Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
H3N2 தொற்றை தடுப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விரிவான விளக்கம் அளித்துள்ளது.

கோவிட்-19 போன்ற அறிகுறிகளுடன் இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), இந்திய மருத்துவ கூட்டமைப்பும் (IMA) அடையாளப்படுத்தியுள்ளன.

H3N2 வைரஸ் பரவலை காற்று மாசு தீவிரப்படுத்தும் என்பதால், மற்ற இன்ஃப்ளூயன்சா துணை வகை வைரஸ்களைக் காட்டிலும் இது வேகமாக பரவுவதாக வைராலஜிஸ்ட் கூறுகின்றனர்.

H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன?

 
  • காய்ச்சல்
  • இருமல்
  • குமட்டல்/ வாந்தி
  • வாந்தி
  • தொண்டை வலி
  • உடல் வலி/ சோர்வு
  • வயிற்றுப்போக்கு

மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஐ.சி.எம்.ஆர். ஆய்வுகளின் படி, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள், முதியோர், இணை நோய் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் H3N2 வைரஸ் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பு உண்டு.

  • பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும்.
  • 95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
  • 90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.
  • சுய மருத்துவம் கூடாது. அது ஆபத்தானது. பொன்னான நேரத்தை அதில் வீணாக்கி விடக் கூடாது.
  • குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

H3N2 வைரஸ் பரவாமல் தடுக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்? எதை செய்யலாம்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் ஐ.சி.எம்.ஆர். வழங்கியுள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எதையெல்லாம் செய்ய வேண்டும்?

  • முகக்கவசம் அணிவது அவசியம்
  • கூட்ட நெரிசலாக இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்
  • தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும்
  • கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்
  • தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • காய்ச்சல், உடல் வலிக்கு பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம்

எதையெல்லாம் செய்யக் கூடாது?

  • கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது
  • பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது
  • மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது
  • மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது

மழை மற்றும் குளிர்காலத்தின் போது பெரும்பான்மையோருக்கு வந்து செல்லும் சாதாரண காய்ச்சல் தொற்று இது. எனினும், குழந்தைகள், முதியோர் மற்றும் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

குழந்தைகளுக்கு H3N2 வைரஸ் குறித்து சென்னையில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் மருத்துவரும், குழந்தைகள் நல மருத்துவருமான ராவணகோமகனிடம் பேசினோம்.

ஆண்டுதோறும் மழை மற்றும் குளிர் காலத்தின் போது வரக் கூடிய காய்ச்சல் இது, அதற்குக் காரணமான HN வகை வைரஸ்களில் ஒன்றே தற்போது பரவும் H3N2 வைரஸ் என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரிக்குப் பிறகும் குளிர் நீடிப்பதால்தான் இந்த காய்ச்சல் தற்போதும் பரவி விருவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முகக்கவசம், சோப் போட்டு அடிக்கடி கை கழுவுதல், கூட்டத்தில் இருப்பதை தவிர்த்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளையே இதற்கும் கையாள வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

H3N2 தொற்றைத் தடுப்பது எப்படி?
 
படக்குறிப்பு,

ராவணகோமகன், குழந்தைகள் நல மருத்துவர்

"குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுடையவர்கள் ஆகியோருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம். அவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம். மற்றவர்களைப் பொருத்தவரை, வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் மிதமாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வீட்டிலேயே இருக்கலாம். பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நல்ல ஓய்வும், சூடான தண்ணீரை பருகுவதும் சிறந்த பலன் கொடுக்கும். இதன் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் ராவணகோமகன் தெரிவித்தார்.

"H3N2 வைரஸ் திரிபு உருவாகக் கூடும் என்பதால் ஒருமுறை இந்த பாதிப்புக்கு ஆளாகி மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்றக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆகவே, குழந்தைகளை பெற்றோர் மிகுந்த கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.

கூடுதல் பாதுகாப்பாக, ஆண்டுக்கு ஒருமுறை இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளை 70 சதவீதம் வரை குறைக்கலாம் என்றார் அவர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய் போன்ற இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ராவணகோமகன் அறிவுறுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/ce73r2k2xg2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பரவிவரும் H3N2 வைரஸ் காய்ச்சல்- எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

45 நிமிடங்களுக்கு முன்னர்

கொரோனா போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் H3N2 எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது.

ஹரியாணாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என நாட்டில் இதுவரை 2 பேர் இந்த காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் ஜனவரி மாதம் முதல் பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. மார்ச் 9ம் தேதி நிலவரப்படி நாடு முழுவது 3,038 பேர் H3N2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் 1245 பேரும், பிப்ரவரியில் 1307 பேரும் மார்ச் மாதத்தில்(9ம் தேதி நிலவரப்படி) 486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், “இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன; ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம், மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலம். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

H3N2 வைரஸ் என்றால் என்ன?

பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR), இந்திய மருத்துவ கூட்டமைப்பும் (IMA) அடையாளப்படுத்தியுள்ளன. H3N2 வைரஸ் என்பது ஒரு பருவ கால காய்ச்சல் ஆகும். தொற்றக்கூடிய தன்மை அதிகமாக உள்ள இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போதோ, இருமும்போதோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர் .

H3N2 வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், குமட்டல்/வாந்தி, தொண்டை வலி, உடல் வலி/ சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன. இவற்றுடன் மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

பாதிப்பு என்ன?

H3N2 வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘H3N2 வைரஸ் காய்ச்சல் மிக ஆபத்தானது என்று கூறமுடியாது. இது சாதாரண பருவ கால காய்ச்சல்தான். பொதுவாக இவற்றை மூன்று வகையாக பிரித்துகொள்ளலாம்.

‘ஏ’ வகை என்பது வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. ‘பி’ வகை என்பது காய்ச்சல் 5 நாட்கள் வரை இருக்கும். அதை தொடர்ந்து உடம்பு வலி இருக்கும்.

‘சி’ என்பது இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இணை நோய் உள்ளவர்கள் H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அவர்களின் பிரதான நோயின் பாதிப்பு அதிகரித்து மரணம் ஏற்படக்கூடும்.’ என்றார்.

மேலும், வைரஸ் நுரையீரலை பாதிக்கும்போது, நிமோனியா வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல்
 
படக்குறிப்பு,

மருத்துவர் தேரணிராஜன் - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன்

பருவ கால காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

முகக் கவசம் அணிவது, கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று கூறும் மருத்துவர் தேரணிராஜன், ‘குழந்தைகளை பொறுத்தவரை இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து தற்காத்துகொள்ளும் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம். அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள பெரியவர்களும் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். இதேபோல், குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல், பிறருடன் கை குலுக்குவது, பொது இடத்தில் எச்சில் துப்புவது, மருத்துவர்களின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்வது, மற்றவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது, நெருக்கமாக அமர்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது.

ஒருமுறை பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, ‘நிச்சயமாக இல்லை’ என்று மருத்துவர் தேரணிராஜன் கூறுகிறார். “ஒருமுறை இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போதே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுகிறது. மீண்டும் வைரஸ் உடலுக்குள் வந்தால் அது நோயாக மாறாமல் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பார்த்துகொள்கிறது” என்றார்.

H3N2 காய்ச்சலைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் தற்போது அச்சம் கொள்ளும் சூழ்நிலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். “அரசு மருத்துமனைகளுக்கு ஒருநாளைக்கு 10 முதல் 14 பேர்வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை பார்க்கும்போது, வெளிப்புற நோயாளிகளாக சிலர் வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவது மிகவும் குறைவு.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை பொறுத்தவரை நாளொன்றுக்கு 5 பேர் வரை மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களிலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது அதிகபட்சமாக 2 அல்லது 3 ஆக தான் உள்ளது. மிகப் பெரிய அளவில் இல்லை”என்றார்.

ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல்

பட மூலாதாரம்,TWITTER/@SUBRAMANIAN_MA

 
படக்குறிப்பு,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

H3N2 காய்ச்சல் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த தொடங்கியுள்ளோம். சென்னையைப் பொறுத்தவரை வார்டுக்கு ஒன்று என்ற முறையில் 200 வார்டுகளுக்கு 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் துணை சுகாதார நிலையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காய்ச்சலுக்கு உண்டான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை. எனவே, பதற்றம்கொள்ள தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

இதனிடையே, பருவ கால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் தலைமைச் செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், சுகாதார அமைச்சகத்தின் செயலாளர்கள் ஆகியோருக்கு சனிக்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், “இன்ப்ளூயன்சா ஏ பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத நடுவில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக ஹெச்3என்2 பாதிப்பு பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், இணை நோய்களை உடையவர்கள், H1N1, H3N2 போன்ற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் கைகளை தூய்மையாக வைத்துகொள்ளவேண்டும். சுவாசப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆக்சிஜன் போன்றவற்றை போதிய கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cj5y0v19zq0o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.