன. ஒரு சில சிறுவர்கள், இந்த இல்லத்தில் இருந்த நூலகத்தைப் பயன்படுத்தி, திறமைகளை வளர்த்துக்கொண்டார்கள். ஆனால், ஒரு சிலர், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மீண்டும் சிறார் இல்லத்திற்கு வருவதையும் வாடிக்கையாகவும் வைத்திருந்தனர்,'' என்கிறார் அவர்.

அடிமிசன் அடி, ரேகிங், கஞ்சா பயன்பாடு, சிறுவனின் மரணம்: செங்கல்பட்டு சிறார் இல்லத்தின் மறுபக்கம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

சிறார் இல்லத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறித்து சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''நாங்கள் சிறுவர்களைத் திருத்துவதற்குப் பல முயற்சிகளைச் செய்வோம். கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களை நான் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன்.

தனது வழக்கைப் பற்றிய அச்ச உணர்வு மேலிட்டு, அவர்களில் ஒரு சிலர் அமைதியாக இருந்துவிடுவார்கள். 25 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்தவரை, தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் ஆபத்தானவர்கள்.

மனம் திருந்தி வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு சுலபத்தில் வருவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்துகொண்ட சில சிறுவர்கள், தொடர்ச்சியாக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு, எங்கள் இல்லத்திற்கு வருவார்கள்.

அதுபோல பலமுறை இல்லத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். என் தாயார், மனைவி, பிள்ளைகளைக் கொச்சைப்படுத்தி பேசினான்.

இதுபோன்ற பேச்சுகளால், நாம் ஆத்திரப்பட்டு, அவர்களை அடிக்கும் போது, தப்பித்து ஓட முயல்வார்கள். என்னிடம் வாக்குவாதம் செய்த சிறுவனை ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அவனை பிரம்பால் அடித்திருக்கிறேன். அது தவறுதான். ஆனால் அவன் அன்று இல்லத்தில் இருந்து தப்பித்து ஓடுவதை நான் தடுப்பதற்கு வேறு வழி தெரியவில்லை,'' என்கிறார் அந்த முன்னாள் அதிகாரி. 

2015இல் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, தப்பிச் சென்ற சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள்

செங்கல்பட்டு இல்லத்தில் நடந்த மரணம்

இதுவரை பலமுறை செங்கல்பட்டு இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இடையில் தகராறு நடைபெற்றது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியது, அதிகாரிகளைத் தாக்கியது போன்ற புகார்களும் பதிவாகியுள்ளன என்று பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

சிறார் இல்லத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சொல்கிறார் அவர்.

தனது அடையாளத்தைச் சொல்ல விரும்பாத அந்த அதிகாரி, சமீப காலங்களில், செங்கல்பட்டு இல்லத்திற்கு வரும் சிறார்களை அதிகாரிகள் ரேகிங் செய்துள்ளார்கள் என்ற தகவலை வருத்தத்துடன் சொல்கிறார்.

''செங்கல்பட்டு இல்லத்திற்கு வரும் சிறுவர்கள் மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று தற்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

அட்மிசன் அடி என்ற பெயரில் முதலில் கூர்நோக்கு இல்லத்தின் அதிகாரிகள் ஒவ்வொருவராக, பணிக்கு வந்தவுடன் அன்றைக்குப் புதிதாக வரும் மாணவனை முதலில் அடிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தற்போது இறந்த சிறுவனின் விஷயத்தில், அவன் டிசம்பர் 30ஆம் தேதி இல்லத்திற்கு வருகிறான், 31ம் தேதி இறந்துபோகிறான். தொடர்ந்து அடி வாங்கியதால்தான் சிறுவன் இறந்துபோனதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த மரணத்தை வலிப்பு வந்து சிறுவன் இறந்ததாக முதலில் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள்.

ஆனால் அதிகாரிகள் அடித்ததால்தான் சிறுவன் இறந்துள்ளார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன,'' என்கிறார் அந்த அதிகாரி.

அடிமிசன் அடி, ரேகிங், கஞ்சா பயன்பாடு, சிறுவனின் மரணம்: செங்கல்பட்டு சிறார் இல்லத்தின் மறுபக்கம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

மேலும் சிறுவன் இறந்தவுடன், அவனுடைய அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களுக்கு உடனே ஜாமீன் எடுக்கப்பட்டது என்பதால் சிறார் இல்ல அதிகாரிகள் மீதான சந்தேகம் வலுத்தது என்கிறார் அவர்.

''அங்கு சிசிடிவி வைக்கப்படவில்லை. இதுவே ஒரு பெரிய விதிமீறல்தான். பல உயரதிகாரிகள் இதில் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதால், இந்த வழக்கு எங்கள் துறைக்கு ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது,'' என்கிறார் அவர்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள சிறார்கள் தங்கியுள்ள அரசு இல்லங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்ற குழு வெளியிட்டது.

நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அந்தக் குழுவின் அறிக்கையில், அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறார் இல்லங்களில் கிட்டத்தட்ட 40% குழந்தைகள் 'வருந்தத்தக்க' சூழ்நிலையில் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு சில இல்லங்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் சிறையைவிட மோசமான நிலையில் இருந்தது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டத்தில், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சிறார் இல்லங்களிலும் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல செயற்பாட்டாளர் மற்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் பிபிசி தமிழிடம் பேசியபோது, சிறுவன் இறந்த பின்னர், இல்லத்தில் ஆதாரங்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

''சிறுவனின் கொலையில் தொடர்புள்ள அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து வருவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. பல உயரதிகாரிகள் சிறார் இல்ல அதிகாரிகளைக் காப்பாற்ற மறைமுகமாக தலையீடு செய்து வருகிறார்கள்.

இந்தக் கொலைக்குப் பின்னராவது, சிறார் இல்லங்களில் நடைபெறும் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்து அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, இல்லங்களைப் பாதுகாப்பான இடங்களாக மாற்றவேண்டும்,'' என்றார் ஆசீர்.

இறந்த சிறுவனின் தாயார் பிரியா
 
படக்குறிப்பு,

இறந்த சிறுவனின் தாயார் பிரியா

தமிழ்நாடு அரசின் பதில் என்ன?

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம் குறித்தும், அதிகாரிகள் கைதாகியுள்ளது குறித்தும் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சகத்தின் பதில்களைப் பெறுவதற்காக, அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம்.

சிறார் இல்லத்தில் அதிகாரிகள் சிறுவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் 'அட்மிசன் அடி' என்ற நடைமுறை இருந்தது குறித்தும் கேட்டோம்.

அமைச்சர் கீதா ஜீவன், இது குறித்து தன்னுடைய கவனத்திற்கு எந்த விவரமும் இதுவரை வரவில்லை என்றும் பிபிசி தமிழ் அளித்த விவரத்தைப் பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.

''சிறார் இல்ல அதிகாரிகள் சிறுவனின் கொலையில் ஈடுபட்டதாகத் தெரிந்ததும், அவர்களைக் கைது செய்துவிட்டோம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ உடனடியாக அதில் கவனம் செலுத்தியுள்ளோம். நீங்கள் கொடுத்த 'அட்ம்சன் அடி' தகவலைப் பற்றி விரிவாக விசாரிக்கிறோம். மற்ற இல்லங்களிலும் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளதா என்றும் விரிவாக விசாரிக்கிறோம்,'' என்றார்.

இறந்த சிறுவனின் தாயார் பிரியாவை சிறார் இல்ல அதிகாரிகள் கடத்தியதாக எழுப்பப்பட்டுள்ள குற்றசாட்டு குறித்துக் கேட்டபோது, ''தாயார் பிரியாவின் புகாரை ஏற்றுள்ளோம். தற்போது சிறுவனின் இறப்பு குறித்து கவனித்து வருகிறோம். தாயார் பிரியாவிற்கு ஏற்பட்ட பிரச்னை பற்றியும் விசாரணை நடைபெறும்,'' என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/ce53p82j52do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம் புதிர்கள் நிறைந்த வழக்கா? 

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 43 நிமிடங்களுக்கு முன்னர்
செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம்

செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில்  கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு சிறார் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் சம்பவம் பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

அந்த சிறாரின் இறப்பை அடுத்து, அந்த சம்பவத்தை ஆராய்ந்த சமூக நீதித்துறை அதிகாரிகள், இறப்பு குறித்து தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை திருத்தப்பட்டதாகவும், சில மேலதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக அறிக்கை  புதிதாகத் தயாரிக்கப்பட்டது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பல இடர்பாடுகள் இருந்தாலும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பிபிசி தமிழிடம் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.  

 

நடந்தது என்ன? 

தங்களது பாதுகாப்பு கருதி பெயர்கள் வெளியிட வேண்டாம் என கோரி பிபிசி தமிழிடம் சமூக நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேச முன்வந்தனர். சிறாரின் இறப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரு கூட்டம் நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர். 

''2022 டிசம்பர் 31ம் தேதி ஒரு சிறார் வலிப்பு வந்து இறந்துவிட்டதாக அவரது தாயாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தாயார் பிரியா சிறுவனின் உடலில் உள்ள காயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கையில், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆனால் எங்கள் துறையில் முதலில் தயாரித்த அறிக்கையில், சிறுவன் அங்குள்ள அதிகாரிகள் தாக்கியதால் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன, '' என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறுவனின் இறப்பை அடுத்து சமூகநீதி துறையில் பலர் இடமாற்றத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில், அதிகாரிகள் தாக்கியது உறுதிசெய்யப்பட்டு, ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மற்றும் சம்பவ இடத்திலிருந்த மற்றொரு அதிகாரியும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 

''2022 டிசம்பர் 31ம் தேதி சிறுவன் இறந்துள்ளான். ஆனால் அந்த இறப்பு குறித்து எந்த ஆய்வும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவில்லை. ஜனவரி 14ம் தேதிதான் ஆய்வு நடந்தது. அந்த முதல் அறிக்கையில், சிறுவன் இறப்புக்கு அங்கிருந்த அதிகாரிகள் தாக்கியதுதான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையை எங்கள் மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.  சிறார் இல்லத்தில் பணிபுரியும் உயரதிகாரிகளைக் காப்பாற்ற இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதேபோல, இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அதிகாரிகள் சிறுவனின் தாயார் பிரியாவை மிரட்டியுள்ளது குறித்தும் தகவல்கள் வெளியிடப்படவில்லை,'' என்றும் ஒரு அதிகாரி சுட்டிக்காட்டினார். 

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம்

சிறுவன் இறந்த சம்பவத்தில் எழும் கேள்விகள்

சிறுவனின் இறப்புக்குப் பின் அடுத்தடுத்த சம்பவங்கள் விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதாகக் கருதுகிறார் தன்னார்வலர் ஆசீர்.

சிறுவனின் இறப்புக்கு நீதி கேட்கும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஆசீர், மர்மங்கள் நிறைந்த வழக்காக இந்த வழக்கு மாறியுள்ளது என்கிறார். 

''சிறுவன் இறந்த பின்னர், அவனுடன் தங்கவைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு சிறுவர்களுக்கு ஜாமீன் தரப்பட்டது. அதிலும் குறிப்பாக, சிறார் இல்ல அதிகாரிகளே அந்த இரண்டு சிறுவர்களை ஜாமீனில் எடுக்க உதவியுள்ளனர்.இது விசாரிக்கப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான ஊழியர் ஒருவர் இந்த சம்பவத்திற்குப் பின்னர், செங்கல்பட்டிலிருந்து தஞ்சாவூருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் குறித்த சமூக நீதித்துறையின் முதல் அறிக்கை திருத்தப்பட்டது. சிறுவனின் தாயார் பிரியா மூன்று நாட்கள் வேறு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அதிகாரிகள் தன்னை கடத்தி வைத்திருந்ததாகச் சொல்கிறார். அவர் ஏன் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிந்தால்தான் சிறுவனின் மரணத்திற்கான நீதி கிடைக்கும்” என்கிறார். 

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறார் இல்லத்தில் இறப்பு நடந்திருந்தால், அப்போது செய்யப்படும் உடற்கூராய்வு பற்றிய வீடியோ மற்றும் ஆய்வு அறிக்கை சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் அளிக்கப்படவேண்டும். ஆனால் இதுவரை பிரியாவிடம் அந்த அறிக்கை கொடுக்கப்படவில்லை. 

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம்
 
படக்குறிப்பு,

சிறுவனின் தாய் பிரியா

பிபிசி தமிழிடம் பேசிய பிரியா, ''என்னை பல அதிகாரிகள் மிரட்டினார்கள். கடத்தி வைத்தார்கள். உடற்கூராய்வு அறிக்கையை இன்னும் தரவில்லை. என் குழந்தை அங்கிருந்த சமயத்தில் இல்லத்திலிருந்த பிற குழந்தைகளிடம் அச்சுறுத்தாமல் விசாரிக்க வேண்டும்,'' என்கிறார். 

மேலும், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு வந்த சமயத்தில், தன்னை கடத்தியாக தான் அடையாளம் காட்டிய அதிகாரி ஒருவரும் அங்கு வந்திருந்தார் என்று குற்றம்சாட்டுகிறார் பிரியா.

''அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை செய்யவந்தபோது, அவர் உடன் வந்தார். இவர்தான் என்னைக் கடத்தினார் என்று சொன்னபிறகுதான் அவரை அங்கிருந்து போக சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் என் பாதுகாப்பு பற்றிய பயம் அதிகரித்து வருகிறது,''என்கிறார் பிரியா.    

தன்னார்வலர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரியாவின்  குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம். தனது கவனத்திற்கு இந்த புகார்கள் வரவில்லை என்று கூறிய அவர், சிறுவன் இறந்த சம்பவத்தில் சட்டப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார். 

சிறுவனின் இறப்பைப் பற்றிய முதல் அறிக்கை திருத்தப்பட்டதா என்று கேட்டபோது, ''நான் விசாரிக்கிறேன். இது பற்றி என் கவனத்திற்கு வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறார் இல்லங்களில் சோதனை செய்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் சிறுவனை தாக்கிய அதிகாரிகளை உடனடியாக கைது செய்துவிட்டோம், பிற நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறோம்,'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/clj2lg5ex7wo

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் இறந்த சிறுவன் உடலில் 96 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை

இறந்த சிறுவனின் தாய் பிரியா
 
படக்குறிப்பு,

இறந்த சிறுவனின் தாய் பிரியா

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அண்மையில் அவரது உடற்கூராய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்வே லைனில் பேட்டரியை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட கோகுல்ஸ்ரீ அங்கு நடந்த சித்ரவதையால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை காட்டுகிறது என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசிர்வாதம்.

 

அறிக்கையில் என்ன இருக்கிறது?

கோகுல்ஸ்ரீ உடலில் 96 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கை கூறுகிறது.

"சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் சித்ரவதைக்கு இலக்காகி இறந்த தந்தை மகன், பெனிக்ஸ், ஜெயராஜ் உடற்கூராய்வு அறிக்கையில் அவர்களுக்கு 18 இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது.

 

ஆனால் 17 வயது சிறுவனை இறக்கும் அளவுக்கு தாக்கியதில் ஒரே நாளில் அவரின் உடலில் 96 காயங்கள் ஏற்பட்டுள்ளன. மனித உரிமைப் பணியில் இதுவரை சுமார் 30 காவல் மரணங்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் கோகுல்ஸ்ரீக்கு நடந்த சித்ரவதையைப் போல நான் பார்த்தது இல்லை," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆசிர்வாதம்.

"என் மகன் கோகுல்ஸ்ரீ கடுமையான சித்ரவதைக்கு உள்ளாகி இருக்கிறான் என்ற விவரம் உடற்கூராய்வு அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை என்னிடம் தராமல் இருக்க பல மட்டத்தில் அதிகாரிகள் முயற்சி செய்தனர்," என்று கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா பிபிசி தமிழிடம் கூறினார்.

கணவர், மகனை இறந்த பிரியா தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் ஆலையில் காவலாளியாக இப்போது பணியாற்றி வருகிறார். மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு போராட யாரும் உதவாத நிலையில், தன்னார்வலர்கள் சிலர் உதவியுடன் தொடர்ந்து போராடி வருகிறார் பிரியா.

"என் மகன் இறந்த பிறகு அவன் உயிருடன் இருக்கிறானா என சோதிக்க கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அவனின் கண்ணில் குண்டூசி வைத்து குத்தி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியும் அவர்கள் பார்த்து இருக்கின்றனர் என்று உடற்கூராய்வு அறிக்கை கூறுவதாக சொல்கிறார்கள். இவ்வளவு மோசமான சித்ரவதைக்கு உள்ளாகி என் மகன் இறந்து இருக்கிறான். ஆனால் அவனது மரணத்திற்கு காரணமான யார் மீதும் எந்த நடவடிக்கையும் இப்போது வரை எடுக்கப்படவில்லை," என்று கண்ணீருடன் கூறினார் பிரியா.

உடற்கூராய்வு அறிக்கை
உடற்கூராய்வு அறிக்கை
உடற்கூராய்வு அறிக்கை

அதிகாரிகளின் அலட்சியம்

இறந்தவருக்கு உடற்கூராய்வு நடந்தால், அவருக்கு தொடர்புடையவருக்கு அந்த ஆய்வின் அறிக்கை, போட்டோ, வீடியோ வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் கோகுல்ஸ்ரீயின் உடற்கூராய்வு அறிக்கையை கேட்டு மாவட்ட நீதிபதி, விசாரணை அதிகாரி, மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோரை பலமுறை கேட்டும் அந்த அறிக்கை உடனடியாக தரப்படவில்லை.

பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகு, அண்மையில் தான் இந்த உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தது. இன்னும் உடற்கூராய்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ அவரின் தாயிடம் வழங்கப்படவில்லை, என்று ஆசிர்வாதம் தெரிவித்தார்.

தவறு செய்யும் சிறார்களை கவனித்துக் கொள்ளும் இடத்தில் இருக்கும் அதிகாரிகளே எப்படி இதைச் செய்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோகுல்ஸ்ரீ இறந்த பிறகு அதனை உறுதி செய்ய செவிலியர் உதவியுடன் வாயில் ஹைட்ரஜன் பெராக்சைடு ஊற்றி சோதனை செய்து இருக்கின்றனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். குற்றவாளிகளை விட இந்த குழந்தை மோசமாக கொல்லப்பட்டு இருக்கிறார், என்று அவர் கூறினார்.

கூர்நோக்கு இல்லம்

கோகுல்ஸ்ரீ மரணம் தொடர்பாக மாவட்ட காவல்துறை, சமூகநலத்துறை இயக்குநர், மாநில குழந்தைகள் நல ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம் என பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி இருக்கின்றன.

ஆனால் இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவலர்கள் உள்ளிட்ட 7 பேரும் பிணையில் வந்து விட்டனர்.

துறை ரீதியாக நடத்த விசாரணை அறிக்கையை வழங்க சமூக நலத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தோம். காவல்துறை விசாரணையை சுட்டிக் காட்டி அதை தர மறுத்து விட்டனர், என்றார் ஆசிர்வாதம்.

"3 மாதங்கள் ஆகியும், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை, இப்படி செய்வதன் மூலம் தவறு செய்த அதிகாரிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுகிறதா" என்ற கேள்வி எனக்கு எழுகிறது என்கிறார், சிறுவனின் தாய் பிரியா.

இதுமட்டுமின்றி முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை மட்டுமே என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு தருவதாக கூறிய வீட்டுக்கான ஆணை எனக்கு இன்னும் வழங்கப்படவில்லை, என்று அவர் கூறினார்.

சிபிசிஐடி விசாரணை

போலீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர்.

வழக்கு புதிதாக ஒரு காவல்துறை அமைப்பிடம் சென்று இருப்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் 6 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை பிரியாவுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம், என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசிர்வாதம் தெரிவித்தார்.

சிபிசிஐடி அதிகாரிகள் யாரும் விசாரணைக்காக என்னை இப்போது வரை தொடர்பு கொள்ளவில்லை என பிரியா கூறினார்.

தாய் கடத்தப்பட்டதாகப் புகார்

மேலும், "கோகுல்ஸ்ரீ இறந்த பிறகு என்னை மூன்று நாட்களுக்கு கடத்திச் சென்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்ய செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளரிடம் 4 முறை மனு அளித்தேன்", என்றார் பிரியா.

"இது தொடர்பாக என்னிடம் பல முறை காவல்துறை விசாரணை நடத்தியது. என்னை கடத்தி வைத்து இருந்த இடங்களுக்கு கூட்டிச் சென்று விசாரணை நடத்தியது. ஆனால் இப்போது வரை இந்த என்னை கடத்திச் சென்று அடைத்து வைத்தவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று பிரியா கூறினார்.

சமூக நலத்துறையை சேர்ந்த மாவட்ட குழந்தைகள் அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் சமூக நலத்துறை இயக்குநர் நடத்திய விசாரணை அடிப்படையில் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ஆசிர்வாதம் தெரிவித்தார்.

கோகுல்ஸ்ரீ வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் பேசிய போது, "வழக்கின் விசாரணையை இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடைபெறும். மேற்கொண்டு விவரங்களை வழக்கு விசாரணை நிறைவடையாததால் இப்போது தெரிவிக்க முடியாது," என தெரிவித்தனர்.

 

'மாற்றம் தேவை'

குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை காக்க வேண்டியது கூர்நோக்கு இல்லங்களின் கடமை. ஆனால் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளும், அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பும் கோகுல்ஸ்ரீ போன்ற சிறுவர்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இதற்கு நீதித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பிரச்னைகளை பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியே கொண்டு வரும் நிலை தான் இங்கு உள்ளது, என்று இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆசிர்வாதம் தெரிவித்தார்.

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் என்பது சட்டத்தை மீறும் குழந்தைகளை கையாள்வதற்காக அமைக்கப்பட்டவை. அவை சாதாரண பள்ளிகள் போல அல்ல.

அங்கு பணியமர்த்தப்படும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு சிறப்புத் திறன், பயிற்சி, அணுகுமுறை இருப்பது அவசியம். இந்த நடைமுறை இல்லாத காரணத்தால், குற்றம் செய்யும் சிறுவர்களை தண்டிக்கும் இடமாகவே கூர்நோக்கு இல்லம் இருக்கிறது, என்று பேராசிரியரும் குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆண்ட்ரு ஷேசுராஜ் கூறினார்.

குழந்தைகள் நலன் தொடர்பாக புதிய கொள்கைகளை வகுக்க தமிழ்நாடு அரசு அமைப்பதாக கூறிய குழுவுக்கு இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கபடவில்லை. ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையிலான அந்தக் குழுவுக்கு விரைவாக உறுப்பினர்கள் நியமனம் செய்து, இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறுவதை தவிர்க்க உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce90qd2n1rzo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.