Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு? அதிமுக-வின் அடுத்த திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘இரட்டை இலை’ சின்னம் யாருக்கு? அதிமுக-வின் அடுத்த திட்டம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 பிப்ரவரி 2023, 03:21 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அதிமுக-வின் அடுத்த திட்டம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த, அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி, முடிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இரு தரப்பும் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

அதிமுக இரட்டை இல்லை சின்னம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலையை ஒதுக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹ்ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இடைத்தேர்தலில் போட்டியிட இரு தரப்பும் விரும்புவதால், கட்சியின் அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி பொதுவான வேட்பாளரை முடிவு செய்யட்டும்.

 

அந்தத் தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

அதிமுக இரட்டை இல்லை சின்னம்

இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பையுமே தர்மசங்கடமான சூழலில் தள்ளக்கூடும். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதி அதாவது வரும் செவ்வாய்க்கிழமையன்று முடிவுக்கு வருகிறது.

இந்தத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில், செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிறகு பிப்ரவரி 7ஆம் தேதிதான் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகுமென நம்பி, வேட்புமனு தாக்கலைத் தள்ளி வைத்தது எடப்பாடி தரப்பு.

ஆனால், நீதிமன்றம் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை முடிவு செய்யும்படி கூறிவிட்டது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியிருந்தது. ஆனால், இந்தத் தேர்தல் விவகாரத்தில் முடிவெடுக்க, அவர்கள் கட்சியில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் இதுவொரு இடைக்கால ஏற்பாடு என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

அதிமுக இரட்டை இல்லை சின்னம்

அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

"பொதுக்குழுவை மூன்று நாட்களுக்குள் கூட்டுவது இயலாத காரியம், பொதுக்குழுவைக் கூட்ட குறைந்தது 21 நாட்கள் தேவைப்படும். ஆகவே என்ன செய்வது என ஆலோசனை நடந்து வருகிறது. அல்லது, பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அதைச் சமர்ப்பிக்கலாமா என்றும் யோசித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்போம்," என பிபிசியிடம் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கூச்சல் எழுப்பப்பட்டு, அவர்கள் வெளியேறினர். ஆகவே, பொதுக்குழு நடந்தாலும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என்ன செய்யப் போகிறது என அவரது தரப்பைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகரிடம் கேட்டபோது, "நாங்கள் தீர்ப்பை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. தீர்ப்பை முழுமையாகப் பார்த்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டப்பட்டால் அதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்பார்களா எனக் கேட்டபோது, "இப்போது எதுவும் சொல்ல முடியாது. தீர்ப்பை முழுமையாக வாசித்துவிட்டு, சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவோம்," என்று மட்டும் தெரிவித்தார் ஜேசிடி பிரபாகர்.

தற்போதைய சூழலில், தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து கடிதங்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம் என எடப்பாடி தரப்பு கருதுவதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என்ன செய்யப்போகிறது என்பதை இன்று தெளிவுபடுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c51p53k144zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக குழப்பம்: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ஓபிஎஸ்-க்கு பின்னடைவா?

6 பிப்ரவரி 2023, 14:53 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: எடப்பாடி தரப்புக்கு அங்கீகாரம்

பட மூலாதாரம்,ADMK

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு எந்த அளவுக்குப் பின்னடைவு?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தற்போது அ.தி.மு.க. எடப்பாடி தரப்பு - ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் எந்தப் பிரிவின் வேட்பாளருக்கு அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசை தனது தரப்பு வேட்பாளராக அறிவித்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

தங்கள் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், கட்சியின் பொதுக் குழுவைக்கூட்டி வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

 

இதையடுத்து எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு உடனடியாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனது தரப்பு வேட்பாளரான தென்னரசுவை வேட்பாளராக ஏற்க சம்மதமா எனக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியது. ஆனால், ஒரே ஒரு வேட்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு படிவங்களை அனுப்பியதற்கு பன்னீர்செல்வம் தரப்பு கண்டனம் தெரிவித்தது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: எடப்பாடி தரப்புக்கு அங்கீகாரம்

பட மூலாதாரம்,ADMK

மொத்த பொதுக் குழு உறுப்பினர்களான 2665 பேரில் 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்தது. பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களைப் பெற்ற நிலையில், ஒருவர்கூட கே.எஸ். தென்னரசிற்கு எதிராக, படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

இதையடுத்து தங்கள் தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கே அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை இன்று தில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் அந்தக் கட்சியின் அவைத் தலைவரான தமிழ் மகன் உசேன்.

இதற்கிடையில், இன்று காலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இரட்டை இலை வெற்றிபெறுவதற்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும்கூறி, ஆச்சரியப்படுத்தினர்.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரமளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரம், தற்போதைய இடைத் தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவே அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

அதிமுக

"தான்தான் நிஜமான அ.தி.மு.க. என்று காண்பிப்பதில் எடப்பாடி கே. பழனிச்சாமி கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டார். இதற்குக் காரணம், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒரு தொடர்ச்சியான உறுதி இல்லாததுதான். அவரைக் கட்சியைவிட்டு நீக்கிய பொதுக்குழுவே வேட்பாளரைத் தேர்வுசெய்யும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபோதே அவருக்குத் தோல்வி உறுதியாகிவிட்டது. இப்போது இரட்டை இலைக்காக விட்டுக்கொடுப்பதாகச் சொல்கிறார். இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்று நினைப்பவர் அந்தச் சண்டையை ஆரம்பித்திருக்கவே கூடாது. 2017ல் இவர் தர்மயுத்தம் துவங்கியதால்தானே இரட்டை இலை முடங்கியது. அப்போது மட்டும் இரட்டை இலை முடங்கியது பரவாயில்லையா? எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அ.தி.மு.க. ஜானகி அணி - ஜெயலலிதா அணி என பிரிந்தபோது, ஜெயலலிதா அப்படி நினைக்கவில்லையே? அவர் துணிந்து போட்டியிட்டார்.

ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இப்போது தோற்றுவிடுவோம் என்பது புரிந்துவிட்டது. அதனால் பின்வாங்கிவிட்டார். இனிமேல் அவருக்கு சாதகமான சூழல் ஏற்படுவது கடினம். பா.ஜ.க. ஏதாவது வாக்குறுதி அளித்து, அதன் காரணமாக வேட்பாளரை அவர் திரும்பப் பெற்றிருந்தால், பெரிதாக ஏதும் கிடைத்துவிடாது. மீண்டும் அ.தி.மு.கவிற்குச் சென்றால்கூட இனி எடப்பாடிக்கு இணையான பதவி கிடைக்காது. எடப்பாடிக்குக் கீழேதான் பணிபுரிய வேண்டியிருக்கும்.

எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் தொடர்ச்சியான ஒரு உறுதி இருந்தது. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலிருந்து எப்படி வெளியில் வருவது என்றுதான் ஆரம்பத்திலிருந்து யோசித்துவந்தார். எப்படித் தீவிரமாகப் போட்டியிட்டு, எடப்பாடி தரப்பை வெல்வது என்பதை அவர் யோசித்ததாகவே தெரியவில்லை. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் இந்தத் தேர்தலுக்கு மட்டுமே தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒரு சின்ன நம்பிக்கை அளித்தாலும், எதிர் காலம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவர் தரப்பிற்கு புரிய ஆரம்பித்திருக்கும்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இதுவரை 59 பேர் அந்தத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்.

https://www.bbc.com/tamil/india-64542566

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஎஸ் வசமானது அதிமுக; ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்

எடப்பாடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 பிப்ரவரி 2023, 05:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தத் தீர்ப்பால் அதிமுகவின் கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமி வசமாகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம், தேனியில் உள்ள ஓ பன்னீர் செல்வம் இல்லம் ஆகிய இடங்களில் பலத்த காவல் போடப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிமுகவில் நிலவிய ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு செப்டெம்பர் 2ஆம் மாதம் தேதி வெளியிட்ட தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில், "பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் தேர்வு செல்லும்" என்று தெரிவித்து இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் அந்த பொதுக்குழுவின் போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வரவேற்பு

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,TWITTER/ADMK

"அதிமுகவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

"உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம். இப்போது பொதுக் குழு செல்லும் என்று மட்டும்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. முழு தீர்ப்பையும் படித்த பின்பு எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?

அதிமுக உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்தி ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு வெளியிட்டார்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, இரு நீதிபதிகள் அமர்வில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அதிமுக பொதுக் குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

வழக்கு விசாரணை

அதிமுக உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,TWITTER/ADMK

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு விரிவாக விசாரணை நடத்தியது.

இரட்டை தலைமை தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

"ஜூலை 11ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், 2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை" என்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், "அவைத்தலைவர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு தான் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஜனவரி 11ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வைத்திருந்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

அதிமுக உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் அண்மையில் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பை இந்த பொதுக்குழுவின் முடிவுகள் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்தனர்.

மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

அதிமுகவின் 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இருப்பதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/cw43g1gxnmro

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.