Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1987 நிலைமைகள் மேல் எழுகின்றனவா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1987 நிலைமைகள் மேல் எழுகின்றனவா ?

 
இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட தொடரிலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அண்மைய கூட்டத்தொடரிலும் இந்தியா இதனையே வலியுறுத்தி இருந்தது. கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இதனையே வலியுறுத்தி விட்டு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் இதனையே குறிப்பிட்டு இருந்தார்.

 

ஆனால், இலங்கையில் தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிராகவும் இனவாத தரப்பினர் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் உச்ச வெளிப்பாடாக கடந்த 8ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  கொள்கை பிரகடன உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பௌத்த துறவிகள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நிலையும் தீயிட்டு கொளுத்தி இருந்தனர்.இவர்களின் மூர்க்கத்தனமான எதிர்ப்பை பொலிசார் மிகவும் அமைதியான முறையில் கையாண்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் இருவர் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துமிருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என உறுதிபட கூறி இருந்தனர் .
 
பொங்கல் தின நிகழ்வுக்காக வடபகுதி சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில்,பொலிசார் மிகக் கடுமையாக நடந்திருப்பதுடன்,அவர்களின் எதிர்ப்பை தடுக்கும் நோக்குடன் நீர் தாரை பிரயோகமும் செய்யப்பட்டிருந்தது. இறுதியில் அப்போராட்டத்தில் கலந்திருந்த வேலன் சாமியார் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. வேலன் சாமியார் கைதாகி பிணையில் வெளி வந்திருக்கிறார். வழக்கு நடவடிக்கைகள் தொடர்கின்றது. இன்றும் கூட இரு வேறுபட்ட அணுகுமுறைகளே கையாளப்படுகின்றன. எனவே தான் தமிழ் மக்கள் சர்வதேசத்தின் மேற்பார்வையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

1987 இல் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் உருவானபோது அதனூடாக உருவான 13வது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை என்பவற்றுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பின் ஊடாக நாட்டில் வன்முறைகளை முன்னின்று நடத்தியிருந்தது .  இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி தரப்பில் 60,000 இளைஞர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் காலப்போக்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபை முறைமையை ஏற்று அதில் போட்டியிட்டு அங்கத்துவத்தையும் பெற்றிருந்தனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி 13வது திருத்தம் தொடர்பில் குழப்ப நிலையில் காணப்படுகிறது. அதன் தலைவர்கள் சிலர் 13 வது திருத்தத்தை  ஆதரிக்கின்றார்கள்.வேறு சிலர் எதிர்க்கின்றார்கள்.ஆனாலும் 87ம் ஆண்டு  காலப்பகுதியை போன்று 13வது திருத்தத்திற்கு நேரடியான எதிர்ப்பை வெளியிட அவர்கள் தயாரில்லாத நிலை காணப்படுகிறது.மேலும் 87 ஆம் ஆண்டு காலப்பகுதி வன்முறைகளுக்கு, இனவாதத்திற்கு தளமாக மக்கள் விடுதலை முன்னணி நேரடியாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறைமுக ஆதரவும் அமைந்திருந்தது.ஆனால் இன்று அத்தகைய நிலைமை மேல் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

 
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினர் 13 வது திருத்தத்தை ஆதரித்திருந்தாலும் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பலைகளுக்கெதிராக தமது கண்டனத்தை வெளியிடுவதில் கவனத்தை செலுத்தாது உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தில் தமது கவனங்களை குவித்து வருகின்றனர்.

 

எனவே 13வது திருத்த எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு விமல் வீரவன்சவின் தலைமையில் செயற்படும் 17 கட்சிகளின் கூட்டணியே களத்தில் நிற்கப் போகின்றன.இவர்களில் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, வீரசுமன, திஸ்ஸ வித்தாரன, டலஸ் அழகப்பெருமா, ஜி எல் பிரிஸ் இணைந்திருக்கின்றனர்.வழமை போன்று ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நாலாவது கூட்டத்தொடரில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வின் அவசியத்தையும் வடக்கு-கிழக்கின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் தெளிவுபட குறிப்பிட்டிருக்கிறார்.இம்முறை அவர் மலையக மக்களின் மேம்பாடு தொடர்பாகவும் தனது கருத்தை முன் வைத்திருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலிகாமம் வடக்கில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் நிலங்களை சுதந்திர தினத்தில் விடுவித்திருந்ததுடன்,தமிழ் அரசியல் கைதிகள் படிப்படியாக விடுதலை ஆவார் என்றும், காணாமல் போன மக்களுக்கு உரிய வழி வகைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் ராணுவ கட்டமைப்பில் இருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படுவதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதிபட கூறியிருப்பதுடன்,75 ஆவது சுதந்திர நிகழ்வின் முடிவின்போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்த விடயமும் இடம்பெற்றிருந்தது.

 
மறுபக்கத்தில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜனாதிபதியின் நிகழ்வை பகிஷ்கரித்திருந்ததுடன், ஜனாதிபதியின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகின்றனர். தென்னிலங்கை மக்களின் அங்கீகாரத்தை பெறாத இவர் எதனையும் சாதிக்க முடியாதென தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.இதேநேரம் பாராளுமன்றத்தில் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு காலதாமதமாகி வருவதை விமர்சித்திருக்கின்றனர். இன்று நாடு எதிர்நோக்கி இருக்கும் அவல நிலையை போக்க ரணில் விக்ரமசிங்க பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.இதற்குள் 13வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலும் இடம்பெறும் என கூறி இருந்தாலும்,போலீஸ் அதிகாரம் தொடர்பில் சற்று தளம்பல் நிலை காணப்படுகிறது.

 

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்புகளை விமர்சிப்பதுடன் மட்டும் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்தி வருகின்றனர். தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு தொடர்பில் அவர்கள் எதனையும் குறிப்பிடாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறும் கடன் தொடர்பில் சஜித் பிரேமதாச ஒன்றைக் கூற ஹர்ஷா டி சில்வா வேறு ஒரு விளக்கத்தை முன் வைத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் தேசிய இன பிரச்சனை தொடர்பாக ஒரு வரி கூட தெரிவிக்காத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இவர்கள் எதிர்க்கின்ற நிலையில் ஊழல் ,மோசடி , களவு என்பவற்றை நிறுத்துவதுடன் சிறந்த பொருளாதார முகமைத்துவத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதே இவர்களது நிலைப்பாடாக காணப்படுகிறது.

 
அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவராக இருந்த லயனல் போப்பகே இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் களவு, மோசடிகளை தடுப்பதுடன் சிறந்த முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார் அண்மைக்காலமாக மக்கள் விடுதலை முன்னணியில் செயற்பட்டு வந்த புத்திஜீவிகள் இலங்கை பொருளாதார பிரச்சனைக்கு தமிழ் தேசிய பிரச்சனை பிரதான காரணம் என்பதை ஏற்காத நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.இதன் தாக்கம் இன்றைய மக்கள் விடுதலை முன்னணி முகாமிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பிலும் இலங்கையின் பொருளாதார பிரச்சனை தொடர்பிலும் கருத்துக்களை பதிவு செய்திருந்த பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ன இந்திய தேசம் உலகில் ஜனநாயக செல்நெறிகளைப் பின்பற்றும் ஒரு பலம் பொருந்திய ஜனநாயக கட்டமைப்பை கொண்ட தேசமாகும். எனவே தமிழ் தேசிய பிரச்சினையாக இருந்தாலும் சரி இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையாக இருந்தாலும் சரி இந்திய தேசத்துடன் இணைந்து செயல்படுவதன் ஊடாக இப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக காணப்படுகிறது.

மேலும் இலங்கையின் மத்திய வங்கியின் முன்னைநாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி  மிக அண்மையில் வெளிப்படுத்தி இருக்கும் கருத்தில் உலகில் பொருளாதார வளர்ச்சியில் அண்மை காலங்களில் இந்தியா மிகவும் பலமான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதன் ஊடாக இலங்கையும் பொருளாதார பின்னடைவுகளிலிருந்து மேன்நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். ஆனால் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகளே காணப்படுகின்றன. இங்கே இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். அதனூடாக உருவாகிய அரசியலமைப்பின் 13வது திருத்தத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதில் பௌத்த அமைப்புகளே முன்னிலையில் இருக்கின்றன.

இலங்கை தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனை இலங்கையின் எல்லைகளைக் கடந்து இந்திய தேசத்தின் கரைகளைத் தாண்டி சர்வதேசம் வரை சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தப் பிரச்சனை பிரதிபலித்து வருகின்றது.அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுத்து வரும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இதன் தாக்கத்தை அதிகமாக பார்க்க முடியும். எனவே இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினையாக இருந்தாலும் சரி வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை யாவற்றிற்கும் தோற்றுவாயாக அமைந்து காணப்படும் தமிழ் தேசிய பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும்.

நடராஜ ஜனகன்

https://thinakkural.lk/article/239631

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.